Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

மாய வினோதப் பரதேசி-1
வடுவூர் துரைசாமி அய்யங்கார்


 

மாயா விநோதப் பரதேசி

முதல் பாகம்

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார்

ஜெனரல் பப்ளிஷர்ஸ்

244, (ப. எண். ராமகிருஷ்ண மடம் சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004.

உரிமை பதிவு

ஜெனரல் பப்ளிஷர்ஸ்

முதற் பதிப்பு - 2004

பதிப்பகத்தார்

மொத்தப் பக்கங்கள் : 16 + 312 = 328

விலை: ரூ. 125.00

Laser Typeset by - Print Point Graphics, Chennai - 20.

Printed at – JaGaneshOffsetPrinters, Chenna-600004.

உள்ளடக்கம்

பதிப்புரை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

இலக்கிய சாதனையாளர்

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் திரையில் முதல் நாவல்

1-வது அதிகாரம்

2-வது அதிகாரம்

3-வது அதிகாரம்

4-வது அதிகாரம்

5-வது அதிகாரம்

6-வது அதிகாரம்

பதிப்புரை

பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது... போன்ற அற்புதமான தகவல்களைச் சொல்லும் நாவல்கள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்கள். இவருடைய கதைகளில் காதல் காட்சியும் வரும், கோர்ட் சீனும் வரும், போலீஸ் நடவடிக்கைகளும் வரும், மருத்துவரின் சேவையும் வரும் - இப்படி அநேகமாக எல்லாத் தரப்பு மனிதர்களின் மேன்மையைப் பற்றியும் சொல்வார் .

அதே சமயத்தில், இதே சமுதாயத்தில் நல்லவர்கள் மத்தியில் வாழும் வக்ர புத்தி உள்ளவர்களைப் பற்றியும் சொல்லி, அப்படிப்பட்டவர்களை எப்படி எல்லாம் அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியும் சொல்லியிருப்பார். இவருடைய எழுத்துக்களில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கதைகளில் நிலவும் கடின மான சூழ்நிலையையும், படு சாதாரணமாகக் கையாண்டிருப்பார். சிக்கலையும் உருவாக்கி, அந்த சிக்கலிலிருந்து விடுபடும் வழியையும் சொல்வார். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களைப் படித்தால், பொழுது போவது மட்டுமன்றி, பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் நெடுங்கதை அல்லது நாவல் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்த நாவல்களை எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் இவருடைய நாவல்களைப் படிக்காதவர் எவரும் இருந்திருக்க முடியாது. மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட 'திகம்பர சாமியார்' இவருடைய பாத்திரப் படைப்பு. திகம்பர சாமியாரின் அறிவு அளவிட முடியாதது. மிகவும் புத்திசாலியானவர். தன்னுடைய ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும், செயலிலும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை யூகிக்க வைப்பார். இவருடைய ஒவ்வொரு நாவலும், ஒன்றை ஒன்று மிஞ்சி நிற்கிறது. 'இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே! போர் அடிக்காதா?' என்று வாசகர்கள் துளிகூட எண்ண வேண்டாம். இதை நாங்கள் வியாபார நோக்கில் சொல்லவில்லை. உண்மையில் இந்த நாவல்களை எல்லாம் நாங்கள் படித்துப் பார்த்த பிறகுதான் வெளியிடுகிறோம். நேரம் போவதே தெரியாமல் சரளமான தமிழ் நடையில், கதை போகும் போக்கே மிக மிக நன் றாக உள்ளது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் இப்படிப்பட்ட நாவல்களை எழுதியதால் ஏராளமான நற்சாட்சிப் பத்திரங்களையும், தங்க மெடல்களையும் பெற்று உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இந்த நாவல்களைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டும், போற்ற வேண்டும், நாங்களும் நிறைய புத்தகங்களை விற்க வேண்டும். இதெல்லாம் வாசகர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? இந்தப் புத்தகங்களை வாங்கும் அனைவருமே புத்திசாலிகள்தான்.

இந்த நாவல்களை வெளியிடும் முயற்சியில் எங்களுக்கு மிகவும் உதவியாக எங்களது நீண்ட நாள் நண்பரான, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவரான திரு. இரா. முத்துக்குமாரசாமிக்கும், நூலின் பழைய பிரதிகளைக் கொடுத்து உதவிய (காஞ்சிபுரம்) அன்பர்களுக்கும், மேலும் இந்த நூல்களை, அந்தக் காலத்திலேயே ஏராளமாக விற்பனை செய்து, பெரும் பணியாற்றி தற்போது எங்களுக்கு உரிமையை வழங்கிய இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் உரிமையாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூல்கள் மீண்டும் வருமா? மீண்டும் வருமா?' என்று ஏங்கிக் கொண் டிருக்கும் வாசகர்கள் இப்போது மகிழ்ச்சி அடை வார்கள். இந்த நூல்களை 'புரூப்' பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பல வாசகர்கள், 'புரூப்' படிக்க வில்லை என்றால்கூடப் பரவாயில்லை, தாமதப்படுத்தாமல் உடனே வெளியிடுங்கள் என்று கூறினார்கள்.

அன்று 007

இன்று ஜேம்ஸ்பாண்டு - ஆனால்

அன்றும் இன்றும் என்றும்

"திகம்பர சாமியார்"

அல்லயன்ஸ் ஸ்ரீநிவாஸன்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்: 1880-1942. தஞ்சை மாவட்ட மன்னார்குடி வட்டம். தந்தை கிருஷ்ண ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராக விளங்கி, எழுத்துச் செல்வாக்கால் வேலையை விட்டவர். தம் நாவல்களைத் தாமே அச்சிட ஒர் அச்சகமும் ‘மனோரஞ்சனி' என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக் குவித்தவர். கலைமகள் கம்பெனி, விற்பனை நிலையமாகும்.

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷல், கையில் தடி, நெற்றியில் எப்போதும் திரு மண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாப்), புகையிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர். இவர் மாடிக்கு ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணியார், பம்மல் சம்பந்த முதலியார், வை.மு.கோ., எஸ்.எஸ். வாசன் வந்து போவர்.

மனைவி நாமகிரி அம்மாள். மக்கள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி. மூத்த மகன் மனைவி புஷ்பவல்லி; புதுப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளி ஆசிரியையாக இருந்து ஒய்வு; ஒரு பெண்ணும் பிள்ளையும் ரங்கநாயகிக்கு நான்கு மகள்களும், ஒரு பிள்ளை ரகுவும் நேவியில் காப்டன், வடுவூராரின் நவீனம் ‘மைனர் ராஜாமணி' சினிமாவாக வந்து திரையிட்டதும் ஒரு சமூகத்தை இழிவு செய்வதாக வழக்கு தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி, அவமானம் தாங்காது குருதிக் கொதிப்பால் மாண்டார்!

இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஒர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர் Reynolds போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் படைத்துள்ளார். இவர் படைப்பில் சிறந்ததாக மேனகா, கும்பகோணம் வக்கில் குறிப்பிடத்தக்கன; படமாகவும் வந்தவை. வாசகர்களின் நாடித் துடிப்பறிந்து ஈர்க்கும் இனிய வசனமும் அழகு வருணனைகளும் அனைவரையும் அள்ளின.

திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சிகள், ஆவலைத் துண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார்.

வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அளவுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தினரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் துப்பறியும் பாத்திரம் நினைவில் நிற்கும். நாவல் வரலாற்றில் சுவடு பதித்தவர் வடுவூரார் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

— நன்றி - தமிழ் இலக்கிய வரலாறு

(மது.ச. விமலானந்தம்)

இலக்கிய சாதனையாளர்

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்று ஜே.ஆர். ரங்கராஜா என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும்.

இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தார் என்றும், முன்னிருவரும் தாங்களும் அறியாமலே வாசகர் பெருக்கத்துக்குக் காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

ஜே.ஆர். ரங்கராஜூவின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரையில் வெளிவந்தன. பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு 10 பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது மிகவும் பரபரப்பாக வாசகர்கள் வாங்கிப் படித்தனர். வரதராஜன் என்று இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. வரதராஜனின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என்று கேஸ் போட்டு, மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் கோர்ட் அவருக்குத் தண்டனை விதித்தது என்று எண்ணுகிறேன். ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு (வைஷ்ணவ நாயுடு அவர் என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார்.

ரங்கராஜூவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923, 24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹை ஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்குக் கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகப் புஸ்தகத்தைக் கொடுத்து விடுவேன். இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும், வஸந்த கோகிலம், பூரண சந்திரோதயம், விலாஸ்வதி, திகம்பர சாமியார், மேனகா இவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரலமான விஷயங்களையும்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துக்கிடமேயில்லை.

ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதநூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தவறவில்லை.

அதே போல கிரேக்க புராணக் கதையான Eros and Psyche கதையை வஸந்த கோகிலம் என்கிற நாவலாகக் செய்திருக்கிறார்.

இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளி வந்த வடுவூராரின் விலாஸவதி என்பதைத்தான் சொல்ல முடியும். அது வெளிவந்த சமயத்தில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டதுடன் படிக்கவும் பட்டது. மூன்று ஆண்டுகளில் ஐந்து பதிப்புகள் வந்ததாக ஒரு தகவல் படித்திருக்கிறேன்.

வடுவூராரின் ஆரம்பக் காலத்திய நாவல்கள் எல்லாம் மாதாந்திரப் பத்திரிகையாக வெளிவந்த மனோரஞ்சிதம் (அல்லது மனோரஞ்சனியா?) என்கிற பத்திரிகையில் வெளிவந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பத்திரிகையைப் பார்த்திருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தப் பத்திரிகையை முன்மாதிரியாகக் கொண்டுதான் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனது ஜகன்மோகினி நாவல் பத்திரிகையைத் தொடங்கியதாகவும் சொல்வார்கள்.

இன்னொரு விஷயமும் அப்போது பரவலாகப் பேசபட்ட விஷயம் நினைவுக்கு வருகிறது. வை.மு. கோதைநாயகியின் முதல் நாவலான வைதேகியின் முதல் பாதியை வடுவூரார் எழுதி, முன்மாதிரியாகத் தந்ததாகவும் அதைப் பின்பற்றி முடித்து விட்டு வெற்றிகரமாக வை.மு.கோ. துப்பறியும் நாவல்களிலிருந்து அவர் தனி பிராண்டான சமூக நாவல்களுக்கு நகர்ந்தார் என்றும் சொல்லுவார்கள்.

1930-ல் என்று எண்ணுகிறேன். பைகிராப்ட்ஸ் ரோடு கோடியில் மரினா பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே வேங்கடரங்கம் பிள்ளை தெரு பைகிராப்ட்ஸ் ரோடைச் சந்திக்கிற இடத்தில் இருந்த வீட்டை வாங்கி வடுவூரார் புதுப்பித்து வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு கிரஹப் பிரவேசம் நடத்தியபோது, மாலையில் பாண்ட் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் சென்னையில் இருந்தேன். வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கப் போனேன். அந்த ஒரு தடவை மட்டுமே அவரை நான் சந்தித்திருக்கிறேன்.

என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால், பேச்சு பூராவும் தன் பக்கத்தில் அவர் நாவல்களைப் பற்றியும், அவருடைய தழுவல் முறைகளைப் பற்றியும் அவர் நடையைப் பற்றிய வரையிலும்தான் என்று நான் நினைவு கூர்கிறேன். தன் நாவல்களில் பெரும் பகுதி தழுவல்கள்தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், மேனகாவும் திலோத்தமை என்று ஒரு ஐந்து அங்க நாடகமும் தன் சொந்த எழுத்து என்று சொல்லி எனக்கு திலோத்தமா ஒரு பிரதி அன்பளிப்பாக அளித்தார். அதை வெகுநாள் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

அதைத் தவிர அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்கிற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித்தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இந்தச் சரித்திர உண்மையில் இருந்த அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்க நூல் எழுதி அதைத் தன் சொந்தச் செல்விலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புஸ்தகம் விற்கவில்லை. அச்சுக்கும், பேப்பருக்கும் ஆன கடனை புதுசாக வாங்கிய வீட்டை விற்று அடைத்து விட்டு, பேசாமல் கிராமத்துக்குப் போய்விட்டார் என்று எண்ணுகிறேன். இந்தப் புஸ்தகமும் என்னிடம் வெகு நாள் இருந்தது.

‘காங்கிரஸ் கமலம்' அல்லது 'ஆணென்று அணைய அகப்பட்ட பெண் புதையல்' என்கிற நாவலை சுதேசமித்திரனில் தொடராக எழுதி வெளியிட்டார். இதுதான் பழைய வடுவூர் பாணியில் அவர் கடைசி முயற்சி என்று எண்ணுகிறேன். அதற்குப் பிறகு அவர் முப்பதுகளில் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை. மாசத்துக்கு ஒரு நாவல் என்று எழுதி, நாவலுக்கு நூறு ரூபாய் என்று கூலி வாங்கிக் கொண்டு ஏழெட்டு ஆண்டுகள் இருந்து பிறகு இறந்து விட்டார் என்று எண்ணுகிறேன்.

சேலம் பட்டுக் கரை வேஷ்டியும், காதில் டால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீசூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என்னால் இன்றுகூட நினைவுகூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை; புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

— நன்றி - இலக்கியச் சாதனையாளர்கள் - க.நா.சு.

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆரணி குப்புசாமி முதலியாரைத் தொடர்ந்து அவர் பாணியில் தழுவல்களாக எழுதியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தழுவல் நாவல்களாயிருந்தபோதிலும் தமிழ்நாட்டு இடப் பெயர், மக்கள் பெயர்களை வைத்தே ஜனரஞ்சகமாக எழுதப்பட்டதால், இவரது நாவல்கள்தான் தமிழ்நாட்டில் ஒரு பரந்த வாசகர் உலகத்தைச் சிருஷ்டித்து வைத்தன. புத்தகம் படிக்கும் பழக்கம் இந்த நாவல்களால் ஏற்பட்டது ஒரு புற மிருக்க, கண்டமேனிக்கு கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்யக் காரணமாய் இருந்ததும் வடுவூரார் நாவல்கள் தான். ஆக, அக்காலச் சூழ்நிலையை ஒரு விமர்சகர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்:

‘அச்சுப் பொறி மலிந்து காகித வர்த்தகம் பெருகி வரும் இக்காலத்தில் நாவல்களும் புற்றீசல்போல் தோன்றித் தொடங்கி விட்டன. மக்களின் ஆசாரங்கள் சீர் பெறவும், பாஷை வளர்ச்சியுறவும் நாவல்கள் பெரிதும் உதவி புரியும் என்பது உண்மையே. ஆனால், தடியெடுத்தோரெல்லாம் வேட்டைக்காரர் என்றபடி தமிழ் உலகத்திலே இறகோட்டிகளெல்லாம் நாவலாசிரியர்களாய் முன்வந்திருப்பதால் தற்கால நாவல்கள் பெரும்பாலானவற்றால் விளையும் தீமைகள் அற்ப சொற்பமன்று. ரகர றகரங்களைச் சரியாய் வழங்க அறியாதவர்களும் தமிழ் எழுத்தாளராகத் துணிவு கொள்வதும் தமிழ் மொழியின் சனி திசையென்றே கூற வேண்டும். ஒன்றோ இரண்டோ விட புருஷர்கள், இரண்டோ மூன்றோ நானமற்ற கன்னியர்கள், ஒரு துப்பறியும் கோவிந்தன் அல்லது கோபாலன், ஒரு ஆகாவழி ஜமீந்தார் - தமிழ் நாவல் பூர்த்தியாகி விடுகிறது. தற்காலத்தில் துப்பறியும் நாவல்களெல்லாம் பிற நாட்டுப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங்களையும் தமிழகத்தில் பரப்பித் தமிழ் மக்களை அனாசாரப் படுகுழியில் தலைகீழாக வீழ்த்துகின்றன. நாவல்களின் தன்மை இன்னதென்றறியாத தமிழ் மக்களும் இந்த நாவல் புற்றீசல்களைக் கோழி விழுங்குவதுபோல் விழுங்கித் திருப்தி அடைகின்றனர் (லக்ஷ்மி, செப். 1924, முத்து மீனாட்சி நாவலுக்கு மதிப்புரையில்).

வடுவூர் துரைசாமி ஐயங்கார் ரெயினால்ட்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் கதைகளைத் தழுவி எழுதியதோடு நின்று விடாமல் தமிழ்நாட்டின் சமகால சமுதாயத்தைச் சித்திரிக்கும் சொந்த நாவல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். இவருடைய சொந்த முயற்சிகளில் சிறந்தவை மேனகா, கும்பகோணம் வக்கீல் என்பவையாகும். கையில் எடுத்தால் புத்தகத்தைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கும் ரசனை மிகுந்த கதைகளை எழுதிய வடுவூர் துரைசாமி ஐயங்கார் பின்னர் கல்கி போன்றவர்களின் கதைகளைப் படிக்கத் தயாரான ஆயிக்கரணக்கான வாசகர்களைத் தோற்றுவித்த முன்னோடியாகவே விளங்கினார். இந்தப் பெருமையை ஆரணி குப்புசாமி முதலியாரும், ரங்கராஜூவும் பகிர்ந்து கொண்டனர்.

துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக் குறிப்பு காணப்படுகிறது:

'சம்பர்வையங்கார், மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'

என்று அந்தக் குறிப்பு விளக்குகிறது. இன்றைய நாவல்களில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. உண்மை மனிதர்களையும் சம்பவங்களையும் குறிப்பிடுபவை அல்ல’ என்ற சட்ட அடிப்படையில் முன்கூட்டியே விளக்கம் சொல்லிக் கொள்வது நடப்பியல் சித்திரங்களில் இன்றியமையாத நிபந்தனையாக அமைவதற்கு மாறாக, வடுவூராரின் குறிப்பு, மேனகா கதை உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்பதை உணர்த்துகிறது. மர்மங்களும் துப்பறிதலும் நுறைந்த இந்த நாவலில் வாசகர் மனதை ஈர்க்கும் சம்பவங்கள் பல கையாளப்பட்டிருக்கின்றன. உணர்ச்சி களின் உச்ச நிலையைத் தொடும் சம்பவங்களுக்கும் குறைவில்லை. பல அல்லல்களுக்குட்படும் மேனகா, ஒரு முஸ்லிம் பெண்ணின் உதவியினால் தன் கணவனை மீண்டும் அடைவது லட்சிய கதை மாந்தர்களின் செயலின் விளைவாக அமைகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களின் சமகாலச் சூழ்நிலை 1920களில் எழுதப்பட்ட இந்த நாவலில் தத்ரூபமாக விளங்குகிறது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப் பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்பது. பல மர்மங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சைப் பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்படுகிறது. கதையின் ஆரம்பமே பின்வருமாறு அமைந்திருக்கிறது:

'திருக்கண்ணமங்கை என்னும் சிற்றூர் தஞ்சை ஜில்லாவிலுள்ள மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். அவ்வூரில் எக்காலத்திலும் ஓயாது குயிலினங்கள் தமது தீங்குரலமுதைச் சொரிந்து கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக வதிந்த தென்னஞ்சோலைகளுக்கிடையில், அச்சிற்றூரின் வேளாளரது தெரு அமைந்திருந்தது. அத்தெருவினிடையிலிருந்த ஒரு பெருத்த மச்சு வீட்டின் கூடத்தில் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு ஸ்திரீ தென்னங்கீற்று முடைந்து கொண்டிருந்தாள். அவ ளது கைகள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனவோ அவ்வளவு சுறுசுறுப்பாகவே அவளது வாயிலிருந்து சொற்களும் வெளிப்பட்டு பக்கத்து அறையில் ாழைப் பூவை அரிவாள்மனையில் வைத்து நறுக்கிக் கொண்டிருந்த ஒர் அழகிய பெண்மணியின் செவிகளில் தாக்கிக் கொண்டிருந்தன.'

இவ்வாறு அழகாக சில காட்சிகளை வருணிக்கும் துரைசாமி ஐயங்கார் எழுத்திலே வாசகரைக் கவரும் உத்தி எங்கும் சிறந்து நிற்கிறது. கல்கிக்கு முன் அவ்வளவு தெளிவுடனும், அழகுடனும் வசனம் எழுதியவர்கள் வடுவூராரைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம். தமிழ் வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அறிந்து எழுதியவர்களில் காலத்தால் முதன்மையானவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார்...’ என்பது க.நா. சுப்பிரமணியத்தின் மதிப்பீடு (படித்திருக்கிறீர்களா?-2).

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, குடும்பச் சூழ்நிலையை வைத்து, ஜனரஞ்சகமான நாவல்களை எழுதியவர் வை.மு. கோதைநாயகி அம்மாள்.

நன்றி: தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,

சிவபாதசுந்தரம்.

தமிழ்த் திரையில்... முதல் நாவல்

புராணக் கதைகளும், இதிகாசக் கதைகளும், ராஜா ராணிக் கதைகளும் படமாக எடுக்கப்பட்ட தமிழ்த் திரையின் தொடக்க காலத்தில்... முதன்முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகா.

அந்நாளின் புகழ் பூத்த எழத்தாளர் வடுவூர் துரை சாமி ஐயங்கார் எழுதிய நாவல் இது.

திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு மேனகா நாவல், நாடகமாகவும் வடிவமைக்கப்பட்டு பல தடவை மேடையேறி புகழ் பெற்றது. அப்போது, நடிகர் எம்.கே. ராதாவின் தந்தையார் எம். கந்தசாமி முதலி யார், மேனகா நாடகத்திற்கு வசனம் எழுதினார் (டி.கே. சண்முகம் சகோதரர்கள்தான் இந்நாடகத்தைத் தயாரித்து வழங்கியவர்கள்).

1935-இல் மேனகா நாவலைப் படமாக்கிய பொழுது அதில் டி.கே. பகவதி, டி.கே. சண்முகம், என்.எஸ். கிருஷ்ணன், டி.கே. சங்கரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.ஆர். ராமசாமி, டனை. சிவதாணு ஆகியோர் நடித்தனர். இவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி. எம்.எஸ். விஜயா, கே.டி. ருக்மணி ஆகியோரும் நடித்த இப்படத்தை இராஜா சாண்டோ இயக்கினார். பாரதியாரின் பாடல் முதன் முதலாக ஒலித்த படம் என்ற வரலாற்றுப் பெருமையும் மேனகா படத்தையே சேருகிறது.

நன்றி - பதிப்புத் தொழில் உலகம், ஜூலை 2004

மாயா விநோதப் பரதேசி

★⁠★⁠★

1-வது அதிகாரம்

வஸந்த ருதுவின் வைபவம்

திருவல்லிக்கேணிக் கடற்கரையில் மேரி மகாராணியார் பெயர் வழங்கும் பெண்கள் கலாசாலைக்கு எதிரில் விஸ்தாரமாகப் பரவியும் வெண்மணல் தரையில் இரண்டு யௌவனப் புருஷர்கள் அலையின் ஒரமாக இருந்து சம்பாவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனுக்கு இருபது, அல்லது, இருபத்தொரு வயது இருக்கலாம். அவன் தெற்குத் திக்கில் கால்களை நீட்டிக் குப்புறப் படுத்து, தலைவரையில் மணலில் படியச்செய்து, இரண்டு முழங் கால்களையும் கீழே ஊன்றி, மார்பையும் முகத்தையும் உயர்த்தி கிழக்கு, வடக்கு, மேற்கு, ஆகிய மூன்று திக்குகளிலும் தனது பார்வையைச் செலுத்தத் தகுந்தபடி உல்லாசமாகச் சயனித்திருந்தான். மற்றவனது வயது சுமார் இருபத்தைந்துக்குக் குறையாது என்றே சொல்ல வேண்டும். அவன், கீழே சயனித்து இருந்தவனுக்கு எதிரில் சுமார் ஒன்றரை கஜ துரத்தில் தெற்கு முகமாக உட்கார்ந்திருந்தான்.

கீழே சயனித்திருந்த விடபுருஷனது வடிவம் அபரஞ்சித தங்கத்தை உருக்கி ஓடவிட்டது போல அழகான சென்னிறமும், இயற்கையான மினுமினுப்பும், யெளவன காலத்தில் புதுத் தன்மையும் வாய்ந்ததாய் இருந்தது. அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஒவ்வோர் அங்கத்திலும் மிருதுத் தன்மையும், செழுமையும், அழகும் சம்பூர்ணமாக நிறைந்து தோன்றின. அவன் பேசியபோது வாய் மழலை மாறாத குழந்தைகளின் வாய் அழகாகக் கோணுவது போலத் தோன்றியஇருந்ததே இருபுறங்களிலும் அவனது உருண்டைக் கன்னங்களில் தண்ணீர்ச் சுழல்கள் போன்ற வசீகரமான குழிவுகளை உண்டாக்கியது. உயர்ந்த தலையும், விசாலமான நெற்றியும், பரந்த உருண்டை முகமும், கருத்தடர்ந்த புருவவிற்களும், புத்திக் கூர்மையையும் தீவிர விவேகத்தையும் மின்னலைப் போலப் பளிச்பளிச் என்று வீசி வெளிப்படுத்தும் கருங் கண்களும், முத்துக்கள் போன்ற நிர்மலமான அழகிய பற்களும், பக்குவகால மடந்தையரின் அதரங்கள் போலக் கனிந்து சிவந்து மிருதுவாக இருந்த இதழ்களும், அவனது செவிகளில் நட்சத்திரச் சுடர்கள் போல ஒளி வீசிய வைரக் கடுக்கன்களும் ஒன்றன் அழகை ஒன்று பதினாயிரம் மடங்கு பெருக்கிக் காட்டி, அவனது முகத்திற்கு ஒருவித அபூர்வ வசீகர சக்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த மன்மதபுருஷன் ஏதாகிலும் பேச வேண்டும் என்று மனதில் நினைக்கும் போதே, அவனது சுந்தரவதனத்தில் ஒருவித மந்தஹாலமும், மலர்ச்சியும் முன்னாகத் தோன்றி நின்று, அவனது மனத்தில் எப்போதும் நற்குணமும் அந்தமும் இயற்கையிலேயே பரிபூரணமாக நிறைந்திருக்கின்றன என்பதைத் தெள்ளிதில் காட்டின. அவனது பார்வை கம்பீரப் பார்வை யாகவும், அவனது வார்த்தைகள் அற்பமான விஷயங்களில் கலக்காமல், பெரும் போக்காகவும், கண்ணியமாகவும், மிருதுத் தன்மை நிறைந்ததாகவும், அயலார் விஷயத்தில் ஜீவ காருண்யம், வாத்தியம் முதலிய அருங்குணங்கள் த்வனிப்பனவாகவும் இருந்தன. அவனது சிரத்தில் கரும்பட்டுப் போலத் தோன்றிக் கருத்தடர்ந்து நீண்டு நெளிந்திருந்த வசீகரமான தலை மயிரை அவன் ஒரு சிறிய தேங்காய் அளவு முடிந்து பின் கழுத்தில் விட்டிருந்தது, ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அன்றைய தினமே கூடிவரம் செய்து கொண்டிருந்தவன் ஆகையில், அவனது நடுத்தலையில் குறுக்காகவும் வளைவாகவும் வெட்டிவிடப்பட்டிருந்த கன்றுக்குடுமி தோட்டங்களில் காணப்படும் ஒழுங்கான மருதாணி வேலியைப் போலக் காணப்பட்டது. நெற்றியின் நடுவிற்குச் சிறிது இறக்கமாக, ஒரு தேத்தாங்கொட்டை அகலத்தில் சந்தனப்பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அவன் தனது இடுப்பில் தகதகவென மின்னிய அகன்ற ஜரிகையுள்ள தும்பைப் பூவைப் போல வெளுத்திருந்த பட்டுக்கலந்த ஜரிகை வஸ்திரம் ஒன்றையும், உடம்பில் உயர்ந்த பட்டு ஷர்ட்டையும், அதற்கு மேல் முற்றிலும் ஜரிகையினாலும் சிவப்புப் பட்டினாலும் நெய்யப்பெற்ற உருமாலை ஒன்றையும் அணிந்திருந்தான். நவரத்தினங்கள் இழைத்த சுமார் ஆயிரம் ரூபாய் விலையுள்ள சிறிய கைக் கடிகாரம், வயிரம் இழைத்த தங்கச் சங்கிலியால் அவனது இடதுகை மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்தது. இவனது இரண்டு கைகளிலும், வைரம், வைடூரியம் முதலிய உயர்தரக் கற்கள் குயிற்றிய மோதிரங்கள் பல விரல்களிலும் கானப்பட்டன. அவனது இயற்கைக் கட்டழகும் காந்தியும், செயற்கை அலங்காரமும் ஒன்று சேர்ந்து அவனைக் காணும் ஆண் பெண்பாலார் அனைவரும் மேன்மேலும் அவனை ஆசையோடு கூர்ந்து நோக்கும்படியான ஒருவித அற்புதக் கவர்ச்சியை உண்டாக்கின அன்றி, அவன் ஒரு மகாராஜனது குமாரனோ, அல்லது, யாதாமொரு சமஸ்தானாதிபதியின் பட்டக் குழந்தையோ என்ற எண்ணத்தை உண்டாக்கின.

இத்தகைய சிலாக்கியமான விடபுருஷனுக்கு எதிர்ல் உட்கார்ந்திருந்த மற்றவன் மாநிறமாகவும், அதிக அழகில்லாத சாதாரண வடிவம் உடையவனாகவும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணியாதவனாகவும் இருந்தான். ஆனாலும், தீவிர புத்தியும், திடசித்தமும், எதைக் குறித்தும் மளமளவென்று விரைவில் பேசும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான். அன்றைய பகல் முழுதும் தகத்தகாயமாய்க் காய்ந்து அண்டாண்ட பிரம்மாண்டங்களில் எல்லாம் நிறைந்து புழுக்கள், பூச்சிகள், சிசுக்கள், நோயாளிகள் முதலிய எந்த ஜெந்துவினிடத்திலும் தயை தாட்சணியம் இன்றி எல்லோரையும் சமமாகச் சுட்டெரித்துக் கொடுங்கோல் அரசு புரிந்த கதிரவன், இரவு வருவதைக் கருதி, தனது பிரியபத்தியான குளிர்ந்த சந்திரனுக்கு முன் தான் தன்து கோர வடிவத்தைக் காட்டக் கூடாதென்று நினைத்து தனது கொடிய கிரணங்களை எல்லாம் மறைத்து கனிந்த இனிமையான மாம்பழம் போல உருமாறி, பரம சாதுவாய் விளங்கி, தனது மனைவி இருக்கும் வரையில் தான் தனது கொடுமைகளையே காட்டுவதில்லை என்று மஞ்சள் வெயிலான ரீமுகத்தின் மூலமாக உலகுக் கெல்லாம் நற்செய்தி சொல்லி அனுப்பிவிட்டு, மேற்றிசைக் கடலான தனது சப்பிரமஞ்சத்திற்கருகில் நின்று தனது துணைவி வருகிறாளோ என்று பார்ப்பவன் போலத் தோன்றினான். இராக் காலத்தின் சக்கரவர்த்தினி பவனி புறப்படப் போகிறாள் என்று பிரஜைகளுக்குப் பறையறைவிப்பது போல அலைகள் எல்லாம் கொந்தளித்து எழுந்து ஆனந்த வெறிகொண்டு ஓடி வந்து கரையில் மோதி மோதித் திரும்பி எதிர்கொண்டு சென்றன. ராஜாத்தியின் பணிப்பெண் இளந்தென்றல் வடிவமாகத் தோன்றி இனிமையையும் குளிர்ச்சியையும் அள்ளி நாலா பக்கங்களிலும் வீசி எல்லோர்க்கும் அபயஸ்தம் அளிப்பவர் போல வெளிப்பட்டு எங்கும் நிறைந்து போயினர். அன்றைய தினம் பெளர்ணமி திதியாதலால், சம்பூர்ணபிம்ப வடிவமாகத் தாரகைகளின் சக்கரவர்த்தினி, அப்போதே நீராடி சுத்தமாக அலங்கரித்துக் கொண்டு எழுபவள் போல, அமிர்தத்துளிகளை ஜிலிர் ஜிலிரென்று அள்ளி இறைத்துக் கொண்டு எல்லா ஜீவராசிகளையும் நோக்கி சந்தோஷமாக நகைத்த வண்ணம் அதியுல்லாசமாகப் பவனி புறப்படவே, பகல் முழுதும் சூரியனது உக்கிரத்தால் கருகி வெதுப்பப்பட்டுக் கிடந்த ஜீவ ஜெந்துக்களின் மனதில் குதூகலமும், பூரிப்பும், பேரானந்த வெள்ளமும் பொங்கி எழுந்து கரைபுரண்டோட ஆரம்பித்தன.

மேலே விவரிக்கப்பட்ட மணலில் சயனித்திருந்த சுந்தர ரூபன் மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமித்ததையே வியப்போடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரங்கழித்துக் கிழக்கில் திரும்ப, அந்தத் திசையில் இன்பமயமாக எழுந்து நின்ற சந்திரன் அவனது திருஷ்டியில் பட்டது. அவன் மட்டற்ற குதூகலமும் பூரிப்பும் அடைந்து, “அடே கோபால்சாமீ! அதோ கிழக்குப் பக்கம் பாரடா? இப்போது மேற்குத் திக்கில் மறைந்த சூரியனே திரும்பவும் கிழக்குத் திக்கில் வந்துவிட்டது போல இருக்கிறது பார்த்தாயா? இன்று சந்திரபிம்பம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பார்?" என்றான்.

அதைக் கேட்ட கோபாலசாமி, “இன்று பெளர்ணமி அல்லவா. அதனால் தான் சந்திரன் பூர்ணவடிவத்தோடு இருக்கிறது. நாமும் இத்தனை வருஷமாக இந்தச் சென்னப் பட்டனத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரையில் நாம் இந்த இடத்துக்கு வராமல் இருந்தது நம்முடைய துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இந்த இடம் மோகினி தேவியின் சிங்கார வனம் போல் அல்லவா தோன்றுகிறது. ஆகா! எந்தப் பக்கம் பார்த்தாலும் நேத்திராநந்தமாக இருக்கிறதே! சுவர்க்கலோகம் என்று ஒர் இடம் எங்கேயோ இருக்கிறதென்று சொல்லுகிறார்களே, அது இந்த இடந்தான் என்று நினைக்கிறேன். அதோ பார் மேற்குத் திக்கில் செளக்கு மரங்களே நிறைந்த தோப்புகளும், தெய்வத் தச்சனாகிய மயனால் நிர்மாணிக்கப் பட்டவையோ எனக் காண்போர் பிரமிக்கத்தக்க அற்புதமான மாடமாளிகைகளும் நிறைந்திருப்பதும், கிழக்குத் திக்கில் கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கடல் சுத்தமாகப் பரவி இருப்பதும், அப்சர ஸ்திரீகளைப் பழித்த அபூர்வ வனப்புடைய யெளவன மங்கையர் பலவித உடைகளிலும் அலங்காரங்களிலும் மேரி மகாராணியார் கலாசாலை மாளிகையில் ஆங்காங்கு புஸ்தகமும் கையுமாக நின்று படித்தும், ஒருவரோடு ஒருவர் உல்லாசமாகப் பேசியும், விளையாடியும் மயில்களைப் போலவும், மான்களைப் போலவும், மாடப்புறாக்களைப் போலவும் காணப்படுவதும் ஒன்று கூடிய இந்த மகா அருமையான காட்சியைப் போல, இந்த லோகத்திலும், வேறே எந்த லோகத்திலும் நாம் காணமுடியாது என்றே நினைக்கிறேன். இந்த இடத்துக்கு வருவோர் மந்திர சக்தியினால் தடைக்கட்டப் பட்டு ஒய்ந்து நிற்கும் பாம்பு போல, இந்த இடத்தின் காந்த சக்தியில் லயித்து அப்படியே பிரம்மாநந்த நிலையில் உட்கார்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். அதோ அந்தப் பக்கம் திரும்பிப் பார் அனாதைகளான கைம்பெண்கள் வசிப்பதற்கும், கல்வி பயில்வதற்கும் உபயோகப்படுத்தப்படும் மாளிகை எப்படி இருக்கிறது பார்த்தாயா? அது பழைய காலத்தில் இருந்த நம் தேசத்து அரசர்களுடைய கோட்டைகள் போல் அல்லவா மகா புதுமையாக இருக்கிறது. கந்தசாமி நான் எத்தனையோ தடவை உன்னைக் கூப்பிட்டும், நீ வரமாட்டேன் என்று சொல்லி, வேண்டா வெறுப்பாக இன்று வந்தாயே! இந்த இடம் எப்படி இருக்கிறது பார்த்தாயா? என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி என்ற கட்டழகன் மந்தஹாலம் தவழ்ந்த முகத்தோடு சந்தோஷமாகப் பேசத் தொடங்கி, “ஆம்: வாஸ்தவம் தான். இதுவரையில் இந்த இடத்தை நாம் பார்க்காமல் போனோமே என்ற விசனம் எனக்கும் உண்டாகிறது. ஆனால் என் மனசில் ஒரு சந்தேகமும் பிறக்கிறது. நம்முடைய பெண் மக்கள் இருந்து படிப்பதற்கு இவ்வளவு பெரிய பட்டனத்தில் ஊருக்குள்ளாகவே இந்தத் துரைத்தனத்தாருக்கு ஒரு நல்ல இடம் அகப்படவில்லையா? இப்படிப்பட்ட தனிக்காட்டில், இரண்டு பெரிய ஸ்மசானங்களுக்கு நடுவில்தானா கொண்டுவந்து இவ்வளவு முக்கியமான கலாசாலையை ஸ்தாபிக்க வேண்டும்? இன்று பெளர்ணமி ஆதலால், நிலவு பால் போல இருக்கிறது. எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாகவும் மனசை மோகிக்கச் செய்வதாகவும் இருக்கிறது. இருளே மயமாக இருக்கும் அமாவாசை காலமாக இருந்தால், இந்த மாளிகைகளுக்குள்ளிருக்கும் நமது பெண்மணிகள் இராக்காலங்களில் வெளியில் தலையை நீட்டவும் துணிவார்களா? அதுவுமன்றி, இரண்டு திக்குகளில் ஸ்மசானங்கள் இருப்பது நம் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி இருக்க, எப்படிப்பட்ட துணிகரமான நெஞ்சுடையவர்களும் இருளில் இந்த இடத்தில் இருக்க அஞ்சுவார்கள் என்றே நினைக்கிறேன். வெள்ளைக்கார துரைத்தனத்தார் முட்டாள்கள் அல்ல. நான் சொன்ன இந்த ஆட்சேபம் அவர்களுடைய மனசில் பட்டிருக்காதென்று நாம் நினைப்பதற்கில்லை. வேறே ஏதாவது முக்கியமான நோக்கத்தோடு தான் அவர்கள் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் இவ்விடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர்கள் இன்னொரு காரியம் செய்திருந்தால், அது ஒருவிதத்தில் நலமாக இருந்திருக்கும். இந்தக் கலாசாலைக் கட்டிடத்தின் முன் பக்கத்திலும் அதைச்சுற்றி நாற்புறங்களிலும், இப்போது பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் ஏராளமான மரங்களையும் பூச்செடிகளையும் அமைத்து அபிவிருத்தி செய்து, அதை ஒரு பெருத்த பூஞ்சோலையாகச் செய்து இடையிடையில் விளக்கு ஸ்தம்பங்களை நட்டு இருள் காலங்களில் விளக்குகளைக் கொளுத்திவிட்டால், அந்த இடத்தின் தனிமையும் பயங்கரத் தன்மையும் குறைந்து போகும் என்று நினைக்கிறேன்” என்றான்.

கோபாலசாமி:- ஆம். நீ சொல்வது வாஸ்தவம்தான். ஏன் இதோ பிரசிடென்சி காலேஜ் இருக்கிறதே. அதற்கு முன்பக்கம் எப்போதும் பொட்டல் வெளியாகத்தானே இருக்கிறது. அங்கே பூச்செடிகளையும் மரங்களையும் வைத்து அதை அழகான ஒரு பூங்காவாக மாற்ற, துரைத்தனத்தாருக்கு எவ்வளவு செலவு பிடிக்கப் போகிறது. லட்சக்கணக்கில் ரூபாய் பலவிதமாக அழிந்து போகின்றன. இந்த முக்கியமான சின்ன விஷயத்தில் துரைத் தனத்தார் சிக்கனம் பாராட்டுகிறார்கள். ஆனாலும், இதற்கு முன் நிர்மாநுஷ்யமாக இருந்த இடத்தில் இப்படிப்பட்ட கட்டிடங்களை உண்டாக்கி, இந்த இடத்தை இவ்வளவு வசீகரமாகச் செய்திருப்பது ஆச்சரியமான விஷயம் அல்லவா. அதைப்பற்றி நாம் வெள்ளைக்காரரை நிரம்பவும் மெச்ச வேண்டியது அவசியந்தானே. அவர்கள் அபாரமான புத்திவாய்ந்தவர்கள் என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அப்படி இல்லாமலா, இரண்டாயிரம் மையில் துரத்திற்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தீவிலிருந்து கொண்டே இவர்கள் நாமெல்லோரும் கிடுகிடென்று நடுங்கும்படி குரங்குகளைப் போல நம்மை ஆட்டி வைக்கிறார்கள். நாமும் மனிதர்கள் அவர்களும் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. நம்முடைய முன்னோர் புராணங்களில் கந்தருவர்கள் என்றும், சூரர்கள் என்றும் குறித்திருப்பது இவர்களைத்தான் என்ற எண்ணமே என் மனசில் உதிக்கிறது. நம்மால் செய்ய முடியாத எவ்வளவு அற்புதமான அரிய காரியங்களை இவர்கள் செய்கிறார்கள் பார்த்தாயா. உதாரணமாக, இந்த மின்சார சக்தியை வைத்துக் கொண்டு அவர்கள் எவ்வளவு அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள் பார்த்தாயா? ஒரு பட்டணம் முழுதிலும் உள்ள விளக்குகள் எல்லாம் எண்ணெய் இல்லாமல் இந்த மின்சார சக்தியினால் எரிகின்றன. ஆஹா! மின்சார சக்தியொன்று இருக்கிறதென்று நம்முடைய முன்னோர்கள் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை நம்முடைய முன்னோர்கள் மின்சார சக்தியைத்தான், யட்சணி தேவதை என்றும், மந்திர சக்தியென்றும் சொல்லி இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. இதற்கு முன் கம்பிகள் மூலமாகத் தந்திகள் அனுப்பினார்கள். இப்போது கம்பி இல்லாமல், ஆகாயவெளியில் இரண்டாயிரம் மையிலுக்கப்பால் உள்ள அவர்களுடைய தேசத்தில் இருந்து செய்திகள் உடனுக்குடன் வருகின்றன. அதுவுமின்றி, இப்போது இன்னொரு புதுமையான ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். ஒருவர் ரூ.600 கொடுத்தால், அவருடைய வீட்டில், ஒரு கம்பத்தை நட்டு வேறு சில இயந்திரங்களை அவ்விடத்தில் வைக்கிறார்கள். அவைகளுக்குப் பக்கத்தில் மனிதர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தால், லண்டன், கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் நடத்தப்படும் பாட்டுக் கச்சேரிகளில் பாடப்படும் பாட்டுகள் எல்லாம் இவ்விடத்தில் மனிதர் இருந்து பாடுவது போல உடனுக்குடன் அத்தனை ஜனங்களுக்கும் நன்றாகக் கேட்கின்றன. இது எப்படிப்பட்ட புதுமை பார்த்தாயா? அதற்கு இப்போது ரூ.600 தான் செலவு பிடிக்கிறது. காலக்கிரமத்தில் அது நிரம்பவும் குறைந்து நூறு, அல்லது, ஐம்பதுக்கு வந்து விடும். அந்த இயந்திரங்களை அநேகமாய் எல்லா வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அயலூர்களில் உள்ள மனிதர்களோடு உடனுக்குடன் பேசலாம். அங்கே நடக்கும் பாட்டுக் கச்சேரிகளை எல்லாம் எல்லோரும் கேட்கலாம். இன்னம் சொற்ப காலம் போனால், மனிதருடைய வடிவத்தை யந்திரத்தின் மூலமாய் நாம் உடனுக்குடன் பார்க்கும்படி செய்து, அவர்களோடு நேருக்கு நேர் பேசும்படி செய்வார்கள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. அப்போது ஒருவருக்கொருவர் கடிதம் எழுத வேண்டிய அவசியமும் இல்லை, நேரில் ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறேன். அப்போது தபால் இலாகாவிலும், ரயில் இலாகாவிலும் வருமானம் அடியோடு குறைந்து போகும் என்பது நிச்சயம்.

கந்தசாமி:- ஆம். வாஸ்தவந்தான். இயந்திர வித்தைகள் அதிகமாய் உபயோகத்துக்கு வர வர, மனிதர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடுவது சகஜந்தானே. வெள்ளைக்காரர்கள், செத்தவரைப் பிழைக்க வைக்கிற ரகசியம் ஒன்றைத் தவிர மற்ற எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

கோபாலசாமி:- அதை மாத்திரம் அவர்கள் விட்டுவிட்டார்களோ, அன்றைய தினம் பத்திரிகையில் நாம் படிக்கவில்லையா? ஜெர்மனியில் யாரோ ஒரு சாஸ்திர நிபுணர் மனிதரை என்றும் சிரஞ்சீவியாக்கக்கூடிய ரகசியத்தைக் கண்டுபிடித்திருக்கிறாராம். குரங்கின் தொண்டையில் உமிழ்நீர் ஊறும் ஸ்தானங்களை எடுத்து மனிதருடைய தொண்டையில் அதே ஸ்தானத்தில் வைத்து ஒட்டு வேலை செய்துவிட்டால், மனிதர் எப்போதும் பாலியப்பருவத்தினராகவே இருந்து விடுகிறார்களாம். அந்த நிபுணர் அப்படி இரண்டொருவருக்குச் செய்து, அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறாராம். ஆனால், அதற்கு ஏராளமான குரங்குகள் தேவையாம். சீமையில் அத்தனை குரங்குகள் அகப்படவில்லையாம். நம்முடைய இந்தியாவில் உள்ள குரங்குகளைப் பிடித்து, கப்பல் கப்பலாக பம்பாயில் இருந்து அனுப்புவதாக அன்றைய தினம் நான் படித்துச் சொன்னதை நீ கவனிக்கவில்லை போல் இருக்கிறது.

கந்தசாமி:- ஒ! அப்படியா சங்கதி! நீ படித்ததை நான் அவ்வளவு நன்றாகக் கவனித்துக் கேட்கவில்லை. எல்லா ரகசியங்களையும் ஜெர்மனிக்காரர்கள் தான் கண்டுபிடிக்கிறார்கள். மற்றவர்கள் உடனே அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது நடந்த ஜெர்மனி சண்டையில் எதிரிகள் எப்பேர்ப்பட்ட புதிய புதிய இயந்திரங்களையும், தண்ணிருக்குள் மறைந்திருந்து அடிக்கும் கப்பல்களையும், நூறுமையில் தூரம் போய் வெடிக்கக்கூடிய குண்டுகளையும், கண்ணுக்குத் தெரியாத ஆகாய விமானங்களையும் கொண்டு வந்து காட்டி இந்த உலகத்தையே பிரமிக்கச் செய்தார்கள். நம்முடைய இங்கிலீஷ்காரர்கள் அவைகளைப் பார்த்த பிறகு தான் எல்லாவற்றையும் செய்தார்கள் என்று நாம் பத்திரிகைகளில் படிக்க வில்லையா? ஜெர்மனியார் அநாகரிகமான காட்டு மனிதர்கள் என்று இங்கிலீஷ்காரர்கள் அவர்களை இகழ்ந்து ஏளனமாகப் பேசினாலும், அவர்களுடைய தேசத்தில் இருந்துதான் அதிமானுஷத்தன்மை வாய்ந்த தெய்வீகச் செய்கைகள் எல்லாம் வெளியாகின்றன. அவர்கள் மனிதர்களை என்றும் சிரஞ்சீவியாக்கக் கூடிய முறையை இப்போது கண்டு பிடிக்காவிட்டாலும், இன்னும் நாலைந்து தலைமுறைகளுக்குப் பிறகாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இப்போது அவர்கள் மனிதர் 150, 200 வயது வரையில் ஜீவித்திருக்கும் வழியை ஒரு வேளை கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம். அவ்வளவு தான் இப்போது சாத்தியமாகும் என்று நினைக்கிறேன். ஏன், நம்முடைய முன்னோர்களும், ரிஷிகளும், பல நூற்றாண்டுகள் உயிரோடு இருந்ததாக நாம் படித்திருக்கிறோம் அல்லவா. இப்போது நம்முடைய அனுபவத்திலேயே எத்தனையோ பேர், நூறு வயசு, தொண்ணுறு வயசு இருந்து இறக்கிறதைக் கண்டிருக்கிறோம் அல்லவா.

கோபாலசாமி:- மெய்தான். மனிதர்கள் நீண்ட ஆயிசு உடையவர்களாகவும் சிரஞ்சீவிகளாகவும் ஆகிவிட்டால், பிரம்மதேவன் எமன் முதலிய தெய்வங்களுக்கெல்லாம் உத்தியோகம் போய் விடுமே.

கந்தசாமி:- ஆம், அப்படித்தான் முடியும். இயந்திரங்களும் தந்திரங்களும் அதிகரிக்க அதிகரிக்க, மனிதருக்கு எப்படி வேலை இல்லாமல் போகிறதோ, அதுபோல, தெய்வங்களுக்கும் வேலையில்லாமல் போவது சகஜந்தானே! நாம் நன்றாக யோசனை செய்து பார்க்கப் போனால், நம்மைப்போன்ற ஜீவஜெந்துக்கள் எல்லாம் நேரம் காட்டும் கடிகாரங்களுக்குச் சமம் என்று தான் நினைக்க வேண்டி வரும் போல் இருக்கிறது. கடிகாரத்திற்குள் கெட்டியான சக்கரங்கள் முதலிய யந்திரங்களை வைத்து விட்டால், அது என்றும் சிரஞ்சீவியாக ஒடிக் கொண்டிருக்க வில்லையா. அதுபோல நம்முடைய உடம்பில் உள்ள கருவிகளையும் பலப்படுத்துவதால், நம்முடைய ஆயிசு காலம் அதிகரிக்குமானால், இன்னும் அதிக சூட்சுமமான தந்திரங்களால் நாம் நம்மை சிரஞ்சீவியாக்கிக் கொள்வது ஏன் முடியாது? அப்போது நம்முடைய உடம்பிற்குள் ஜீவாத்மா என்று ஒன்று இருக்கிறதென்றும், அது அதன் பூர்வ கர்மபலத்தின்படி ஜென்மம் எடுக்கிறதென்றும், ஒவ்வொரு ஜெந்துவிற்கும் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட காலவரம்புக்குமேல் ஒரு நொடி நேரங்கூட உயிரோடிருக்க முடியாது என்றும், நம்முடைய பெரியோர்கள் கண்டுபிடித்திருக்கும் தத்துவங்களை எல்லாம் இனி நாம் குப்பையில் போட வேண்டியதாகத்தானே முடியும். தேகக்கருவிகளின் வலுவினால் மனிதன் சிரஞ்சீவியாகி விடுவான் ஆனால், மனிதனுக்குள் ஜீவாத்மா என்று ஒன்று இருக்கிறது என்பது பொய்யாகி விடுகிறதல்லவா.

கோபாலசாமி:- ஏன் பொய்யாகிறது? நம்முடைய முன்னோர் அப்படி ஒன்றும் முடிவாகச் சொல்லக் காணோமே. பொதுவாக ஜீவராசிகள் தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள காலவரம்பிற்கு அதிகமாக இருக்க முடியாதென்றால், அது பல விஷயங்களை அடக்கியதாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கிறது. ஆரம்பத்தில் அதற்கு ஏற்படும் தேகவலு, அதன் தாய் தகப்பன்மாருடைய தேக மனோ பலங்களையும், அவர்களுடைய சுக செளகரியங்களையும் பொருத்ததாக இருக்கிறது. அதன் பிறகு அது வளரும் போது அதற்குக் கிடைக்கும் தேக போஷணை, செல்வாக்கு, அதன் தேக உழைப்பு, பழக்கவழக்கங்கள் முதலியவற்றால் அதன் ஆரோக்கியம், பலாபலம், ஆயிசு முதலியவை அமைகின்றன. மனிதருடைய பிறப்பு, செல்வம், சுகம் முதலிய அம்சங்கள் எல்லாம், பூர்வஜென்ம சுகிருதத்தால் உண்டாகின்றன. ஆகையால், அவற்றர்ல் நிர்ணயிக்கப்படும் தேக ஆரோக்கியம், ஆயிசு முதலியவைகளையும் பூர்வ ஜென்ம கர்ம பலன் என்று சொல்லி விடுகிறார்கள். நம்முடைய ரிஷிகள் யோகாப் பியாசம் செய்து தங்களுடைய ஆயிசை நூற்றுக் கணக்காக வளர்த்திக் கொண்டதாகக் கேள்வியுறுகிறோம். நம்முடைய சாஸ்திரங்களில் ஆயிசு விருத்திக்காக ஹோமங்கள், பிராயச்சித்தங்கள், தாதுபுஷ்டி மருந்துகள் முதலியவைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதுவுமன்றி தேவாமிருதமென்று ஒரு வஸ்து இருப்பதாகவும், அதை உண்போர் மூப்பு, பிணியின்றி என்றும் சிரஞ்சீவியாக இருப்பதாகவும் படித்திருக்கிறோம் அல்லவா ஜீவாத்மா, பூர்வ ஜென்ம கர்மா முதலிய விஷயங்கள் சொல்லப் பட்டிருக்கும் அதே சாஸ்திரங்கள் தானே இந்த விஷயங்களையும் சொல்லி இருக்கின்றன. ஆகையால் நாம் இரண்டையும் நிஜமாகவே நம்ப வேண்டியது தான். இவை ஒன்றுக் கொன்று முரண்படுவதாக நினைப்பது சரியல்ல.

கந்தசாமி:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) நான் இன்னொரு மாதிரியாக எண்ணுகிறேன். ஆதிகாலத்தில் நம்முடைய முன்னோர்கள் வடக்கில் உள்ள ஹிமாலயப் பர்வதத்தில் ஏறியே அப்பால் உள்ள தேசங்களுக்கு எல்லாம் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால், அதற்கு அப்பால் இருந்தவர்களை எல்லாம், கந்தர்வர்கள் என்றும், அவுனர்கள் என்றும் (அயோனியர்), அசுரர்கள் என்றும், தேவர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஹிமாலயப் பர்வதம் ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் அதன் மேல் ஏறிப் போவதை ஆகாய லோகத்துக்கு ஏறிப்போவதாக மதித்திருக்கலாம். அந்தத் தேவர்களிடத்தில் மனிதருடைய மூப்பு பிணிகளை எல்லாம் நீக்கி சிரஞ்சீவியாக்கும் தேவாமிருதம் இருந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா. ஒருவேளை இந்த ஜெர்மனி தேசத்தாரே அந்தத் தேவர்களாக இருந்திருக்கலாம். அவர்களிடம் ஆகாய விமானங்கள் தேவாமிருதம் முதலியவை இருந்திருக்கலாம். தேவாமிருதம் முதலில் அவ்விடத்தில் இருந்து நடுவில் இல்லாமல் போய் இப்போது மறுபடியும் அங்கே உண்டாகலாம் அல்லவா. அந்தத் தேசத்திற்குப் போகும் வழியில் உள்ள பாரசீக தேசத்திலும், காக்கேசியாவிலும் உள்ள ஸ்திரீகள் எல்லோரும் அழகில் நிகரற்றவர்கள் என்று நம்முடைய பூகோள சாஸ்திரம் சொல்லுகிறது அல்லவா இந்தத் தேசத்தவர்கள் தான் நம்முடைய புராணத்து அப்ஸர ஸ்திரீகளாகவும் கந்தர்வ ஸ்திரீகளாகவும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய அருச்சுனன், சந்தனு முதலியோர் தெய்வ லோகத்துக்குப் போய், தேவேந்திரனுக்குச் சண்டையில் உதவி செய்திருப்பதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. ஐரோப்பாவில் உள்ள ரோமாபுரிச் சரித்திரத்தில் அந்தத் தேசத்தை ஆண்ட சில சக்கரவர்த்திகளிடம் இந்திய மன்னர்கள் விருந்தினராகப் போய் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஒத்திட்டுப் பார்த்தால், நம்முடைய முன்னோர்கள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள வெள்ளையரையே தேவர்கள் என்றும், அசுரர்கள் என்றும் பலவாறாக மதித்து வந்தனர் என்பது தெரிகிறது. தவிர, தேவபாஷை என்று சொல்லப்படும் நம்முடைய சமஸ்கிருதத்துக்கும் ஜெர்மன் பாஷைக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகையால் அவ்விடத்தில் இருந்து மனிதரை சிரஞ்சீவி ஆக்கும் அமிர்தம் உண்டாவது விந்தையுமல்ல, நம்முடைய முன்னோர்களின் கொள்கைக்கு விரோதமானதும் அல்ல என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

கோபாலசாமி:- ஆம். தடையென்ன அப்படித்தான் நாம் அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். இப்போது நீ சொன்னதில் இருந்து எனக்கு இன்னம் ஒரே ஒரு சந்தேகம் உண்டாகிறது. அது தான் தெளிவுபடவில்லை. நம்முடைய முன்னோர்கள், பாவிகள் இறந்த பிறகு அவர்களுடைய ஜீவாத்மாக்கள் தெற்குத் திசையில் உள்ள எமபட்டணத்திற்குப் போய், அவ்விடத்தில் கோரமான தண்டனை அடைவதாகச் சொல்லி இருக்கிறார்களே. அதை நம்மவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்? அந்த ஊர் தெற்குத் திசையில் தான் இருக்கிறது என்று ஏன் சொன்னார்கள்?

கந்தசாமி:- இது தெரியவில்லையா? நம்முடைய தேசத்தைக் காட்டிலும் இன்னம் தெற்கில் எந்தத் தேசம் இருக்கிறது என்று யோசித்துப் பார். ஆப்பிரிக்காக் கண்டம் நம்முடைய தேசத்தை விட அதிக தெற்கில் இருக்கிறதல்லவா. அங்கேயுள்ள நீக்ரோ ஜாதியார் கன்னங்கரேல் என்று விகார ரூபத்தோடு பயங்கரமாக இருக்கிறார்கள் அல்லவா. அவர்களைத்தான் எமன் என்றும் எமகிங்கரர்கள் என்றும் நம்மவர்கள் மதித்தார்கள். அவர்களுள் சிலர் மனிதரையே தின்கிறதாக இந்தக் காலத்திலும் நிச்சயமாகத் தெரிகிறது; மனிதர் அங்கே போவது பெருத்த பயங்கரமான தண்டனை என்று நம்மவர்கள் மதித்தார்கள். ஆகையால், பாவிகளின் ஜீவன் அங்கே போகிறதென்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்டாவது ஜனங்கள் சன்மார்க்கத்தில் ஒழுகட்டும் என்ற நல்ல கருத்தோடு அப்படிச் சொல்லுகிறார்கள் என்றே நாம் கொள்ள வேண்டும்.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) அப்படியானால், ஆப்பிரிக்காக் கண்டத்தில் எல்லாம் மகா கொடுமையான பயங்கர பிரதேசமாகிய சூதான் சஹாரா பாலைவனத்தைத் தான் நம்மவர்கள் எமனுடைய பட்டணமாகிய வைவசுத பட்டணம் என்று மதித்தார்கள் என்று நீ சொல்லுவாய் போல் இருக்கிறதே.

கந்தசாமி:- (புன்னகையோடு) ஆம்; அதை நான் சொல்ல வாயெடுக்கும் முன் அது உன் மனசிலும் பட்டுவிட்டது. அப்படி நினைப்பதற்கு இன்னொரு விஷயங்கூடப் பொருத்தமாக இருக்கிறதை நீ கவனித்தாயா? அந்த சூதான் சஹாரா பாலைவனத்துக்குப் போகும் வழியில், முதலைகளே நிறைந்ததும், இப்போது நீலநதி என்று சொல்லப்படுவதுமான பயங்கரமான பெரிய ஆற்றைத்தான், எமலோகத்துக்குப் போகும் வழியில் உள்ள வைதரணிநதி என்று சொல்லி இருக்கலாம்.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) பேஷ்! பேஷ்! நீ சொல்லும் வியாக்கியானம் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நம்முடைய நாட்டு வைதிகர்களிடம் போய் நீ இப்படி எல்லாம் சொல்வாயானால், அவர்கள் உன்னை உடனே பைத்தியக்கார வைத்திய சாலைக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவார்கள். ஆனால், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுகிறபடி அவர்கள் கோபித்தாலும், நீ சொல்லும் விஷயம் என்னவோ பொருத்தமாகத்தான் இருக்கிறது. அது போகட்டும்; நாம் புராண விஷயங்களைப் பற்றிப்பேச எடுத்துக் கொண்டால், நம்முடைய சந்தேகங்கள் அதிகரிக்கும் அன்றி தெளிவுபடப் போகிறதில்லை. நாம் முதலில் பேச ஆரம்பித்த விஷயத்தை விட்டு, வெகுதூரம் போய் இமாலயம், ஜெர்மனி, ஆப்பிரிக்கா, எமலோகம் முதலிய துரப்பிரதேசங்களுக்கு எல்லாம் போய் அலைந்து கொண்டிருக்கிறோம். வீட்டைவிட்டு வெளியில் வர அஞ்சும் மிருதுவான சுபாவமுடைய நம்முடைய பெண் மக்களை எல்லாம் இப்படிப்பட்ட பயங்கரமான தனித்த இடத்தில் கொண்டு வந்து வைத்துக்கொண்டுதானா இவர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற விஷயத்தை அல்லவா நாம் பேசினோம். வெள்ளைக்காரர்கள் நம்முடைய தேவர்கள் ஆகையால், அவர்கள் சர்வக்ஞர் என்றும், ஏதோ ஆழ்ந்த கருத்தோடு தான் இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள் என்றும் நீ சொன்னாய். நானும் யோசித்துப் பார்க்கிறேன். அது இன்னதென்பது விளங்கவில்லை.

கந்தசாமி:- ஒருவேளை இப்படி இருக்கலாம். வயதுவராத சிறு குழந்தைகளான பெண்களுக்கெல்லாம் பட்டனத்துக்குள்ளேயே பல பாட சாலைகள் இருக்கின்றன. இங்கே ஏற்படுத்தி இருப்பது உயர்தரப் படிப்பு மாத்திரம் அல்லவா, அந்த வகுப்புகளில் வயசு வந்த யெளவனப் பெண்களே படிப்பார்கள். ஊருக்குள் இத்தனை ஸ்திரிகளையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தால், . துன்மார்க்கத் தனமும் துஷ்டத்தனமும் வாய்ந்த விடபுருஷர்கள் அநந்தமானவர்கள் இருக்கிறார்கள் ஆகையால், அவர்களால் இவர்களுக்கு ஏதாவது கெடுதல் நேரும் என்ற எண்ணத்தோடு அப்படிப்பட்டவர்களுடைய கண்களில் இவர்கள் படும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும்படி இப்படி ஒதுப்புரமான ஒரிடத்தில் இவர்களுடைய கலாசாலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கோபாலசாமி:- இப்போது மாத்திரம் அந்த உபத்திரவம் இல்லாமல் போய்விட்டதா என்ன? இந்தப் பட்டனத்தில் உள்ள பெரிய மனிதர்களுள் பெரும்பாலோர் அஸ்தமன வேளைகளில் இந்தக் கலாசாலைக்கு எதிரில் வந்து மோட்டார்களையும், ஸாரட்டுகளையும் வரிசையாக நிறுத்திவிட்டு நின்று காற்று வாங்குவதாகவும், இந்த சென்னைப் பட்டனத்தின் கடற்கரை முழுதிலும், இந்த இடமே சுத்தமாகவும், ரமணியமாகவும் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு ஒரு நாளைப் போல இவ்விடத்திற்கு எல்லோரும் வருவதாகவும் பலர் சொல்ல நாம் கேள்வியுற்றது இல்லையா? வயசு முதிர்ந்த கிழவர்களான எத்தனையோ வக்கீல்களும், ஜட்ஜிகளும் இந்தக் கலாசாலையில் உள்ள பெண் மணிகளின் திருமேனியழகைக் கண்டு ஆநந்திக்கும் பொருட்டு வருகிறார்கள் என்று பலர் நம்மிடம் வந்து புரளியாகப் பேசியதை எல்லாம் நாம் கேட்டதில்லையா? கொஞ்ச காலத்துக்கு முன், ஹிந்துப் பத்திரிகையில் இன்னொரு சங்கதி வெளியாயிற்றே; அது உனக்கு ஞாபகம் இல்லையா?

கந்தசாமி:- என்ன சங்கதி? கோபாலசாமி:- கைம்பெண்கள் வசிக்கும் அந்தப் பெரிய கட்டிடத்திற்கு முன்னால் ஒரு குறித்த இடத்தில், வெள்ளை நிறமுள்ள ஒரு பீடன் வண்டியில் யாரோ ஒரு பெரிய மனிதர் வந்து எப்போதும் நின்று, அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது உப்பரிகையைப் பார்த்துக் கொண்டே இருந்ததாக நாரதர் என்பவர் கதை எழுதியிருந்தது உனக்கு நினைவில்லையா?

கந்தசாமி:- பெரிய மனிதர் வந்து நின்றால், அவர் கெட்ட எண்ணத்தோடுதான் நிற்கிறார் என்று நாம் சொல்லிவிட முடியுமா? ஒரு வேளை அந்த இடத்தில் இனிமையான காற்று உண்டாகலாம்? அல்லது, அவர் அருமையாக மதித்துள்ள யாராவது கைம்பெண் அவ்விடத்தில் இருக்கலாம். அவர் ஒவ்வொரு நாளும் தமது வண்டியில் கடற்கரைக்கு வந்து போகும் போது, ஏன் அந்தப் பெண்ணையும் பார்த்து விட்டுப்போகக் கூடாது? அவர் எவ்வித துர்நினைவும் இல்லாமல், தினந்தினம் வந்து அங்கே நின்று தமது மனிதரைப் பார்த்துவிட்டுப் போவதில், என்ன குற்றம் இருக்கிறது? இதை எல்லாம் நாம் காதிலேயே வாங்குவது சரியல்ல. உலகம் பலவிதம், வெளிப்பார்வைக்கு ஒரு விதமாகத் தோன்றும் விஷயம் உண்மையில் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். எப்போதும் நாம் வெளித் தோற்றத்தைக் கொண்டே எதையும் நிச்சயிப்பது அநேகமாய்த் தவறாகத்தான் முடியும்.

கோபாலசாமி:- (வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டு) நூற்றில் ஒரு பேச்சு. ஏது நீ அந்தப் பெரிய மனிதருக்கு இவ்வளவு தூரம் பரிந்து பேசுகிறது? அவர் உன்னைத் தன் கட்சிக்கு வக்கீலாக நியமித்து இருக்கிறாரா? நாம் இப்போது அந்தக் கட்டிடத்தின் பக்கத்தில் வந்து முடியும் ஐஸ்ஹவுஸ் ரோட் வழியாகத்தானே வந்தோம். பாலத்துக்கு அப்பால் இருந்து வரும் காற்று எப்படி இருக்கிறதென்று பார்த்து அனுபவித்தோம் அல்லவா. அது தான் நரகலோகம் என்று நீயே சொன்னாய். நம்முடைய பெண் குழந்தைகளை இப்படிப்பட்ட துர்நாற்றமுள்ள இடத்தில் வசிக்கச் செய்திருக்கிறார்களே என்று நீ தானே சொன்னாய். இப்போது பெரிய மனிதர் அவ்விடத்தில் வரும் நல்ல காற்றைக் கருதி அங்கே நின்று கொண்டிருக்கலாம் என்று நீ சொல்வது சரியாக இருக்கிறதா? யோசித்துப் பார். அது நிஜமாக இருக்காது. நீ சொல்லும் இன்னொரு யூகம் சரியானதாக இருக்கலாம். அவர் தமக்கு அருமையான மனிதர் அதற்குள் இருப்பதைக் கருதியோ, அல்லது, இருப்பதாக எண்ணி மனக்கோட்டை கட்டியோ அப்படி நின்றிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை அவருடைய சம்சாரம் கைம்பெண்ணாய் அதற்குள் இருக்கிறாளோ என்னவோ - என்று கூறிக் கலகலவென்று நகைத்தான்.

அதைக் கேட்ட கந்தசாமியும் தன்னைமீறி களிகொண்டு கைகொட்டி “பலே! பலே!” என்று கூறிச் சிரித்தான்.

அவ்வாறு அவர்கள் இருவரும் சம்பாவித்துக் கொண்டிருந்த சமயத்தில், சந்திரன் மேலே உயர்ந்து கொண்டே இருந்தது. நிலவின் பிரகாசமும் இனிமையும் அதிகரித்துத் தோன்றின. பால் போன்ற வெண்ணிறமான நிலவு உலகில் உள்ள சகலமான பொருட்களின் மீதும் ஆநந்தமாகத் தவழ்ந்து கொஞ்சி விளையாடி அமிர்த ஊற்றால் அபிஷேகம் செய்தது. சந்திரனைக் கண்டு முன்னிலும் கோடிமடங்கு அதிகரித்த களிவெறியும் மூர்க்கமும் அடைந்த அலைகள் தலைகுப்புறக் கரணமடித்து உருண்டு புரண்டு ஒடித்திரும்பி ஒன்றன்மேல் ஒன்று மோதி பலின் விளையாட்டு நடத்தின. ஆகாய வட்டமும், அதில் மலர்ந்து தோன்றிய நட்சத்திரச் சுடர்களும், வைரங்கள் இழைத்த ஊதா வெல்வெட்டுக் குடை விரிக்கப்பட்டது போல மகா வசீகரமாகத் தோன்றின. கடற்கரையை அடுத்த சாலையில் அடுத்தடுத்து வெகுதூரம் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த காட்சி கடலாகிய பூமாதேவியின் கேசத்தைச் சுற்றிலும் அணியப்பெற்ற முத்துமாலை போல இருந்தது. தென்றல் காற்று முன்னிலும் அதிக இனிமை உடையதாகக் கனிந்து வீசி சகல ஜீவராசிகளுக்கும் ஆநந்தத் தாலாட்டுப் பாடிப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தகைய நிகரற்ற ரமணியக் காட்சியில் லயித்துப் போய் மெய்ம்மறந்து பூரித்துப் படுத்திருந்த கந்தசாமி பலமுறை நெடுமூச் செறிந்து, “ஆகா! இந்த இடம் எவ்வளவு பிரம்மாநந்தமாக

மா.வி.ப. I-3 இருக்கிறதப்பா இதே இடத்துக்கு நாம் பகல் பன்னிரண்டு மணி வேளைக்கு வந்திருந்தால், இந்த மணலில் நாம் காலை வைத்து உயிர் பிழைத்துத் திரும்பிப் போக முடியுமா? நெருப்பில் விழுந்த சருகு போல, கால் அப்படியே கருகிப்போய் நரகவேதனை உண்டாகிவிடுமே. அந்தச் சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு தான் பிரயாசைப்பட்டாலும், அந்தக் கொடுமையைக் கொஞ்சமாவது மாற்ற முடியமா? இப்போது நாம் அனுபவிக்கும் பிரம்மாநந்த சுகத்தில் ஓர் அணுவிலும் பரம அனுப்பிரமாணம் நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியுமா? கடவுளுடைய மகிமையை என்னவென்று புகழுகிறது ஓர் இமைகொட்டும் நேரத்தில், கடவுள் தமது மந்திரக்கோலை ஆட்டினால் அண்டாண்ட பிரம்மாண்டங்கள் எல்லாம் தலை தடுமாறிப் போகின்றன பார்த்தாயா? ஒரு நொடியில் உலகம் முழுதையும் சுட்டெரித்து விடுகிறார். அடுத்த கூடிணத்தில் ஒரு மழை பெய்ததானால் எங்கு பார்த்தாலும் ஒரே ஜலப்பிரவாகமாகி விடுகிறது. இப்போது பார். கொஞ்ச நேரத்துக்கு முன் நெருப்புப் பொறி பறந்த இந்த உலகம் முழுதும் இப்போது அமிர்தசாகரத்தில் ஆழ்ந்து மிதந்து கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, தங்கள் ஆயிசு காலம் முழுதும் உழைத்துத் தண்ணீரை எடுத்துக் கொட்டினால்கூட, இப்படிப்பட்ட அற்புதமான மாறுபாட்டைச் செய்ய முடியுமா? அபாரசக்தி வாய்ந்த அகண்டாதிதனான பரமாத்மாவின் ஆக்ஞாசக்கரம் எப்படி நடைபெற்று வருகிறது பார்த்தாயா! உயிரில்லாத ஜடவஸ்துக்கள் என்று நாம் கருதும் பூமி, சந்திரன், சூரியன், கடல், மேகம், தண்ணி, பர்வதங்கள் முதலியவை அதனதன் ஒழுங்கில் நின்று, கட்டுப்பாட்டுக்கு அடங்கி, எப்படி நடக்கின்றன பார்த்தாயா? கடல் இவ்வளவு பெரியதாக இருக்கிறதே. இதற்கு ஏதாவது கரை இருக்கிறதா? இந்தக் கடல் பக்கம் கொஞ்சம் உயர்ந்தால் உலகில் உள்ள ஜீவராசிகளின் கதி எல்லாம் என்னவாகும் பார்த்தாயா? ஈசுவரனுடைய மகிமையையும், அவனுடைய சிருஷ்டியின் லீலாவிநோதத்தையும் எண்ணிப் பார்க்கப் பார்க்க, எல்லாவற்றிலும் மேலான பதவி என்று நாம் பாராட்டிப் புகழும் இந்த மனித ஜென்மம் கடவுளின் சிருஷ்டியில் ஓர் அற்பமான தூசிக்குக்கூட உவமை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பரம அற்பர்களான மனிதருக்கு தாம் என்ற ஆணவமும், ஆசாபாசங்களும் எவ்வளவு அபாரமாக இருக்கின்றன பார்த்தாயா? இவ்வளவு பிரம்மாண்டமான சிருஷ்டியை நடத்தி சகல ஜீவராசிகளையும் காத்து அழித்து மறுபடி மறுபடி நிர்மானம் செய்து, திரை மறைவில் நின்று நடர்களை ஆட்டி வைக்கும் சூத்திரதாரி போல தோன்றியும் தோன்றாமலும் நிற்கும் சர்வேசுவரன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அவன் நமது செயல்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், அவனுடைய கண் திருஷ்டிக்கு எதுவும் மறைவானதில்லை என்பதையும் கொஞ்சமும் நினையாமல் மனிதரில் படித்தவரும் படிக்காதவருமான பெரும்பாலோர் அக்ஞான இருளில் மூழ்கி, ஏராளமான பணத்தைத் தேடுவதிலேயே தமது ஆயுள்காலம் முழுதையும் போக்கி, அந்த வேலையைச் செய்வதற்காகவே தாம் ஜென்மம் எடுத்திருப்பதாக எண்ணிக் கொண்டு புரட்டிலும், மோசத்திலும் இறங்கிக் கெட்டலைந்து உழன்று கடைசிவரையில் உண்மை ஞானம் பெறாமல் இருந்தே வீணர்களாய் மடிகிறார்களே! இது என்ன அநியாயக் கொள்ளை பார்த்தாயா? செல்வம் என்பது கடவுளுடைய அகண்ட சிருஷ்டியில் மகா அற்பமானது. அது இன்றைக்கு ஒருவனிடத்தில் இருக்கிறது; நாளைக்கு இன்னொருவன் இடத்திற்குப் போகிறது. ஒருவன் தனது ஆயிசுகாலம் முடியத் தனது மனத்தையும் உடம்பையும் வதைத்துப் பலரிடம் உள்ள பொருள்களை எல்லாம் தேடி ஒரிடத்தில் சேர்த்து வைக்கிறான். அதற்குள் அவனது ஆயிசு முடிகிறது. அவன் இறந்து போகிறான். அதன் பிறகு அவனுடைய பிள்ளை வருகிறான். அதைத் தேடிச் சேர்த்ததில் எவ்வளவு உழைப்பு ஏற்பட்டதென்பது அவனுக்குத் தெரியாது ஆகையால், அவன் அவ்வளவு பொருளையும் வெகு சீக்கிரமாகச் செலவு செய்து, அது மறுபடி பிரிந்து பலரிடத்துக்குப் போகும்படி செய்துவிடுகிறான். இப்படி ஒரிடத்தில் இருக்கும் வெள்ளியையும் பொன்னையும் இன்னோரிடத்திற்கு மாற்றிக் கொண்டே இருப்பதற்காகவா, கடவுள் இந்த மனித ஜென்மத்தைப் படைத்து, இவ்வளவு நுட்பமான அறிவையும், எந்தக் காரியத்தையும் நிறைவேற்றும் அபார சக்தியையும் மனிதருக்கு அமைத்திருக்கிறார். இந்தப் பொன்னும் வெள்ளியும் கடவுளுக்கு ஒரு துரும்புக்குச் சமம். ஆதலால், அது எங்கே இருந்தால், அவருக்கு அதைப் பற்றி என்ன சிந்தை? கோடாது கோடியாக நிறைந்திருக்கும் மனிதர்களை இந்த வீண் வேலைக்காகவா படைத்திருக்கிறார்? என்னுடைய வீட்டில் உள்ள ஒரு பண்டம் கூடத்தில் இருந்தாலும், என்னுடையதுதான், அறைக்குள் இருந்தாலும் என்னுடையது தான். அதுபோல என் வீட்டில் இருக்கும் தங்கமும் கடவுளுடைய சிருஷ்டிக்குள் தான் இருக்கிறது. இன்னாருடைய வீட்டிற்குள் இருக்கும் தங்கமும் கடவுளுடைய சிருஷ்டிக்குள் தான் இருக்கிறது. அதைப்பற்றி கடவுளுக்கு ஏதாவது கவலையுண்டா, அல்லது, நினைவு தான் இருக்குமா? ஒன்றும் இராதென்றே நினைக்கிறேன். அப்படி இருக்க, மனிதர் தம்முடைய ஆயிசு காலத்தை எல்லாம் பூர்த்தியாக இதிலேயே விரயம் செய்து அழிந்து போகிறார்களே என்ற நினைவு தான் கொஞ்சகாலமாக என் மனசில் வந்து வந்து வருத்திக் கொண்டிருக்கிறது.

கோபாலசாமி:- (மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து) ஏதப்பா! நீ எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய் பெருத்த வேதாந்த விசாரணையில் இறங்கிவிட்டாய். நீ பெரிய கோடீசுவரன். உனக்கும் பசி என்பது கிடையாது. போதாக்குறைக்கு உனக்கு ஜில்லா கலெக்டருடைய ஏகபுத்திரி எஜமானியாக வரப் போகிறாள். அவளும் உன்னுடைய கோடிக்குத் துணையாக இன்னொரு கோடி ரூபாயாவது கொண்டு வருவாள். நீ வெள்ளியையும் தங்கத்தையும் எவ்வளவு தான் இழிவுபடுத்திப் பேசினாலும், அவை உன்னிடம் மேன்மேலும் வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும். நீ எவ்வளவு வேண்டுமானாலும் வேதாந்தம் பேசலாம். எங்களைப் போன்ற ஏழைகள் எல்லாம் என்ன செய்கிறது. கடவுள் எங்களுடைய வயிற்றில் பசியென்ற ஒர் அடங்காப்பிசாசை வைத்திருக்கிறார். இந்த உலகத்தில் அமபாரம் அம்பாரமாக தானியங்களும், தின்பண்டங்களும், பழவகைகளும் உண்டாகும்படி கடவுள் செய்திருக்கிறார் ஆனாலும், இந்த உலகம் எத்தனையோ யுகம் யுகமாய் இருந்து வந்திருக்கிறது. நாமோ இப்போது பிறந்திருக்கிறோம். நமக்கு முன் பிறந்து இறந்தவர்கள் எல்லாம் நிலங்களையும் வீடுகளையும் அபகரித்துத் தம் தமக்குச் சொந்தமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல ஏழைகளெல்லாம் பிறந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்குப் பசி என்பது மாத்திரம் இல்லாதிருந்தால், நாங்களும் உன்னைப் போல வேதாந்தம் பேசத்தான் பேசுவோம்; வெள்ளியையும் பொன்னையும் உதைத்துத் தள்ளுவோம். ஓயாமல் வயிறு பசித்துக் கொண்டு, எதையாவது உள்ளே போடு போடு என்று உள்ளே இருந்து கிள்ளிக்கொண்டே இருக்கிறது. உங்களுடைய வீட்டில் இந்த வருஷத்தில் விளைந்து வந்த ஐயாயிரக்கல நெல்லைக் களஞ்சியங்களில் போட்டு வைத்திருக்கிறீர்களே. அதில் நான் ஒருபடி நெல் எடுத்து என் பசியை ஆற்றிக் கொள்ள எனக்கு அதிகாரம் உண்டா? அப்படி நான் செய்தால், என்னை நீங்கள் சும்மா விடுவீர்களா? இவ்வளவு தூரம் வேதாந்தம் பேசும் நீ “கடவுளுடைய சிருஷ்டியாகிய இவனுடைய வயிறு பசியாகிய அவஸ்தையினால் வருந்துகிறது. கடவுளுடைய சிருஷ்டியாகிய நெல் எங்கிருந்தால் என்ன? இந்த வயிறு அதை எடுத்துச் சாப்பிட்டுத் தனது பாதையைத் தீர்த்துக் கொள்ளட்டும்” என்று நீ சொல்லிவிட்டுப் பேசாமல் இருப்பாயா? இருக்கவே மாட்டாய். ஏதோ சிநேகிதனாயிற்றே என்று நீ ஒருதரம் பொறுப்பாய்; பல தடவைகள் பொறுப்பாய். நான் ஓயாமல் அப்படியே செய்து கொண்டு போனால், நீ என்ன செய்வாய் தெரியுமா? “ஏதடா இவன் பெரிய திருடனாய் இருக்கிறான். இப்படிப்பட்ட அயோக்கியனோடு நாம் சிநேகம் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல” என்று நினைத்து, நீ அதன் பிறகு என்னோடு பேசமாட்டாய்; என்னுடைய சிநேகிதத்தையும் விட்டுவிடுவாய். நீ மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள சகலமான மனிதரும் இப்படித் தான் செய்வார்கள். உலகத்தை எல்லாம் துறந்த ஒரு சந்நியாசியை எடுத்துக் கொள்வோம். அவருடைய கையில் ஒரு திருவோடும், இடுப்பில் ஒரு கோவணமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் படுத்துக் கொண்டிருக்கும் போது, பசியினால் அவஸ்தைப்படும் கறையான்கள் அவருடைய கோவணத்தை அறித்துத் தின்கிறதாக வைத்துக் கொள்வோம். அல்லது, திருவோடில்லாமல் அவஸ்தைப்படும் வேறொரு பரதேசி அவருடைய திருவோட்டை எடுத்துக் கொண்டு போவதாக வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? படுத்துக் கொண்டிருக்கும் துறவி அந்தக் கறையான்களை அடித்து நசுக்கிக் கொல்லாவிட்டாலும், அப்புறமாவது ஒட்டிவிடுவார். அல்லது, தாமாவது எழுநது அபபால் போய்விடுவாரே அன்றி கறையானுடைய பசி தீரட்டும் என்று கோவணத்தை விட்டிருக்க மாட்டார். அவர் உண்மையில் உலகைத் துறந்தவராகவே இருக்கலாம். அவருக்கு ஒருவிதப் பற்றும் இல்லாமல் இருக்கலாம். இந்த உலகத்தில் மற்ற மனிதரோடு இருந்து பழக வேண்டுமானால், மனிதர் தம்முடைய மானத்தை மறைத்துக் கொள்வது அவசியம் என்று ஜனங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல் அந்தத் துறவி நிர்வானத்தோடு ஊருக்குள் வந்தால் எல்லோரும் அவரைக் கல்லால் அடிப்பார்கள். அதுபோல உலகத்தார் நிலம் முதலிய சகலமான பொருள்களையும் தம் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருப்பதோடு, அதைப் பிறர் எடுத்துக் கொள்வது திருட்டுக் குற்றமென்று அதற்குத் தண்டனையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஜனங்களுடைய உரிமைகளையும் உடைமை களையும் காப்பாற்ற அரசன் என்றும், நீதிபதி என்றும், போலீஸ் என்றும், சிறைச்சாலை என்றும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இத்தனை நிர்ப்பந்தங்களுக்குள் ஏழை மனிதன் இருந்து கொண்டு தனது மானத்தை மூடி, வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வயிற்றுப் பசிக்கு ஆகாரம் போட்டால், உடம்பு பெருக்கிறது. ஐம்புலன்களின் ஆசையும் பெருகுகிறது, அவனுக்கு மனைவி ஒருத்தி வேண்டியிருக்கிறது. அவளை அடைந்தால், பிள்ளை குட்டிகள் தாராளமாகப் பெருகுகிறார்கள். அவர்களோடு அவனுடைய துன்பங்களும் இல்லாமையும் அமோகமாக வளருகின்றன. அவனும் அவனுடைய குடும்பத் தாரும் சேர்ந்து இரவு பகலாய் உழைத்துப் பொருள் தேடினால் கூட அவர்களுடைய அன்றாடப் பசி திருவதுகூட அரிதாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒரு நாள் செய்தது போலத் தங்களுடைய ஆயிசு காலம் முடிய உழைத்துத்தான் தங்களுடைய பசியை ஆற்றிக் கொள்ள நேருகிறது. இப்படி அவர்கள் தங்களுடைய ஆயிசு காலம் முழுதையும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்காகவே வீணாக்க நேருகிறதே. இது யாருடைய குற்றம்? அவர்களுடைய குற்றமா? அவர்களுடைய முன்னோர் ஏழ்மை நிலைமையில் இருந்தது குற்றமா? அல்லது, உலகத்தில் எல்லோரும் சொத்துகளைத் தம் தமது என்று பங்கு போட்டுக் கொண்டதனால் ஏற்பட்ட உரிமைச் சட்டங்களின் குற்றமா? அல்லது, கடவுள் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, எல்லோரையும் சமமான செல்வம் உடையவராக் அமைக்காமல் வலியோர் எளியோருக்கில்லாமல் எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளும்படி விட்டு ஏற்றத் தாழ்வுகளை வைத்திருக்கிறார் என்று அவர் மேல் குற்றம் சுமத்துகிறதா? இதெல்லாம் பெரிய விஷயம். கந்தசாமி:- ஏழை மனிதர்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் வயிற்றுப் பிணியைத் தீர்ப்பதற்காக அழிகிறதைப் பற்றி நான் அவர்கள் பேரில் குறைகூறவில்லை. ஏராளமான செல்வத்தை வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் மேன்மேலும் பணத்தாசையாகிய பேய் பிடித்து ஏன் உழன்று தங்களுடைய ஆயிசு காலத்தை வீணாக்க வேண்டும் என்ற கருத்தோடல்லவா நான் பேசுகிறேன்.

கோபாலசாமி:- அது ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால் இந்த உலகத்தில் கொஞ்சமாகப் பணம் வைத்திருக்கிறவனை விட அதிகமாகப் பணம் வைத்திருக்கிறவனுக்கே ஜனங்கள் அதிகமான மரியாதையும், கெளரதையும் கொடுக்கிறார்கள். இப்போது உன்னுடைய உதாரணத்தையே எடுத்துக்கொள். உன்னுடைய சொந்த ஊராகிய மன்னார்குடியில் இன்னம் எத்தனையோ மிராசு தார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சாப்பாட்டுக்குக் குறை வில்லை. இந்த ஊர் கலெக்டர் உங்கள் ஊரில் டிப்டி கலெக்டராக இருந்த காலத்தில் மற்ற மிராசுதார்கள் எல்லோரும் அவரிடம் வந்து பழகித்தான் இருப்பார்கள். அப்படி இருந்தும், அவர் அந்த ஊரை விட்டுப் பல ஊர்களுக்கு மாற்றலாகி கடைசியில் பெரிய கலெக்டர் உத்தியோகம் பெற்று இந்த ஊருக்கு வந்திருக்கிறார். வந்தவர் உங்கள் ஊரில் உள்ள மற்ற எல்லோரையும் மறந்து, உங்கள், குடும்பத்தை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து, அவருடைய ஒரே பெண்ணை உனக்குக் கொடுப்பதாக உன் தகப்பனாருக்குக் கடிதம் எழுத வேண்டிய காரணம் என்ன? அந்த ஊரில் உள்ள எல்லோரையும்விட நீ அதிகப் பணக்காரனாயும், அதிக நிலம் உள்ளவனாகவும் இருப்பதனால் அல்லவா? ஆகையால், பணம் அதிகப்பட அதிகப்பட கெளரதையும் மரியாதையும் பெரிய மனிதர்களுடைய சம்பந்தமும் அதிகரிக்கின்றன. இதை அறிந்து தான், நம்முடைய திருவள்ளுவர் அருளிலார்க்கு அவ்வுலகமில்லை என்றும், பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை என்றும் சொன்னார். இப்படியெல்லாம் நான் சொல்லுவதில் இருந்து, நான் உன்னுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு இப்படிப் பேசுகிறேன் என்று நினைக்காதே. நான் சொன்னது உன்னைப் பற்றியதல்ல; உலக நியாயம் அப்படி இருக்கிறது என்று உன்னை ஒர் உதாரணமாக வைத்துச் சொன்னேன். அது போகட்டும். உலகத்துக் கோணலை அதைப் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுளே திருத்த முடியவில்லை. நாம் அதைத் திருத்துவது ஒருநாளும் சாத்தியப்படாது. இத்தனை பெரிய சூரிய சந்திர மண்டலங்களை எல்லாம் படைத்த எல்லாம் வல்ல கடவுள் அற்பர்களான இந்த மனிதர்களுடைய மனக்குணக்கையும், அகங்காரத்தையும், காமம், குரோதம் முதலிய கெடுதல்களையும் இல்லாமல் சிருஷ்டிக்க முடியாமல் போய் விட்டதைப் பற்றித்தான் நான் ஆச்சரியமடைகிறேன். ஆனாலும் ஒரு விஷயம் என் மனசில் நிரம்பவும் திருப்தியையும் சந்தோஷத்தையும் உண்டாக்குகிறது. கோடீசுவரனாகிய நீ எங்களைப் போன்ற ஏழைகளிடத்தில் எல்லாம் மனசில் அடங்காத அவ்வளவு அதிகமான ஜீவகாருண்யமும், உண்மையான இரக்கமும் வைத்திருக்கிறாய் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. யானையின் ஒரு கவளமாகிய அரிசி கீழே சிந்தினால் ஒரு கோடி எறும்புகள் அதைத் தின்று ஜீவிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறபடி, உன்னால் எத்தனையோ பிரஜைகள் தங்களுடைய ஏழ்மைப் பிணி நீங்கி க்ஷேமப்படுவார்கள் என்பது நிச்சயம். உன்னைப் போல் உள்ள எல்லாப் பணக்காரர்களும் இப்படி இருக்க வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் - என்றான்.

அவ்வாறு அவன் கூறி முடித்தபோது, அதை ஆமோதித்தது போல எட்டுமணி குண்டு போடப்பட்ட ஒசை கேட்டது.

அதைக் கேட்ட கந்தசாமி சடக்கென்று எழுந்து உட்கார்ந்து, தனது உடைகளில் படிந்திருந்த மணலைத் தட்டிய வண்ணம் “சரி, பணக்காரருடைய பேச்சு போதும். நேரமாகிறது. நாம் நம்முடைய ஜாகைக்குப் போவோம்; வா. இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. மணி எட்டு ஆகிவிட்டதே. இந்த இடம் மனசைக் கவர்ந்து பரவசப் படுத்திவிட்டதப்பா. இதை விட்டு வரவே மனம் வரவில்லையே” என்று கூறிய வண்ணம் எழுந்தான். அப்போது அவனது பார்வை அவனை மிஞ்சி மேரிமகாராணியார் கலாசாலைக் கட்டிடத்தைப் பார்த்தது. கோபாலசாமியும் சிரித்துக் கொண்டு எழுந்தவனாய், “இருக்குமல்லவா. இது எப்பேர்ப்பட்ட இடம். இரண்டு விதத்தில் இந்த இடம் உன் மனசை மோகிக்கச் செய்கிறது. இந்த இடம் இயற்கையிலேயே வசீகரமாக இருக்கிறதோடு இன்னொரு விதத்திலும் இது உன் மனசைக் கவருகிறது” என்று வேடிக்கை யாகவும் குத்தலாகவும் கூறினான்.

கந்தசாமி “இன்னொரு விதமா? அது என்ன?” என்று மகிழ்ச்சியோடு கேட்க, கோபாலசாமி புன்னகை செய்த வண்ணம் “வேறு என்ன ம-ள-ள-ஸ்ரீ கந்தசாமி பிள்ளை அவர்களுடைய எஜமானியம்மாள் படிக்கும் இடம் இதுவல்லவா. அதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு பூரித்துப் பொங்குவது இயற்கை தானே? உன்னுடைய எஜமானியம்மாள் இப்போது இந்தக் கட்டிடத்திற்குள் இல்லாமல் இருக்கையிலேயே உனக்கு இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே. பகல் பொழுதில் அவர்கள் இங்கே படிக்கும் பொழுது பகல் வேளையில் இங்கே வந்திருந்தால், நீ கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னபடி இங்கே காயும் சூரியனுடைய வெயிலைக்கூட நீ உணர மாட்டாய் என்று நினைக்கிறேன்” என்றான். அதைக் கேட்ட கந்தசாமி ஆனந்த மயமாக மாறிப்போய், “ஆமடா! வாஸ்தவந்தான். புதிய பெண்ஜாதி என்றால், யாருக்குத் தான் சந்தோஷமிருக்காது உனக்குக் கலியாணம் என்றால் நீ மாத்திரம் சந்தோஷப்படாமல், விசனித்து மூலையில் உட்கார்ந்து அழுவாயோ? புது மோகத்துக்கு முன் வெயிலாய் இருந்தாலும் நெருப்பாய் இருந்தாலும் உறைக்காது தான். நீ கூடத் தெரியாதவன் பேசுகிற மாதிரி பேசுகிறாயே! அவளை நான் இப்போது மனசால் கூட நினைக்கவில்லை. அவள் தன்னுடைய பங்களாவில் இந்நேரம் ஆனந்தமாக் வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறாளோ, அல்லது, புஸ்தகம் படித்துக் கொண்டு இருக்கிறாளோ, அல்லது, போஜனம் செய்து கொண்டு இருக்கிறாளோ, அவளை ஏன் நீ இங்கே இழுக்கிறாய்?” என்றான்.

கோபாலசாமி:- அதிருக்கட்டும். காரியம் இவ்வளவு தூரம் முடிவுக்கு வந்திருக்கிறது. உனக்குத் தெரியாமலேயே இவர்கள் இந்தக் கலியானப் பேச்சை முடித்து விட்டார்கள். உன் தாய் தகப்பனார் முதலியோர் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்காகப் புறப்பட்டு வரப்போவதாக உனக்கு உன் தகப்பனாரும் கடிதம் எழுதிவிட்டார். அதையும் நீ ஒப்புக்கொண்டு விட்டாயே. அந்தப் பெண்ணை நீ ஒரு தடவையாவது பார்க்க வேண்டாமா? உன் தகப்பனார் முதலிய எவரும் இங்கே வந்து பெண்ணைப் பார்க்கவில்லையே. பெண் கருப்பாக இருக்கிறதா, சிவப்பாக இருக்கிறதா, உடம்பில் எவ்வித ஊனமும் இல்லையா என்ற முக்கியமான விஷயங்களையாவது நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டாமா? இந்த விஷயம் சாதாரணமான விஷயமா? மனிதன் ஆயிசுகாலம் வரையில் துக்கப்படுவதும், சுகப்படுவதும் பணத்தினால் அல்ல. அவனுக்குக் கிடைக்கும் பெண்ஜாதியின் குணாதிசயங்களினால்! ஒரு பரம ஏழைக்கு ஏற்படும் சுகம், கெடுதலான மனைவியைப் படைத்த ஒரு கோடீசுவரனுக்கும் கிடைக்காதென்ற விஷயத்தை நீ அறியாதவனா? மனிதன் தன்னுடைய ஆயிசுகால பரியந்தம் க்ஷேமமாகவும் பாக்கியவானாகவும் இருப்பதற்கு உத்தமியான சம்சாரம் அவனுக்கு வாய்ப்பது வீட்டுக்கு அஸ்திவாரம் கோலுவது போன்றதல்லவா? பெண் பெரிய கலெக்டருடைய மகள் என்ற காரணத்தினாலேயே அவளிடம் எல்லா நலன்களும் அவசியம் இருக்கும் என்று நிச்சயித்துக் கொள்ளலாமா? நீ பார்க்கா விட்டாலும், உன் தகப்பனார், தமயனார் முதலிய யாராவது ஒருவர் பார்க்க வேண்டாமா? நான் இப்படிப் பேசுவதைப் பற்றி, நீ என்மேல் ஆயாசப்பட்டாலும், பாதகமில்லை. நான் உன்னுடைய கூேடிமத்தைக் கருதியே பேசுகிறேன். அதுவுமன்றி, பெண்ணுக்குத் தாய்கூட இல்லை என்று கடிதத்தில் எழுதி இருக்கிறார்களே. தாயில்லா பெண்ணைக் கட்டினால், நீ அவர்களுடைய வீட்டுக்குப் போனால் அன்பாக உன்னை உபசரிப்பதற்கு வேறே யார் இருக்கிறார்கள்? இந்த எண்ணமெல்லாம் உன் மனசில் உண்டாகவில்லையா? ஏதடா இவன் அபசகுனம் போலக் குறுக்கிட்டு இப்படிப் பேசுகிறானே என்று நீ நினைத்தாலும் நினைக்கலாம். அல்லது, பெண்ணின் பெருமையை நான் குறைவு படுத்திப் பேசுகிறதாகவும் நீ எண்ணலாம். இருந்தாலும், பாதகமில்லை” என்றான்.

அதைக் கேட்டவுடனே கந்தசாமி சிறிது யோசனை செய்தபின் மறுபடி பேசத்தொடங்கி, “என்னடா, கோபாலசாமி! நீ கூட யோசனை இல்லாமல் பேசுகிறாயே! இந்தக் காலத்தில், அதுவும் வெள்ளைக்காரருடைய நடையுடை பாவனைகளை அனுசரித்து நடக்கும் நம்முடைய தேசத்துப் பெரிய மனிதர் வீட்டில், சாதாரண மனிதர்களுடைய வீட்டில் நடப்பது போல மாமியார் முதலியோர் வந்து மாப்பிள்ளைக்கு உபசாரம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா? இவர்கள் வீட்டில் சமையலுக்கு எட்டுப் பரிசாரகர்கள் இருப்பார்கள். மற்ற குற்றேவல்களைச் செய்வதற்குப் பத்து வேலைக்காரர்கள் இருப்பார்கள். நமக்கு வேண்டிய விருந்து முதலிய காரியங்களை எல்லாம் அவர்களே செய்து விடுவார்கள். மாமியார் இருப்பதும் ஒன்று தான்; இல்லாமல் போவதும் ஒன்று தான். இந்தக் காலத்தில் பணம் அதிகமாக இருந்தால் எல்லா விஷயங்களும் இயந்திர சக்தி போல சொந்த மனிதருடைய உதவி இல்லாமல் தானாகவே நடைபெறுகின்றன. சாதாரண ஜனங் களுடைய வீட்டில் மருமகப்பிள்ளை வந்து விட்டால், மாமியார் முதலிய பிரபலஸ்தர்கள் பிரியமாகிய பெரிய சக்தியினால் தூண்டப்பட்டு அரும்பாடுபட்டு விருந்து சிற்றுண்டி முதலியவற்றைத் தயாரித்துத் தாங்களே சுதாவில் பரிமாறி அன்பாகிய அமிர்தத்தை மழை போலப் பொழிவார்கள். அந்த இடத்தில் இருப்பது சுவர்க்கலோகத்தில் இருப்பது போல இருக்கும். அதனால் ஒருவரிடத்தில் ஒருவருக்கு வேரூன்றிய வாஞ்சையும் பாசமும் சுரந்து நிலைநிற்கும். எல்லா உபசரணைகளையும் வேலைக்காரர்களே செய்து விடுவார்களானால், மாமியார் முதலிய நெருங்கின பந்துக்களுடைய நற்குணங்களும், அந்தரங்க அபிமானமும் வெளிப்பட அவகாசம் இல்லாமல் போய் விடுகிறது. மனிதர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் செய்து கொள்ளும் சிறிய சிறிய காரியங்களினாலே தான், பாந்தவ்வியத்தையும் அன்பையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரிய மனிதருடைய வீட்டில், அந்த முக்கியமான அம்சம் தான் முழுப் பூஜ்ஜியமாக இருக்கிறது. அப்படி இருக்க, மாமியார் இருப்பதும் ஒன்று தான்; இல்லாததும் ஒன்று தான். பெண் தாய் இல்லாதவள் ஆயிற்றே என்ற கவலையையே நாம் கொள்ள வேண்டுவதில்லை.

கோபாலசாமி:- வாஸ்தவமான பேச்சு. நீ சொல்வது மாமியாரை மாத்திரம் பொருத்த வார்த்தையல்ல. புது நாகரிகப் பிரபுக்கள் வீட்டிற்கு நன்றாகப் படித்து பி.ஏ., எம்.ஏ. பட்டம் பெற்ற பெண்களும் சரி, அவ்விடத்திலும், எல்லா வேலைகளையும், சமையலையும் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள வேலைக்காரிகளும், வேலைக்காரர்களும் சகலமான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதால், நாட்டுப் பெண்களுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போகிறது. அவர்கள் நன்றாக உண்டு உடுத்து, நவராத்திரிக் கொலுப் பொம்மைகள் போல, சோம்பேறிகளாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனசுக்கும் உடம்புக்கும் எவ்வித வேலையும் இல்லாமல் மலினம் ஏற்படுகிறது. புருஷன் பெண்ஜாதி என்றால், நீ மாமியார் விஷயத்தில் சொன்னது போல, பத்தி புருஷனுடைய சுக செளகரியங்களைத் தானே நேரில் கவனித்து, அவனுக்குரிய ஆகாராதி தேவைகளை எல்லாம் அன்புடன் கலந்து அளித்து, அவனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் நிறைவேற்றி, இரண்டு உடலும் ஒருயிரும் போல ஒன்றுபட்டுப் போக வேண்டும். அப்படிச் செய்யாமல், எல்லா வேலைகளையும் பணிமக்களுக்கே விட்டு, பெயருக்கு மாத்திரம் சம்சாரங்கள் என்று வெளிப் பார்வைக்குப் பகட்டாக புருஷருடன் கூடவே இருப்பதனால் மாத்திரம் அவர்களுக்குள் பற்றும் பாசமும் ஏற்படுமோ என்பது சந்தேகந்தான். முதலில், பெண்கள் தேகத்துக்கு உழைப்புக் கொடுத்து வேலைகள் செய்வதே அகெளரவதை என்று பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் எண்ணிக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். ஆண்களைப் போல பெண்களும், நன்றாக உழைத்து வேலை செய்யாவிட்டால், தேக செளக்கியம் வெகு சீக்கிரத்தில் கெட்டுப் போகிறது. பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் வெளிப் பார்வைக்குக் குதிர்போலப் பெருத்துத் தளதளப்பாக இருந்தாலும், அத்தனையும் வியாதி நிறைந்த பாண்டமே அன்றி வேறல்ல. சாதாரணமாக உழைத்துத் தமது புருஷருக்கும் தமக்கும் தேவையான ஆகாரங்களைத் தயாரிக்கும் பெண்கள் பிரசவிக்கும் போது, அது வெகு சுலபமாக நிறைவேறுகிறது. அதற்கு எட்டனா செலவுள்ள சுக்குத் திப்பிலி மருந்தோடு வைத்தியச் செலவு தீர்ந்து போகிறது. பெரிய மனிதர் வீட்டில் உள்ள பெண்கள் பிரசவிக்கிற தென்றால், அவர்களுடைய உயிர் எமலோகத்துக்கு ஒருதரம் போய்விட்டு வருகிறது. அநேகர் மாண்டும் போகின்றனர். அப்படிப்பட்டவர் ஒரு குழந்தை பெறுவதற்குக் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது செலவு பிடிக்கிறது. பல இடங்களில் வெள்ளைக்கார மருத்துவச்சிகள் வந்து அறுத்து ரணசிகிச்சை செய்தும் குழந்தைகளை வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. இப்படி அவர்களுடைய உடம்பு மலினமடைந்து, வியாதிக்கு இருப்பிடமாய்க் கெட்டுப் போகிறது முதலாவது பலன். இரண்டாவது பலன் அவரவர்களுக்குத் தேவையான காரியங்களை வேலைக்காரர்கள் நிறைவேற்றி விடுவதால், புருஷரும், பெண்ஜாதியும் ஒருவருக் கொருவர் அத்தியாவசியம் என்பதே இல்லாமல் போகிறது. ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யும் சந்தர்ப்பம் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் வாத்சல்யமும் கனிகரமும் உண்டா கிறதில்லை. இருவருக்கும் பாலியப்பருவம் இருக்கும் வரையில் சிற்றின்ப நோக்கம் ஒன்றே அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும். வயசு முதிர முதிர, ஒருவருக் கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல், ஒருவருக்கொருவர் பெரும் பாரமாக ஆகிவிடுவார்கள் என்பது நிச்சயம். வெள்ளைக்காரர்கள் ஸ்திரிகளைச் சம அந்தஸ்து உடையவர்களாக ஆக்குவதாகச் சொல்லி, அவர்கள் படும்பாடு யாரும் படமாட்டார்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்கள் நம்மைவிட அதிக புத்திசாலிகளாக இருக்கலாம். ஸ்திரி புருஷ சம்பந்தத்தில் மாத்திரம், நம்முடைய ஏற்பாட்டுக்கு இணையான சிறந்த ஏற்பாடு இந்த உலகத்தில் எங்குமில்லை என்பது நிச்சயம். பணிவு, அடக்கம், சுத்தமான நடத்தை, உழைப்புக் குணம் முதலியவற்றைக் கண்டால் எவருக்கும் சந்தோஷமும், வாத்சல்யமும் உண்டாகாமல் இருக்காது. வெள்ளைக்காரர்கள் பெண்களுக்குச் சமத்துவம் கொடுத்திருப்பதாக காகிதத்திலும், வெளிவேஷத்திலும் எவ்வளவு தான் சொல்லிக் கொண்டு திரிந்தாலும், அவர்களும், பணிவு, அடக்கம், உழைப்புக் குணம், கற்பு முதலிய குணங்கள் வாய்ந்த மனைவிகளைத் தங்கள் குல தெய்வம் போல வைத்துக் கண்மணிகளை இமைகள் காப்பது போலப் பாதுகாத்துத் தமது உயிரையே அவர் மீது வைக்கிறார்கள். அப்படிப்பட்ட குணம் இல்லா விட்டால், அவர்களுக்குள்ளும் ஒயாப் போராட்டமாகத் தான் இருக்கிறது. அடிக்கடி நியாயஸ்தலங்களில் கலியான விடுதலைக்காக எத்தனையோ விபரீதமான வழக்குகள் ஆயிரக்கணக்கில் வருவதை நாம் பார்க்கவில்லையா. சாதாரணமாக நாம் நம் தேசத்துக்கு வந்துள்ள வெள்ளைக்காரரை எடுத்துக் கொள்வோம். ஊரில் உள்ள மற்ற ஜனங்களுக் கெல்லாம் அவர்கள் தங்கள் நாய்க்குக் கொடுக்கிற மரியாதைகூடக் கொடுக்கிறதில்லை. தங்களிடம் பணிவாக வேலை செய்யும் பறையர்களான பொட்லர் முதலியவர்களுடைய உழைப்புக் குணம், பணிவு முதலியவற்றைக் கண்டு அவர்களிடம் அளவற்ற பிரியம் வைத்து அவர்களுக்குக் கனகாபிஷேகம் செய்கிறார்கள், எத்தனையோ துரைமார்கள் தங்களிடம் பணிவாக இருப்பவர்களுக்குப் பெருத்த உத்தியோகங்கள் கொடுப்பதையும், சிலர் தங்களுடைய கம்பெனிகளையோ, காப்பித் தோட்டங்களையோ அப்படியே கொடுத்து விட்டுச் சீமைக்குப் போனதாகவும் நாம் கேள்வியுறுகிறோம். வேலைக்காரர்களின் நிலைமையே இப்படி இருக்குமானால், உயிருக்குயிரான மனைவிமார்கள் அடக்கம், பணிவு, உழைப்புக் குணம், பதிவிரதைத்தனம் முதலியவற்றோடு ஒழுகினால், அவர்களிடம், அந்த வெள்ளைக்காரர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் எளிதில் யூகித்துக் கொள்ளலாம் அல்லவா. ஆகையால் எந்த நாட்டிலும், மேலே சொன்ன குணங்களைக் கண்டு மனிதர் வசியமாவது சகஜமே. இந்த உலகத்தில் மனசில் மாத்திரம் பிரியம் இருக்கிற தென்பது போதாது. ஏனெனில் ஒருவர் மனசில் உள்ளதை மற்றவர் அறிந்து கொள்ளும் சக்தி கடவுள் மனிதருக்கு வைக்கவில்லை அல்லவா. ஆகையால், ஒருவருடைய மனசில் பிரியம் இருக்கிறதென்பதை அவர் பற்பல சிறிய செய்கைகளால் காட்டி பரஸ்பர வாஞ்சையைப் பெருக்குவது அத்தியாவசியம்; எல்லாவற்றையும் படைத்துக் காத்தழிக்கும் கடவுளையே நாம் எடுத்துக் கொள்ளுவோம். நாம் மனசிற்குள்ளாகவே அவருடைய விஷயத்தில் பக்தியை வைத்து அதை அபிவிருத்தி செய்து கனிய வைப்பது என்றால், அது முடியாத காரியம். ஆகையால் நாம், ராமா கிருஷ்ணா என்று அடிக்கடி வாயால் ஜெபித்து அந்த நினைவை மனசில் பதிய வைக்கிறோம். கோவிலுக்குப் போய் தேங்காய் பழம் முதலியவற்றை நிவேதனம் செய்கிறோம். இந்த உலகத்தில் உள்ள தேங்காய் பழங்களை எல்லாம் சிருஷ்டிக்கும் கடவுளுக்கு நாம் ஒரு தேங்காயையும் இரண்டு பழங்களையும் வைத்து நிவேதனம் செய்வது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், நாம் அப்படிப்பட்ட சிறிய சிறிய விஷயங்களைச் செய்து நமது கவனத்தில் ஒரு பாகத்தை அவர் விஷயத்தில் செலவு செய்து, நமது சம்பாத்தியத்திலும் ஒரு பாகத்தைக் கடவுள் விஷயத்தில் சந்தோஷமாகச் செலவழித்து வந்தால், கடவுளின் நினைவும், அவரது விஷயத்தில் ஒருவித பக்தியும் நம்முடைய மனசில் பதிந்து நாளடைவில் விருத்தி யடைந்து வயசு முதிர முதிர தாயைப் பிரிந்த கன்று, தாயைக் காண எவ்வளவு ஆவல் கொள்ளுமோ அதுபோல, கடவுளை அடைய வேண்டும் என்ற ஒரு பேராவல், பெருத்த அக்கினி போல எழுந்து நம் மனசில் தகித்துக் கொண்டிருக்கும். கடவுளுக்கு ஆராதனம், அபிஷேகம் முதலியவற்றை நம் பெரியோர்கள் நடத்தும் போது, அது ஒரு சிறிய கல் என்பதை மறந்து, அதை அகண்டாகாரமான பரமாத்மா என்று மனதில் பாவித்து அவருக்கு நாம் பணிவிடைகள் செய்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும் என ஆராதனக் கிரமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, மனிதருடைய மனசில் உள்ள அன்பைப் பெருக்கவும் மற்றவரின் பிரியத்தைக் கவரவும் வேண்டுமானால், ஒவ்வொருவரும் அன்பான வார்த்தைகளாலும், வெளிப்படையான உபசரணைகளாலும், அதைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கடவுளிடத்தில் மனிதர் எப்படி நடந்து கொள்ளுகிறார்களோ, அதுபோல பதி பத்திமார் ஒருவரிடத் தொருவர் நடந்து கொள்ள வேண்டும். புருஷர்கள் திடசாலிகளாகவும், பலவீனர்களான தம்முடைய மனைவியரைச் சகல விதத்திலும் காப்பாற்றக் கூடியவர்களாகவும் இருப்பதாலும், அவர்களின்றி, ஸ்திரிகளுக்கு வேறே புகலிடம் இல்லை ஆகையாலும், முக்கியமாக ஸ்திரீகள் தாம் படித்தவர்கள் என்பதையும், பணக்காரர் வீட்டுப் பெண்கள் என்பதையும் அடியோடு மறந்து, புருஷனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் தாமே ஏற்றுக்கொண்டு தமது அன்பை வெளிப்படுத்தியும் பெருக்கியும், அதனால் புருஷருடைய அந்தரங்கமான காதலை வளர்த்தும் இல்லறம் நடத்துவதே இருவர்க்கும் சுகிர்தமான விஷயம். அது தேகத்துக்கு ஆரோக்கியத்தையும், மனசுக்கு ஆநந்தத்தையும் உண்டாக்கும். அதைவிட்டு, சுகமாக உண்டு உடுத்து ஓய்ந்து உட்கார்ந்திருப்பதே சுகம் என்று நினைப்பது போலி இன்பமே. வெகு சீக்கிரத்தில் அது கணக்கில்லாத பல அநர்த்தங்களை விளைவிப்பது திண்ணம்.

கந்தசாமி:- (சிறிது ஆழ்ந்து யோசனை செய்து) வாஸ்தவமான சங்கதி. ஆனால், நியும் நானும் சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள். இந்த உத்தியோகங்கள் ஏற்படுவதற்கு முன் பெண்கள் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, வெளி ஊர்களில் லட்சப் பிரபுக்களும், பெருத்த மிராசுதார்களும் இல்லாமலா போய்விட்டார்கள். அவர்கள் வீட்டிலெல்லாம் பெண்கள் இவ்வளவு மோசமாக இல்லை. பிழையெல்லாம் புருஷர் மேல் தான் இருக்கிறதென்று நான் துணிந்து சொல்வேன். உன்னை யார் வேலைக்காரர்களை நியமிக்கச் சொல்லுகிறார்கள்? நீயே வேலைக் காரர்களை நியமிக்கிறாய். பிறகு பெண்ஜாதி வேலை செய்ய வில்லை என்றும், உபசாரம் செய்யவில்லை என்றும், நீ சொல்வதில் என்ன உபயோகம்? பெண்களைச் சோம்பேறியாக்கி உட்காரவைத்துக் கெடுப்பதற்கு நீயே உத்தரவாதி. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்வது போல, நீ வெள்ளைக் காரரைப் பார்த்து, அவர்கள் ஆயாக்களை வைக்கிறார்கள் என்று நீயும் வைக்கிறாய். அப்படிச் செய்தால்தான் பெரிய கெளரதை ஏற்படும் என்று எண்ணுகிறாய். இது போலிப் பெருமையே அன்றி வேறல்ல. அல்லது, உன் மனைவி, உழைத்து வேலை செய்தால், அவளுடைய உடம்பு வெண்ணெய் போல உருகிப் போய் விடும் என்று நீ உன்னுடைய புதிய மோகத்தில் நினைத்து, அவளைக் கீழே விடாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறாய். அவள் குனிவதற்கும் நிமிர்வதற்கும் வேலைக் காரிகளை வைக்கிறாய். அப்படிச் செய்துவிட்டு நீ அவர்கள் மேல் குறை கூறுவது நியாயமாகுமா? கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்களுடைய வீட்டில், மாமியார் பாட்டிமார் முதலிய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லா விஷயங்களிலும் நல்ல வழிகாட்டி. சரியான பழக்க வழக்கங்களில் பயிற்றி பெண் உழைக்கவும் புருஷருக்குப் பணிவிடை செய்யவும் துண்டி காலக்கிரமத்தில் அவர்களை உத்தமமான ஸ்திரீகளாகச் செய்து விடுவார்கள். இப்போது உத்தியோகக் கொள்ளையில் ஒருவன் பரிட்சையில் தேறியவுடனே காஷ்மீரத்தில் அவனுக்கு ஒரு பெருத்த உத்தியோகமானால், அவன் உலக அதுபோகமில்லாத தன் பெண்ஜாதியை அழைத்துக் கொண்டு போய் தன்னரசு நாடாய் விட்டு, அவளிடம் குருட்டுப் பிரேமை வைத்து ஏராளமான வேலைக்காரர்களை நியமித்து, அவளை முற்றிலும் உபயோக மற்றவளாக்கி விடுகிறான். குழந்தைக்கு அஜிர்ணம் உண்டானால் கொஞ்சம் ஓமம் அரைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுகூட மா.வி.ப.i-4 அவளுக்குத் தெரிகிறதில்லை. அதற்காக நூறு, இருநூறு செலவு செய்து அடிக்கடி இங்கிலீஷ் டாக்டர்களை வரவழைக்க நேருகிறது. இப்படிப்பட்ட அநந்தமான விபரீதங்கள் எல்லாம் நேருவதற்கு ஆண் பிள்ளைகளே முக்கியமாக உத்தரவாதிகள் அன்றி பெண்பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) அப்படியானால், இப் போது கலெக்டருடைய மகளை நீ கட்டிக் கொள்ளப் போகிறாயே, அவர்களுடைய வீட்டில், ஒரு துரும்பை எடுத்துப் போடு வதற்குக் கூட ஒரு வேலைக்காரி இருப்பாளே; அந்தப் பெண் உன்னுடைய வீட்டுக்கு வந்தவுடனே நீ கொஞ்சமும் தாட்சணியம் பாராமல், அவளை விட்டே சமையல் முதலிய எல்லா வேலைகளையும் செய்து கொள்வாய் போல் இருக்கிறதே. அவள் இப்போது பி.ஏ. வகுப்பில் படிக்கிறதாகக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. நீயும் பி.ஏ. பரிட்சையில் தானே தேறி இருக்கிறாய். அவள் உனக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாளா, அல்லது, உன்னிடம் பணிவாக நடந்து, உனக்கு வேலைக்காரி போல சமையல் செய்து போடுவாளா?

கந்தசாமி:- அது தான் எனக்கும் பெருத்த கவலையாக இருக்கிறது. இந்த வெள்ளைக்காரர்கள் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுப்பதாக நம்முடைய பெண்களுக்கெல்லாம் பெருத்த தீங்கிழைக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். முதலில் இல்லறம் நடத்தும் ஸ்திரீகள் எம்.ஏ., பி.ஏ. முதலிய பட்டங்களை வகிப்பதே அசம்பாவிதமும், அநாவசியமுமான காரியம். இந்தப் பட்டங்கள் எல்லாம் உத்தியோகம் பெற ஆசைப்படுவோர் களுக்குத் தான் அவசியமானவை. ஏனென்றால், ஒருவன் இன்ன பரிட்சையில் தேறியிருக்கிறான் என்பது, எப்படி இருக்கிற தென்றால், கடையில் சாமான்களை பலவித நிறையில் பொட்டலம் கட்டி, இது அரை விசை, இது முக்கால் வீசை, இது ஒரு வீசை என்று மேலே விலாசம் எழுதி இருப்பது போல, ஒரு மனிதனுடைய அறிவு இவ்வளவு பெறுமானம் உள்ளது என்று சீட்டு ஒட்டுவது போன்றதாகிறது. அப்படிப் பட்டம் பெறுவது, அதை உபயோகப்படுத்தி உத்தியோகம் பெறுவதற்கே அவசியம்; சாதாரணமாக இல்லறம் நடத்தி புருஷருக்கு உகந்த பதிவிரதா சிரோன்மணிகளாக விளங்கி கூேடிமமாக இருக்கப் பிரியப்படும் பெண்களுக்கு இந்தப் பட்டங்கள் கெடுதலாகவே முடிகின்றன. இப்படிப்பட்ட பட்டம் பெறும் ஸ்திரீகள் ஒரு புருஷனையும் மணக்காமல் சுய அதிகாரியாக இருந்து உத்தியோகங்கள் பார்ப்பதே சிலாக்கியமானது. சாதாரணமாக இல்லறம் நடத்தப் பிரியப்படும் பெண்கள் பெரிய மனிதருடைய பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழைகளுடைய பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மாத்திரம் தெரிந்து கொண்டு குடும்ப விவகாரங்களை நடத்தும் திறமையோடு மாத்திரம் இருந்தால், அதுவே எதேஷ்டமானது. இந்த விஷயத்தில் நம்முடைய துரைத் தனத்தார் சரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஸ்திரீகளின் படிப்பை அவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். ஆண் பிள்ளைகளைப் போல பட்டங்கள் பெற்று உத்தியோகம் வகிக்க ஆசைப்படுவோருக்குத் தகுந்த படிப்பை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்டவர் சொற்பமாகத் தான் இருப்பார்கள். மற்ற பெண்களுக்குக் கற்பிக்கும் கல்விக்கு பி.ஏ., எம்.ஏ., முதலிய பட்டங்கள் ஏற்படுத்தக் கூடாது. சாதாரணமாக ஒரு குடும்பத்தை நடத்தும் விஷயத்தில் ஸ்திரீகள் சமையல் செய்வது, சிக்கனமாகச் செலவு செய்வது, புருஷன் குழந்தைகள் தாங்கள் முதலிய எல்லோருடைய தேகத்தையும் வீட்டையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் முறை, மருத்துவம், முதலிய இன்றியமையாத விஷயங்களை அவர்களுக்கும் போதிக்க வேண்டும். அதுவுமன்றி, அவர்கள் நன்றாக உழைத்துப் பாடுபட்டு வேலை செய்ய வேண்டும் என்றும், புருஷரிடமும், மாமனார் மாமியாரிடமும், அன்னியரிடமும், குழந்தைகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க முறைகளையும் நன்றாகப் போதிக்க வேண்டும். முக்கியமாக அடக்கம், கற்பு, உழைப்புடைமை முதலிய குணங்கள் பெண்களுக்கு அவசியம் ஏற்படும்படியான முறைகளை அனுசரிக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்வி பயிற்றினால் தான், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒற்றுமை, அன்பு, க்ஷேமம், சுபிட்சம் முதலியவை பெருக, நாடு மேன்மை அடையும். நம்முடைய பண்டைகாலப் பெருமையும் கெடாது. மற்ற தேசத்துப் பெண்களுக்குக் கெல்லாம் நம் தேசத்துப் பெண்கள். உதாரணமாக விளங்குவார்கள். ஆண் பெண்பாலர் ஆகிய இருவகுப்பாருக்கும் சுகிர்தம். இதோ என்னுடைய அண்ணி இருக்கிறாளே. அவளை எடுத்துக் கொள்ளுவோம். அவள் எந்தப் பரிட்சையில் தேறிப் பட்டம் பெற்றிருக்கிறாள்? அவள் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவே இல்லை. தமிழ் மாத்திரம் படிப்பதற்குத் தானாகவே தெரிந்து கொண்டாளாம். அவளுக்கு இணை சொல்லக் கூடிய ஸ்திரீகள் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்க மாட்டாள் என்பதே என்னுடைய அபிப்பிராயம். அவளுடைய புத்திக் கூர்மையும், வியவகார ஞானமும், அடக்கமும், பணிவுக் குணமும், உழைப்பும், குடும்பத்தை நடத்தும் திறமையும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. அவள் மற்றவரிடம் நடந்து கொள்ளும் அன்பிலும், பணிவிலும், மற்ற எல்லோருடைய மனசையும், பிரியத்தையும் அவள் காந்தம் போலக் கவர்ந்து எல்லோரும் அவளுக்கு அடிமையாகும் படி நடந்து கொள்ளுகிறாள். இன்னாரிடம் இன்னவிதம் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதரணையை மற்றவர் என் அண்ணி இடத்தில்தான் கற்றுக் கொள்ள வேண்டும். மாமன் மாமிமார்களிடத்தில் அவள் எவ்வளவு பயபக்தி விநயத்தோடு நடந்து அவர்கள் எள் என்பதற்குள் எண்ணெயாக நிற்கிறாள். புருஷனிடத்தில் அவள் நடந்து கொள்ளும் மாதிரி இருக்கிறதே, அதை மகாலக்ஷுமி விஷ்ணுவிடத்தில் நடந்து கொள்ளும் மாதிரி என்றே சொல்ல வேண்டும். அன்றி, சாதாரண மனிதருடைய செய்கைக்கு உவமானமாகச் சொல்ல முடியாது. அவள் ஏழையா? அவளுடைய தாய் தகப்பன்மாருக்கு அவள் ஒருத்தியே செல்வக் குழந்தை. அவர்களுக்கு இருக்கும் செல்வம் அளவிட முடியாத அபாரமான செல்வம். அப்படி இருந்தும், அவளுக்குக் கொஞ்சமாவது செருக்காவது, வீண் கெளரதை பாராட்டுவதாவது இல்லவே இல்லை. அப்படிப்பட்ட உத்தம பத்திகளே நம் தேசத்தில் பெருக வேண்டும் அன்றி, வெறும் பட்டம் பெற்று, ஒன்றுக்கும் உபயோகமற்றவர்களாய் அழகாய் உட்கார்ந்திருக்கும் சித்திரப் பதுமைகள் நமக்குத் தேவையில்லை. நான் எனக்கு அப்படிப்பட்ட பெண் தான் வேண்டும் என்று ஆதியில் இருந்து எங்கள் அம்மாளிடத்தில் சொல்லி வந்திருக்கிறேன். அப்படி இருந்தும் அவர்கள் எனக்கு இந்தக் கலெக்டருடைய பெண்ணை நிச்சயித்திருக்கிறார்கள். அந்தப் பெண் பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள் என்பதைக் கேட்கும்போதே, எனக்கு அவள் மேல் ஒருவித வெறுப்பு உண்டாகிறது. அந்தப் பட்டம் அவளுடைய யோக்கியதையைக் குறைப்பதாக என் மனசில் ஒருவித உணர்ச்சி தோன்றுகிறது. அவளை நானும் பார்க்கவில்லை; என் தாய் தகப்பனாரும் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். உத்தியோக பிரமையினால், அவர்கள் மதிமயங்கி, இதற்கு இணங்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவளுக்குத் தாயும் இல்லை. அவளும், படித்த மேதாவி ஆகையால், இது உண்மையான பற்றும் பாசமும் இல்லாத கலியாணமாக முடியும் என்று நினைக்கிறேன். எங்களிடம் உள்ள செல்வத்தைக் கருதி அவர் பெண்ணைக் கொடுக்கிறார். என் தாய் தகப்பனார் அவர் பெரிய கலெக்டர் என்பதைக் கருதி அந்தப் பெண்ணைக் கொள்கிறார்கள். ஆகையால் இது ஐசுவரியம், பெரும் பதவியைக் கலியாணம் செய்கிறதேயன்றி, கந்தசாமியும் மனோன்மணியும் பொருத்தமான சதிபதிகள் தானா என்பதை அறிந்து செய்யும் கலியாணமாகத் தோன்றவில்லை. ஆனால், எந்த விஷயத்தையும் என் தாய் தகப்பனார் நன்றாக ஆழ்ந்து யோசனை செய்து எப்போதும் செய்கிறது வழக்கம். அதுவுமன்றி என் அண்ணனும் அண்ணியும் என்மேல் அந்தரங்கமான பிரியம் வைத்தவர்கள். இப்போது முக்கியமான எல்லாக் காரியங்களையும் அவர்கள் தான் பார்த்துச் செய்கிறார்கள். என்னுடைய அண்ணி தன்னைப் போலவே சகலமான குணங்களும் வாய்ந்த நல்ல பெண்ணாகப் பார்த்து எனக்குக் கட்ட வேண்டும் என்று பல தடவைகளில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் எல்லோரும் கலந்து யோசனை செய்து முடித்திருக்கும் இந்த ஏற்பாட்டில் அதிக கெடுதல் இருக்கா தென்றே நினைத்து நான் என் மனசை ஒருவிதமாகச் சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறேன். எப்போதும் நான் மூத்தோர் சொல்லை மீறி ஆட்சேபித்தே வழக்கமில்லை. எப்படிப்பட்ட தலைப் போகிற விஷயமாக இருந்தாலும், அவர்கள் சொல்லுகிறபடிதான் நான் நடக்க வேண்டும்.

கோபாலசாமி:- ஒகோ! அப்படியானால் சரிதான். உன்னுடைய எஜமானியம்மாளுடைய பெயர் மனோன்மணி அம்மாளா? பெயர் அழகாகத் தான் இருக்கிறது. குணமும் நல்லதாக இருக்கலாம்.

கந்தசாமி:- பெயரிலிருந்து மனிதருடைய குணாகுணங்களை நாம் எப்படி நிச்சயிக்கிறது; அது முடியாத காரியம். விலை மாதரான தாசிகள் ஜானகி என்றும், சாவித்திரி என்றும் கற்பிற்கரசிகளின் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அமங்கலிகள் கலியாணியம்மாள் மங்களத்தம்மாள் என்ற பெயர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூலி வேலை செய்யும் ஒட்டச்சி தொம்பச்சிகள் எல்லாம், பாப்பாத்தி என்றும், துரைஸானி என்றும், ராஜாத்தி என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னங் கரேலென்று கருப்பாய் இருப்பவள் சுவரணம்மாள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாள். புருஷனோடும், மற்றவரோடும் ஓயாமல் சண்டையிடும் ராக்ஷஸ குணம் வாய்ந்த ஸ்திரீகள் புஷ்பவல்லி என்ற மிருதுவான பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெயரிலிருந்து தாம் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

கோபாலசாமி:- அது வாஸ்தவந்தான். எப்படியாவது இந்த சம்பந்தம் நல்லதாக முடியவேண்டும். எல்லா விஷயங்களிலும் ஈசுவரன் ஒரு குறைவுமில்லாமல் உன்னை மகோன்னத் ஸ்திதியில் வைத்திருக்கிறார். இந்த விஷயத்திலும் குறைவு வைக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கந்தசாமி:- நான் அப்படி நினைக்கவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதருக்கும் ஒருவிதமான குறை இருந்தே திரும். இந்த உலகத்தில் சகலமான பாக்கியங்களும் சம்பூர்ணமாக வாய்ந்து கவலை விசனம் முதலிய துன்பமே இல்லாத நிஷ்களங்கமான சந்தோஷம் அனுபவித்து இறந்த மனிதரே இருந்ததில்லை அல்லவா. ஆகையால், எனக்கு மற்ற எல்லா விஷயங்களிலும், கடவுள் குறைவில்லாமல் வைத்திருப்பதால், இந்த விஷயத்தில் மாத்திரம் குறை வைத்து விடுவாரோ என்ற அச்சமும் கவலையும் என் மனசில் தோன்றுகின்றன.

கோபாலசாமி:- அநேகமாய் அப்படி நடக்காது. அல்லது கடவுளின் திருவுள்ளம் அப்படி இருக்குமானால், அதை நாம் தடுக்க முடியாது. அதனால் தான், எந்த விஷயத்திலும் உன்னுடைய நன்மையே கோரும் உன் தாய் தகப்பனார் முதலியோரும் இந்த விஷயத்தில் ஏமாறிப்போய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பாதகமில்லை; கடவுளாகப் பார்த்து அவரவருடைய யோக்கியதையை மதித்து, அவரவருக்கு எது தக்கதென்று ஏற்படுத்துகின்றாரோ அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதே நல்லது. நமக்கு ஒரு கெடுதல் நேர்ந்து விட்டால், அதைக் கெடுதல் என்று பாராட்டி அதைப்பற்றி விசனப்படாமல், அதுவும் ஒரு நன்மைதான் என்ற திடசித்தத்தோடும், சந்தோஷத் தோடும், அதை ஏற்றுக் கொண்டால், அந்தக் கெடுதலின் உபத்திரவத்திலும் சுமையிலும் முக்கால் பாகத்துக்கு மேல் குறைந்து தோன்றும் என்பது கைகண்ட விஷயம். அம்மாதிரி தான் விவேகிகள் நடந்து கொள்வார்கள். இருக்கட்டும்; இப்போதும் ஒன்றும் முழுகிப் போகவில்லை. உனக்கு எவ்விதக் கெடுதலும் உண்டாகி விடவில்லை. கெடுதல் நேர்ந்து விடுமோ என்று நினைத்து நல்ல மனசை நீ ஏன் இப்போதிருந்தே வருத்திக் கொள்ள வேண்டும். கடவுள் நமக்கு எப்போதும் நன்மையையே செய்வார் என்று தியானம் செய்து கொண்டேயிரு. எல்லாம் நன்மையாகவே முடியும்; எல்லாவற்றிற்கும் உங்கள் மனிதராவது அந்தப் பெண்ணை ஒரு தடவை நேரில் பார்ப்பது உசிதம் என்று நினைக்கிறேன்.

கந்தசாமி:- நிச்சயதார்த்தத் தன்று தான் எல்லோரும் வரப் போகிறார்களே; அப்போது பார்த்துக் கொள்ளட்டுமே.

கோபாலசாமி:- அது தான் தவறு. இந்த விஷயங்களை எல்லாம் முன்னால் முடித்துக் கொள்ள வேண்டும். நிச்சயதார்த்தத்திற்கு இவர்கள் சகல முஸ்தீபுகளுடனும் இருப்பார்கள். இரு திறத்தாருடைய ஜனங்களும் வந்திருப்பார்கள். பெண்ணினிடம் ஏதாவது கெடுதல் இருந்தாலும், அதை நாம் அந்தச் சமயத்தில் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நாம் கண்டு பிடித்தாலும், தாட்சணியம் வந்து போராடும். இவ்வளவு தூரம் ஏற்பாடுகள் நடந்த பிறகு, நாம் தடங்கல் செய்வதா என்று ஓர் அச்சமும், தயக்கமும் உண்டாகிவிடும். இது தான் நமக்குப் பிராப்தம் என்ற வேதாந்தத்தினால், நாம் நம்மை ஆறுதல் செய்து கொண்டு காரியத்தை நிறைவேற்றி விடுவோம். நிச்சயதார்த்தத்துக்கு நாம் போவதென்றால், நாம் இந்தக் கலியாணத்துக்கு இசைந்து போகிறோம் என்பதைக் காட்டும். ஆதலால், அதன் பிறகு நாம் ஆட்சேபனை சொல்வது ஒழுங்காகாது.

கந்தகாமி:- அது நியாயந்தான். இப்போது நாம் போய்ப் பார்த்துத்தான் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம்? பெண் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கலாம். இயற்கையான அழகு அவளுக்கு இல்லாதிருந்தாலும், அவள் நல்ல பெரிய மனிதருடைய பெண் ஆகையால், நல்ல போஷணையினாலும், ஜரிகைப் புடவைகள், பட்டுப் புடவை, வைர நகைகள் முதலிய வைகளை அணிந்து கொண்டிருப்பதாலும், பார்ப்பதற்கு வசீகரமாகத் தான் இருப்பாள். அதுவும் அல்லாமல் பேய்கள் கூடப் பக்குவகாலத்தில் அழகாகத்தான் இருக்கும் என்று சொல்வதில்லையா. அது போல இவளுக்கு வயசும் பதினாறு, பதினேழு ஆகிறது. வெளிப்பார்வை பகட்டாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கலெக்டருடைய பெண், பி.ஏ., வகுப்பில் படிப்பவள் என்றால், தங்க மூக்குக் கண்ணாடி அவசியமாக இருக்கும்; கை மணிக்கட்டில் அழகான கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பாள். வெள்ளைக்காரிகளைப் போல மெல்லிய மஸ்லின் ஜாக்கெட் அணிந்திருப்பாள். முகத்தில் மஞ்சள் குங்குமத்துக்குப் பதிலாக ரோஸ் பவுடர், கொண்டை ஊசி முதலியவைகளை அவசியம் காணலாம். தற்கால நாகரிகப்படி, அவள் வீணை, ஹார்மோனியம் முதலிய வாத்தியங்கள் ஏதாவது வாசிக்கக் கூடியவளாக இருக்கலாம். இந்த அங்கங்களில் இருந்து நாம் அவளுடைய உண்மையான குணம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா? அவள் அடக்கம், பணிவு, முதலிய நற்குணங்கள் உடையவளா என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

கோபாலசாமி:- என்ன அப்பா, கந்தசாமி! நீ பேசுகிறது நிரம்பவும் அக்கிரமமாகவும் கர்னாடகமாகவும் இருக்கிறதே! வெள்ளைக்காரருடைய நாகரிகம் பரவிவரும் இந்தக் காலத்தில் கூட நீ சம்சாரம் இப்படி அடிமை போல நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அது நிறைவேறுமா? பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் கோஷிக்கும் இந்தக் காலத்தில் நீ இப்படிப் பேசலாமா? அதுவுமன்றி, பெண் பி.ஏ., பரிட்சையில் தேறி வரப் போகிறாள். கலெக்டருடைய பெண் உனக்குப் படிந்து நடக்க வேண்டுமானால், அது எப்படி சாத்தியம் ஆகும்.

கந்தசாமி:- மற்றவர்கள் எப்படியாவது சொல்லிக் கொண்டு திரியட்டும். அது எனக்கு அக்கறை இல்லை. கலியானம் செய்து கொள்வதெல்லாம், பெண்வடிவமான ஒரு எஜமானரை நாம் தேடிக் கொள்வதென்று அர்த்தமாகாது. அவளை நாம் தெய்வம் போல வீட்டில் ஓர் உன்னத ஸ்தானத்தில் குந்தவைத்து சகலமான காரியங்களுக்கும் வேலையாட்களை வைத்து, அவளை எப்போதும் சோம்பேறியாக வைத்துக் கொண்டிருப்பதற்காக நான் கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவள் கலெக்டருடைய பெண்ணாய் இருந்தாலும், டில்லி பாட்சாவின் பெண்ணாய் இருந்தாலும் சரி, அவள் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியவளே. என் வீட்டில் உள்ள பெற்றோர், பெரியோருக்கு அவள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். வீட்டில் உள்ள சகல பொறுப்புகளையும் காலக்கிரமத்தில் அவளே வகிக்க வேண்டும். எங்களுடைய தேகபோஷணை விஷயத்தில் அவள் எவ்வளவு உழைப்பாக இருந்தாலும் பின் வாங்கக் கூடாது. தான் என்ற அகம்பாவத்தையே அவள் விட்டு புருஷனுடைய குடும்பத் தாருடன் ஐக்கியப்பட்டு நடக்க வேண்டும். அப்படிப்பட்டவளே குடும்ப ஸ்திரீ என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் சமீபகாலத்தில் ஒரு விஷயம் கேள்வியுற்றேன். அது உனக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். ஒரு பெரிய உத்தியோகஸ்த ருடைய பெண் பி.ஏ., பரிட்சையில் தேறியவளாம். அவளுடைய புருஷனும் அதே மாதிரி படிப்பாளியாம். அவர் ஏதோ ஒரு பிரமேயத்தைக் கருதி தமது மாமனாருடைய வீட்டுக்கு வந்திருந்தாராம். வந்திருந்த இடத்தில், உடம்பு கொஞ்சம் அசெளக்கியப்பட்டுப் போயிற்றாம். நடு இரவில் அவர் தேகபாதை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தோட்டத்திற்குப் போக நேர்ந்ததாம். அந்தச் சமயத்தில் அந்தப் பங்களாவில் இருந்த வேலைக்காரர்களை எழுப்பி உடத்திரவிக்க அவருக்கு மனமில்லாமல், பக்கத்து அறையில் சயனித்திருந்த தம்முடைய மனைவியிடம் போய் தாம் அவசரமாக வெளிக்குப் போக வேண்டும் என்றும், தமக்கு ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து தோட்டத்தில் வைக்கும்படியும் அவர் சொன்னாராம். உடனே அந்த அம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் வந்து விட்டதாம். அவள் உடனே அவரை நோக்கி, “ஓகோ! அப்படியா சங்கதி! நான் என்ன உம்முடைய ஜாடுமாலி என்று நினைத்துக் கொண்டீரா? யாரைப் பார்த்து இப்படிப்பட்ட அவமரியாதையான வார்த்தைகளைச் சொல்லுகிறீர்? உமக்கு நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள்? இப்படி எல்லாம் நீர் என்னை அகெளரதையாக நடத்துவீர் என்பது தெரிந்திருந்தால், நான் உம்மைக் கலியானம் செய்து கொண்டே இருக்கமாட்டேன். இந்த அகால வேளையில் நித்திரைக்குப் பங்கம் வந்தால், உடம்பு கெட்டுப் போகும் என்பது தெரியாதா? நீர் இப்படித்தான் பட்டிக்காட்டு அநாகரிக மனிதன் போல நடந்து கொள்ளுகிறதா? இது என்ன நளாயணி, சாவித்திரி முதலியோருடைய காலம் என்று நினைத்துக் கொண்டீரா? உமக்குச் சமமாக நானும் படித்திருக்கிறேன். நீர் பி.ஏ. படித்து விட்டு 35 ரூபா சம்பளத்தில் அமர்ந்தால், நான் அதே பரிட்சையில் தேறி 150 ரூபா சம்பளத்தில் அமரப் போகிறேன். ஆகையால் யாருடைய யோக்கியதை மேலானது என்பதைக் கவனித்துப் பாரும். இங்கிலீஷ் படிப்புப் படித்தும் வெள்ளைக்காரருடைய உயர்வான நாகரிகத்தை நீர் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாத சுத்தக் கட்டுப்பெட்டியாக இருக்கிறீர். உமக்கும் நமக்கும் கொஞ்சமும் பொருந்தாது. நீர் இந்த க்ஷணமே புறப்பட்டு இந்தப் பங்களாவைவிட்டு வெளியில் போம். இனி நீர் என்னுடைய புருஷனல்ல. உமக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதோ இருக்கிறது உம்முடைய தாலி. இதையும் நீர் எடுத்தக் கொண்டு போகலாம்.” என்று சொல்லி, அந்த சரஸ்வதியம்மாள் உடனே தனது தாலியை அறுத்து அவருடைய முகத்தின் மேல் வீசி எறிந்து விட்டு, “அடே யாரடா தோட்டக்காரன்! இவரை இப்போதே இந்தப் பங்களாவுக்கு வெளியில் கொண்டு போய் விட்டுவா” என்று சொல்லி விட்டு, அப்பால் போய் வேறோர் இடத்தில் திருப்திகரமாகப் படுத்துக் கொண்டு துரங்க ஆரம்பித்தாளாம். அந்த மனிதர், பாவம்! அப்படியே ஸ்தம்பித்து இடிந்து உட்கார்ந்து போய் விட்டாராம். அவருடைய அடிவயிற்று உபத்திரவ மெல்லாம் ஒரு நொடியில் மாயமாய்ப் பறந்து போய்விட்டதாம். அவர் அந்த க்ஷணமே அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு போய்விட்டாராம். அந்த அம்மாள் இப்போது ஏதோ ஒரு பெண் கலாசாலையில், பெரிய உபாத்தியாயினி உத்தியோகம் பார்த்து, தன்னிடம் படிக்கும் சிறுமிகளை எல்லாம், தன்னைப் போலாக்கும் மகா உத்தமமான திருப்பணியை எவ்வித ஆதங்கமும் இன்றி நடத்தி வருகிறாளாம். அவர் வேறே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு சுகமாக இருந்து வருகிறாராம். இப்படிப்பட்ட ஸ்திரீகள் ஒரு புருஷரைக் கட்டிக் கொள்வதைவிட கன்னிகையாகவே தம் ஆயிசுகாலம் முடிவு வரையில் இருந்து விடுவது உத்தமமான காரியம். ஒரு ஸ்திரி ஒரு புருஷனுக்குப் பெண்ஜாதி ஆவதென்றாலே, அவளுடைய ஏதேச்சாதிபத்யமும் எஜமானத்துவமும் போய், அவள் பராதீனப் படுகிறாள் என்பது தான் அர்த்தம். அவள் எந்த மனிதனைக் கலியாணம் செய்து கொண்டாலும் சரி; அவனுடைய மனம் கோணாதபடி நடந்து கொண்டு தான் தீரவேண்டும். எப்படிப் பட்டவனும் தன் சம்சாரம் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று பிரியப்படுவானே அன்றி, அவளுக்குத் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று எண்ணவே மாட்டான்; விரும்பவும் மாட்டான்; வெள்ளைக்காரருடைய சமத்துவம் இந்த விஷயத்தில் நமக்குச் சரிப்படவே சரிப்படாது. கோபாலசாமி:- நீ சொல்வது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. அது வெள்ளைக்காரரிடத்தில் மாத்திரந்தானா இருக்கிறது? நம்மவர்கள் பெண்ஜாதியை நாயகி என்றும், எஜமானி என்றும், தலைவி என்றும் குறிக்கிறார்களே. அந்தப் பதங்களை எல்லாம், நீ நம்முடைய அகராதியிலிருந்து எடுத்து விடுவாய் போலிருக்கிறதே.

கந்தசாமி:- என்னடா, அடேய்! என் வாயைக் கிளப்புகிறதற்காகவா, நீ இப்படிக் கிளறிவிடுகிறாய். பெண்கள் நாயகி என்ற பட்டங்களை எப்படி சம்பாதிக்கிறது? தான் புருஷனுக்குச் சமமான படிப்புடையவள், புத்தியுடையவள் என்ற அகம்பாவத்தினாலும் ஆணவத்தினாலும் அதை அடைய முடியுமா? அவளுடைய குணத்தழகினாலும், நடத்தை அழகினாலும், அவள் அப்படிப்பட்ட யோக்கியதையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். திராசு தட்டில், அதிக கனமுடைய தட்டு தாழ்ந்து நிற்கும், வெறுந்தட்டு உயர்ந்து நிற்கும். தண்ணீர் உள்ள குடம் சப்திக்காது. வெற்றுக் குடந்தான் ஓசை உண்டாக்கும். உண்மையான படிப்பும் ஞானமும் உள்ளவர் பணிவு, அடக்கம் முதலிய குணங்களுக்கே இருப்பிடமாய் தாம் என்பதை மறந்து ஒழுகுவார்கள். அவர்கள் எப்படிப்பட்ட தேகப் பிரயாசையையும் உழைப்பையும் ஓர் இழிவாகக் கருதமாட்டார்கள். இப்போது ஆண்பிள்ளைகளில் எத்தனையோ பேர் இதே வெள்ளைக்காரரிடம் உத்தியோகம் பார்க்கிறார்களே: உத்தியோக சாலைகளில் தலைமை அதிகாரிகளாக இருப்பவர்கள் சிலர் தற்குறிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய மார்பைப் பிளந்து பார்த்தால் கூட, படிப்பென்பது மருந்துக்கு ஒர் அக்ஷரம் கூட அகப்படாது. அவர்களுக்குக் கீழ் பீ.ஏ., எம்.ஏ., பட்டங்கள் பெற்ற மேதாவிகள் எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தலைவரிடம் அடிமைகளைப் போல நடந்து கொள்ளுவதை இழிவாக நினைக்கிறார்களா? அவர்களுக்குக் கிடைக்கும் ஸ்தானத்தில் அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படியே நடந்து கொள்ள வேண்டுமன்றி, தான் அதிகப் படிப்பாளி என்றும் புத்திசாலி என்றும் நினைத்து தலைவனோடு சமத்துவம் பாராட்டினால், அது துன்பமாகத்தான் முடியும். நீ எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள். குடும்ப ஸ்திரீகள் எப்பேர்ப்பட்ட மகாராஜனுடைய மகளாக இருந்தாலும், கல்வியில் சரஸ்வதியினுடைய அவதாரமாக இருந்தாலும், புருஷனிடத்தில் கொண்ட அந்தரங்கமான பிரியத்தினாலும் மதிப்பினாலும் சுயேச்சையாகவே அவனுக்கு அடிமை போல நடந்து கொள்ளும் ஸ்தானத்தை வகிப்பவள். இதற்கு உவமானம் நான் என்னுடைய அண்ணியைத் தான் திருப்பித் திருப்பிச் சொல்ல நேருகிறது. அவளைப் போல சிலாக்கியமானவளும் இல்லை; அவள் போல, அவ்வளவு பணிவாகவும், சலிப்பில்லாமல் உழைப்பவளும் உலகில் கிடையார்கள். அப்படி இருப்பதனால், எங்கள் குடும்பத்தில் உள்ள சகலமானவர்களும் அவளைத் தங்கள் இருதய கமலத்தில் வைத்து எங்கள் குல தெய்வம் போல மதித்துப் பாராட்டி வருகிறோம். அவளுடைய சொல்லுக்கு இரண்டாவது சொல் எங்கள் வீட்டில் யாரும் சொல்லுகிறதில்லை. அவ்வளவு தூரம் அவள் எங்களுடைய மனசை எல்லாம் கவர்ந்து எங்களை அவளுக்கு அடிமை போலச் செய்து கொண்டாள். இந்தக் கலாசாலையில் தங்கக்கூண்டில் அடைபட்டு இருக்கும் பஞ்சவர்ணக்கிளிகள் போலத் தத்தி இராப் பகலாக இங்கிலீஷ் புஸ்தகங்களைக் கட்டியழுது உண்மையான விவேகம் இருக்கும் மூலை தெரியாமல் தங்களுடைய யெளவனப் பருவத்தையும், அழகையும், கண்களையும் கெடுத்து, எண்ணெயை விணில் விரயம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பெண்கள் எல்லாம், எங்கள் வீட்டுக்குப் போய் என் அண்ணி குடும்பத்தை எப்படி நடத்தி மற்றவரிடம் எப்படி நடந்து கொள்ளுகிறாள் என்பதை ஓர் ஆறுமாச காலம் கவனிப்பார்களானால், இங்கே இவர்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் படித்தால் கூடத் தெரிந்து கொள்ள முடியாத உண்மையான விவேகத்தையும், எப்படிப்பட்ட மனிதரையும் அடக்கி முடிசூடாச் சக்கரவர்த்தினிகள் ஆகத்தகுந்த அரிய சூட்சுமங்களையும் தெரிந்து கொண்டு தங்களுடைய ஆயிசுகாலம் எல்லாம் சந்தோஷமாகவும் ஷேம மாகவும் இருக்கலாம். சாதாரணமாக இல்லறம் நடத்தும் ஸ்திரீகள் பி.ஏ., வகுப்பு வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்கு அவ்வளவு விஷயம் என்ன இருக்கிறது? உபயோகமற்ற அநாவசியமான இங்கிலீஷ் புஸ்தகங்களை எல்லாம் படிப்பதில், இங்கிலீஷ் புஸ்தக வியாபாரிகள் பணக்காரர் ஆகிறார்கள். நம்முடைய பெண்களில் கண்களும், மூளையும், தேகமும், நற்குணமும் கெடுகின்றன. இவைகள் தான் கைகண்ட பலன்கள். நாம் போய் அந்தக் கலெக்டருடைய பெண்ணைப் பார்ப்பதும் ஒன்றுதான்; பார்க்காமல் இருப்பதும் ஒன்றுதான். அவள் எப்படி இருப்பாள் என்பது எனக்கு ஏற்கனவேயே ஒருவாறு புலப்பட்டு விட்டது.

கோபாலசாமி:- அப்படியானால், நாம் எதையும் பார்க்காமல், குருட்டுத்தனமாகவா இப்படிப்பட்ட முக்கியமான காரியத்தை நிறைவேற்றுகிறது? நீ பேசுகிறது வேடிக்கையாக இருக்கிறதே. முதல் பார்வையில் பெண்களின் குணாகுனங்கள் தெரியா தென்று நீ சொல்வது ஒருவிதத்தில் உண்மைதான். அப்படியானால், வெள்ளைக்காரர் செய்வதைப் போல பெண்ணையும் பிள்ளையையும் கொஞ்ச காலம் ஒன்றாகப் பழகவிட்டு, ஒருவர் குணம் ஒருவருக்குப் பிடிக்கிறதா என்று பார்த்துச் செய்வது ஒருவேளை உன் மனசுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது.

கந்தசாமி:- (ஏளனமாகச் சிரித்து) சேச்சே! அதைப் போல மூடத்தனம் வேறே எதுவுமில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் வெள்ளைக்காரர் ஞானசூன்யராக இருக்கிறார்கள். பக்குவகாலம் அடைந்த ஒரு யெளவன ஸ்திரீயையும், ஒரு விட புருஷனையும் தனியாகப் பேசிப் பழகும்படி விடுவது, பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது போன்றதல்லவா. அப்படிச் சேராவிட்டால், அந்தப் பெண்ணினிடத்தில் உண்மையிலேயே ஆயிரம் கெடுதல்கள் இருந்தாலும், பையனுக்கு அவனுடைய புதிய மோகத்தில், அத்தனை கெடுதல்களும் அத்தனை அழகுகள் போலப் புலப்படும். ஆனால், அவர்கள் இருவருக்கும் தேக சம்பந்தம் நேரிட்டு காரியம் கெட்டுப் போன பிறகு அவன் அவளுடைய துர்க்குணங்களை எல்லாம் உணர்ந்து அவளை வெறுப்பானே அன்றி, அதற்கு முன் உணரவே மாட்டான். இப்படி அவர்களை விடுவதனால், எத்தனை புருஷர்கள் எத்தனை பெண்களை அழித்து மோசம் செய்துவிட்டு ஒடிப்போகிறார்கள். எத்தனை பெண்கள் கற்பழிந்து ரகசியத்தில் பிள்ளைப்பேறு, தற்கொலை முதலியவற்றைச் செய்து கொள்ளுகிறார்கள். ஆகா! அந்தத் துன்பம் சொல்லி முடியாது. இந்த விஷயத்தில் நம்மவர் செய்திருக்கும் ஏற்பாட்டுக்கு மிஞ்சியது ஒன்றுமில்லை. பகுத்தறி வில்லாத ஒரு பெண்ணை இளம்பருவத்தில் அதன் பெற்றோர் கலியானம் செய்து கொடுத்து விடுகிறார்கள். அந்தப் பெண் அதன் பிறகு இரண்டொரு வருஷ காலத்திற்குப் பிறகு புத்தியறிகிறது. அந்த மத்திய காலத்தில் அந்தப் பெண்ணின் மனசில் உண்டாகும். மாறுதலே நிரம்பவும் முக்கியமானது. புருஷன் விகார ரூபம் உடையவனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், துர்க்குணம் உடையவனாக இருந்தாலும், அந்தப் பெண் காலக்கிரமத்தில் அந்தக் குறைகளை மறந்து போகிறாள். அவள் தன் புருஷன், தன் புருஷன் என்று நினைத்து நினைத்து, ஒருவித பயபக்தியை வளர்த்து வருகிறாள். விசேஷ தினங்களுக்கு மாப்பிள்ளை வந்து போகுங் காலங்களில், பெற்றோரும் பெரியோரும் மாப்பிள்ளைக்குச் செய்யும் மரியாதைகளையும் காட்டும் அன்பையும் அந்தச் சிறுமி கண்டு கண்டு தானும் அவனிடம் அபாரமான வாஞ்சையையும் பக்தியையும் வைத்து வருவதால் அவை காலக் கிரமத்தில் பெருகி மனதில் நிலைத்துப் போகின்றன. அவர்கள் ஒன்று பட்டு இல்லறம் நடத்தத் தொடங்கும் காலத்தில், புருஷனிடம் உள்ள குற்றங் குறைபாடுகள் பெண்ணின் மனதில் உறைக்கிறதில்லை. அவள் அவனிடத்தில் உண்மையான பயபக்தி விசுவாசத்தோடு நடந்து கொள்ளுகிறாள். இப்படிப்பட்ட மன மாறுபாடு உண்டாவதற்கு, கலியாணத்திற்குப் பின்னும் சாந்தி முகூர்த்தத்துக்கு முன்னும் இரண்டொரு வருஷகால அவகாசம் இருப்பது இன்றியமையாத விஷயம். அந்தக் காலத்திற்குள் இருவரது குற்றங் குறைபாடுகளும் வெளிப்பட்டு, மனதில் உறைக்காமல் அற்றுப் போம். பிறகு வெறுப்பிற்கு இடமின்றி விருப்பே பெருகும். ஆரம்பத்திலேயே வயது வந்த இருவரையும் சேர்த்து விட்டால், அவர்கள் சிற்றின்ப மோகத்தில் ஒருவாறு குற்றத்தை மற்றவர் உணராமல் கொஞ்ச காலம் கழிப்பார்கள். புது மோகம் தீர்ந்த பிறகு, குற்றங்கள் ஒன்றுக்கு ஆயிரம் பங்காகப் பெருகித் தோன்றி, அவர்கள் மனசில் ஆயிசுகால பரியந்தம் தீரா விசனத்தையும் வேறுபாட்டையும் உண்டாக்கும் என்பது நிச்சயம். ஆகையால் வெள்ளைக்காரர் செய்வது போல விடபுரு ஷர்களும் புத்தியறிந்த பெண்களும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்படி விடுவதைப் போன்ற பெருந்தீங்கு வேறே எதிலுமில்லை. இவ்வளவு தூரம் பேசும் நானே இந்தக் கலெக்டருடைய மகளோடு கூட இருந்து கொஞ்ச காலம் பழகுவதாக வைத்துக் கொள்வோம்! அவளிடத்தில் உண்மையிலேயே அநேகம் கெடுதல்கள் இருந்தால் கூட, அவளை நான் அடையும் வரையில் அவற்றை எல்லாம் அவ்வளவாகப் பாராட்ட மாட்டேன். அவளிடம் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், அவளையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உறுதியும் மன இளக்கமும் ஏற்பட்டுவிடும். ஆகையால், அவளுடைய குணத்தை நாம் இப்போது ஆராய்ந்து பார்ப்பது சாத்தியம் இல்லாத காரியம். இதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் ஜாதகத்தின் மூலமாக இருவரது பொருத்தங் களையும் பார்க்கிறார்கள். அதுவுமன்றி, வதுாவரர்களுடைய தாய் தகப்பனாருடைய குணாகுணங்களையும் நடத்தையையும், அவர்கள் எப்படிப்பட்ட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனித்துச் செய்கிறார்கள். அந்தக் குறிப்பு அநேகமாய்ச் சரியாகவே முடிகிறது. தாயைத் தண்ணிர்த் துறையில் பார்த்தால், பெண்ணை வீட்டில் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பார்களே. அது சரியான வார்த்தையல்லவா.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) என்ன, கந்தசாமி! நீ எந்த வழிக்கும் வராமல் இப்படிக் குளறிக்கொண்டே போனால், இதை எப்படித் தான் நிர்ணயிக்கிறது? எந்த வழியும் உனக்குச் சரிப்பட வில்லை, அப்படியானால், ஒன்றையும் பார்க்காமலேயே கலியாணத்தை நடத்தி விடலாமா? அறவடித்த முன்சோறு, கழனீர்ப் பானையில் விழும் என்று சொல்வார்கள்; அதுபோல இருக்கிறது உன் காரியம். நீ எல்லா விதத்திலும் ஆட்சேபம் சொல்லுகிறாய். கடைசியில், பெண் எப்படி இருக்கிறதென்று கூடப் பார்க்காமல் இதை முடிக்க நீ சம்மதித்திருக்கிறாய், பெண்ணுக்கு ஒரு கண் பொட்டையாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அல்லது பெரியம்மை வார்த்து முகம் எல்லாம் அம்மைத் தழும்புகளால் விகாரப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்; அல்லது, காது செவிடாக இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம், கலெக்டருடைய பெண்ணுக்கு இந்தப் பிணியெல்லாம் இராது என்று நாம் நிச்சயித்துக் கொள்ளுவது சரியாகுமா? இதெல்லாம், பார்பதற்கு அருவருப்பான விஷயமல்லவா. பெண்ணின் உண்மையான குணம் அயலாருக்குத் தெரியப் போவதில்லை. அதனால், பிர்காலத்தில் துன்பமடைகிறவர்கள் நாமே! வெளிப் பார்வைக்கே விகாரமான அம்சம் ஏதாவது இருக்குமானால், ஊரார் சிரிக்க இடம் ஏற்படுமே. அதையாவது நீ பார்க்க வேண்டியது அவசியம் என்று என் மனசில் படுகிறது. உன் தகப்பனார் முதலியோர் என்ன காரணத்தினால் நன்றாக ஆராயாமல் இப்படிச் செய்திருந்தாலும் இருக்கட்டும். நீ இந்த ஊரில் தானே இருக்கிறாய். நிச்சயதார்த்த தினம் இன்னம் 10 தினமிருக்கிறதே. அதற்குள் நீ ஏதாவது தந்திரிம் செய்து அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு வருவது நல்லது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதமல்லவா. அதுபோல, நீ அந்தப் பெண்ணைப் பார்க்கையில், அவளுடைய நடையுடை பாவனைகள் குணங்கள், முதலியவை எப்படி இருக்கின்றன என்பதைக் கவனித்து வந்தால், அதிலிருந்து நாம் அநேக விஷயங்களை யூகித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

அவ்வாறு அந்த யௌவனப் புருஷர்கள் இருவரும் வேடிக்கையாக சம்பாஷித்துக் கொண்டே கரையை விட்டு வெகுதுரம் இப்பால் வந்துவிட்டார்கள்.

கந்தசாமி சிறிது யோசனை செய்த பின் மறுபடியும் பேசத் தொடங்கி, சரி உன் மனசுக்குத் தான் குறை எதற்கு? நீ சொல்லுகிறபதியே ஆகட்டும். நான் போய் அவளைப் பார்த்து எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு வருகிறேன். ஆனால், இப்படி நான் செய்கிறேன் என்பது, என்னுடைய தாய் மா.வி.ப.1-5 தகப்பனாருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால், அவர்களுடைய மனசுக்கு வருத்தமாக இருக்கும். இதற்குள் எனக்கு இவ்வளவு பெரியத்தனமா என்று அவர்கள் நினைத்துக் கொள்ளுவார்கள். ஆகையால் இது ரகசியமாக இருக்க வேண்டும்” என்றான்.

கோபாலசாமி:- நீ எப்படிப் போகிறது? அவர்களுடைய மாப்பிள்ளை என்று சொல்லிக்கொண்டுதானே போக வேண்டும். போனால், கலெக்டர் உன்னோடு கூடவேதான் இருப்பார். அவர்கள் எவ்வளவுதான் ஐரோப்பியரைப் போல இருந்தாலும், எப்படியும் அந்தப் பெண் உன்னைக் கண்டு லஜ்ஜைப்பட்டு ஒரு பக்கமாக விலகித்தான் இருக்கும். நீ அதிகமாக நெருங்கிப் பழக முடியாதென்று நினைக்கிறேன். ஆனாலும் பாதகமில்லை. தூரத்தில் இருந்தாவது பெண்ணுக்கு எவ்வித ஊனமும் இல்லை என்பதையாவது நீ கண்டு கொள்ளலாம்.

கந்தசாமி:- என்னடா, கோபாலசாமி! மூடத்தனமாகப் பேசுகிறாய்! கலியாணம் செய்து கொள்ளப் போகிற நான் அவர் களுடைய பங்களாவுக்குத் தனிமையில் போய் அவர்களுடன் பேசுவதென்றால், அது அசம்பாவிதமாகவும் விகாரமாகவும் இருக்காதா. அவர்களுக்கு என்னைப்பற்றி கேவலமான அபிப்பிராயம் ஏற்பட்டு விடாதா! சேச்சே! அப்படிச் செய்யக் கூடாது.

கோபாலசாமி:- (வியப்பாக) சற்றுமுன் நீயே போய்ப் பார்ப்பதாகச் சொன்னாய்; இப்போது அது நன்றாய் இராதென்கிறாய். இதைத்தான் க்ஷணச்சித்தம் க்ஷணப் பித்தம் என்று சொல்லுவார்கள்.

கந்தசாமி:- அடேய்! ஏனடா இப்படி அவசரப்பட்டுப் பேசுகிறாய்? என்னுடைய கருத்தை நான் பூர்த்தியாக வெளியிடு கிறதற்குள் நீ ஆத்திரப்படுகிறாயே! என்னை இந்தக் கலெக்டர் எங்கள் ஊரில் பல தடவை பார்த்திருக்கிறார். நான் இப்போது நேரில் போனால் அவர் உடனே அடையாளங் கண்டு கொள்வார்.

கோபாலசாமி:- அப்படியானால், அவர் தம்முடைய கச்சேரிக்குப் போயிருக்கிற சமயத்தில் போக நினைக்கிறாயா? அப்போது பெண் தனியாகத்தான் இருக்கும். ஆனால் அதில் பல இடைஞ்சல்கள் இருக்கின்றன. அவர் கலெக்டர். ஆகையால் வாசலில் டபேதார்களும், டலாயத்துகளும் ஏராளமாகக் காவல் காத்திருப்பார்கள். பெண் பங்களாவில் தனியாக இருக்கையில், அன்னிய புருஷனாகிய உன்னை அவர்கள் உள்ளேவிட மாட்டார்கள். நீ இன்னான் என்று நிஜத்தை வெளியிட்டால், அப்போது அவர்கள் உள்ளே போய், அந்தப் பெண்ணினிடம் சங்கதியைத் தெரிவிப்பார்கள். நீ உடனே உள்ளே போகலாம். பெண் உனக்கெதிரில் வராமல் உள்ளேயே இருந்து கொண்டு, பங்களாவில் உள்ள டெலிபோன் மூலமாகத் தகப்பனாரைக் கூப்பிட்டு நீ வந்திருக்கும் செய்தியைத் தெரிவிப்பாள். அவர் உடனே கச்சேரியை விட்டுப் புறப்பட்டு வந்து விடுவார். அப்போதும் உன்னுடைய கருத்து நிறைவேறாது.

கந்தசாமி:- அவர் கச்சேரிக்குப் போகும் போது அந்தப் பெண் அநேகமாய் இந்தக் கலாசாலைக்கு வந்துவிடுவாள். வராமல் இருந்தாலும் நீ சொல்லுகிறபடி தகப்பனாரை உடனே வரவழைத்து விடுவாள். அப்படி எல்லாம் நாம் செய்வது சரியல்ல. நான் மாத்திரம் போவதாக எனக்கு உத்தேசமில்லை. உன்னையும் கூடவே அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன்.

கோபாலசாமி:- (நிரம்பவும் ஆச்சரியமடைந்து) என்னடா கந்தசாமி! நீ நிஜமாகவே பேசுகிறாயா? அல்லது, என்னோடு விளையாடுகிறாயா? நானும், உன்னோடுகூட வந்தால்தான் என்ன? நீ தனியாகப் போகும்போது என்ன நடக்குமோ, அது தானே நாம் இருவரும் போகும் போதும் நடக்கும்.

கந்தசாமி:- (கபடமாகப் புன்னகை செய்து) உன்னை நான் சாதாரணமாக அழைத்துக் கொண்டு போகப் போகிறேன் என்று நினைக்கிறாயா? இல்லை. உன்னை எனக்கு எஜமானாக்கி அழைத்துக் கொண்டு போகப் போகிறேன்.

கோபாலசாமி:- என்ன, கந்தசாமி! மூடி மூடிப்பேசுகிறாயே. சங்கதியை நன்றாகத்தான் சொல்லேன். நீ ஏதாவது தந்திரம் செய்யப் போகிறாயா? உண்மையை என்னிடம் சொல்ல, இவ்வளவு யோசனை என்ன?

கந்தசாமி:- (ஒருவித லஜ்ஜையோடு) உன்மையை உன்னிடம் சொல்லாமல் காரியம் ஆகப்போகிறதில்லை. ஆனாலும், அதை நீ ஒப்புக் கொள்ளாமல் கேலி பண்ணுவாயோ என்று பயமாக இருக்கிறது.

கோபாலசாமி:- சேச்சே உன் விஷயத்தில் நான் என்னுடைய உயிரை வேண்டுமானாலும் கொடுக்கக் கூடியவன் என்பது. உனக்குத் தெரியாதா? நீ ஏதோ யோசனை செய்து, ஒரு காரியம் ஆக வேண்டும் என்று சொல்லும் போது நான் ஒரு நாளும் அதை மறுத்துப் பேசமாட்டேன். நீ அவ்வளவு மூடத்தனமான காரியம் எதிலும் இறங்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியாதா. பரவாயில்லை; சங்கதியைச் சொல்.

கந்தசாமி- நம்முடைய பள்ளிக்கூடத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து ஷேக்ஸ்பியர் காளிதாசர் முதலிய கவிகளின் நாடகங்களை நடத்தி வேஷங்கள் போட்டு ஆடினோமே. அந்த அனுபோகம் விண்ாய்ப் பேர்கவில்லை. அதை நாம் இப்போது நம்முடைய சுய விவகாரங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

கோபாலசாமி- (அதிகமான ஆச்சரியமும் குதுகலமும் அடைந்து) நீ உண்மையாகப் பேசுகிறாயா, அல்லது வேடிக்கை யாகப் பேசுகிறாயா என்ற சந்தேகமே இன்னமும் என் மனசில் உண்டாகிறது.

கந்தசாமி:- இல்லையப்பா. நான் நிஜமாகவே பேசுகிறேன். அன்றைய தினம் நான் சகுந்தலா வேஷம் போட்டுக்கொண்டு வந்த போது நீ என்னைப் பார்த்து என்ன சொன்னாய் நினைவிருக்கிறதா என்னைப் பார்த்தால், தத்ருபம் திபோல இருக்கிற தென்றும் என்னைப் போல ஒரு பெண்ஜாதி உனக்குக் கிடைத்தால், தின்ந்தினம் எழுந்தவுடன் என்னைச் சுற்றி வந்து நூறுதரம் பிரதகவின நமஸ்காரம் செய்வேன் என்றும், உன் ஆயிசு காலம் முடிய எனக்கு அடிமையாய் இருப்பேன் என்றும் நீ சொன்னாய் அல்லவா அதுபோல் உன் பிரியத்தை நிறை வேற்றலாம் என்று நினைக்கிறேன். 

கோபாலசாமி:- (ஆநந்தமயமாக மாறி) ஓகோ, அப்படியா நீ ஒரு பெண்ஜாதியைச் சம்பாதிப்பதற்கு முன், முதலில் நீயே இன்னொருவனுக்குப் பெண்ஜாதியாக இருந்து அந்தச் சுகம் எப்படி இருக்கிறதென்று பார்க்கப் போகிறாயா?

கந்தசாமி:- ஆம். நான் ஒரு பெண்ணைப் போல விேஷம் போட்டுக் கொள்ளுகிறேன். என்னுடைய உட்ம்பு சிவப்பாய் இருப்பதால், பவுடர் முதலியவை வேண்டியதில்லை. தலைக்கு மாத்திரம் டோப்பா வைத்துக் கொண்டால் அதுவே போதும். நல்ல உயர்ந்த ஆபரணங்களையும், பனாரீஸ் புடவை, ரவிக்கை முதலியவைகளை நான் அணிந்து கொள்ளுகிறேன். என்னைப் பார்த்தால், யாரும் ஆண்பிள்ளை என்று சந்தேகிக்கமாட்டார்கள். நீ ஒரு பெரிய மனிதன்போல, நல்ல வேஷடி சட்டை முதலியவை அணிந்து கொள். ஒரு பெட்டி வண்டி அமர்த்திக் கொள்வோம். சனிக்கிழமை தினம், கலெக்டருக்குக் கச்சேரி உண்டு. ஆனால் அன்று பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். தகப்பனார். கச்சேரிக்குப் போயிருப்பார். பெண் வீட்டில் இருப்பாள். நாம் இருவரும் பெட்டி வண்டியில் உட்கார்ந்து கொண்டு அவர்களுடைய பங்களாவுக்குள் வண்டியை விட்டுக் கொண்டு போவோம். டபேதார்கள் யார் என்று கேட்டால், நீ உடனே கீழே இறங்கி மன்னார் கோவிலில் உள்ள இவர்களுடைய புதிய சம்பந்தியம்மாளுக்கு நான் தங்கை என்றும், ! என்னுடைய புருஷன் என்றும், நாம் கோமளேசுவரன் பேட்டையில் இருக்கிறவர்கள் என்றும் ஒரு நடை வந்து பெண்னைப் — பார்த்துவிட்டு வரும்படி, மன்னார். இருந்து கடிதம் வந்திருக்கிறதென்றும், அதற்காக வந்திருக்கிறோம் என்றும் நீ சொல், நான் மாத்திரம் உள்ளே போய் ஐந்து நிமிஷ நேரம் இருந்து பெண்னோடு பேசிவிட்டு வந்துவிட உத்தேசிப்பதாக நீ அவர்களிடம் தெரிவி. அவர்கள் உடனே உள்ளே போய்சங்கதியைப் பெண்ணினிடம் செல்லுவார்கள். அவள் நம்முடைய வேண்டுகோளை மறுக்க முடியாது. அவள் நம்மை அழைத்துவரச் சொல்வாள். நீ வெளிப் பக்கத்தில், உட்கார்ந்து கொண்டிரு. நான் மாத்திரம் உள்ளே போய் அந்தப் பெண்ணைப் பார்த்து அவளோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து, அவளுடைய உண்மையான குணாதிசயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். அவள் அவளுடைய தகப்பனாருக்கு டெலிபோன் அனுப்பாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

கோபாலசாமி:- (கைகொட்டி ஆனந்தமாக நகைத்து) பேஷ்! பேஷ் முதல் தரமான தந்திரம். அப்படியே செய்துவிடுவோம். நாம் போவதானால் வெறுங்கையோடு போகக் கூடாது.

கந்தசாமி:- நல்ல உயர்வான இரண்டு ரவிக்கைத் துண்டுகள் வெற்றிலை பாக்கு பழவகைகள் மஞ்சள் குங்குமம் முதலியவை களை எல்லாம் வாங்கிக் கொண்டு போவோம்.

கோபாலசாமி:- “சரி; அப்படியே செய்து விடுவோம். ஆனால் முடிவு மாத்திரம் மாறும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வளவு தூரம் பேசும் நீ எப்படியும் அவளைக் கண்டு நிரம்பவும் மயங்கித் தான் போவாய். கலியாணம் முடிவதென்னவோ நிச்சயம்; இப்போது முன்னால் போவதில், பெண்ணினிடம் ஏதாவது கெடுதலிருந்தால், அதைத் தெரிந்து கொண்டு நாம் வீணில் மனசைப் புண்படுத்திக் கொள்வது தான் மிஞ்சப் போகிறது — என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி, “சரி எது மிஞ்சினாலும் மிஞ்சட்டும். அந்தப் பெண்ணை எப்படியும் நான் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற ஒரு மூர்க்கமான ஆவல் என் மனசில் உண்டாகிவிட்டது. அதை நாம் எப்படியாவது நிறைவேற்றிவிடுவோம். நான் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது ஒரு வேளை தெரிந்து போனால் கூட அதனால் கெடுதல் ஒன்று மில்லை. நான்தான் மாப்பிள்ளை என்பது வெளியானாலும், அவர்கள் என்னை ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றான். கோபாலசாமி அதை ஆமோதித்தான். அதன் பிறகு இருவரும் திருவல்லிக்கேணி டிராம்வண்டிப் பாதையை அடைந்து, வண்டியிலேறி, தங்கள் ஜாகை இருக்கும் கோமளேசுவரன் பேட்டைக்குச் சென்றனர்.

★⁠★⁠★

2-வது அதிகாரம்

கலகவிலாசம்—கட்டியக்காரன் பிரவேசம்

மறுநாட் காலை சுமார் எட்டு மணி சமயம். மன்னார் கோவிலில் அழகான ஒரு பெரிய மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த வழுவழுப்பான கருங்காலி விசிப்பலகையின் மேல் அந்த மாளிகையின் சொந்தக்காரரும், அந்த ஊரின் பிரபல மிராசுதாரருமான வேலாயுதம் பிள்ளை உட்கார்ந்து தமது கையில் இருந்த தாயுமானவர் பாடலில் ஏதோ ஒரு பாடலின் அர்த்தத்தைத் தமது மனதிற்குள்ளாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அவரது வயது சுமார் நாற்பத்தைந்துக்குக் குறையாதென்றே சொல்ல வேண்டும். உடம்பு செழுமையாகவும் பருமனாகவும் சிவப்பு நிறமானதாகவும் இருந்தது. அவர் அதிகாலையிலேயே ஸ்நானம் செய்து தமது இடுப்பில் உயர்வான பட்டுக்கரை உடையதும் தும்பைப் பூவிலும் அதிக வெளுப்பானதுமான பத்து முழ வேஸ்டியை வைதிகப் பிராம்மணர் போலப் பஞ்சகச்சமாக அணிந்து, நான்கு மூலைகளிலும் சிட்டைகள் உடையதுமான மாசு மறுவற்ற துல்லியமான பழுர்த்துண்டு ஒன்றைத் தமது வலது தோளின் மீது போட்டிருந்தார். அவரது முகத்தில் மீசை காணப்படவில்லை. நெற்றி கழுத்து மார்பு கைகள் முதுகு முதலிய இடங்களில் விபூதிப் பட்டைகள் பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டிருந்தன. நெற்றியில் விபூதி பட்டையின் நடுவில் இரண்டனா அகலத்தில் சந்தனப் பொட்டு, நிஷ்களங்கமான ஆகாய வட்டத்தில் அப்போதே முளைத்தெழும் சந்திரன் போலத் திட்டப் பெற்றிருந்தது. அவரது கழுத்தில் தங்கக் குவளைகள் கட்டப்பட்ட உருத்திராகூ மாலை அணியப் பெற்றிருந்தது. தாம் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்த திருப்பாடலினிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்தவர் என்பதை, அவர் தமது கால்களைக் கீழே தொங்கவிடாமல், பலகையின் மேலேயே சப்பணங்கோலி உட்கார்ந்து புஸ்தகத்தைப் படித்த மாதிரியே எளிதில் தெரிவித்தது. அவருக்கு வலது பக்கத்தில் சிறிது தாரத்திற்கு அப்பால் இருந்த பிரம்மாண்டமான ஒரு கம்பத்தின் மறைவில் மறைந்தும் மறையாமலும், அவரது தர்மபத்தியான திரிபுரசுந்தரியம்மாள் உட்கார்ந்து அவரது சிவபூஜைக்கு வேண்டிய புஷ்ப் மாலைகள், சாமக்கிரியைகள் முதலியவற்றை அத்தியந்த பயபக்தி விருப்பத்தோடு தயாரித்துக் கொண்டும், இடையிடையே தனது கணவர் கூறிய வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்லிக் கொண்டும், அந்த மாளிகையின் பின் புறத் தோட்டத்திலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொணர்ந்து உள்ளே பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டிருந்த வேலைக்காரிக்கு ஏதோ உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும் இருந்தாள். அந்த அம்மாளின் உடம்பும் கட்டுக் கலையாமல் தங்கம் போலப் பழுத்து அழகும் வசீகரமும் நிறைந்ததாக இருந்தது.

மஞ்சள் பூசி ஸ்நானம் செய்ததால், மங்களகரமாகத் தோன்றிய அந்த அம்மாளினது நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு முதலியவை அழகாய் ஜ்வலித்தன. உடம்பில் வைரம், கொம்பு, தங்கம் முதலியவற்றால் ஆன ஏராளமான ஆபரணங்களும் பட்டாடையுமே காணப்பட்டன.

அவர்களிருந்த கூடத்திற்குப் பக்கத்தில் இருந்த பெருத்த சமையலறை ஓர் அற்ப மாசு மறுவேனும் காணப்படாமல் மகா பரிசுத்தமாக மெழுகிப் பெருக்கி நன்றாகக் கோலமிடப் பெற்றிருந்தது. அதற்குள் காணப்பட்ட கெங்காளங்கள், குடங்கள், கவலைகள், செம்புகள், தண்ணீர் பருகும் குவலைகள் முதலிய சகலமான பாத்திரங்களும் பளிச்சென்று சுத்தி செய்யப்பட்டு அதனதனிடத்தில் நேர்த்தியாகவும் வசீகரமாகவும் வைக்கப் பெற்றிருந்தன. அடுப்பில் கமகமவென்று மணம் கமழ்ந்த மாதுரியமான பதார்த்தங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அடுப்பின் பக்கத்தில் சிறிது தூரத்திற்கப்பால், விசாலமான ஒரு பெருத்த மணைப்பலகையின் மீது புத்தரைமாற்றுத் தங்கத்தினால் வார்க்கப் பெற்றது போலவும், அப்போதே முளைத்தெழும் பூர்ண சந்திரோதயம் போலவும் ஒரே அழகுத் திரளாக அமைந்து, அங்கே தயாரான பக்குவ பதார்த்தங்களைக் கடாக்ஷித்த வண்ணம் ஒரு பெண் வடிவம் காணப்பட்டது. அந்த மின்னற் கொடியோள் நிரம்பவும் கவனமாக அப்புறம் இப்புறம் திரும்பித் தனது அலுவலை அந்தரங்க பக்தி விநயத்தோடு செய்து கொண்டிருந்தாள் என்பது, கயல் : மீனைப் போலத் துள்ளித் துள்ளிக் குதித்து மை தீட்டப்பெற்ற அவளது வசீகரமான கருவிதிகளின் சுறுசுறுப்பான் பிற்ழ்ச்சியிலிருந்து எளிதில் தெரிந்தது.. மணிப்புறாவின் முகம் போல அவளது வதனம் சாந்தமும், அழகும், நிஷ்கபடமும் தோற்றுவிப்பதாகவும், காண்போர் மனதைக் காந்தம் போலக் கவரும் மந்திர உச்சாடன வதிகரச் சக்கரம் போலவும் காணப்பட்டது. அவளது வயது சற்று ஏறக்குறைய பதினெட்டே இருக்கலாம். அவளும் திரிபுரசுந்தரியம்மாளைப் போல நீராடி விபூதி, செஞ்சாந்துத் திலகம் முதலியவற்றை அணிந்து, தகத்தகாயமான பனாரீஸ் புடவை, ரவிக்கை, வைரக்கம்மல், வைரமூக்குப் பொட்டு, வைர அட்டிகை, வைரமிழைத்த தங்க ஒட்டியாணம் முதலியவற்றை அணிந்து கந்தருவ தேசத்து ராஜகுமாரி போல விளங்கினாள். கூடத்தில் தனது மாமன் மாமியார். சம்பாஷித்து இருந்ததையும் அவள் கவனித்து, சமைலையும் கவனித்திருந்தாள். ஆதலால், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அவளது சுந்தரவதனம் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தது, உயர்தர வைரக்கல்களில் தோன்றும் ஜிலு ஜிலுப்பைப் போலத் தென்பட்டது. அவளது முகம், மகாநுட்பமான புத்தி விசேஷத்தையும், சாந்தம், பொறுமை, அடக்கம், பணிவுடைமை, உழைப்புக் குணம், கற்பின் உறுதி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, மன அமைதி, திருப்தி முதலிய மங்களகரமான கலியாண குணங்கள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்நானம் போல விளங்கியது. எப்பேர்ப்பட்ட பரம தரித்திரனும், துரதிர்ஷ்டவானும் காலையில் எழுந்து அந்த உத்தமமாது சிரோன் மணியின் முகத்தில் விழிப்பானாகில், ஏழேழு தலைமுறைக்கும் அவனைப் பிடித்த பீடை விலகிப் போவதோடு, அவனது மனதில் உண்டாகும் ஆனந்தப் பெருக்கு ஆறுமாசத்திற்கு அடங்காதென்றே சொல்ல வேண்டும். அவனது ஆயிசுகாலம் முடிய அவனுக்குப் பசி என்பதே தோன்றாதென்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட தெய்வீகத் தோற்றம் வாய்ந்த பெண்பாவை இன்னாள் என்பது நாம் பகராமலே விளங்கி இருக்கும். ஆனாலும், அந்த உத்தமியின் பெயரைத் தினமும் ஒருதரமாவது சொன்னால், நமக்கும் நல்லகதி கிடைக்கும், ஆதலால், அதை வெளியிடுகிறோம். அந்த ஏந்தெழில் மடவன்னம், கோடீசுவரரான சுந்தரம் பிள்ளைக்கும், சிவபக்தையும் உத்தமோத்தமியுமான சிவக்கொழுந்தம் மாளுக்கும் ஜனித்த நமது வடிவாம்பாள்.

விசிப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்த வேலாயுதம் பிள்ளை ஒரு பாட்டின் கருத்தைப் படித்தபின் அதை மனத்தில் படிய வைப்பவர் போலத் தமது நெற்றியைத் தமது வலது உள்ளங்: கையால் தடவிக் கொடுப்பார்; பிறகு தமது மனைவியிடம் ஏதோ ஒரு வார்த்தை சொல்வார். அவ்வாறு செய்து வந்தவர் ஒரு பாட்டு முடிந்த பிறகு தமது மனைவியை நோக்கி, "கலியாணத்தின் போது நல்ல பௌர்ணமி காலமாக இருக்கும்படி. பார்த்து நாம் முகூர்த்த நாள் வைக்க வேண்டும். அப்போது கிரமப் பிரதக்ஷிணம் சிறப்பாக இருக்கும்" என்றார். திரிபுரசுந்தரியம்மாள் கீழே குனிந்த படி, "இன்று பிரதமை. இன்னம் இருபத்தைந்து தினங்களுக்குப் பிறகு முகூர்த்தம் வரும்படி ஏற்பாடு செய்யுங்களேன். சரியாய்ப் போகிறது" என்று பணிவாகக் கூறினாள்.

வேலாயுதம் பிள்ளை இன்னொரு பாட்டின் இரண்டொரு வரிகளைப் படித்த பின் சிறிது மௌனம் சாதித்து, "சம்பந்திகளை இறக்குவதற்கு நம் வடிவாம்பாளுடைய பங்களாதான் வசதியாக இருக்கும். கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, நம்முடைய சுந்தரம் பிள்ளையையும், அவர்களுடைய பத்தியாரையும், நாம் பிரார்த்தித்து இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட வேண்டும்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "நேற்றைய தினமே வடிவாம்பாள் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பிரஸ்தாபித்தாள், அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் இருவரும் பேசி எங்களுக்குள் ஒருவாறு முடிவு செய்திருந்தோம். இப்போது நீங்களும் அதே அபிப்பிராயத்தை வெளியிடுகிறீர்கள். சம்பந்திகளின் பெரிய அந்தஸ்துக்குத் தக்க இடம் வடிவாம்பாளுடைய பங்களாவைத் தவிர எங்கே இருக்கிறது. அங்கே தான் அவர்களை வைக்க வேண்டும்" என்றாள்.

சிறிது நேரம் இருவரும் மௌனம் சாதித்த பிறகு திரிபுரசுந்தரி அம்மாள், "காலையில் எழுந்து வெளியில் போன பெரிய தம்பி கண்ணப்பாவை இன்னமும் காணோமே. வழக்கம் போல் பண்ணையைச் சுற்றிப் பார்க்கப் போனானா? வேறே ஏதாவது: காரியமாக அனுப்பினீர்களா? மணி எட்டு இருக்கும் போல் இருக்கிறது. இன்னம் பழைய அமுதுகூடச் சாப்பிடவில்லையே என்று நிரம்பவும் கவலையோடு கேட்க, வேலாயுதம் பிள்ளை "தம்பி இன்றைக்குப் பண்ணைக்குப் போகவில்லை; வேறே காரியமாய்த்தான் அனுப்பி இருக்கிறேன். நாம் நிச்சயதார்த்தத் துக்குச் சென்னப் பட்டணம் போனால், நம்மோடு சுமார் ஐம்பது ஜனங்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் தக்க மனிதர்கள் ஆகையால், நாம் அவர்களுக்கெல்லாம் சரியான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அல்லவா, நாளை வெள்ளிக்கு அடுத்த வெள்ளியன்று நிச்சயதார்த்தம் அல்லவா, நாம் புதன் கிழமை இரவு வண்டியிலேயே புறப்பட்டு வியாழக் கிழமையே பட்டணம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதற்காக நமக்குப் பிரத்தியேகமாக ஆறு முதல் வகுப்பு வண்டிகளுக்கு முன் பணம் கட்டி ஏற்பாடு செய்துவிட்டு வரும்படி, அவனை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பினேன். திரும்பி வரும்போது அப்படியே நம்முடைய (திகம்பர சுவாமியாருடைய ஜாகைக்குப் போய் விட்டு வரச் சொன்னேன். நேற்று நாம் வடிவாம்பாளுடைய வீட்டுக்குப் போய், நிச்சயதார்த்தத்துக்கு நம்மோடு பட்டணம் வரும்படி அழைத்து விட்டு வந்தோம் அல்லவா. அதுபோல, இன்றைய தினம் நாம் இருவரும் போய் நம்முடைய சுவாமி யாரையும் பிரார்த்தித்து அழைத்துவிட்டு வரவேண்டும் என்று உத்தேசித்திருந்தேன். நேற்று சாயங்காலம். நான் நம்முடைய சத்திரத்துக்குப் போய் மேல் விசாரணை செய்துவிட்டுத் திரும்பிய போது, நம்முடைய சுவாமியாரிடம் வேலை செய்யும் ஒரு போலீஸ் ஜெவானைக் கண்டு அவர் ஊரில் இருக்கிறாரா என்று விசாரித்தேன். ஒரு ரகசியமான திருட்டு விஷயமாகத் துப்பறிய அவர் நேற்று காலையிலே புறப்பட்டு எங்கேயோ போயிருப்பதாகவும், அநேகமாய் இரவில் திரும்பி வந்து விடலாம் என்றும் சொன்னான். அவர் திரும்பி வந்துவிட்டாரா என்பதையும் அறிந்து கொண்டு வரும்படி நம்முடைய பெரிய தம்பிக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறேன். இரண்டு இடங்களுக்கும் போய்விட்டு வரக் கொஞ்ச நேரம் பிடிக்கும் அல்லவர். திரும்பிவரும் நேரம் ஆய்விட்டது. வந்துவிடுவான்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஓகோ! அப்படியா சங்கதி! அதற்காகவா போயிருக்கிறான்! வழக்கமாக ஏழு மணிக்கே வந்து சாப்பிடுகிற குழந்தை இந்நேரம் வரவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எங்கே காணோமே' என்று வடிவாம்பாள் என்னிடம் இதற்குள் நூறுதரம் கேட்டு விட்டாள். வடிவூ தம்பி போயிருக்கும் காரணம் தெரிந்ததா?" என்றாள்.

உள்ளே இருந்தபடி வடிவாம்பாள், “தெரிந்து கொண்டேன்" என்று மிருதுவாக மறுமொழி கூறினாள்.

உடனே திரிபுரசுந்தரியம்மாள், "ஆம்; நாம் இத்தனை பேர் போகிறோமே, எல்லோரும் பட்டணத்தில் எங்கே இருக்கிறது? நம்முடைய புதிய சம்பந்தி எங்கேயாவது இடத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறாரா?" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "நமக்குப் பிரத்தியேகமான இடம் அமர்த்தி வைக்கலாமா என்று புதிய சம்பந்தி கடிதத்தில் எழுதிக் கேட்டிருந்தார். அவர்களுக்கு நாம் ஏன் வீண் சிரமம் கொடுக்க வேண்டும். என்று நான் இடம்: தேவையில்லை என்று எழுதி விட்டேன். நம்முடைய கந்தசாமியும் வேலைக்காரியும் இருப்பதற்காக நான் அமர்த்தி இருக்கும் வீடும் பெரிய மெத்தை வீடு; அது நிரம்பவும் வசதியானது கோகளேசுவரன் பேட்டையில் இருக்கிறது. அதில் ஒரே காலத்தில் இருநூறுபேர் வசதியாக இருக்கலாம். ஒரு நாள் இருந்துவிட்டுத் திரும்பப் போகிற நமக்கு அந்த இடமே போதுமானது. அதையே நன்றாகச் சுத்தம் செய்து, வாழை மரங்கள் தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரித்து வைக்கவும், சுமார் ஐம்பது ஜனங்களுக்குச் சாப்பாடு, படுக்கை முதலியவைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கி வைக்கவும், ஐந்தாறு சமையல்காரர்களை அமர்த்தி வைக்கவும் எழுதி இருக்கிறேன்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள்:- (சிறிது கவலையோடு) அப்படியா! நம்முடைய பெரிய தம்பிக்கு இந்த விஷயத்தில் எல்லாம் அதிக அனுபோகம் உண்டு, சின்னத்தம்பி இப்படிப்பட்ட காரியங்களை எல்லாம் செய்து பழகியதில்லை. அவனுக்குத் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், அவனுடைய பள்ளிக்கூடத்துத் தோழனும், இந்த ஊர் மிராசுதார் அண்ணாசாமி முதலியாருடைய மகனுமான கோபாலசாமி அவனுடைய ஜாகைக்குப் பக்கத்தில், உள்ள ஹோட்டலில் இருந்து வருகிறானாம். அவனும் இவனும் எப்போதும் இணைபிரியாதிருப்பார்கள். அவன் இந்த விஷயத்தில் எல்லாம் நிரம்பவும் சமர்த்தன். அவன் எல்லாக் காரியங்களையும் திறமையாக முடித்து வைப்பான் என்று நினைக்கிறேன்" என்றாள். வேலாயுதம் பிள்ளை, "சென்னப் பட்டணத்தில் பணம் மாத்திரம் கையில் ஏராளமாக இருக்க வேண்டும். ஒரு நாழிகை சாவகாசத்தில் ஆயிரம் கலியாணத்துக்கு வேண்டிய சகலமான சாமான்களையும் சேகரித்து விடலாம். நாம் எல்லோரும் போய் இறங்குவதற்கு வசதியான இடம் இருக்கிறது. அங்கே போனால், எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம். அதைப்பற்றிக் கவலை. இல்லை" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஆம், அதிருக்கட்டும்; நிச்சயதாம்பூலம் மாற்றும் போது; நாம் முதலில் பழம் பாக்கு வெற்றிலை முதலிய வைகளை வைக்க வேண்டுமே, அப்போது வழக்கமாக எல்லோரும் செய்கிறது. போல நாம் நம்முடைய கௌரதைக்குத் தகுந்தபடி ஏதாவது புடவை, நகை, பரிசப்பணம் எல்லாம் வைக்க வேண்டுமல்லவா" என்றாள்.

வேலாய்தம் பிள்ளை, "அதைப்பற்றி உனக்கு ஏன் சந்தேகம் உண்டாகிறது? அவர்கள் பெரிய கலெக்டர் உத்தியோகத்தில் உள்ளவர்களாயிற்றே. அவர்கள் பரிசப்பணத்தை ஏற்றுக் கொள்ளுவார்களோ மாட்டார்களோ என்று சந்தேகிக்கிறாயோ" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், “நான் அந்தச் சந்தேகம் கொள்ளவில்லை. எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே முறை. அதைப்பற்றி நான் நினைக்கவில்லை. நாம் அதிகமான பொருள்களை வைத்தால், அவர்கள் நம்மைவிட உயர்வானவர்கள் என்றும், நாம் அபாரமான பணத்தைக் கொடுத்து அவர்களுடைய சம்பந்தத்தைப் பெறுகிறோம் என்றும் ஜனங்கள் நினைப்பார்கள். அதுவும் அன்றி, சம்பந்தி வீட்டாரும் தங்களை உயர்வாக நாம் மதிப்பதாக நினைத்துச் செருக்கடைவார்களோ என்னவோ” என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, “சேச்சே! நம்முடைய சம்பந்தி பட்டாபி ராம பிள்ளை அப்பேர்ப்பட்ட மனிதரே அல்லர். அவர் இந்த ஊரில் அடிஷனல் மாஜிஸ்டிரேட்டாக இருந்த காலத்தில் நம்மிடத்தில் எவ்வளவு அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொண்டாரோ, அப்படியே தான் இப்பவும் இருக்கிறார் என்பது அவர் சமீப காலத்தில் இங்கே வந்திருந்த போது தெரிய வில்லையா. அவர் நமக்கு எழுதியுள்ள எத்தனையோ கடிதங்களில், நம்முடைய சம்பந்தம் உயர்வானதென்றும், அது தமக்குக் கிடைக்குமானால், தாம் பாக்கியவான் என்றும் பல தடவைகளில் அவர் எழுதி இருக்கிறாரே. அப்படி இருக்க, அவர் இப்போது அதற்கு விரோதமாக நினைத்துக் கொள்வாரா? ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டார். தவறி நினைத்துக் கொண்டாலும், அதனால் நமக்கு இழிவு ஏற்படப் போகிற தில்லை. எந்தெந்த சந்தர்ப்பங்களில் நாம் எதிராளிக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டுமோ அதைப் பூர்த்தியாகச் செய்தே தீர வேண்டும். அது அவர்களை நாம் கெளரவப்படுத்துகிறது போலவும் இருக்கும்; நம்முடைய பெருந்தன்மையைக் காட்டியது போலவும் இருக்கும். எதிலும் நாம் லோபம் செய்யக் கூடாது. நமக்கு ஈசுவரன் ஒரு குறைவையும் வைக்கவில்லை. என்னுடைய ஏராளமான சொத்து போதாதென்று கந்தசாமி சுவீகாரம் போன வகையில், வருஷத்தில் லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடிய எதேஷ்டமான செல்வமும் வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய பெரியவர் நடராஜ பிள்ளையின் செல்வமெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. இவ்வளவையும் சேர்த்தால், ஒரு மகாராஜனுடைய அபார சம்பத்துக்குச் சமமாகச் சொல்லலாம். ஈசுவரன் நமக்கு அவ்வளவு தூரம் கொடுத்திருக்கி றார்கள். அதில் கந்தசாமியின் சுவீகாரத்தில் வந்தது முக்கால் பங்குக்கு மேல் இருக்கும். அப்படி இருக்க, அவனுடைய கலியாணத்தை நாம் ஒரு மகாராஜனுடைய கலியாணத்தைப் போல நடத்த வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்தப் பணச் செல்வத்தை எல்லாம் நான் பெரிதாக மதிக்கவே இல்லை. நற்குணங்களும், நல்லொழுக்கமும் நிறைந்த இரண்டு விலையில்லா மாணிக்கங்களைக் கடவுள் நமக்கு இரண்டு குழந்தைகளாகக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய குணாதிசயங்களைப்பற்றி சிந்திக்கும் போது ராமன், பரதன் ஆகிய இருவரையுமே இவர்களுக்கு உவமை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என் மனசில் தானாகவே உண்டாகிறது. எல்லோருக்கும் சிரோரத்னமாக நம்முடைய குழந்தை வடிவாம்பாள் அமைத் திருக்கிறாள். இந்த மூன்று குழந்தைகளையுந்தான். நான் என்னுடைய உண்மையான செல்வமாக மதித்து வருகிறேன். ஆகையால் நமக்குள்ள பணச்செல்வத்தை எல்லாம் இவர்களுக்கு ஏற்படும் சுப காலங்களில் சிறப்பாகச் செலவு செய்வதே என் ஆத்மாவுக்கு அளவற்ற ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறது. தெய்வத்தின் அருளால் இப்போது வரப்போகும் மனோன்மணி அம்மாளும் நம்முடைய வடிவாம்பாளைப் போலவே இருந்து விடுவாளானால் இந்த உலகத்தில் நான் அனுபவிக்கக் கூடிய ஆனந்தமும் செல்வமும்' பரிபூர்ணம் ஆகிவிடும். ஆயிரம் வருஷம் நான் உயிரோடிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், என் மனம் தெவிட்டாது. இந்த உலகை விட்டுப் போகவும் மனம் வராது. அப்படிப்பட்ட கண்மணி 'களுடைய கல்யாணத்தில், நாம் எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், பொருளை ஏராளமாகச் செலவு செய்வது அத்யாவசியம்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள் அளவற்ற குதூகலமும் ஆனந்தமும் அடைந்து புன்னகை பூத்த முகத்தினளாய், "அப்படியானால், நிச்சயதார்த்தத்தன்று, என்னென்ன செய்வதாக உத்தேசம்?" என்றாள்.

வேலாயதம் பிள்ளை, "நிச்சயதார்த்தத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் திட்டம் போட்டிருக்கிறேன். ஆனால் அதில் நம்முடைய ரயில் செலவு படிச்செலவு முதலிய சொற்ப பாகம் போக மிகுதி எல்லாம், பெண் வீட்டாருக்குப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன். முழுதும் தங்க ஜரிகையும் - நற்பவழங்களும் நல்முத்துகளும் வைத்திழைத்த புடவை, ரவிக்கை இரண்டும் மாத்திரம் ஐயாயிரம் ரூபாய், ஒரு ஜோடி வைரக் கம்கமல், வைரங்கள் பதித்த தங்க ஒட்டியாணம், ஐந்து வைரப் பதக்கங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தொங்கும் வைர அட்டிகை முதலிய நகைகள் எல்லாம் சுமார் ஐம்பதாயிரம்: ரூபாய். இவை தவிர, இந்த வருஷமே தங்க சாலையில் அடித்து வெளியானதும் பளபளவென்று மின்னிக் கண்ணைப் பறிக்கக் கூடியதாகவுடன் இருக்கும் முழுப்பவுன்களில் இரண்டாயிரம் பவன்களை ஒரு தங்கத் தாம்பாளத்தில் புடவை ரவிக்கை முதலிய சாமான்களை வைத்து சம்பாவனை செய்யப் போகிறேன். வெற்றிலை இருநூறு கவளி, பாக்கு 2 மூட்டை; ரஸ்தாளி வாழைப்பழம் ஒரு வண்டி, மஞ்சள் ஒரு மூட்டை, குங்குமம் ஒரு மூட்டை, கற்கண்டு 2 மூட்டை சீனிச்சர்க்கரை 2 மூட்டை இவைகளையும் வாங்கி எல்லாவற்றையும் கொண்டு போய் அவர்களுக்கெதிரில் பரப்பிவிடப் போகிறேன். அந்த ஊரில் உள்ள ஜனங்கள், இப்படிப்பட்ட அபாரமாக வரிசைகளைக் கண்டு அவர்களைப் பற்றியும் நம்மைப் பற்றியும் நிரம்பவும் மதிப்பாக எண்ணக் கொள்ளுவார்கள். சம்பந்தியும் நம்மைத் தக்க மனிதர்கள் என்று மதிப்பார். மனோன்மணியும். நம்முடைய பையனை அற்ப சொற்பமான மனிதன் என்று நினைக்க மாட்டாள்" என்றார்.

அதைக் கேட்ட திரிபுரசுந்தரியம்மாள் அடக்க இயலாத பெருங் களிப்படைந்து, "ஆகா பேஷ் பேஷ் நல்ல ஏற்பாடு!- நீங்கள் இத்தனை எண்ணங்களையும் மனசிற்குள்ளாகவே வைத்துக் கொண்டு இதுவரையில் கொஞ்சமாவது வெளியிட வில்லையே. நம்முடைய பெரியவரை இதற்காகத் தான் முன்பாகப் பட்டணத்துக்கு இன்று அனுப்புகிறீர்கள் போலிருக்கிறது. நீங்கள் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி என்னைவிட நம்முடைய வடிவாம்பாளுக்குத், தான் அடக்க முடியாத சந்தோஷம் உண்டாகும்" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "இதெல்லாம் நம்முடைய வடிவாம் பாளுக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டு இருக்கிறாயா? அன்றைய தினம் சிவக்கொழுந்தம்மாளிடம் நீ பேசிக் கொண்டிருந்த போது, நானும் அந்தக் குழந்தையும் கலந்து யோசனை செய்து தான் இப்படிச் செய்வதென்று தீர்மானித்தோம். எல்லாம் வடிவாம்பாளுடைய ஏற்பாடுதான். என்னுடையது ஒன்றுமில்லை" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஓகோ அப்படியா! மாமனாரும், மருமகளும் இம்மாதிரியான யோசனைகளை எல்லாம் ரகஸியத்தில் செய்து, நாங்கள் எல்லோரும் பிரமித்துப் போகும்படி செய்ய வேண்டும் என்று உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தத்தின் வரிசையே இப்படி இருக்கிறது. இன்னம் கலியாணத்திற்கு என்னென்ன வரிசைகள் செய்ய ஏற்பாடாகி இருக்கிறதோ தெரியவில்லையே! இந்த ஏற்பாடெல்லாம், இந்தக் கலியாணத்தை இணைத்து வைத்த நம்முடைய சாமியாருக்குத் தெரியுமோ" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "இதெல்லாம் அற்ப விஷயம். இதை எல்லாம் நாம் சுவாமியாரிடத்தில் சொல்லுகிறதா? அவருடைய கவனம் எல்லாம் அபாரமான பெரிய பெரிய காரியங்களில் சென்று கொண்டிருக்கிறது. நாம் இன்னின்ன வரிசைகள் செய்கிறோம் என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. முக்கியமாக இந்தக் கலியாணக் காரியம் நடைபெற வேண்டும். அது ஒன்றே அவருடைய கவலை. மற்ற சில்லரை விஷயங்களை எல்லாம் நாம் எப்படிச் செய்தாலும், அதைப்பற்றி அவர் சிந்தனை செய்ய மாட்டார். இப்போது நாம் முதலில் இந்த நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டு வந்தால், அதற்கு மேல் கலியாண ஏற்பாடு களைப்பற்றி அப்பால் யோசனை செய்து கொள்ளலாம்" என்றார்.

அந்தச் சமயத்தில், "அப்பா! அப்பா!" என்று ஆவலோடு கூப்பிட்டுக் கொண்டு அவர்களுடைய மூத்த குமாரனான கண்ணப்பா உள்ளே நுழைந்தான். அவ்வாறு பதறிய தோற்றத் தோடு அவன் வந்தது முற்றிலும் புதுமையாக இருந்தது ஆகையால், அதைக்கண்ட வேலாயுதம் பிள்ளையும். திரிபுரசுந்தரி அம்மாளும் திடுக்கிட்டு நிரம்பவும் ஆச்சரியமும் கவலையும் அடைந்து, பையன் என்னவிதமான செய்தி கொணர்ந்திருக்கிறானோ என்பதை அறிய ஆவல் கொண்டவர்களாய், அவனது முகத்தை உற்று நோக்கினர். அதுவரையில் மடப்பள்ளியில் தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்தபடி தனது மாமனார் மாமியாரினது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த மடவன்னமான வடிவாம்பாளும் தனது புருஷன் "அப்பா! அப்பா!" என்று விபரீதக் குரலோடு அழைத்துக் கொண்டு வந்ததை உணர்ந்து திடுக்கிட்டெழுந்து விரைவாக வாசற்படியண்டை.. வந்து நின்று கொண்டு தனது கணவனது முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அந்த ஒரு நொடியும் அந்த மடமங்கையின் மனம் பட்ட பாடு இன்னதென்று விவரிக்க சாத்தியமற்றதாக இருந்தது.

உடனே திரிபுரசுந்தரியம்மாள் நயமான குரலில், "என்ன தம்பீ விசேஷம்? ஏன் நீ இப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்ன நடந்தது? நம்முடைய மனிதர் யாருக்கும் கெடுதல் ஒன்றும் இல்லையே" என்று மிகுந்த வாத்சல்யத்தோடு வினவினாள். வேலாயதம் பிள்ளையோ, அவனே விஷயத்தை உடனே வெளியிடுவான் என்று மௌனமாகவும் கம்பீரமாகவும் இருந்த படியே அவனது வாயைப் பார்த்தார்.

அவன், "நம்முடைய விரோதியான கும்பகோணம் வக்கீல் சட்டைநாத பிள்ளையைத் தஞ்சாவூர் ஜெயிலில் வைத்திருந் தார்கள் அல்லவா! அவன் அங்கே இருந்து தப்பி ஓடிவந்து விட்டானாம்" என்றான்.

அந்த அதிசயச் செய்தியைக் கேட்ட மற்ற மூவரும் திடுக்கிட்டு வியப்பே வடிவாக மாறி சிறிது நேரம் ஸ்தம்பித்து மௌனமாய் இருந்து விட்டனர். அடுத்த க்ஷணத்தில் வேலாயுதம் பிள்ளை, "என்ன ஆச்சரியம்! இந்தச் சங்கதி நிஜமாயிருக்குமா? புரளிக்காகிலும் யாராவது இந்தப் பொய்யைக் கட்டிவிட்டிருப்பார்களா? தஞ்சாவூர் ஜெயிலென்ன சாதாரணமான கட்டிடமா! அதற்குள் இருந்து மனிதர் எப்படி வெளியில் வரமுடியும்? இந்தச் சங்கதியை உனக்கு யார் சொன்னது?" என்றார்.

அதே காலத்தில் திரிபுரசுந்தரியம்மாள், "என்றைய தினம் தப்பித்துப் போனானாம்? எப்படித் தப்பித்துப் போனானாம்" என்றாள்.

உடனே கண்ணப்பா பேசத்தொடங்கி, "நேற்று காலையில் தான் அவன் தப்பித்துப் போனானாம். எல்லா விஷயமும் இதோ இன்றைய தினம் தபாலில் வந்துள்ள சமாசாரப் பத்திரிகையில் வெளியாகியும் இருக்கிறது. சங்கதி நிஜமான சங்கதி; பொய் என்று நாம் சந்தேகிக்கவே காரணமில்லை" என்று கூறினான். வேலாயுதம் பிள்ளை, "பத்திரிகையிலும் சங்கதி வந்திருக்கிறது என்றால், அதைத் தவிர வாய்மூலமாகவும் இந்தச் சங்கதி ஊர் முழுதும் பரவி இருக்கிறதா" என்றார்.

கண்ணப்பா, "இல்லையப்பா! நான் காலையில் எழுந்து நேராக ஸ்டேஷனுக்குப் போய், நமக்கு வேண்டிய வண்டிகளுக்காகப் பணமும், கடிதமும் கொடுத்து காலந்தவறாமல் வண்டிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு நேராக நம்முடைய சுவாமியார் ஜாகைக்குப் போனேன். போன இடத்தில் அவர் இந்தச் சங்கதியை என்னிடம் சொல்லி, இந்தப் பத்திரிகையையும் காட்டினார். நேற்று காலையிலேயே அவருக்குத் தஞ்சாவூர் போலீஸ் சூபரின்டெண்டென்டின் இடத்திலிருந்து அவசரமான ஒரு தந்தி வந்ததாம். அதில் விவரம் ஒன்றும் இல்லையாம். இன்னார் ஜெயிலில் இருந்து தப்பி ஓடி விட்டார் என்றும், உடனே புறப்பட்டு தஞ்சைக்கு ரகசியமாக வரும்படியும் அவர் எழுதி இருந்தார். சுவாமியார் ஏதோ திருட்டைப்பற்றி துப்பு விசாரிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு உடனே மோட்டார் வண்டியில் ஏறிக்கொண்டு தஞ்சாவூருக்குப் போய்,

சூபரின்டென்டெண்டுக்கு வேண்டிய யோசனைகளை எல்லாம் - சொல்லிவிட்டு நேற்று ராத்திரிதான் வந்தாராம். நேற்று பகலிலேயே இந்தச் சங்கதி தந்தி மூலமாக சென்னப்பட்டணம் போய் பத்திரிகையில் வெளியாய், இன்று இங்கே வந்திருக்கிறது.

எல்லா விவரமும் பத்திரிகையில் குறிக்கப்பட்டிருக்கிறது" - என்றான்.

வேலாயுதம் பிள்ளை, "பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதைப் படி" என்றார். உடனே கண்ணப்பா அதைப் படிக்கலானான். விவரம் அடியில் வருமாறு:

ஒரு பிரபலக் கைதி ஜெயிலிலிருந்து

தப்புவிக்கப்படுகிறார்.

மன்னார் கோவிலில் உள்ள துப்பறியும் நிபுணரும், பரோபா காரியுமான திகம்பர சாமியார் என்பவரால் சுமார் இரண்டு வருஷ காலத்துக்கு மூன் ஒரு விநோதமான வழக்கு கொண்டுவரப் பட்டதும், அதன் முடிவில் கும்பகோணத்தில் இருந்த பிரபல வக்கீலான சட்டைநாத பிள்ளையும், வேறு சிலரும் கடுமையான தண்டனை அடைந்ததும், பொது ஜனங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கலாம். அப்போது சட்டைநாத பிள்ளை பத்து வருஷத்திற்கும், சப்ஜட்ஜி சர்வோத்தம சர்மா, நமசிவாய பிள்ளை, அஞ்சலையம்மாள் ஆகிய மூவரும் இரண்டிரண்டு வருஷத்திற்கும், முதல் குற்றவாளியின் தம்பி மாசிலாமணி என்பவர் ஒரு வருஷ காலத்திற்கும் கடினக்காவல் தண்டனை அடைந்தார்கள் அல்லவா. அவர்களுள் மாசிலாமணி என்பவர் சிறையில் ஒரு வருஷ காலம் இருந்து கழித்துவிட்டு வெளியில் வந்து பதினோரு மாத காலமாகிறது. மற்ற மூவர்கள் வெளியில் வர இன்னம் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே செல்ல வேண்டும். ஆனால் சட்டைநாத பிள்ளை இன்னம் எட்டுவருஷ காலம் சிறையில் இருக்க வேண்டியவர். சிறையில் இருந்து வெளிப்பட்டு வந்த மாசிலாமணி என்பவர் தமது அபார சொத்துக்களை எல்லாம் ஒப்புக் கொண்டு கும்பகோணத்தில் தமது ஜாகையில் இருந்து வருகிறார். அவர்களுக்கு நேர்ந்த அவமானத்தைக் கருதி அவர் அதிகமாக வெளியில் வராமல் எப்போதும் வீட்டிற்குள்ளாகவே இருந்து வருகிறதாகத் தெரிகிறது. இந்தக் குற்றவாளிகள் எல்லோரும் தஞ்சாவூர் பெரிய ஜெயிலில் இருந்து வந்தார்கள். அந்த ஜெயிலிற் குற்றவாளிகளைக் கொண்டு செக்கில் நல்ல சுத்தமான நல்லெண்ணெய் தயாரித்து ஊரில் உள்ள ஜனங்களுக்கு விற்பது வழக்கம். ஒரு குடத்தில் எண்ணையை நிரப்பி வைத்து ஒரு குற்றவாளி அதைத் தனது தலையில் சுமந்து கொண்டு வருவான். அவனோடு பாதுகாப்பாக இரண்டு சேவகர்கள் (வார்டர்கள்) இரண்டு பக்கத்திலும் வந்து, வீட்டுத் திண்ணைகளில் கூடையை இறக்கச் செய்து வீட்டாருக்கு எண்ணெய் விற்றுக்கொண்டே போவார்கள். அப்படி வரும் கைதியின் இரண்டு கால்களிலும் இரும்பு விலங்குகள் போட்டு, அழுத்தமான சங்கிலியால் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கும். அந்தச் சங்கிலியின் நடுவில் ஒரு கயிற்றைக் கட்டி சங்கிலி கீழே இழபடாமல் மேலே தூக்கி இடுப்பில் கட்டிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சங்கிலியோடு கைதி சாதாரணமாக நடக்க முடியுமேயன்றி - ஓடமுடியாது. அவ்வாறு எண்ணெய்க் குடத்தைத் தூக்கிக் கொண்டு வெளியில் வருவதற்கு, துஷ்டத்தனமும் மூர்க்கத்தனமும் இல்லாத சாதுக்களாகவும் திடகாத்திரம் உள்ளவராகவும் பார்த்து நியமிப்பது வழக்கம். சிறைச்சாலைக்குப் போனவுடன் சட்டைநாத பிள்ளை அங்குள்ளோரிடம் நிரம்பவும் பணிவாக நடந்து, செக்கில் உட்கார்ந்து, மாடுகளை ஓட்டும் வேலையைச் செய்து வந்தாராம். இதுவரையில் வேறே ஒருவன் வழக்கமாக எண்ணெய்க்குடம் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தானாம். அவன் விடுதலை அடைந்து அவ்விடத்தை விட்டுப்போய் இரண்டு மாதகாலம் ஆகிறதாம். அதன் பிறகு தாம் குடத்தை எடுத்துக் கொண்டு வருவதாக சட்டைநாத பிள்ளை கேட்டுக் கொண்டதன்மேல் இந்த இரண்டு மாத காலமாக அவரை அந்த வேலைக்கு உபயோகப் படுத்தி வந்தார்களாம். அவர் பரம சாதுவாகவும் தேகவலுவோடும் அந்த வேலையைச் செய்து வந்தாராம். இன்றைய தினம் காலையில், அவர் எண்ணெய்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு இரண்டு வார்டர்கள் சமேதராக தஞ்சை மேற்கு ராஜவீதியின் வழியாக வந்தபோது, ஓர் ஆள்வந்து, பக்கத்தில் இருந்த ஒரு சந்திற்குள் ஓர் அம்மாளுக்கு எண்ணெய் வேண்டும் என்று அழைத்தானாம். வார்டர்கள் அதை நம்பி கைதியோடு அங்கே போனார்களாம். சந்திற்குள் ஒரு மெத்தை வீட்டின் நடையில் நிரம்பவும் அழகு வாய்ந்தவளும், ஏராளமான உயர்தர ஆபரணங்களும் பட்டாடையும் தரித்தவளும், தாசியைப் போலக் காணப்பட்டவளுமான ஒரு பெண் பிள்ளை நின்று கொண்டிருந் தாளாம். அவள் வார்டர்களைப் பார்த்து மரியாதையாகவும், அன்பாகவும் பேசி எண்ணெயை உள்ளே கொண்டு வரச் சொன்னாளாம். அவள் யாரோ பெரிய மனுஷியென்று நினைத்த வார்டர்கள் கைதியை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்களாம். அவர் நடையைக் கடந்து முற்றத்தில் போய்க் கொண்டிருந்தார்களாம். உடனே படேரென்று வாசல் கதவு சாத்தி மூடப்பட்டதாம். சுமார் 10 முரட்டு மனிதர்கள் எங்கிருந்தோ குபீர் என்று பாய்ந்து, இரண்டு வார்டர்களின் மென்னியைப் பிடித்து பலமாக அழுத்தி அவர்கள் கூச்சலிடாமல் பிடித்துக்கொண்டு, அவர்களுடைய வாயில் துணியை அடைத்து, கைகளையும் கால்களையும் மணிக்கயிற்றால் கட்டிப்போட்டுக் கீழே உருட்டி விட்டார்களாம். சட்டைநாத பிள்ளை எண்ணெய்க் கூடையை உடனே கீழே வைத்தாராம். அவருடைய கால் விலங்குகளை ஆள்கள் வெட்டிரும்பால் உடனே வெட்டி எறிந்து அவருடைய ஜெயில் உடைகளையும் விலக்கி, சிறப்பான வஸ்திரங்களை அணிவித்து அவரை அழைத்துக் கொண்டு உடனே வெளியில் போய்விட்டார்களாம். அவர்களை உள்ளே அழைத்த தாசியும் வெளியில் போய்விட்டார்களாம். அதன் பிறகு ஒரு நாழிகை காலம் வரையில் அந்த வார்டர்கள் தத்தளித்து முற்றத்தில் கிடந்து புரண்டதில், ஒருவருடைய வாய்த்துணி கீழே வீழ்ந்து விட்டதாம். அவர் உடனே பலமாகக் கூச்சலிட்டாராம். அதைக் கேட்டு யாரோ வழிப்போக்கர் சிலர் வந்து பார்த்து விஷ்யங்களை அறிந்து ஆச்சரியம் அடைந்து, கட்டுகளை அவிழ்த்துவிட, வார்டர்கள் வெளியில் ஓடிக் கூக்குரல் செய்ய, ஜனங்கள் எல்லோரும் வந்து திரண்டு நாலா பக்கங்களில் ஓடி கைதியையும் மற்றவரையும் கண்டுபிடிக்க முயன்றார்களாம். அந்தச் செய்தி போலீஸ் சூபரின்டென்டெண்டுக்கும் ஜெயிலருக்கும் எட்ட, அவர்களும் போலீஸ் வீரர்களோடு வந்து கைதியைப் பிடிக்க ஏற்பாடு செய்தார்களாம். தஞ்சையில் இருந்து வெளியூருக்குப் போகும் ரஸ்தாக்களில் எல்லாம் ஜெவான்கள் நின்று ஊரிலிருந்து வெளியில் போகும் வண்டிகளையும் மனிதரையும் கவனித்துப் பார்த்தபடி இருக்கிறார்கள். ரயிலடி.யிலும் ஜெவான்கள் நின்று உள்ளே போகும் மனிதர்களைக் கவனித்துப் பார்த்தே விடுகிறார்கள். தஞ்சையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் ஜெவான்கள் காவலாக நின்று கொண்டிருக்கிறார்கள். தவிர, உடனே கும்பகோணத்துக்கும் தந்தி போயிருக்கிறது. அந்த ஊருக்குள் வரும் சகலமான பாதைகளிலும் ரயிலடியிலும் ஜெவான்கள் எச்சரிப்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சட்டைநாத பிள்ளையின் வீடுகளுக்கு எதிரில் எல்லாம் ஜெவான்கள் நின்று, அவர் எங்கே வந்தாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். கைதியும், அவரை விடுவித்தவர்களும் இன்ன இடத்திற்குப் போனார்கள் என்பது தெரியவில்லை. கைதியின் தம்பி மாசிலாமணி என்பவர் தமது ஜாகையில் ஒன்றையும் அறியாதவர் போல இருந்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்டே இந்தக் காரியம் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் யூகிப்பது சகஜமானாலும், அவரைச் சம்பந்தப்படுத்துவதற்கு எவ்வித சாட்சியும் எதுவுமில்லை. ஆகையால், போலீசார் அவரைப் பிடிக்கப் பின் வாங்குகிறார். தமது தமையனார் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தியையும், அவரைப் பிடித்துக் கொடுப்பதற்கு 5000 ரூபாய் வெகுமதி கொடுப்பதாக போலீசார் விளம்பரப்படுத்தி இருப்பதையும் கேள்வியுற்ற மாசிலாமணி அதைப்பற்றித் தாமும் ஆச்சரியம் அடைவதாகவும், தமது தமையனார் செய்த காரியம் தம் மனதிற்கும் பிடிக்கவில்லை என்றும், அவரைப் பிடித்து சர்க்காரிடம் ஒப்புவிப்போருக்குத் தாமும் இன்னொரு பதினாயிரம் ரூபாய் வெகுமதி கொடுப்பதாகப் பத்திரிகைகளுக்கு எழுதப் போவதாகவும் சொன்னாராம். இவ்வளவே இப்போது கிடைத்த விவரம்; மேல் விவரம் கிடைக்கக் கிடைக்க வெளியிடுகிறோம்

என்று இவ்வண்ணம் எழுதப்பட்டிருந்ததை கண்ணப்பா படிக்க, எல்லோரும் முற்றிலும் பிரமிப்படைந்து, அப்படியே ஒடுங்கி ஓய்ந்து போயினர்.

உடனே கண்ணப்பா, "எல்லாம் அந்த மாசிலாமணி செய்த காரியம் என்பதற்குச் சந்தேகமே இல்லை. சட்டைநாத பிள்ளையின் இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாதென்ற அகம்பாவத்தினால் அவன் சர்க்காருக்குப் போட்டியாக அவர்களுடைய தொகையைவிட, இரட்டிப்புத் தொகை வெகுமதி கொடுப்பதாக வெளியிட உத்தேசிக்கிறான் போலிருக்கிறது. நம்முடைய சுவாமியார் இந்த விஷயத்தைக் கேட்டு நிரம்பவும் கவலை கொண்டிருக்கிறார். அவர்கள் நமது பேரிலும் சுவாமியார் பேரிலும் அடங்காத ஆத்திரமும் பகைமையும் வைத்து, பலவகையில் தீங்கிழைக்க முயலுவார்கள். ஆகையால், நாம் எல்லோரும் ஜாக்கிரதையாயும் பாதுகாப் பாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமியார் உங்களிடம் சொல்லச் சொன்னார். அவரும் இன்று மத்தியானம் இங்கே வருவதாகச் சொன்னார்" என்றான். ★⁠★⁠★

3-வது அதிகாரம்

போலீஸ்புலி- நொண்டிதுரை-இடும்பன்

சேர்வைகாரன்

வக்கீல் சட்டைநாத பிள்ளை தண்டனை அடைந்து சிறைச் சாலைக்குச் சென்ற காலத்தில் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருந்தன. கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள திருநாகேசு வரம் என்ற ஊரில் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ளதும், மூன்று போகம் விளைவுள்ளதுமான நன்செய் நிலம் இருந்தது. அதை அவர் குத்தகைக்கு விட்டிருந்தார். அது நிற்க, அவர் ரொக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் சில பெரிய ஜெமீந்தார்களிடம் வட்டிக்குக் கொடுத்திருந்தார். கும்பகோணத்தில் அவர் வசித்து வந்த பெரிய மாளிகையைத் தவிர, இன்னும் மூன்று மச்சு வீடுகள் இருந்தன.

இவைகள் நிற்க, அவரது கைவசத்தில் நகைகளாகவும், தட்டுமுட்டு சாமான்களாகவும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமானம் உடைய பொருட்கள் அவரது சொந்த மாளிகையில் இருந்தன. கடைசியாக மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்டு அவரையும் மற்றவர்களையும் தண்டித்து சிறைச்சாலைக்கு அனுப்பிய பின், அவர் ஒரு பிரபல வக்கீலை நியமித்து தமக்காகவும் மற்றவருக்காகவும் மேல் நியாயஸ்தலங்களில் அப்பீல் செய்தார். அவ்விடங்களிலும் அவருக்குப் பிரதிகூலமே ஏற்பட்டது. அவர் உடனே நீதிபதிக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். தமது ஜாகையில் உள்ள சகலமான சொத்துக் களையும் அப்படியே வைத்து வெளிக்கதவைப் பூட்டி முத்திரை போட்டு வாசலில் ஒரு ஜெவானைக் காவல் போட்டு வைக்க வேண்டும் என்றும், அந்த ஜெவானுக்குரிய சம்பளம் முதலிய செலவுகளைத் தாமே கொடுப்பதாகவும், தமது தம்பியான மாசிலா மணி அவனுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு வருஷ தண்டனைக்காலம் முடிந்த பின் சிறைச்சாலையில் இருந்து வெளிப்பட்டு வந்தவுடன் அந்தச் சொத்துக்களை எல்லாம் அவனிடம் ஒப்புவித்துவிட வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தில் கண்டிருந்தார். அதுவும் அன்றி, மாசிலாமணி வெளியில் வந்த காலத்தில், தமது நிலங்களில் இருந்து வர வேண்டிய நெல் முதலிய தானியங்களையும், கடன் காரர்களிடத்தில் இருந்து வரவேண்டிய வட்டித் தொகை களையும், வீட்டு வாடகைகளையும் மாசிலாமணியே வசூலித்துத் தனது பிரியப்.டி. ஆண்டு அனுபவித்துக் கொள்ளலாம் என்று ஓர் அதிகாரப் பத்திரம் எழுதி, சப் ரிஜிஸ்டிராருக்கு அதிகமான கட்டணம் கட்டி, அவரைச் சிறைச்சாலைக்கே வரவழைத்து, அந்த தஸ்தாவேஜை ரிஜிஸ்டர் செய்து அதை மாசிலாமணியிடம் கொடுத்தனுப்பி வைத்தார்.

ஆகவே, மாசிலாமணி சிறைச்சாலையை விட்டுத் திரும்பித் தனது சொந்த ஊராகிய கும்பகோணத்திற்கு வந்தவுடனே, அந்த ஊர்ப் பெரிய தெருவிலிருந்த அவனது பெருத்த மாளிகையும் அதற்குள் இருந்த சகலமான பொருட்களும் அப்படியே அவனிடம் ஒப்புவிக்கப்பட்டன. ஒரு வருஷ காலமாக வசூலிக்கப் படாமல் பாக்கி நின்ற குத்தகைத் தானியங்கள், வட்டிப் பணம், வாடகைப் பணம் முதலிய யாவும் ஒரே மொத்தமாக அவனிடம் வந்து சேர்ந்தன. அவன் சகலமான செல்வங்களுக்கும் அதிபதி ஆகையினால் எல்லாக் காரியங்களையும் சுயேச்சையாக நடத்திக் கொண்டு வந்தான். அவன் தண்டனை அடைந்ததற்கு முன் உல்லாச புருஷனாய் நினைத்த இடத்திற்குப் போய்த் தலைகால் தெரியாது பணச் செலவு செய்து சந்தோஷமாகப் பொழுதைப் போக்கி வந்தது போல இப்போது நடந்து கொள்ளாமல் புது மனிதனாக மாறிப்போனவன் போலத் தோன்றினான். எவ்வளவோ மானமாகவும் பெருமையாகவும் கண்ணியமாகவும் இருந்து, எல்லோரது வணக்கத்தையும் மரியாதையையும் பெற்று வந்த தங்களுக்கு என்றைக்கும் மாறாத பெருத்த மானபங்கமும், பழிப்பும் ஏற்பட்டு விட்டதே என்ற ஆராத்துயரமாகிய பெருத்த சுமை அவனது மனதில் சதாகாலமும் ஒரு பெருத்த மலை போல அழுத்திக் கொண்டிருந்தது என்பதை அவனது குன்றிய முகத்தோற்றமே எளிதில் புலப்படுத்தியது. அவன் சிறைச் சாலைக்குள் இருந்த காலத்தில் அந்த அவமானத்தையும் இழிவையும் அவ்வளவாக உணரவில்லை. அவ்விடத்தை விட்டுத் தனது சொந்த ஊர்ச் சனங்களின் இடையில் வந்த பிறகே, அவன் தனது சிறுமையையும் மானக்கேட்டையும் நன்றாக உணர்ந்தான். அவன் பகற்பொழுதில் தனது மாளிகையை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்தான். திரும்பிவந்த பிறகு சுமார் ஒரு மாத காலம் வரையில் அவன் தனது சொந்த வேலைக்காரர்களினது முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கும் வெட்கினான். அவ்வாறு இரண்டு மாத காலம் கழிந்தது. அந்தக் காலத்தில் அவன் எப்போதும் ஏகாந்தமாகவே இருந்திருந்து தனது நெஞ்சோடு சதாகாலமும் சம்பாஷணை புரிந்து வந்தான் ஆகையால், அவன் தங்களது பழைய பெருமையையும் உன்னத நிலைமையையும் இப்போதைய பாழடைந்து மழுங்கிப் போன நிலைமையையும் ஒத்திட்டுப் பார்க்கப் பார்க்க, அவனது விசனமும் வேதனையும் மலை போலப் பெருகிக் கொண்டே போயின. தங்களுக்கு அத்தகைய மீளாத பெருத்த தீங்கையும் மானக்கேட்டையும் இழைத்தவர்களான திகம்பரசாமியார் முதலிய தங்களது பகைவர்களுக் கெல்லாம் தான் ஒன்றுக்குப் பத்தான பெரும் பொல்லாங் கிழைத்துப் பழி தீர்த்து எல்லோரையும் வேறுத்து விட்டுத்தான், மறுவேலை பார்ப்பது என்ற உறுதி அவனது மனதில் தோன்றித் தோன்றி நொடிக்கு நொடி உறுதிப்பட்டு பலத்து வந்தது. அவன் ஒரு மாதகாலம் வரையில் இரவு பகல் ஆழ்ந்து யோசனை செய்து செய்து தான் இன்னவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான். திகம்பரசாமியார் நிரம்பவும் தந்திரம் வாய்ந்த சௌரியவான் ஆதலால், அவரிடம் தான் முன் போல அலட்சியமாக நடந்து கொள்ளாமல், அவரைவிட அதிகத் தந்திர மாகவும் கபடமாகவும் ரகசியமாகவும் சகலமான விஷயங் களையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். திகம்பரசாமியாரானாலும், அல்லது, அவரைவிடப் பதினாயிரம் மடங்கு சிரேஷ்டமான யூகமும் சாமர்த்தியமும் வாய்ந்த அதிமேதாவியானாலும் எவ்வளவு முயன்றாலும், தனது ரகசியம் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்ற அபாரமான கருத்தோடும் ஆழ்ந்த யோசனையோடும் அவன் தனது ஏற்பாடுகளை அதியந்தரங்கமாகச் செய்து வந்தான். ஒரு மனிதன் தண்டனை அடைந்து சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்தால், அவனைப் பற்றிய விவரம் முழுதும் உடனே போலீசாருக்கு வந்துவிடும். ஆதலால், அவர்கள் அவனை அடிக்கடி பார்த்தும், அவனது நடவடிக்கைகளைக் கவனித்தும் வருவது வழக்கம். அதுபோல, கும்பகோணம் போலீசார், பெரிய மனிதனாகிய மாசிலாமணியிடம் அடிக்கடி பணம் கறப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென்று நினைத்து ஒவ்வொரு நாளும் அவனது வீட்டிற்கு வந்து அவனை ஆஜர் பார்த்துவிட்டுத் தமது வாய்மூட்டுகளைப் பெற்றுக்கொண்டு போயினர். அவர்கள் அவ்வாறு அடிக்கடி வந்து பார்த்து, தான் நல்ல நடத்தையோடு இருப்பதாக எழுதிக்கொண்டு போனதை அவன் ஒரு நன்மையாக மதித்து, பிறர் சந்தேகிக்காதபடி உள்ளுற பற்பல ஆழ்ந்த சதி ஆலோசனைகளையும் முஸ்தீபுகளையும் செய்து வந்தான். தனக்கு உதவிக்குத் தேவையான சாமர்த்தியசாலியான பல மனிதர்களின் சிநேகத்தையும் அவன் சம்பாதித்துக் கொண்டான். அவன் வசித்து வந்த மூன்று கட்டுகள் உடைய பெருத்த மாளிகையின் மேல் பாகத்தில் அழகான இரண்டு உப்பரிகைகள் அமைத்ததன்றி அதில் வேறு பல மாறுதல்களையும் அமைத்தான். அந்த மாளிகையின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தின் வழியாகப் பின்புறத் தெருவில் இருந்த அவர்களது இன்னொரு வீட்டுக்குப் போகும் பாதையை அடைத்து குறுக்கில் ஒரு பெரிய மதில் எழுப்பி இப்புறத்தில் இருந்து அப்புறமும் அப்புறத்தில் இருந்து இப்புறமும் மனிதர் போக வழியில்லாதபடி தடுத்ததும் அன்றி, அப்புறத்தில் இருந்த வீட்டில் யாரோ ஒரு குடும்பத்தாரைக் குடி வைத்தான். அவன் அத்தனை மாறுபாடுகளையும், ஏற்பாடு களையும் செய்து முடிப்பதற்கு சுமார் பதினொரு மாதகால மாயிற்று. அவன் பகற் பொழுதில் வெளியில் போகாமல் இருந்த தன்றி இரவிலும் உள்ளே இருந்தபடியே இதர மனிதர்களின் உதவியைக் கொண்டு தனது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு வந்தான். போலீஸ் ஜெவான்கள் தினந்தினம் பகற்பொழுதிலும் இராக் காலத்திலும் வந்து வந்து அவனை ஆஜர் பார்த்து, அவனோடு சந்தோஷமாகப் பேசிச் சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனர், அவன் அவர்களது நட்டம் உதவியும் தனக்கு எப்போதும் தேவையாக இருக்கும் என்ற கபட எண்ணத்தோடு, அவர்களிடம் நிரம்பவும் பிரியமாகவும், நட்பாகவும் நடந்து அடிக்கடி ஏராளமான சன்மானங்களை அள்ளிக் கொடுத்து! அவர்களுடைய பரஸ்பர பிரியத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்து வந்தான், அவ்வாறிருந்த காலத்தில் ஒரு நாள் பகல் சுமார் 1-மணி சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாவையங்கார் ஆயுத பாணிகளான ஆறு ஜெவான்கள் தொடர வந்து, சட்டைநாத பிள்ளையினது மாளிகையின் வாசற் கதவை இடிக்க, உடனே வேலைக்காரன் கதவைத் திறந்தான்.

இன்ஸ்பெக்டர் வேலைக்காரனைப் பார்த்து "அடேய்! உள்ளே மாசிலாமணிப் பிள்ளை இருக்கிறாரா?" என்று அதிகாரத்தோடு கேட்க வேலைக்காரன், "இருக்கிறார்; இப்போதுதான் சாப்பிட்டு கூடத்தில் சோபாவின் மேல் உட்கார்ந்து தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கிறார்" என்றான்.

அதைக் கேட்ட அண்ணாவையங்கார் அதற்கு மேல் வேலைக் காரனோடு வார்த்தையாடாமல், வாசலில் உருவிய கத்தியோடு இரண்டு ஜெவான்களை நிறுத்திவிட்டு, இரட்டைக்குழாய்த் துப்பாக்கி பிடித்த நான்கு ஜெவான்களைத் தம்மோடு கூட அழைத்துக் கொண்டு தடதடவென்று உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் கூடத்தை அடைந்து, அவ்விடத்தில் வேலைக்காரன் கூறியது போல மாசிலாமணி வெற்றிலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவனிடம் நெருங்கினார். நெருங்கிய போது, அவர் பின்னால் திரும்பி, "அடேய்! இரண்டு பேர் பின் பக்கம் போய், வாசற்படியண்டை ஜாக்கிரதையாக நில்லுங்கள். நான் மறுபடி கூப்பிடும் போது வரலாம். இரண்டு பேர் என்னோடு கூடவே இருங்கள்" என்று கூறிய வண்ணம் மாசிலாமணியிடம் நெருங்கினார். அவரது உத்தரவின்படி இரண்டு ஜெவான்கள் உடனே விரைவாக நடந்து மூன்றாவது கட்டின் கடைசி வாசலுக்குப் போய் அவ்விடத்தில் பாராக்கொடுத்து நின்றனர்.

இன்ஸ்பெக்டரும் ஜெவான்களும் திடீரென்று தமக்கருகில் வந்ததைக் கண்டு திடுக்கிட்டுக் குழப்பமடைந்தவன் போலத் தோன்றிய மாசிலாமணி உடனே ஒருவாறு சமாளித்துக் கொண்டு தனது முகத்தில் புன்னகையை உண்டாக்கிக் கொண்டு சரேலென்று எழுந்து வணக்கமாகக் கைகுவித்து நின்று நிரம்பவும் மரியாதையாகப் பேசத் தொடங்கி, "சுவாமிகளே! நமஸ்காரம், வரவேண்டும்; வரவேண்டும். இந்த சோபாவின் மேல் தயவு செய்யுங்கள்" என்று அன்பாகக் கூறி இன்ஸ்பெக்டரை உபசரித்து வரவேற்க, அவர் மாசிலாமணியின் உபசரணைகளைச் சிறிதும் பொருட்படுத்தாதவராய், "என்ன மாசிலாமணிப் பிள்ளை! என்ன விசேஷம்? எல்லாம் சௌக்கியந்தானே?" என்று கேட்டு அவனது முகமாறுதலை உற்றுக்கவனித்த வண்ணம் அவனுக்கு முன்னால் கிடந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டார். துப்பாக்கி களோடு வந்த மிகுதியான இரண்டு ஜெவான்களும் மாசிலாமணியின் பின்னால் இரண்டு பக்கங்களிலும் போய் வளைத்துக் கொண்டனர். அதற்கு முன் ஒவ்வொரு நாளும் வந்து தனது தோழர்கள் போலத் தன்னோடு நெடுநேரம் இருந்து வேடிக்கையாகப் பேசிவிட்டுப் போய்க் கொண்டிருந்த ஜெவான்கள் அப்போது இன்ஸ்பெக்டருக்கெதிரில், முற்றிலும் முகமறியாத அன்னியரைப் போல நடந்து, சமயம் வாய்த்தால், துப்பாக்கியைத் தன்மீது உபயோகிக்கவும் தயாராக இருப்பவர் போல் பயங்கரமான தோற்றத்தோடு தனக்கருகில் வந்து நின்றதைக் கண்ட மாசிலாமணி, போலீஸாரின் நட்பு சிறிதும் நம்பத்தகாதது என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். ஒருகால் அவர்கள் தன்னைப்பிடித்து சிறைப்படுத்த வந்திருப்பார்களோ என்ற திகில் அவனது மனதில் உதித்துக் கலக்கியது ஆனாலும், அவன் மிகுந்த மனோதிடத்தோடும் குவித்த கையோடும் நின்று இன்ஸ்பெக்டரை நோக்கி, அவர் கடைசியாகக் கேட்ட (கேள்விக்கு நயமாக மறுமொழி கூறத் தொடங்கி, "எல்லாம் தங்கள் தயவினால் சௌக்கியந்தான். எஜமானே! நான் என்ன விசேஷத்தைச் சொல்லப் போகிறேன்! எங்களுக்கு நேரிட்ட பெருத்த அவமானத்துக்குப் பிறகு, நான் வீட்டை விட்டு வெளியில் போகிறதையே விட்டு விட்டேனே! இதோ இந்த ஜெவான்கள் எல்லோரும் தினந்தினம் இராத்திரி பகல் வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போகிறார்களே! நான் சிவனே என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது இவர் களுக்கெல்லாம் தெரிந்த விஷயந்தானே! நான் சமாசாரப் பத்திரிகைகளைக்கூட பிரித்துப் பார்க்காமல் வந்தபடியே போட்டிருக்கிறேன். தாங்கள் ஏது இந்த வெய்யிலில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டு இந்த ஏழையின் குடிசைக்கு விஜயம் செய்தது?" என்று நிரம்பவும் விநயமாகப் பேசினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் புரளியாகப் புன்னகை செய்து கண்சிமிட்டி மாசிலாமணியின் முகத்தை முன்னிலும் அதிக கூர்மையாக உற்று நோக்கியபடி, "என்ன மாசிலாமணிப் பிள்ளை! ரகசியத்தை உம்முடைய முகமே நன்றாக வெளியிடுகிறதே! அப்படி இருக்க, ஒன்றையும் அறியாதவரைப் போல இப்படி மறைத்து மறைத்துப் பேசுகிறீரே! நான் எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு அனுகூலமாக இருந்து வந்தவன். உமக்குக் கலியாணம் நடத்த ஏற்பாடு செய்திருந்த காலத்தில் உம்முடைய எதிரிகள் வந்து என் மனசை எவ்வளவோ கலைக்க முயன்றார்கள். அதற்கெல்லாம் நான் கொஞ்சம்கூட அசையவில்லை. கடைசி வரையில் நான் உங்கள் பக்கத்திலேயே உறுதியாக இருந்து, உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று படாத பாடெல்லாம் பட்டேன். கடைசியில் உம்முடைய தமையனாரே வந்து, அந்தப் பெண்ணின் விஷயத்தில் இனி யாதொரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தான் நான் பேசாமல் இருந்தேன். உங்கள் தமையனாருக்கும் உமக்கும் ஏதோ கால வித்தியாசத்தினால் சிறைவாசம் ஏற்பட்டதென்ற எண்ணத்தையே நான் இதுவரையில் கொண்டு உங்கள் விஷயத்தில் பட்சம் மறவாமல் இருந்து வந்திருக்கிறேன். அதுவுமன்றி உம்மிடம் கடுமை காட்டாமல் நிரம்பவும் மரியாதையாகவே நடந்து கொள்ளும்படி இந்த ஜெவான்களுக்கெல்லாம் நான் கண்டிப்பான உ..த்தரவு பிறப்பித்திருக்கிறேன். ஆகையால் என்னை நீர் விரோதி என்றாவது, போலீஸ் இலாகாவைச் சேர்ந்த ஓர் உத்தியோகஸ்தர் என்றாவது எண்ணிக் கொள்ளாமல், எப்போதும் உமக்கு நன்மை செய்யக் கூடிய அந்தரங்க சிநேகிதர் என்று நினைத்துக் கொள்ளும். இப்போதும் உமக்கு யாதொரு கெடுதலும் வராமல் பார்த்துக் கொள்ளுகிறேன். நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடும், மற்ற விஷயங்களை நான் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறேன்" என்றார்.

மாசிலாமணி முன்னிலும் அதிக வியப்புற்றவன் போலத் தோன்றி, "எஜமான் பேசுவது எனக்கு நன்றாக விளங்க வில்லையே! தாங்கள் பேசுவதைப் பார்த்தால், ஏதோ விஷயம் நடந்திருப்பதாகத் தோன்றுகிறது! நான் வீட்டுக்கு வந்த இந்தப் பதினோரு மாத காலமாய் நான் எந்தச் சங்கதியையும் காதில் போட்டுக் கொள்ளாமல் உலகத்தையே வெறுத்த பரதேசி போல இருந்து வருகிறேன். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே எனக்குக் கொஞ்சமும் தெரியாது. ஏதாவது புதுமையான சங்கதி நடந்திருந்தால், அதைத் தாங்கள் சொல்லத்தான், நான் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களும், இந்த ஊரில் உள்ள எல்லாப் போலீஸ் உத்தியோகஸ்தர்களும் எங்களிடம் எப்போதும் மாறாத அபிமானமும் மதிப்பும் உடையவர்கள் என்பது பிரசித்தியான விஷயம். அதை நானே சொன்னால் முகஸ்துதி செய்கிறேன் என்று எஜமான் நினைத்துக் கொள்ளப் போகிறீர்களே என்ற எண்ணத்தினால், நான் அந்தப் பிரஸ்தாபத்தை எடுக்க அஞ்சினேன். அதுவுமன்றி தாங்கள் இப்போது பலமான பந்தோபஸ்தோடு வந்திருப்பதைப் பார்த்து, "நாம் எவ்விதக் குற்றமும் செய்யவில்லையே.! இவர்கள் இவ்வாறு பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்ன?" என்ற ஒருவித மலைப்பு என் மனதில் ஏற்பட்டது! ஆகையால் இந்தச் சமயத்தில் நான் தங்களிடம் உரிமை பாராட்டுவது ஒழுங்கான காரியமல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. என் வீட்டில் உள்ள வேலைக்காரர் யாராகிலும் ஏதாவது திருட்டு முதலிய குற்றத்தைச் செய்து விட்டார்களா? அப்படி இருந்தால் சொல்லுங்கள்; நான் உடனே அந்த ஆளைப் பிடித்து ஒப்புவிக்கிறேன், ஏதாவது திருட்டுச் சொத்தை அவர்கள் ஒருவேளை இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்களா? அதற்காகத் தாங்கள் சோதனை போட வந்தீர்களா? விஷயம் எதுவாக இருந்தாலும், தாங்கள் வெளியிடலாம்" என்று நிரம்பவும் விநயமாகக் கூறினான்.

இன்ஸ்பெக்டர் வேடிக்கையாக நகைத்து, "மாசிலாமணிப் பிள்ளை! இவ்வளவு சாதுரியமாகப் பேச எப்போது கற்றுக் கொண்டீர்? ஜெயிலில் இருந்த போது கற்றுக்கொண்டீரா? அல்லது, அவ்விடத்தை விட்டு வந்த பிற்பாடு கற்றுக் கொண்டீரா? அப்படிக் கற்றுக்கொண்டவர். அதை முதலில் மற்றவர்களிடம் உபயோகிக்காமல், எங்களிடமே உபயோகிக் கிறீரே! அது தான் சந்தோஷமாக இருக்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கொல்லன் உலையில் ஊசி விற்பது போல் இருக்கிறது. நேற்றுப் பிறந்த குழந்தைப் பிள்ளையான நீர் எனக்குக் காது குத்துகிறீரே! நான் இந்தப் போலீஸ் இலாகாவில் 9 ரூபாய் சம்பளமுள்ள ஜெவான் வேலையிலிருந்து 250 ரூபாய் சம்பளமுள்ள பெரிய இன்ஸ்பெக்டர் வரையில் வந்திருக்கிறேன். இதற்குள் எத்தனையோ மனிதர்களுடைய தந்திரங்களும் புத்தி சாதுர்யங்களும் என்னிடம் வந்து அற்றுப் போயிருக்கின்றன. அத்தனை பெயரையும் நான் ஒரு வாழைப்பழத்தை விழுங்குவது போல அபக்கென்று ஒரு நிமிஷத்தில் வாயில் போட்டுக் கொண்டு விட்டேன். ஆகையால் நீர் என்னிடம் குள்ளநரியின் வேலையைக் காட்டினால் தப்ப முடியாது. நல்ல மாதிரியாய் ஒழுங்கான வழியில் வந்தால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்படி ஏதாவது என்னால் ஆன சகாயம் செய்வேன். மறுபடியும் உமக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கிறேன். நீர் நன்றாக யோசனை செய்து நிஜ சங்கதி எதையும் மறைக்காமல் என்னிடம் சொல்லிவிடும். நீரும் நானும் தனியாக இருந்து பேச வேண்டும் என்ற பிரியம் ஒரு வேளை உமக்கிருந்தால், அதன்படியும் நான் நடக்கத் தடையில்லை. பேசுவதை, அவசரப்படாமல் நிதானமாகவும் ஐந்திரண்டுக்குப் பழுதில்லாமலும், பேசுவது எப்போதும் நலமானது. முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்துப் பேசுவதில், யாதொரு பிரயோசனமும் ஏற்படப் போகிறதில்லை. அதை மூடன் கூ... ஒப்புக்கொள்ள மாட்டான்" என்றார். மாசிலாமணி முன்னிலும் டன் மடங்கு அதிகரித்த வியப்பும் பிரமிப்பும் தோற்றுவித்து இன்ஸ்பெக்டரை நோக்கிக் கைகூப்பிப் பணிந்தவனாய், "எஜமான் என்னைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வது என்னுடைய கால வித்தியாசத்தின் பலன் என்றே நினைக்கிறேன். ஏதோ சங்கதி நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஒன்றையும் அறியாதவன் போல் தங்களிடம் நான் பாசாங்கு செய்து தங்களை ஏய்க்கிறதாகத் தாங்கள் அபிப்பிராயப்படுகிறீர்கள் போல் இருக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் மனப்பூர்வமாகச் சொல்லப் பட்ட உண்மையான வார்த்தைகளே அன்றி, கொஞ்சமும் வித்தியாசமே கிடையாது. நான் ஜெயிலுக்குப் போகிறதற்கு முன்பாவது என் மனசில் ஒருவித இறுமாப்பும், தான் என்ற ஆணவமும், பணத்திமிரும், நாம் அதிக புத்திசாலி ஆகையால் மற்றவர்களை ஏமாற்றி விடலாம் என்ற ஒருவித அசட்டுத் துணிவும் இருந்தன. ஜெயிலில் ஒரு வருஷகாலம் இருந்து வந்த பிறகு அந்தத் துர்க்குணங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. உலகத்தில் ஒவ்வோர் அம்சத்திலும் நம்மைவிட மேலான மகாதுபாவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்ற அச்சமும், நாம் சற்குணத்தோடு நேரான வழியில் நடக்கிறதற்கு மிஞ்சின மனோபலமும், ஜெயமும் வேறு எதிலும் உண்டாகா என்ற உறுதியான அபிப்பிராயமும் என் மனதில் பலமாக ஊன்றி நின்றுவிட்டன. அதற்கிணங்கவே நான் இப்போது நடந்து வருகிறேன். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ என்றும், எந்த மனிதரிடத்தில் எப்படிப்பட்ட சிரேஷ்டமான யோக்கிய தாம்சம் நிறைந்திருக்கிறதோ என்றும் அஞ்சி என் சிறுமையை உணர்ந்தே நான் இப்போது அற்ப மனிதரிடத்தில் கூட நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டு வருகிறேன். நான் தங்களிடத்தில் வித்தியாசமாக நடந்து கொள்வேனோ? தங்களை நான் இன்று நேற்றா பார்க்கிறேன். தாங்கள் சொல்லுகிறபடி தங்களுக்கும் எனக்கும் ஒத்திட்டுப் பார்த்தால், நான் கேவலம் ஒரு குழந்தைக்கே சமம் என்பதை நான் நன்றாக அறிவேன். இந்தப் போக்கிரிப் பட்டனத்தில் உள்ள அயோக்கியர்களுக்கு எல்லாம் தங்களுடைய பெயர் என்றாலே சிம்ம சொப்பன மல்லவா. இமயமலைக்கு அருகில் உள்ளவர்கள் கூட கும்பகோணம் என்ற பெயரைக் கேட்டால், இந்த ஊரில் இருந்து வரும் மனிதரை விஷம்போல வெறுக்கிறார்கள். அப்படிப்பட்ட என்றைக்கும் மாறாத இழிவையும் அவமானத்தையும் இந்த ஊருக்குத் தேடி வைக்கும் அயோக்கிய சிகாமணிகள் எல்லாம் தங்களுடைய ஆளுகையில் பஞ்சாய்ப் பறந்து போய் விட்டார்களே! எப்படிப்பட்ட திறமை சாலிகளான போலீஸ் இன்ஸ்பெக்டர்களாலும் அடக்க முடியாத பரம துஷ்டர்களும், துன்மார்க்கர்களும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாய்ப் போகும்படி செய்தது தாங்கள் அல்லவா? அந்த விவரம் எல்லாம் எனக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட போலீஸ் புலியாகிய தங்களிடத்தில் நான் வாலையாட்டத் துணிவேனா? ஒரு நாளுமில்லை. ஆகையால் தாங்கள் இந்த ஏழையின் மேல் தப்பான அபிப்பிராயம் கொள்ளவே முகாந்திரமில்லை. தங்களை நான் அற்பசொற்பமாக மதித்துப் பேசவில்லை. சர்வமும் தெரிந்த சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுளின் முன்னால் நின்று பேசுவதைப் போலவே நான் எண்ணிப் பேசுகிறேன். இது பிரமான மான வார்த்தை. இப்போது என்ன கருத்தோடு தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை நான் இன்னமும் ஓர் எள்ளளவுகூட யூகிக்கக் கூடவில்லை. அப்படி இருக்க, நான் எவ்விதமான நிஜத்தைப் பேசுகிறதென்பது தெரியவில்லை. எஜமான் என் மேல் கோபிக்காமல் விஷயத்தைச் சொன்னால், அதற்குச் சம்பந்தப்பட்ட சகலமான உண்மையையும் எனக்குத் தெரிந்த வரையில் திரிகரண சுத்தியாக நான் உடனே வெளியிடுகிறேன்” என்று நிரம்பவும் நிதானமாகவும் பணிவாகவும் கூறினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மிகுந்த ஆச்சரியம் அடைந்து தம் மனதில் பொங்கியெழுந்த கோபத்தையும் வெறுப்பையும் வெளியில் காட்டாமல் அடக்கிக் கொண்டு, “பிள்ளையவாள்! நீர் பேசுவதெல்லாம் கேட்பதற்கு அழகாயிருக்கிறது என்பது வாஸ்தவமே. ஆனால் அதனால் மனசில் மாத்திரம் கொஞ்சமாவது திருப்தி என்பதே உண்டாகவில்லை. அதுதான் சங்கடமாக இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். நீர் மற்ற எந்த விவரத்தையும் என்னிடம் சொல்ல வேண்டாம். உம்முடைய தமையனார் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை மாத்திரம் நீர் நிச்சயமாகச் சொல்லிவிட்டால், அதுவே போதுமானது. நான் உடனே போய்விடுகிறேன். இந்த விஷயத்தில் நான் உம்மைச் சம்பந்தப்படுத்தாமல் தப்ப வைக்கிறேன்; அவரை மாத்திரம் பிடித்துக்கொண்டு போய்விடுகிறேன். அவர் ஆயிசு காலம் முடிய மறைந்து இந்த உலகத்தில் இருக்க முடியாது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவர் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். அவருடைய தண்டனைக் காலம் ஒன்றுக்கு இரண்டாகப் பெருகுவதும் நிச்சயம். ஆனால் நாங்களே சிரமப் பட்டு அவரைக் கண்டு பிடித்தால், அவரோடு அவரை விடுவித்த மற்றவர்களும் அவருக்குத் துணையாக ஜெயிலுக்குப் போக நேரும். அதில் நீரும் ஒருவர்தான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால், நீரே உம்முடைய தமையனாரை மாத்திரம் காட்டிவிட்டால், நீர் தப்பித்துக் கொள்ளலாம். நான் சொல்வதில் உமக்கு ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களைச் சீர் துக்கிப் பார்த்து சரியான வழியில் நடந்து கொள்ளும்” என்றார்.

அவரது சொற்களைக் கேட்டு முற்றிலும் பிரமிப்படைந்து திடுக்கிட்டவன் போலத் தோன்றிய மாசிலாமணி, “எஜமானே! தாங்கள் சொல்வது ஆச்சரியத்திலும் பரம ஆச்சரியமாக இருக்கிறது. என் தமயனார் சிறைச்சாலையில் இருக்கிறார் என்றே நான் இந்த கூடிணம் வரையில் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது தாங்கள் சொல்வதைக் கேட்கவே, அவர் அங்கே இருந்து தப்பி ஓடிப்போய் விட்டதாக நான் அர்த்தம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இது என்னால் தாங்க முடியாத மகா புதுமையான சங்கதியாகவே இருக்கிறது. அவர் என்றைய தினம் தப்பித்துப் போனார்? அப்போது அவரோடு வார்டர்கள் யாரும் இல்லையா? தஞ்சாவூர் ஜெயில் என்ன சாதாரணமான கட்டிடமா? அவ் விடத்தில் காவல் இல்லையா? என் தமையனார் என்ன யெளவனப் பிராயத்து விடபுருஷரா? அத்தனை மனிதர்களையும் அவர் ஏமாற்றிவிட்டு எப்படிப் போனார் என்பது விளங்கவில்லையே!” என்றான்.

இன்ஸ்பெக்டர் சிறிது கோபமாகப் பேசத்தொடங்கி, “ஐயா! நீர் இன்னமும் இந்த மாதிரியே பேசிக் கொண்டு போனால், பிறகு நான் சட்டப்படி நடக்க வேண்டியதாகவே முடியும். அநாவசியமான துன்பத்தை ஏன் விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறீர்? உம்முடைய சிறுபிள்ளை விளையாட்டெல்லாம் இந்த வெள்ளைக்காரர் துரைத்தனத்தில் செல்லப் போகிறதில்லை. ஒருவர் ஜெயிலில் இருப்பதற்குப் பதிலாக இப்போது பலர் ஒன்றாகச் சேர்ந்து அங்கே போகும்படியான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள், வேண்டாம். நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல, ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாகச் சொல்லுகிறேன். சிறு பிள்ளைத் தனத்தினால், வீண் பிடிவாதம் செய்யாதேயும்” என்றார். மாசிலாமணி, “சுவாமிகளே! நான் எவ்வளவு தூரம் சொன்னாலும், அது தங்களுக்கு நம்பிக்கைப்படமாட்டேன் என்கிறதே. இனி நான் உங்கள் மனம் திருப்தி அடையும்படி வேறு எந்த விதமாகச் சொல்லப் போகிறேன்? மறுபடியும் திருப்பித்திருப்பி, எனக்கு யாதொரு தகவலும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது என்பது என் மனசுக்குப் புலப்படவில்லை. முன்பு எனக்கு நேர்ந்த தண்டனையாவது, நான் நிஜமாகவே செய்த குற்றத்திற்காகக் கிடைத்தது. இப்போது கால வித்தியாசத்தால் மறுபடி எனக்கு ஏதாவது எதிர்பார்க்காத துன்பம் நேருமானால், அதையும் நான் கடவுளின் கருணை என்றே தான் மதிக்க வேண்டும். நான் சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்த பிறகு ஒவ்வொரு தினம் தங்களுடைய ஜெவான்கள் இங்கே வந்து என்னை ஆஜர் பார்த்து நான் ஒழுங்கான வழியில் நடப்பதாக எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்ற விஷயம் தங்களுக்குத் தெரியாததல்ல. அப்படி இருந்தும், தாங்களே என்மேல் சந்தேகம் கொள்வது தெய்வ சம்மதமாகுமா என்பதை எஜமான்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்” என்றான்.

இன்ஸ்பெக்டர், “அதுதான் சாமர்த்தியம். போலீசாருடைய கண்ணுக்கு எதிரிலேயே திருடுகிறவன்தான், உண்மையில் திருட்டு உத்தியோகத்துக்கு யோக்கியம் வாய்ந்தவன். மறைவில் திருடுகிறவன் எதற்கு உபயோகப்படுவான். அவனை சுத்தப்பேடி என்று தான் சொல்ல வேண்டும். போலிஸ் ஜெவான்கள் உம்மைப் பற்றி அப்படிப் புகழ்ச்சியாக ஒன்றும் எழுதிவிட வில்லையே. உம்முடைய நடத்தையைப் பற்றி அவர்கள் சந்தேகமாகத் தான் எழுதி இருக்கிறார்கள். நீர் இருப்பது ஏகாங்கி; ஏற்கனவேயே இருந்த மாளிகையே உமக்கு எதேஷ்டமானது. இதை நீர் மாற்றி உப்பரிகைகள் வைத்து வேறுவிதமாகப் புதுப்பித்து இவ்வளவு அவசரமாக வேலை செய்ததை எல்லாம் அவர்கள் உடனுக்குடன் எழுதி அனுப்பி இருப்பதன்றி, நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் பரம ரகசியமாகவும், சந்தேகாஸ்பதமாகவும் இருக்கின்றன என்றும், தாங்கள் ஒவ்வொரு நாளும் இங்கே வந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அவசியம் என்றும், தாங்கள் உம்மிடம் அந்தரங்க சிநேகிதர் போலவே நடித்து உம்மோடு சந்தோஷமாகவே இருந்து உம்முடைய ரகசியங்களைக் கிரகிப்பதாக அல்லவா ஜெவான்கள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதிக் கொண்டு வந்ததற்குத் தகுந்தபடி தானே இப்போதும் காரியமும் நடந்திருக்கிறது” என்றார்.

மாசிலாமணி, “ஒகோ! அப்படியா எழுதி இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட ஜெவான்கள் இருப்பதனால் தான் இந்தப் போலீஸ் இலாகாவைக் கண்டு ஜனங்கள் தாறுமாறாக தூஷிக்கிறார்கள். உண்மையாகவும் நாணயமாகவும் பாடுபடு, தங்களைப் போன்ற மேல் உத்தியோகஸ்தர்களுடைய பெயரும் அகாரணமாய் கெட்டுப் போகும்படி இவர்கள் செய்துவிடுகிறார்கள். இந்த ஜெவான்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் வந்து என்னோடு கூடவே நெடுநேரம் இருந்து, பலவகையில் தங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து கொண்டு, என்மேல் யாதொரு சந்தேகத்திற்கும் இடமில்லை என்று நேருக்குநேர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எனக்குத் தெரியாமல் எனக்கு விரோதமான சங்கதிகளை எழுதி இருப்பதாகத் தெரிகிறது. நான் என் வீட்டின் மேல் உப்பரிகைகள் வைத்துக் கட்டினால் அதில் என்ன சந்தேகம் இருக்கிறது? இப்படியானால் மனிதர் சாப்பிடுவது, துங்குவது, நடப்பது முதலிய சர்வ சாதாரணமான காரியங்களைப் பற்றியும் இவர்கள் சந்தேகங்கொள்வார்கள் போல் இருக்கிறதே! ஆம், அதிருக்கட்டும். நான் உப்பரிகை கட்டியதைப் பற்றி, என்ன விதமான சம்சயம் கொள்கிறார்களாம்? அதை எழுதி இருக்கிறார்களா? ஒருவேளை இப்படி இருக்கலாம். சந்தேகம் ஒன்றுமில்லை என்று எழுதினால், இவர்கள் இங்கே அடிக்கடி வர ஏதுவில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தினால் அப்படி எழுதி இருக்கலாம். இவர்களுக்கு வயிறு இருக்கிறதல்லவா. இவர்களும் பிழைக்க வேண்டாமா? சர்க்காரார் கொடுக்கும் சொற்ப சம்பளம் எந்த மூலைக்குக் காணப்போகிறது!” என்று நிதானமாகக் கூறினான்.

அதைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கோபம் கொண்டவராய், “ஓய் !மாசிலாமணிப் பிள்ளை! பார்த்திரா, நீர் மறுபடியும் உம்முடைய சிறுபிள்ளைத் தனத்தையே காட்டுகிறீரே.! ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தபிறகு ஏதோ புத்திசாலியாகிவிட்டேன் என்று கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னீரே! அதை மறுநிமிஷத்திலேயே பொய்யாக்கிவிட்டீரே! எனக் கெதிரிலேயே போலிஸ் இலாகா சிப்பந்திகளைப் பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்து விட்டீரே. லஞ்சம் கொடுப்பது என்றால், வாங்குகிறவர் பேரில் மாத்திரம்தான் குற்றம் என்று நினைத்துக் கொண்டீரா? வாங்குகிறவரைக் காட்டிலும் கொடுக்கிறவர் பேரில்தான் அதிக தவறு இருக்கிறது. போலீஸ் ஜெவான்கள் அற்ப சம்பளமுள்ள ஏழை மனிதர்கள். அவர்களுக்கு சர்க்காரில் கொடுக்கும் சம்பளம் அவர்களுடைய பெரிய குடும்பத்தை சவரகூரிக்கப் போதுகிறதில்லை. சம்பளம் குறைவாக இருக்கிறதே என்று அந்த உத்தியோகங்களுக்குப் போகாமல் இருந்துவிடலாம் என்றால், நம்முடைய நாட்டில் பிழைப்புக்கு மார்க்கம் அகப்படுவது அரிதாய் இருக்கிறது. எளியவர்களான அவர்கள் பணக் கொழுப்பெடுத்த உங்களைப் போன்றவர்களிடத்தில், தங்கள் உத்தியோக கடமையைச் செலுத்த வந்தால், நீங்கள் சுயநலங் கருதி, அவர்களுக்குப் பலவிதமான பொருட்களைக் கொடுத்து அவர்களுடைய மனசைக் கெடுத்து, அவர்கள் தங்களுடைய கடமைகளில் இருந்து வழுவும்படியான மார்க்கத்தைச் செய்கிறீர்கள். லட்சம், பத்து லட்சம் சொத்து வாய்ந்துள்ள நீங்கள் மேன் மேலும் பணத்தாசை பிடித்து, அதைக் கோடியாக்கப் பிரயத்தனப்படுகிறீர்களே. முழு வயிறும் நிறையும் படியான போஜனம் கூட அகப்படாமல் நடைப்பினங்களாய்த் திரியும் இந்த எளிய சிப்பந்திகள் பணத்தின் மேல் ஆசைப்பட்டு, நீங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வது ஓர் அரிய விஷயமா? நீரே சுதாவில் கொடுத்திரன்றி, இவர்கள் கேட்டு நீர் கொடுக்கவில்லையே. அப்படி இருக்க இவர்களை என்னிடம் காட்டிக் கொடுத்து இவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவது பெரிய மனுஷத்தனமாகுமா? ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், இவர்கள் பரம ஏழைகளாய் இருந்தாலும் உண்மையில் நாணயமுள்ள வர்கள் என்றே சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு தான் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலும் உம்முடைய தாக்ஷண்யத்துக்காக அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய நாணயத்துக்கு யாதொரு பழுதும் ஏற்படாமல், தங்கள் உத்தியோகக் கடமைகளையும் சரியாக நடத்தி இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட இவர்களுடைய நடத்தையை நீர் இப்போது இழிவுபடுத்திப் பேசுவது சிறுபிள்ளைத்தனமே அன்றி வேறல்ல. அப்படிச் சொல்வதனால் நீர் தப்பித்துக் கொண்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டீரா? அது ஒருநாளும் பலியாது. நான் உம்மோடு அதிகமாகப் பேசி வீண் பொழுது போக்கிக் கொண்டிருக்க, எனக்கு நேரமில்லை. நீர் சிநேக பாவத்தில் வழிக்கு வருகிறீரா, அல்லது, நாங்கள் எங்கள் உத்தியோக தோரணைப்படி நடத்திக் கொள்ளலாமா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லும், இன்று காலை சுமார் 9½ மணிக்கு உம்முடைய தமையனார் வார்டர்களோடு எண்ணெய் விற்க, ஊருக்குள் போனவரை, யாரோ ஒரு பெண் பிள்ளையும் சில ஆட்களும் சேர்ந்து பலவந்தமாக விடுவித்துக் கொண்டு போய்விட்டார்களாம். அதைப்பற்றி எனக்கு இப்போது தான் தந்தி வந்தது. உடனே புறப்பட்டு வந்தேன். உம்முடைய தமையனார் இருக்கும் இடத்தை நீரே சொல்லுகிறீரா? அல்லது, நாங்களே தேடிப் பார்க்கலாமா? என்ன சொல்லுகிறீர்?” என்றார்.

அதைக் கேட்ட மாசிலாமணி முற்றிலும் பிரமிப்படைந்தவன் போலக் காணப்பட்டு நடுநடுங்கி, “எஜமானே! பிரமாணமாகச் சொல்லுகிறேன். என் தமையனார் இப்படிச் செய்தார் என்பது எனக்கு இப்போது நீங்கள் சொல்லத்தான் தெரிந்தது. நான் சொல்வதைத் தாங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தச் சதி ஆலோசனையில் நான் ஒரு அனுப்பிரமாணமும் சம்பந்தப்படவே இல்லை. என் தமையனார் இப்படி நடந்து கொள்ளுவார் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. நான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏதாவது அற்ப ருஜூவிருந்தாலும், நான் என் ஆயிசு காலம் முடிய சிறைச்சாலையில் இருக்கச் சம்மதிப்பதாக இப்போதே தங்களுக்கு எழுத்து மூலமான உறுதி வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்கிறேன். அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. தங்களுக்குப் பிரியமானால், தாங்கள் இந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் காலை 9½ மணிக்கு விடுவிக்கப்பட்டதாகச் சொல்லுகிறீர்கள் இப்போது மணி ஒன்றாகிறது. இதற்குள் ரயில் வருவதற்குக் கூட அவகாசம் இல்லையே. ஆகையால், அவர் ஒருவேளை தஞ்சாவூரிலேயே எங்கேயாவது இருப்பார், அல்லது, அதற்கும் இதற்கும் நடுவில் உள்ள ஏதாவது ஓர் ஊரில் இருப்பார்; இந்த ஊருக்கு வந்தே இருக்கமாட்டார். தேவையானால், தாங்கள் வீடு முழுவதையும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இதோ இருக்கிறது கொத்துச் சாவி. சில அறைகள் பூட்டப் பட்டிருக்கும். அவைகளை எல்லாம் திறந்து ஓரிடம் விடாமல் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி, பக்கத்தில் இருந்த மேஜையின் மீது கிடந்த கொத்துச் சாவியை எடுத்து நீட்டினான். இன்ஸ்பெக்டர்”சரி, நீர் உமக்கு ஒன்றும் தெரியாதென்றே கடைசி வரையில் சொல்லிக்கொண்டிரு. நான், இது உம்மால்தான் ஆயிருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தஞ்சாவூரில் இருந்து ரயில் இந்த ஊருக்கு இந்நேரம் வர முடியாதென்பது நிஜந்தான். ஆனால், இவ்விடத்தில் இருந்து அந்த ஊர் சுமார் முப்பது மைல் தூரம் இருக்கலாம். மோட்டார் வண்டி சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் இங்கே வந்து சேர்ந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா? ஆகையால், அவர் இங்கே வந்திருக்கமாட்டார் என்றே நாம் எப்படி எண்ணிக் கொள்ளுகிறது. சரி வாரும். வீடு முழுவதும் பார்த்துவிடுவோம். நீரே முன்னால் போய் ஒவ்வோரிடமாகக் காட்டும். நாங்கள் பின்னால் வருகிறோம்” என்றார்.

மாசிலாமணி நிரம்பவும் துடியாக நடந்தவனாய், “வாருங்கள் காட்டுகிறேன். மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம். இந்த வீட்டையும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் எங்களுக்குள் இருக்கும் மற்ற வீடுகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் போலீசார் மூவரையும் அழைத்துக் கொண்டு போய் முதற்கட்டில் இருந்த சகலமான அறைகளையும் மறைவான இடங்களையும் காட்டிய பிறகு அது போலவே இரண்டாவது மூன்றாவது கட்டுகளுக்குள்ளும் நுழைந்து ஓரிடம்விடாமல் அவர்களுக்குக் காட்டினான். அதன் பிறகு எல்லோரும் மேன் மாடத்தில் ஏறி இரண்டு உப்பரிகைகளுக்குள்ளும் நுழைந்து நன்றாக ஆராய்ச்சி செய்தனர். சட்டைநாத பிள்ளையும் எவ்விடத்திலும் காணப்படவில்லை. அதுவுமன்றி மாசிலாமணி அந்தச் சதி ஆலோசனையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைக் காட்டக் கூடிய தஸ்தாவேஜியாவது, வேறு எவ்வித அறிகுறியாவது காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கூர்மையான பகுத்தறிவும் யூகமும் வாய்ந்தவர் ஆதலால், புதிதாகக் கட்டப்பட்ட உப்பரிகைகளில் ஏதாவது மறைவான இடம், சூட்சுமமான வழிகள் முதலியவை எங்காகிலும் இருக்கின்றனவோ என்று நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே போனார். வீட்டின் உச்சியில் மொட்டைமெத்தை தான் இருந்தது. அதற்குப் போக வழி வைக்கப்படாமல் இருந்தமையால், கீழே வீதியிலிருந்து பார்த்தாலே, உச்சியில் ஒன்றுமில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. ஆகையால், போலீசார் மேலே ஏறி உச்சியில் போய்ப் பார்ப்பது அநாவசியம் என்று தீர்மானித்துக் கொண்டு மாசிலாமணியோடு கீழே இறங்கினார்கள்.

கீழே வந்த உடனே இன்ஸ்பெக்டர் மாசிலாமணியை நோக்கி, “என்ன ஐயா இது மாயமாக இருக்கிறதே! ஆசாமி எங்கேயும் காணப்படவில்லையே! எங்கேயோ தந்திரமாக ஒளிந்து கொண்டு இருக்கிறாரே! எங்கேயாவது சுவருக்குள் சந்துவைத்துக் கட்டி மறைத்திருக்கிறீரா?” என்று புன்னகையோடு கேட்க, மாசிலாமணி ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, “என்ன, எஜமானே! நான் வயிற்றைக் கிழித்துக் காட்டினால் கூட, அதைக் கண்கட்டு வித்தை என்றால், பிறகு நான் எப்படித்தான் தங்களைத் திருப்தி செய்கிறது? சுவருக்குள் இடைவெளி விட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகித்தால், அதையும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சுவரின் கனத்தையும் அளந்து பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு கனம் இருக்க வேண்டுமோ அதற்கு மேல் அதிகமாக எவ்விடத்திலாவது இருக்கிறதா என்று பாருங்கள். சுவர்களில் இருந்த அலமாரிகளை எல்லாம் கூடத் திறந்து காட்டிவிட்டேன். இன்னம் தங்களுக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் தாங்கள் உத்தரவு கொடுங்கள். உடனே ஆயிரம் ஆட்களை விட்டு, இரண்டு உப்பரிகையுள்ள இந்த மாளிகையின் மூன்று கட்டுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடச் செய்கிறேன். இதை மறுபடிகட்ட சுமார் 50-ஆயிரம் ரூபாய் பிடிக்கும் தங்களுடைய சந்தேகம் நிவர்த்தியாவதே எனக்குப் பெரிய காரியமன்றி, இந்த 50-ஆயிரம் ரூபாய் ஒரு பொருட்டல்ல. என்ன சொல்லுகிறீர்கள்? அப்படியே செய்யட்டுமா?” என்று நிரம்பவும் துடியாகப் பேசினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மகிழ்ச்சியாகவும் அவநம்பிக்கை யோடும் நகைத்து, “பேஷ்! நல்ல யோசனை சொல்லுகிறீர்! இப்படி எல்லாம் சொன்னால், நீர் குற்றமற்றவர் என்று நான் எண்ணிக் கொள்வேன் என்று தடயுடலாகப் பேசுகிறீரா? அந்த மாதிரியே வீட்டை இடித்துவிட்டுப் பார்க்க வேண்டும் என்று துரைத்தனத்தார் உத்தரவிட்டால், அதை யார் தடுக்க முடியும்? ஒருவராலும் முடியாது. அது இருக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்வோம்; நாம் இன்னும் பின்புறத் தோட்டத்தைப் பார்க்கவில்லை அல்லவா, அங்கே போய்ப் பார்ப்போம் வாரும்” என்றார்.

உடனே மாசிலாமணி, “ஆகா! அதையும் பாருங்கள். இதோ காட்டுகிறேன். வாருங்கள்” என்று கூறிய வண்ணம், அவர்களை நடத்தி அழைத்துக்கொண்டு பின்புறத்தில் இருந்த விசாலமான தோட்டத்தை அடைந்து, அங்கே இருந்த இரண்டு இடுக்குகள் மறைவிடங்கள் முதலிய சகலமான பாகங்களையும் காட்டினான். தோட்டத்தின் முடிவில் பெருத்த மதில் குறுக்கில் எழுப்பப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “ஏன் ஐயா! இந்த மதில் இப்போது தான் புதிதாகக் கட்டப்பட்டது போல் இருக்கிறதே! உம்முடைய கலியாணத்தின் போது இந்த இடத்தில் வழி இருந்ததே. அதன் வழியாகத்தானே நீங்கள் வடிவாம்பாள் என்ற பெண்ணைப் பக்கத்துத் தெருவில் உள்ள உங்களுடைய இன்னொரு விட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருந்தீர்கள். இந்த வழியை ஏன் அடைத்துவிட்டீர்?” என்றார்.

மாசிலாமணி, “ஆம். எஜமானே! இங்கே இருந்த வழியை நான் இப்போது தான் அடைந்தேன். இந்த மதில் சமீப காலத்தில் கட்டப்பட்ட புதிய மதில்தான்” என்றான்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த மதிலுக்கு அப்பால் ஏதாவது அறை முதலிய மறைவான இடம் இருக்குமோ என்றும், அதற்குள் சட்டைநாத பிள்ளை ஒளிந்து கொண்டிருப்பாரோ என்றும் சந்தேகித்தவராய், அந்த மதிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கொய்யா மரத்தின் மேல் ஏறி மதிலின் உச்சியை அடைந்து அப்புறத்தில் பார்த்தார். அவ்விடத்தில் இன்னொரு தோட்டம் காணப்பட்டது. அது பக்கத்துத் தெருவில் இருந்ததும், வடிவம் பாள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததுமான சட்டைநாத பிள்ளையின் இன்னொரு வீட்டின் பின்புறத் தோட்டம் என்ற அடையாளம் நன்றாகத் தெரிந்தது. அந்தத் தோட்டத்தில் எவ்வித மான புதிய கட்டிடமும் காணப்படவில்லை. அவர் ஏறி நின்ற மதில் சுவரின் ஓரமாக அப்புறத்தில் சந்தேகாஸ்பதமான எவ்வித கட்டிடமும் காணப்படவில்லை. மதிலின் அகலமும் சுமார் ஒன்றரை அடிதான் இருந்தது. அதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அவ்விடத்தில் சம்சயப்படக்கூடிய குறிப்பு எதுவும் இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு கொய்யாமரத்தின் வழியாகக் கீழே இறங்கினார். உடனே மாசிலாமணி, “இந்த மதிலை நான் கட்டியிருப்பதைக் கண்டு எஜமான் ஏதோ சந்தேகங் கொள்ளுகிற மாதிரி இருக்கிறது. இன்ன காரணத்தினால் இந்த மதில் கட்டப்பட்டதென்பதை நான் சொன்னால், உங்கள் சந்தேகம் உடனே விலகிப் போகும்,” என்றான். இன்ஸ்பெக்டர், “ஏன் எதற்காக இந்த மதில் போட்டீர்? பின்பக்கத்துத் தெருவில் இருந்த வீடு இப்போதும் உங்களுக்குத் தானே சொந்தம்? அல்லது, அதை வேறே யாருக்காவது விற்றுவிட்டீரா?” என்றார்.

மாசிலாமணி, “எங்களுக்கு வேண்டும் என்று வாங்கின வீட்டை நான் ஏன் விற்கிறேன்! அதுவுமன்றி என் தமையனார் பேரில் இருக்கும் வீடு நிலம் முதலிய ஸ்தாவர சொத்துக்களை நான் விற்க எனக்கு அதிகாரம் ஏது? நான் விற்றால்கூட, ஒருவரும் வாங்க மாட்டார்களே! இந்தச் சொத்துக்களை எல்லாம் அவர் வருகிறவரையில் நிர்வாகித்து இவைகளில் இருந்து வரும் வருமானத்தை என்னுடைய இச்சைப்படி செலவு செய்து கொள்ளலாம் என்று மட்டும் என் தமையனார் எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அப்படியானால், இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருந்த வழியை ஏன் அடைத்தீர்?” என்றார்.

மாசிலாமணி, “பின்பக்கத் தெருவில் உள்ள எங்களுடைய வீட்டை இதுவரையில் காலியாகவே வைத்திருந்தோம். நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகு அதை வாடகைக்கு விட ஏற்பாடு செய்தேன். அதை நான் ஐம்பது ரூபாய் வாடகைக்கு விடத் தீர்மானித்தேன். எத்தனையோ பேர் வீட்டைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்களுடைய மதிப்பெல்லாம் முப்பது ரூபாய்க்கு மேல் போகவில்லை. கடைசியில் ஒரு சாயப்பு வந்து அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டார். அவர் ஹைதராபாத் நவாப்பின் அரண்மனையின் ஏதோ தக்க உத்தியோகத்தில் இருந்தவராம். இந்த ஊருக்குப் பக்கத்தில் உள்ள ராஜகிரியிலோ, அல்லது, பண்டார வாடையிலோ, அவருக்குத் தெரிந்த சாயப்பு யாரோ ஒருவர் இருக்கிறாராம். அவர் அந்த ஊரில் நிலம் வாங்கிக் கொண்டு இந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். இந்த வீடு அவருக்குத் திருப்திகரமாக இருக்கிறதென்று 50-ரூபாய் வாடகை கொடுத்து எடுத்துக் கொண்டு, இதில் குடி இருந்து வருகிறார். அவரோடு அவருடைய கோஷா மனைவியும் இருக்கிறாள். அவள் தோட்டப் பக்கத்துக்கு வந்தால் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருப்போர் அந்த அம்மாளைப் பார்க்க நேரும் என்ற நினைவினால், அவர் தாம் இருக்கும் வரையில் இவ்விடத்தில் குறுக்குச்சுவர் ஒன்று போட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்தச் சுவர் போட செலவு ஒன்றும் பிரமாதமாகப் பிடித்துவிடவில்லை. அவர் கொடுத்த ஒருமாத வாடகைப் பணத்தைப் போட்டு இதை எழுப்பிக் கொடுத்தேன். அவ்வளவு தான் விவரம். இதில் தாங்கள் சந்தேகப் படும்படியான விஷயம் ஒன்றுமில்லை” என்றான்.

அந்த வரலாற்றைக் கேட்டவுடனே இன்ஸ்பெக்டரது மனதில் ஒரு விதமான சந்தேகம் தோன்றியது. மாசிலாமணி சட்டைநாத பிள்ளையைக் கொணர்ந்து அந்த வீட்டில் ஒளித்து வைத்திருப்பான் என்றும், அதற்குள் கோஷாஸ்திரீ இருக்கிறாள் என்றால் எவரும் உள்ளே போகமுடியாது என்று நினைத்து அப்படிப்பட்ட கட்டுக்கதையை உற்பத்தி செய்திருப்பான் என்றும் அவர் சந்தேகித்து, தாம் உடனே அந்த வீட்டிற்குப் போய், உள்பக்கம் முழுதும் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவராய், “மாசிலாமணிப் பிள்ளை! நான் ஏதோ உம்மீது ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகப்படுகிறேன் என்று நீர் என்னைப்பற்றி நிஷ்டுரமாகப் பேசுகிறீர். எனக்கு உம்மீதாவது, இந்த உலகத்தில் வேறே எந்த மனிதர் மீதாவது பகைமையே கிடையாது. வேண்டும் என்று மனிதருக்குக் கெடுதல் உண்டாக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்தல்ல. எங்களுடைய உத்தியோக லட்சணம் இப்படிப்பட்டது. யாராவது ஏதாகிலும் குற்றம் செய்துவிட்டால், அவர்கள் எங்க்ளுடைய சொந்தத் தகப்பனாராய் இருந்தால்கூட, நாங்கள் தாட்சணியம் பார்க்க முடியாது. தாட்சணியம் பார்த்தால், நாங்கள் இதே வேலையில் நீடித்து இருக்க முடியாது. ஆகையால் யாராய் இருந்தாலும் நாங்கள் செய்ய வேண்டிய சாங்கியங்களைச் செய்துதான் தீர வேண்டும். உம்முடைய விஷயத்தில் மாத்திரம் நாங்கள் இப்படிச் செய்கிறோம் என்று நினைக்காதேயும். இப்போது இந்த ஊர் மாஜிஸ்டிரேட் இருக்கிறாரே, அவர் மற்ற எல்லோரையும் தண்டிக்கிறார், நாங்கள் எல்லோரும் அவரிடம் போய்க் கைகட்டிக் கொண்டு பணிவாக நிற்கிறோமே. அவரே கச்சேரியில் உள்ள சர்க்கார் பொருளை சொந்த உபயோகப்படுத்திக் கொள்ளுவதாக வைத்துக் கொள்ளும். நாங்கள் தாட்சணியம் பாராமல் அவருடைய வீட்டைச் சோதனை போடுவோம். அவரைப்பிடித்து விலங்கிட்டு எங்களுடைய சிறைச்சாலையில் அடைத்து விடுவோம். அவரேன்? என்னையே எடுத்துக் கொள்ளும். நானே ஒரு கைதியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவனை விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம், இப்போது என் சொல்படி நாய் போலப் படிந்து நடக்கும் இதே ஜெவான்கள் எனக்கு விலங்கிட்டு நிர்த்தாட்சண்யமாக என்னைக் கொண்டு போய் அடைத்து விடுவார்கள். ஆகையால், எங்களுடைய உத்தியோகக் கடமையில் மனிதருடைய முக தாட்சணியத்தைப் பார்க்கவே முடியாது. ஆகையால், நீர் அநாவசியமாக என்மேல் நிஷ்டுரப்படுவதில் என்ன பிரயோசனம்? நீர் இப்போது ஒருவனுடைய பொருளை அபகரித்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். உம்மிடம் நான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உம்மைத் தப்பவைத்து விடுகிறேன். அப்போது உமக்கு சந்தோஷமாக இருப்பது நிச்சயம். உம்முடைய பொருளை இன்னொருவன் திருடிவிடுகிறான். அவனிடம் நான் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவனை விட்டுவிட்டால், அப்போது உம்முடைய மனம் எவ்வளவு தூரம் பதறும். பணத்தைப் பறி கொடுத்த உம்முடைய வயிறு எப்படி எரியும்! ஆகையால், நீங்கள் உங்களுடைய சுயநலத்தை மாத்திரம் கருதக்கூடாது. பொது ஜன நன்மையையும் கருதவேண்டும். நாங்கள் எல்லா ஜனங்களுடைய உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்கப் பாடுபடுகிறவர்கள். ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்கிறவரைத் தண்டனைக்குக் கொண்டு வரும் ஜனோபகாரமான காரியத்திற்கு உதவியாய் இருந்து நீதி வழுவாமல் பரிபாலனம் செய்யப் பயன்படுகிறவர்கள். உங்களுடைய தமையனார் ஜெயிலில் இருந்தால், எங்களுக்கென்ன? வெளியில் இருந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் ஏதாவது அவருக்குச் சாப்பாடு போடுகிறோமா? ஒன்றுமில்லை. இந்த விஷயமெல்லாம் உமக்குத் தெரியாததல்ல. ஆகையால் இந்த விஷயத்தில் எங்களுக்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும். நீரும் அப்படியே செய்ய வேண்டும் என்று தான் நான் வந்தது முதல் உமக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்தால் அதில் உமக்கு அனுகூலமும் இருக்கிறது. எப்படி என்றால் நீர் இதில் சம்பந்தப்படவில்லை என்று உம்மை நான் தப்ப வைத்துவிடலாம். நீர் கடைசி வரையில் ஒரே பிடிவாதமாகப் பேசிக்கொண்டே போனால், இதற்காக நான் இப்போது உமக்கு எதுவும் செய்யாவிட்டாலும் இன்னம் இரண்டொரு தினத்தில், எப்படியும் எங்களுக்குத் தேவையான புலமும் சாட்சியமும் கிடைத்துவிடும். அதன் பிறகு உமக்குக் கெடுதல் நேரும். தஞ்சை ஜில்லா சூபரின்டென்டெண்டு உடனே ஒரு விளம்பரம் தயாரித்து, உம்முடைய தமையனார் இருக்கும் இடத்தைத் தெரிவிப்பவருக்கு ஐயாயிரம் ரூபாய் சன்மானம் கொடுப்பதாக வெளியிட்டிருக்கிறார். அந்தத் தொகையும் உமக்குக் கிடைக்கும்படி நான் செய்கிறேன். ஆனால் நீர் பணக்காரர்; அந்தத் தொகை உமக்கு ஓர் லட்சியமல்ல. ஆனால், மற்றவருக்கு அது போவதைவிட, உமக்குத்தான் வரட்டுமே. நீர் அதை வாங்கி, பரதேசிகளுக்குச் சாப்பாடு போடலாம் அல்லவா” என்றார்.

அதைக் கேட்ட மாசிலாமணி, “எஜமானே! தாங்கள் சொல்வதெல்லாம் நியாயமான விஷயங்கள் என்பதற்குத் தடையில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் மாத்திரம் தாங்கள் ஒரே பிடிவாதமாக ஓர் அபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவருடைய தம்பி ஆகையால், நான் தான் கட்டாயமாக அவரை விடுவித்திருக்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். அதுவுமன்றி, என்னைத் தவிர, இவ்வளவு அக்கறையாக அவரை விடுவிக்கக்கூடிய பந்துவாவது, சிநேகிதராவது அவருக்கு யாருமில்லை என்று நீங்கள் ஒருவேளை எண்ணிக்கொண்டும் இருக்கலாம். அதுதான் தவறு. எனக்கும் என் அண்ணனுக்கும் எப்போதும் ஜென்மப் பகை. அவருக்கு அநேக வருஷங்களாக சம்சாரம் இல்லை. ஆகையால், அவர் எப்போதும் ஏராளமான பொருளைச் செலவு செய்து அநேகம் தாசிகளைப் போஷித்து வந்தவர். ஒவ்வொருத்தியும் அவரிடத்தில் மாசத்தில் ஆயிரம் இரண்டாயிரம் பற்றுகிறவர்கள். அவருக்குத் தஞ்சாவூர் கீழ வீதியில் சாரதா என்ற ஒரு தாசி நிரம்பவும் அன்னி யோன்னியமான பழக்கம் உடையவள். அவர் சதாகாலமும் அவள் வீடே கதியாக இருந்து, லட்சக் கணக்கில் பொருளை அழித்திருக்கிறார். அவர் ஜெயிலுக்குப் போனதில் அவளுக்குத் தான் பெருத்த நஷ்டம். அவளைப் போன்றவர்கள் ஏதாவது தந்திரம் செய்து அவரை விடுவித்திருக்கலாம். அவர் இங்கே இருந்த வரையில், நான் ஒரு காசுகூடச் செலவு செய்ய, அவர் பார்த்துச் சகிக்கமாட்டார். என் விஷயத்தில் மாத்திரம் அவர் பரமலோபி. நான் அவரிடம் வெளிக்கு மாத்திரம், மகா பணிவாகவும் பயபக்தி விசுவாசத்தோடும் நடந்து வந்தேனே அன்றி, என் மனசுக்குள் அவர் எப்போது தொலைவார் என்ற எண்ணமே இருந்து வந்தது. இப்போது நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகுதான் நான் என் சுயேச்சையாகப் பணத்தைச் செலவு செய்கிறேன், இன்னும் எட்டு வருஷத்திற்கு நான் வைத்தது சட்டமாக இருந்து ஏராளமான பொருளைச் செலவு செய்து, என் இஷ்டம் போல இருக்கலாம் என்பதே என்னுடைய பிரியம். அப்படியன்றி, அவரை நான் விடுவித்தால், மறுபடியும் அவர் எல்லாப் பொருள்களுக்கும் எஜமானராகி விடுவார். பிறகு என் பாடு திண்டாட்டமே. இதை எல்லாம் தாங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் சிறைச்சாலையிலேயே இன்னம் 8 வருஷம் இருப்பது எனக்கு அநுகூலமா, அல்லது, அவர் இங்கே வருவது அநுகூலமா என்பதை யோசித்துப் பாருங்கள். அவரை விடுவிப்பதில் நான் எள் அளவும் சம்பந்தப்படவில்லை என்பது இப்போதாவது தங்கள் மனசில் படும் என்று நினைக்கிறேன். நான் இப்போது இன்னொரு காரியம் செய்ய உத்தேசித்திருக்கிறேன். என் அண்ணனைப் பிடித்துத் தருபவருக்கு சர்க்காரில் 5000 ரூபாய் கொடுக்கிறதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள் அல்லவா. அப்படிப் பட்டவருக்கு நானும் ஒரு பதினாயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கிறேன். எப்படி யாவது ஜனங்கள் முயற்சி செய்து அவரைப் பிடித்து மறுபடி சிறைச்சாலையில் அடைத்து விடட்டும். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஆனால், என் அந்தரங்க எண்ணத்தை எஜமானரிடம் மாத்திரம் வெளியிட்டுவிட்டேன். இதைத் தாங்கள் வெளியிடக் கூடாது. சன்மான விஷயத்தை மாத்திரம் நானே பத்திரிகையில் வெளியிட்டுவிடுகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஒருவித வியப்படைந்து, அவன் கூறியது உண்மையாக இருக்குமோ அல்லது கபடமான வார்த்தையோ என்று சிறிதளவு சந்தேகித்து, “ஓகோ! அப்படியா! நீர் சொல்வது உண்மைதானா? உம்முடைய தமையனார் சிறைச் சாலையிலேயே இருக்கவேண்டும் என்று நீர் மனப்பூர்வமாகவே ஆசைப்படுகிறீரா? என்றார்.

மாசிலாமணி, “அதில்கூட சந்தேகமா? அதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொண்டாலே தெரியுமே; எவனாவது ஓர் அபார சம்பத்துக்குத் தானே சுயேச்சாதிபதியாக இருக்கப் பிரியப்படுவானா, அல்லது, வேறொருவருக்கு அடிமை போல இருந்து தனக்கு நேரும் ஒவ்வொரு செலவுக்கும் அவரிடம் பணம் கேட்டுக் கொண்டிருப்பதை நாடுவானா?” என்றான்.

போலிஸ் இன்ஸ்பெக்டர், “சரி நீர் இவ்வளவு தூரம் உண்மையைச் சொன்னபிறகு, இன்னமும், நாம் உம்மைப்பற்றி சந்தேகமான எண்ணங்கொள்வது ஒழுங்கல்ல. உம்முடைய தமயனார் வெளியில் வருவதைவிட சிறைச்சாலையில் இருப்பதே உமக்கு அனுகூலமாக இருக்கும் என்று நீர் சொல்வது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளக்கூடிய சங்கதியாக இருந்தாலும், அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவர் சிறைச் சாலையில் இருந்து இப்போது திருட்டுத் தனமாக வந்திருக்கிறார். ஆதலால், அவர் இனி ஆயிசுகாலம் வரையில் பிறருக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு உம்முடைய தயவு அவருக்கு அவசியம் தேவை. உம்முடைய பண உதவி இல்லாமல், அவர் எங்கே இருக்க முடியும்? சாரதா என்னும் தாசி அவரை விடுவித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் அவளுக்கு இனி உம்முடைய உதவி இல்லாமல் பணம் கொடுக்க முடியாது. அவர் பணம் கொடுக்காவிட்டால், தாசி அவரை இலட்சியம் செய்யமாட்டாள்; சேர்ந்தாற் போல, ஒரு மாசத்திற்குக் கூட வைத்து சவரகூடினை செய்யமாட்டாள். பிறருடைய தயவினால், மறைந்திருக்க வேண்டிய நிலைமையில் உள்ள சட்டைநாத பிள்ளை இங்கே வந்திருந்தால் கூட, அவர் எந்த அதிகாரத்தையும் வகிக்க முடியாது. உங்களுடைய நிலம் முதலிய சொத்துக்களின் நிர்வாகத்தையும் அவர் நேரில் வகிக்க முடியவே முடியாது. ஆகையால், அவர் உம்மிடத்தில் முன்பு நடந்து கொண்ட மாதிரி லோபித்தனமாகவாவது, அதிகார தோரணையாக வாவது நடந்து கொள்ள முடியாது. அவர் இன்னம் 8 வருஷ காலம் சிறைச்சாலையில் இருந்து வந்தால், அதன் பிறகு அவர் பகிரங்கமாக எல்லா நிர்வாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது அவர் திருட்டுத்தனமாக வந்துவிட்டார் ஆகையால், அவர் இனி தம்முடைய ஆயிசுகாலம் முடிய ஒளிந்திருந்து உம்முடைய தயவினாலேயே ஜீவிக்க வேண்டியவராகிவிட்டார். ஆகையால் 8 வருஷங் கழிந்த பின், உம்முடைய அதிகாரம் போய்விடும் என்ற கவலைகூட இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆகவே, அவர் சிறைச்சாலையில் இருப்பதை விட, வெளியில் வந்ததே, ஒருவிதத்தில் அனுகூலமானது என்பது தெரிகிறதல்லவா. இருந்தாலும், பரவாயில்லை. நான் உம்மை இதற்கு மேல் அதிகமாக இப்போது வற்புறுத்த விரும்பவில்லை. உடனே நான் தஞ்சைப் போலீசாருக்கு ஒரு தந்தியனுப்பி சாரதா என்ற தாசியைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கிறேன். அதுவுமன்றி, உமக்கு இந்த ஊரில் இன்னம் எத்தனை வீடுகள் இருக்கின்றனவோ, அவைகளை எல்லாம், நான் கிரமப்படி சோதனை போட்டுப் பார்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், பிற்பாடு, அதைப்பற்றி ஏதாவது கேள்வி பிறக்கும். ஆகையால் உம்முடைய வீட்டு விலாசங்களைக் கொடும். இதோ இருக்கும் வீட்டில்தான் யாரோ சாயப்பு இருக்கிறார். அந்த வீட்டை நான் இப்போதே சோதனை போட்டுப் பார்த்துவிடுகிறேன். பிறகு மற்றவைகளுக்குப் போகிறேன்” என்றார்.

உடனே மாசிலாமணி, தங்களுக்குச் சொந்தமான மற்ற இரண்டு வீடுகளின் விலாசத்தையும் சொல்ல, இன்ஸ்பெக்டர் தமது கை நோட்டுப் புஸ்தகத்தில் குறித்துக் கொண்டபின் தம்மோடு வந்திருந்த இரண்டு ஜெவான்களை நோக்கி, “அடேய், நீங்கள் இரண்டு பேரும் இந்த மதிலடியிலேயே நின்று கொண்டிருங்கள். நான் மற்ற ஜெவான்களை அழைத்துக் கொண்டு உடனே போய், சாயப்பு இருக்கும் இந்த வீட்டைச் சோதனை போட்டுப் பார்க்கிறேன். நாங்கள் இங்கே இருந்து, அங்கே போய்ச் சோதனை போடுவதற்குள், சட்டைநாத பிள்ளை அந்த வீட்டிற்குள் இருந்து ஒருவேளை இந்த வீட்டிற்குள் வந்தாலும் வந்திருக்கலாம் என்ற சந்தேகம், நம்முடைய மனசிலேயே பின்னால் உதித்து வதைக்கும். அதற்கு இடங்கொடுக்காமல், செய்வதைத் திருந்தச் செய்துவிடுவோம்” என்று கூறிவிட்டு மாசிலாமணியின் முகத்தை உற்று நோக்கினார். சாயப்பு இருக்கும் வீட்டை தாம் சோதனை போடப் போவதாகச் சொல்வதைக் கேட்டு, அவன் ஒருவேளை அஞ்சிக் கலங்குகிறானோ என்பதைக் கவனித்தார். அவனது முகம் நிச்சலனமாகவும், எந்தக் குறிப்பையும் தோற்றுவியாமலும் இருந்தது. இன்ஸ்பெக்டர் அதற்கு மேல் மாசிலாமணியோடு யாதொரு வார்த்தையும் பேசாமல் ஜெவான்களை மதிலண்டை நிறுத்திவிட்டு மாசிலாமணியை அழைத்துக் கொண்டு, வந்த வழியாகவே திரும்பி அவனது மாளிகைக்குள் போய், அவ்விடத்தில் முன்பக்கத்திலும், பின் பக்கத்திலும் நிற்க வைக்கப் பட்டிருந்த நான்கு ஜெவான்களையும் அழைத்துக் கொண்டு, வெளியில் நின்ற மோட்டார் வண்டியில் ஏறி உடனே பின்பக்கத் தெருவை நோக்கி விரைவாகச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு ஒரு நாழிகை அவகாசம் கழிந்தது. தனது மாளிகையில் இருந்த மாசிலாமணி மறுபடியும் பின்புறத் தோட்டத்தை அடைந்து, மதில் பக்கம் நோக்கினான். அவ்விடத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஜெவான்கள் இருவரும் காணப்படவில்லை. அது அவனது மனதில் ஒருவித ஆச்சரியத்தை விளைவித்தது. ஆனால் அவன் அடுத்த கூடினத்தில் தனக்குள் ஒருவித சமாதானம் செய்து கொண்டான். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிலுக்கு அப்பால் இருந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ஜெவான்களை மதிலின் வழியாக அப்புறத்திற்கு அழைத்துக் கொண்டு போயிருக்கலாம் என்ற எண்ணம் அவனது மனதில் உதித்தது. அவன் உடனே தோட்டத்திற்குள் போய் மதிலண்டை நெருங்கி, அவ்விடத்திலிருந்த கொய்யாமரத்தின் மேலேறி அப்பால் நோக்கினான். அப்புறத்தில் மனிதர் எவரும் காணப்படவில்லை. உடனே மாசிலாமணி அவ்விடத்தை விட்டுத் தனது மாளிகையை அடைந்து முன்வாசல் பின்வாசல் ஆகிய இரண்டின் கதவுகளையும் மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு முதல் கட்டில் இருந்தபடி, மேன்மாடத்தில் ஏறி அதன் கூடத்தில் ஊஞ்சற் பலகை போல, சங்கிலிகளால் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு சப்பிர மஞ்சத்தில் உட்கார்ந்து அதன்மேல் தலையணைகளில் உல்லாசமாகச் சாய்ந்து கொண்டு, சிறிது தூரத்திற்கப்பால் இருந்த உத்திரத்திற்கும் சங்கிலிக்குமாய்ப் பிணைக்கப்பட்டிருந்த ஒரு மணிக்கயிற்றின் நுனியை அவிழ்த்துக் கையில் பிடித்து இழுக்கத் தொடங்கினான். உடனே அந்தத் தொட்டில் மஞ்சம், மனிதர் நின்று ஆட்டிவிடுவது போல அங்கும் இங்கும் போய்வந்து, ஊஞ்சல் போல ஆடத் தொடங்கியது. அவ்வாறு அவன் ஆனந்தமாகச் சாய்ந்து ஆடிக்கொண்டு சந்தோஷமாக இருக்க, மஞ்சத்தின் சங்கிலிகள் மேலே இருந்த நாகபாசங்களில் உராய்வதால் ஏற்பட்ட ஓசை கீச்சு மூச்சென்று பலமாக உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவ்வாறு கால் நாழிகை காலம் கழிந்திருக்கலாம். பக்கத்தில் இருந்த சுவரில் ஓர் ஆள் உயரத்திற்கு மேல், வெளிச்சத்திற்காக மூன்றடி சதுரத்தில் விடப்பட்டிருந்த திறப்பை மறைத்துக் கொண்டிருந்த பச்சைக் கண்ணாடிக் கதவு திறந்து கொண்டது. அடுத்த நிமிஷத்தில் ஒரு மனிதன் அந்தத் திறப்பின் வழியாகத் தனது சரீரத்தை உள்ளே நுழைத்துப் பின்புறமாகத் திரும்பி உள்பக்கத்தில் பொத்தென்று குதித்து எழுந்து நின்றான். திறப்பின் கண்ணாடிக் கதவு தானாகவே மூடிக்கொண்டது. அவ்வாறு தோன்றிய மனிதன் மாசிலாமணி உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்த மஞ்சத்தருகில் சுவரோரமாகப் போடப்பட்டிருந்த ஒரு விசிப்பலகையண்டை வந்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டான். உடனே மாசிலாமணி மஞ்சம் ஆடாம்ல் நிறுத்திவிட்டு விசிப்பலகையில் உட்கார்ந்தவனை நோக்கிப் புன்னகை செய்து, “என்ன சேர்வைகாரரே! நீர் வந்து நிரம்பவும் நேரமாகிறதோ?” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன்:- இல்லை எசுமானே! நான் வந்து கால் நாழிகை நேரந்தான் இருக்கும். செந்தலைப் பூச்சிகள் இங்கே வந்து விட்டுப் போனதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்கள் மஞ்சத்தில் ஆடிய சத்தம் கேட்டது. நீங்கள் என்னோடு பேச ஆயத்தமாய் இருப்பதாக நிச்சயித்துக் கொண்டு மேலே ஏறிவந்தேன். இங்கே ஏதாவது விசேஷம் உண்டா? — என்றான்.

மாசிலாமணி சந்தோஷமாகப் புன்னகை செய்து, “இங்கே வேறே என்ன விசேஷம் நடக்கப்போகிறது! இந்தப் போலிஸ் நாய்கள் வந்து குலைத்துவிட்டுப் போகும் என்று நாம் எதிர்பார்த்தது தானே; அப்படித்தான் நடந்தது. நம்முடைய வெண்ணெய் வெட்டி சிப்பாயி அண்ணாவையங்கார் இருக்கிறான் அல்லவா, அவன் தான் வந்து உப்பில்லாமல் கலக்கஞ்சி குடித்துவிடுவதாக ஆடம்பரம் செய்துவிட்டுப் போனான். இந்த வீட்டை எல்லாம் பார்த்தான்; பின்பக்கத்து வீட்டையும், மற்ற வீடுகளையும் சோதனை போடுவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வீட்டுக்கு எதிரிலும், என்னுடைய மற்ற விடுகளுக்கு எதிரிலும் ஜெவான்கள் நிற்க வைத்திருக்கிறான் போலிருக்கிறது” எனக் கூறினான்.

இடும்பன் சேர்வைகாரன், “இந்த போலீஸ் நாய்களுக்கு வேறே என்ன தெரியும் செத்த பிணங்களை அடிப்பதில் அவர்கள்தான் அசகாய சூரர்கள் ஆயிற்றே! அதுவும் நம்முடைய அண்ணாவையங்கார் இருக்கிறான் அல்லவா அவனை பிரகஸ்பதி என்று தான் சொல்ல வேண்டும். என்னவோ அவனும் காக்கை பிடித்துப் பிடித்து இவ்வளவு பெரிய உத்தியோகத்துக்கு வந்துவிட்டான். வாய் உருட்டல் தான் பலமாயிருக்குமே யொழிய, அவனால் ஒரு காரியம் கூடச் சாய்கிறதில்லை. அவன் வந்து கொஞ்ச நேரம் கத்தி விட்டுப் போனால் போகட்டும். அதனால் நமக்கு என்ன நஷ்டம்? ஒன்றுமில்லை” என்றான்.

மாசிலாமணி ஏளனமாக நகைத்து, “இந்த அண்ணாவையங்கார் இடத்தில் இன்னொரு திறமை இருக்கிறது பார்த்தீரா? நான் நிமிஷத்துக்கு நிமிஷம் புதிய புதிய சலவை வேஷ்டிகள் மாற்றி மாற்றிக் கட்டுகிறேன். அதில் எப்படியோ அழுக்கு அடைந்து விடுகிறது. இந்த இன்ஸ்பெக்டருடைய உடுப்பும் பூட்சுகளும் எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியாக ஓர் அற்ப மாசுகூடப் படியாமல் மினுமினுப்பாக மின்னுகின்றன பார்த்தீரா? அந்த விஷயத்தில் இந்த இன்ஸ்பெக்டருக்கு நிகர் யாரும் சொல்ல முடியாது” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், “மற்ற யோக்கியதை எதுவும் இல்லாவிட்டாலும், அதாவது இல்லாவிட்டால், அவனை யார் மதிக்கப் போகிறார்கள். அவன் ஆடம்பரமான உடைகளை அணிந்து மேலே நிமிர்ந்தபடி அமர்த்தலாகவும் அலட்சியமாகவும் பார்த்தபடி மற்றவரிடம் பேசுவதைக் கண்டாலே, அவனிடம் ஏதோ பிரமாதமான சரக்கு இருக்கிறதென்று எல்லோரும் நினைத்து அவனைக் கண்டு பயப்படுவார்கள். இந்தப் போலீஸ் முக்கால் வாசிப்பேர் அப்படிப்பட்ட வெளிப்பகட்டு ஆள்கள்தான் என்பது பிரசித்தமான விஷயந்தானே” என்றான்.

மாசிலாமணி, “இருந்தாலும் அரை வாயன் கால் வாயன் எல்லாம் இந்த அண்ணாவையங்காரோடு பேசி வெல்வது கஷ்டந்தான். நான் எவ்வளவோ தந்திரமாகப் பேசுகிறேன். அவன் மடக்கி மடக்கி ஆளைக் கலக்கிவிடுகிறான். இருந்தாலும், அவனுடைய ஆடம்பரம் எல்லாம் என்னிடம் சாயவில்லை. பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய்விட்டான். இரண்டொரு தினங்களில் ஏதோ துப்பு விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டு அதன்மேல் என்னைப் பிடித்துக்கொள்ளப் போகிறதாகவும் பயமுறுத்தினான்” என்றான்.

இடும்பன் சேர்வைக்காரன், “அப்படியே செய்து கொள்ளட்டும்! யார் அவனைத் தடுத்தார்கள்!” என்றான்.

மாசிலாமணி, “யாரும் தடுக்கவில்லை. இப்போது இருக்கும் நிலைமையில் நாம் இவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் எவ்வளவுதான் பகீரதப் பிரயத்தனம் செய்து தலைகீழாய்க் குட்டிக்கரணம் போட்டாலும், என் அண்ணன் தப்பிய விஷயத்தில் இவர்கள் என்னைச் சம்பந்தப்படுத்த முடியவே முடியாது. கடைசி வரையில் நான் இந்த ஊர்த் தந்தி ஆபீசைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அது நாம் எதிர்பார்த்தபடியே நிறைவேறிவிட்டது. தஞ்சாவூரில் அவர்கள் காலை சுமார் 10 அல்லது 10-30 மணிக்குத் தந்தி கொடுத்திருக்கலாம். அது இங்கே 11 மணிக்குள் வந்திருக்க வேண்டும். அப்படி இருக்க, இது சுமார் 1 மணிக்கு வந்ததைப்பற்றி, எப்படியும் இவர்கள் சந்தேகங் கொள்ளாமலா இருப்பார்கள். அந்த விஷயத்தில் இவர்கள் சந்தேகங்கொண்டு அதன் காரணம் என்னவென்று விசாரித்தாலும் விசாரிப்பார்கள். விசாரித்தால், அதில் உண்மை வெளிப்படப் போகிறதில்லை. பார்த்துக் கொள்ளலாம். இந்த விஷயம் இருக்கட்டும். மன்னார்கோவில் சங்கதிகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? விசாரித்துக் கொண்டு வந்தீரா? நம்முடைய ஆள்கள் இரண்டு பேரும் எதிரிகள் சந்தேகப்படாதபடி இருந்து எல்லாச் சங்கதிகளையும் கிரகித்து வருகிறார்களா” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், “ஆகா! நம்முடைய ஆள்கள் இரண்டு பேரும் சாதாரண ஆள்கள் அல்ல. அந்த திகம்பரசாமியார் அல்ல, அவரைவிட ஆயிரம் மடங்கு அதிக திறமைசாலி ஆனவர்களையும் ஏமாற்றிவிடக் கூடியவர்கள். அவர்களைப் பற்றி எதிரிகள் இது வரையில் கொஞ்சமும் சந்தேகப்படவே இல்லை. உங்களுடைய தமயனார் வெளியில் வந்து விட்டதைக் கேட்டவுடனே திகம்பர சாமியார், கண்ணப்பா முதலிய எல்லோரும் பெரும் பீதியடைந்து எந்த நிமிஷத்தில் தமக்கு எப்படிப்பட்ட அபாயம் நேருமோ என்று நினைத்து நிரம்பவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். அப்படி இருந்தபடியே திகம்பரசாமியார் உங்கள் அண்ணனைப் பிடிப்பதற்காக ஏதேதோ யோசனையும் சூழ்ச்சிகளும் செய்து கொண்டிருப்பதோடு, தஞ்சை சூபரின்டென்டெண்டுக்கும் இந்த அண்ணா வையங்காருக்கும் ஓயாமல் ஏதோ தந்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறாராம். அது நிற்க, அடுத்த வெள்ளிக்கிழமை பட்டணத்தில் நிச்சயதாம்பூலம் மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். வேலாயுதம் பிள்ளை ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வரிசைகளோடு போய் நிச்சயதார்த்தம் முடிக்கப் போகிறாராம். புதன்கிழமை ராத்திரி 6 முதல் வகுப்பு வண்டிகளில் சுமார் 50 ஜனங்கள் பட்டணம் போகப் போகிறார்களாம். சென்னப் பட்டணம் கலெக்டர் பட்டாபிராம பிள்ளையினுடைய மகள் தெய்வ ரம்பை போலவே அவ்வளவு சொகுசாக இருக்கிறாளாம். வடிவாம்பாளைக் காட்டிலும் அந்தப் பெண் அதிக அழகுடையவளாம். அவளுடைய பெயர் மனோன்மணியாம். அவள் பி.ஏ. வகுப்பில் படிக்கிறாளாம். அந்தக் கலெக்டருக்கு ஆண் சந்ததியே இல்லையாம். அவருக்கு இரண்டு லட்சத்துக்குச் சொத்திருக்கிறதாம். அதுவும் கடைசியில் கந்தசாமியைத்தான் சேருமாம்” என்றான்.

மாசிலாமணி, “ஓகோ! அப்படியா சங்கதி அந்தப் பட்டாபிராம பிள்ளை என் அண்ணனைக் கடைசி வரையில் ஏமாற்றி மூன்று நாள் தூங்காமல் கண்விழிக்கச் செய்து கடைசி தினம் அழைத்து வைத்துக் கொண்டு ரகசியங்களை எல்லாம் கிரகித்தான் அல்லவா? அப்போது அவன் செய்த தந்திரம் என்ன என்பது உமக்குத் தெரியுமா? தனக்கு ஒரே பெண் இருப்பதாகவும், அந்தப் பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுத்துத் தனது சொத்துகளை எல்லாம் பெண்ணுக்கு எழுதிவைத்து விடுவதாகவும் சொல்லி அண்ணனை ஏமாற்றினான் அல்லவா அந்த மோசக்காரன். அந்தப் பெண் அவனுடைய வாக்குப்படி என்னுடைய பெண்சாதி அல்லவா. வடிவாம்பாளை நான் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நாங்கள் கடைசி வரையில் வளர்த்தோம். அவளைக் கண்ணப்பா அபகரித்துக் கொண்டான். பட்டாபிராம பிள்ளை தானாகவே என் அண்ணனைக் கூப்பிட்டு, பரிச்சயம் செய்து கொண்டு, தன் மகளை எனக்குக் கொடுப்பதாக வாக்குறுதி சொல்லி எங்களைப் படுகுழியில் இறக்கினான். அவன் விஷயத்திலும் பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை என் மனசில் இருந்து வருகிறது. அதற்கு இதுதான் சந்தர்ப்பம். அவன் எனக்குக் கொடுப்பதாகச் சொன்னபடி அவளை நான் எப்படியும் கொண்டு வந்து கற்பழித்து மானபங்கம் செய்து கொஞ்ச காலம் வைத்திருந்து துரத்திவிட்டால் அவர்கள் செருக்குக்கு அதுவே போதுமான தண்டனையாகும். பரிசம் போடுவதற்காக இவர்கள் தயார் செய்திருக்கும் சாமான்களையும் நாம் அப்படியே அபகரித்துவிட வேண்டும். இவர்கள் சகலமான ஏற்பாடுகளையும் செய்து முடிவில் ஏமாறி அவமானப்பட்டுப் போக வேண்டும். இன்னார் கொண்டு போனார்கள் என்ற குறிப்பே தெரியாமல் நாம் அந்தப் பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிட வேண்டும். இதனால் இரண்டு வீட்டாருக்கும் பெருத்த துயரமும் மானக் கேடும் உண்டாவது நிச்சயம்! முதலில் நாம் இந்தக் காரியத்தை முடிப்போம். இது நிறைவேறியவுடனே, திகம்பரசாமியார், கண்ணப்பா முதலியோரை ஒவ்வொருவராகப் பிடித்து வந்து காளி கோவிலில் பலிகொடுத்து விடுவோம். நாம் செய்வதை எல்லாம் ஒரே முட்டாகச் செய்தால், நமது பேரில் உடனே சந்தேகம் உண்டாகிவிடும். ஒரு காரியத்தை முடிப்பது; பிறகு கொஞ்சம் ஆறப்போடுகிறது; பிறகு இன்னொன்றைச் செய்வது. இப்படியே நாம் நம்முடைய பகைவரை எல்லாம் ஒருவர்பின் ஒருவராய் வெகு சீக்கிரத்தில் வேரறுத்து விடவேண்டும். போலீசார் இந்திரஜாலம், மகேந்திரஜாலம் செய்து குட்டிக்கரணம் போட்டால் கூட, இவைகளை எல்லாம் நாம்தான் செய்தோம் என்பதற்கு ஓர் அனுப்பிரமாணங்கூட ருஜூ இருக்கக்கூடாது. அவ்வளவு தந்திரமாக நாம் காரியங்களை முடிக்க வேண்டும்” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன் சிறது யோசனை செய்தபின், “ஒரு காரியம் எனக்கு நிரம்பவும் உசிதமாகத் தோன்றுகிறது. அந்த திகம்பரசாமியார் சுயேச்சையாக இருக்கையில், நாம் எந்தக் காரியம் செய்தாலும், அவன் அதற்குத்தக்க மார்க்கம் தேடி நம்மை எப்படியாவது பிடித்துவிடுவான். ஆகையால், அவனை நாம் பிடித்து முதல் பலி கொடுத்துவிட்டால், பிறகு மற்றவர்களைப் பிடிப்பது வெகுசுலபமான காரியம். அதுவுமன்றி, மற்றவர்கள் அவ்வளவு அக்கறையாகப் பாடுபட்டு குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் மாட்டார்கள். நாம் கொண்டு வருவோரை விடுவிக்கவும் அவ்வளவாக முயற்சி செய்யமாட்டார்கள்” என்றான்.

மாசிலாமணி:- அது வாஸ்தவம் தான். அவன்தான் எப்போதும் தக்க பந்தோபஸ்தோடு இருக்கிறான் என்கிறீரே; அவனை நாம் எப்படி முதலில் பிடிக்கிறது?

இடும்பன் சேர்வைகாரன்:- அவன் எப்போதும் பந்தோபஸ்தோடு தான் இருக்கிறான். அவன் இருக்கும் ஜாகையில் எப்போதும், 7, 8 ஜெவான்கள் கத்தி துப்பாக்கிகளோடு பாராக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவன் ஏதாவது ஒரு குறித்த நேரத்தில், எங்கேயாவது வெளியில் போகிறான் என்ற நிச்சயம் ஏற்பட்டால், நாம் ஆள்களோடு மறைந்திருந்து அவனைப் பிடித்துக் கொண்டு வந்துவிடலாம். அவன் வெளியில் போகிறதும் தெரிகிறதில்லை; வருகிறதும் தெரிகிறதில்லை. அவனுடைய ஜாகையில் ஒரு மோட்டார் வண்டியும் ஒரு பெட்டி வண்டியும் இருக்கின்றன. பெட்டி வண்டியில் இருப்பது போல, மோட்டார் வண்டியிலும் மனிதர் - உட்காரும் இடம் மறைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதோ வண்டி போகிறது; எப்போதோ வருகிறது. அதற்குள் இன்னார் இருக்கிறார்கள் என்பது தெரிகிறதில்லை. ஒருமாச காலமாக நான் நேரில் ஒளிந்திருந்தும், ஆள்களை வைத்தும் பார்த்தேன். ஒரு சமயம் நானே ஒரு குடுகுடுப்பாண்டி போல வேஷம் போட்டுக் கொண்டு போய், அவனுடைய பங்களாவிற்குள் நுழைந்து, உள்பக்கத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். இன்னொரு நாள் நான் ஒரு பெரிய மிராசுதார் போல விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பங்களாவிற்குள் நுழைந்து அவனைக் கண்டு ஒரு கும்பிடு போட்டு பெரும் புளுகாக ஒரு புளுகு புளுகினேன். அதாவது, நான் இருப்பது குத்தாலம் என்றும், அவனுடைய மைத்துனனான குமாரசாமி பிள்ளை எனக்கு ஆப்த நண்பன் என்றும், நான் ஒரு காரியமாக மன்னார் கோவிலுக்கு வந்தேன் என்றும், அவனைப் பார்த்து அவனுடைய குடும்ப கூேடிமச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வரும்படி குமாரசாமி பிள்ளை சொன்னதாகவும், அவனுடைய பெரும் புகழையும், நற்குணங்களையும் கேட்டு, அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக இருந்தது ஆகையால், அதையும் உத்தேசித்து அவனை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக எண்ணி வந்ததாகவும் சொன்னேன். அவன் என்னை அத்யந்த பிரமையோடு உபசரித்து எனக்குப் போஜனம் அளித்து நெடுநேரம் வரையில் என்னிடம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்து என்னை அனுப்பி வைத்தான். அப்போது நான் அவனுடைய ஜாகையின் உள் பக்கங்களை எல்லாம் நன்றாகப் பார்த்தேன். அவனுடைய நடவடிக்கைகளையும் குண விசேஷங்களையும் உற்றுக் கவனித்தேன். அவனிடம் நெருங்கி நான் பார்த்ததில், நான் அவன் விஷயத்தில் அதற்கு முன் கொண்டிருந்த பகைமையும், குரோதமும், அருவருப்பும் தானாகவே மாறிப்போய் விட்டன. அவன் பார்வைக்குச் சர்வ சாதாரணமான மனிதனைப் போலக் காணப்பட்டாலும், அவனுக்குள் தெய்விகமான சக்தி ஏதோ இருக்கிறதென்பது நன்றாகத் தெரிகிறது. அவனுக்குள் மறைந்திருக்கும் ஆத்மா சகலமான அம்சங்களிலும் பரிபக்குவமடைந்த ஒரு மகரிஷியின் ஆத்மா என்பது. வைரக்கற்களைப் போல ஜிலுஜிலுவென்று மின்னும் அவனுடைய கண்களில் இருந்து, எளிதில் வெளிப்படுகிறது. அவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் திரிகால ஞானியின் தீர்க்கதரிசனம் போல த்வனிக்கிறது. அவன் தனக்கென்று எந்தக் காரியமும் செய்யப் பிரியப்படுவதாகத் தோன்றவில்லை. உலகத்தில் உள்ள சகலமான ஜனங்களின் துயரத்தையும் துன்பங்களையும் விலக்கும் விஷயத்தில் தன்னால் இயன்ற வரையில் உதவி செய்யவேண்டும் என்ற கொள்கையையும், தான் ஜென்மம் எடுத்திருப்பது அதற்காகத்தான் என்ற உறுதியையும் விடாமல் கடைப்பிடித்தவனாய் இருக்கிறான். தனக்குப் பொருள் தேட வேண்டும் என்றாவது, தனது உடம்பைப் போஷிக்க வேண்டும் என்றாவது அவன் கொஞ்சமும் கவலைப்படுவதாகவே தோன்றவில்லை. அவனுடைய சம்சாரமும் அவனைப் போலவே பெருத்த தத்துவ ஞானியாக இருக்கிறாள். அதுவுமன்றி, அவர்கள் இருவரும் தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலையே கொண்டவர்களாகத் தோன்றவில்லை. தாங்கள் எவ்வளவு காலம் இந்த உலகில் ஜீவித்திருக்க வரம் வாங்கி வந்திருக்கிறோமே அவ்வளவு காலம் எப்படியும் இருப்போம் என்றும், பிறருக்கு உதவி செய்வதில் தங்களுடைய உயிர் போனால் கூட அது ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எனக்கெதிரில் இரண்டு மூன்று தடவைகள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் போஜனம் செய்வதும் நிரம்பவும் மிதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் எப்போது போஜனம் செய்கிறார்கள், எதைப் போஜனம் செய்கிறார்கள் என்ற விவரம் அவர்களோடு இருப்பவர்களுக்குக்கூடத் தெரிகிறதில்லை. நான் வெகுநேரம் வரையில் அவர்களோடு இருந்து பழகிவிட்டுக் கடைசியில் வந்துவிட்டேன். அவர்கள் உலகத்தில் யார் மீதும் பகையாவது, பற்றாவது வைத்திருப்பவராகவே தோன்றவில்லை. உலகத்தில் அக்கிரமமான வழிக்குப் போகாமல் ஒழுங்காக நடக்கும் மனிதர் யாராக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் பந்துக்கள்தான். அக்கிரமம், துன்மார்க்கம், துஷ்டத்தனம் முதலியவை உடையவர்கள் அவர்களுக்குப் பகைவர்கள். மற்றபடி யாராக இருந்தாலும், அவர்களுக்கு வித்தியாசம் கிடையாது. அந்தக் கண்ணப்பாவே ஏதாவது துன்மார்க்கமான காரியத்தில் பிரவேசிப்பானானால், அவனுக்குக்கூட, அவர்கள் விரோதியாகி விடுவார்கள். அதுபோல, நீங்கள் நல்ல வழியில் நடந்து, பிறர் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்தால், அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய முன் வருவார்கள். அவனும் அவன் மனைவியும் இப்படிப்பட்ட பற்றற்ற சந்நியாசிகளாக இருக்கிறார்கள். அவனைப் பிடித்து வதைப்பதற்கு என் மனம் இடந்தரவே இல்லை. ஆனாலும் அவனை நாம் அசட்டை செய்து விட்டுவிடவும் முடியவில்லை. நான் யோசித்து யோசித்துப் பார்த்துக் கடைசியில் அவனை மாத்திரமாவது நாம் எப்படியும் பிடித்துக்கொண்டு வந்து நாம் எண்ணியபடி செய்து தான் தீர வேண்டும் என்ற முடிவையே செய்து கொண்டேன். ஆனாலும், அவனை எப்படிப் பிடிக்கிறது என்ற யோசனைதான் திருப்திகரமாகப் புலப்படவில்லை.

மாசிலாமணி:- (சிறிது நேரம் ஆழ்ந்த யோசனை செய்து) ஏது சேர்வைகாரரே நீர் கூட அந்த ஆண்டிப்பயலுடைய வலையில் வீழ்ந்து விட்டீர் போல் இருக்கிறதே! உமக்கு அவன் ஏதாவது சொக்குப்பொடி போட்டு விட்டானா? அவன் எப்போதும் ஏழைக் குறும்பன் ஆயிற்றே! அவனைப் பார்த்து நீர் இரக்கங் கொள்கிறீரே! அவன் வெளிக்கு இப்படி ஆண்டி வேஷம் போடுகிறானே அன்றி அவனைப் போன்ற ஆணவமும் ஆங்காரமும் மூர்க்கமான ஆசா பாசங்களும் உடையவன் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்கவேமாட்டான் என்பது என்னுடைய எண்ணம். ஊரில் யார் யாருக்குத் தீங்கு செய்தால் அவனுக்கு என்ன? அவன் என்ன நம்மை எல்லாம் படைத்த ஈசுவரனிடம் சர்வ அதிகாரமும் பெற்ற ஏஜண்டா? உலகத்தில் துஷ்டநிக்ரகம் சிஷ்ட பரிபாலனம் செய்ய மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவன் என்ன? மகாவிஷ்ணுவின் பதினோராவது அவதாரமா? மனிதருக்கு மனிதர் ஆயிரம் சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் இருக்கும். ஒருவருக்கொருவர் எத்தனை நன்மைகளையோ தீமைகளையோ செய்து கொள்ளுவார்கள். அதில் எல்லாம் அவன் தலையிட்டு ஒருவனுக்காகப் பரிந்து இன்னொருவனைப் பகைத்துக் கெடுதல் செய்வதென்றால், அவன் உண்மையில் பெரிய மனிதனாகமாட்டான். ஒருவன் வாஸ்தவத்தில் சாத்விக புருஷன் ஆகவேண்டுமானால், அவன் சகலமான மனிதரையும் சமமாக பாவிக்க வேண்டும். அவனுக்கு வெறுப்பு விருப்பு என்ற வேற்றுமையே இருக்கக் கூடாது. நம்முடைய மகரிஷிகள் எல்லாம் காட்டில் தவம் செய்யும் போது, சிங்கம், புலி, பாம்பு முதலியவை அவர்களோடு வேற்றுமை இன்றிப் பழகி அவர்களுக்கு யாதொரு திங்கும் செய்யாமல் பக்கத்திலேயே இருக்கும் என்று சொல்லுவார்களே! அதுபோல, அவன் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும், எல்லோரையும் சமமாக பாவித்து, அன்பென்ற மருந்தினால் கெட்டவனையும் நல்வழிக்குத் திருப்ப முயல வேண்டும். அது முடியாவிட்டால், தன் ஜோலியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட மேன்மைக் குணம் அவனிடம் மருந்துக்குமில்லை. குற்றம் செய்தவனை மன்னித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்ற சுத்தசாத்விக குணம் அவனிடத்தில் எள்ளளவும் கிடையாது. குற்றம் செய்தவனை எப்பாடு பட்டாவது எவ்வித தந்திரம் செய்தாவது தண்டிக்க வேண்டும் என்ற ராஜஸ குணமே அவனிடம் எப்போதும் மேலாடி நிற்கிறது. ஆகையால், அவனை மகான் என்று கருதவே இடமில்லை. அவனுடைய விஷயத்தில் நாம் இரக்கம் கொள்வதற்கும் அவன் அருகமானவன் அன்று. பார்ப்பதற்கு அவன் பரம சாதுவைப் போல இருந்தாலும், அவனுடைய உடம்பில் மயிர்க்காலுக்கு மயிர்கால் விஷம் மறைந்து நிற்கிறது. ஒரு பாம்பு தேள் முதலிய விஷஜெந்துவைக் கண்டால், அவற்றினிடம் கொஞ்சமாவது தயை தாகூடிணியம் பாராமல் நாம் எப்படி நசுக்குகிறோமோ, அப்படியே நாம் அவன் விஷயத்திலும் நடந்து கொள்ள வேண்டும். ஆகையால், நீர் அவன் விஷயத்தில் கொஞ்சமாவது இரங்காமல் காரியத்தை நிறைவேற்ற வேண்டும். இப்படி எல்லாம் பலவகைப்பட்ட தந்திரங்களைச் செய்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப் பதை விட ஒரே ஒரு காலத்தில் எல்லாரையும் ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறேன். பல திட்டுகளுக்கு ஒரே முழுக்கா முழுகுவது போல எல்லோருடைய பகைமையையும் தீர்த்துக் கொள்ள அது ஒரே மருந்தாக இருக்கும். அப்படியே செய்வது உசிதமான காரியம் என்று நினைக்கிறேன்.

இ. சேர்வைகாரன்:- ஏது எஜமான் என்மேல் கூட சந்தேகங் கொள்ளுகிறது போல் இருக்கிறதே. நான் நேரில் கண்ட சங்கதியையும், அப்போது என் மனசு நினைத்ததையும் உள்ளபடியே உங்களிடம் வெளியிட்டேன் அன்றி, அவன் விஷயத்தில் நான் இரக்கங்கொண்டு அவனை விட்டுவிடப் போவதாகச் சொன்னேனா? அப்படி ஒன்றும் சொன்னதாக ஞாபகமில்லையே. காரியத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று நீங்கள் உத்தரவு கொடுக்கிறீர்களோ, அப்படியே நான் நிறைவேற்றி வைக்கத் தடை இல்லை. அதனால், என் உயிரும், என் ஆட்களின் உயிரும் போனால் கூட நான் பார்க்கக் கூடியவனல்ல. உங்களுக்கு ஏதோ ஓர் யோசனை தோன்றிய தாகச் சொன்னீர்களே, அதை வெளியிடுங்கள். அதன்படி நான் நடந்து கொள்ளுகிறேன்.

மாசிலாமணி:- வேறொன்றும் இல்லை. இப்போது நீர் சில சங்கதிகள் சொன்னீர் அல்லவா, வருகிற புதன்கிழமை அன்று மன்னார்குடியார் நிச்சயதார்த்தத்திற்காக சென்னைப் பட்டணம் போகிறார்கள் என்று சொன்னர் அல்லவா? அப்போதே நாம் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றிவிடலாம் என்பது என் எண்ணம்.

இ. சேர்வைகாரன்:- எந்த விதமாய் நிறைவேற்றுகிறது?

மாசிலாமணி:- அவர்கள் அன்றைய தினம் இரவில் போட் மெயிலில் அல்லவா போகப் போகிறார்கள்?

இ. சேர்வைகாரன்:- ஆம்; அப்படித்தான் சொல்லக் கேள்வி.

மாசிலாமணி:- சரி; அவர்களுக்காக மன்னார் குடியில் ஆறு முதல் வகுப்பு வண்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அல்லவா? -

இ. சேர்வைகாரன்:- ஆம்.

மாசிலாமணி:- அந்த வண்டிகள் எல்லாம் மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்தே அவர்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு போகும். அவர்கள் நீடாமங்கலம், திருவாரூர், மாயூரம் ஆகிய மூன்று ஜங்ஷன்களின் வழியாக ரயில் மாறிக் கடைசியில் போட் மெயிலில் ஏற வேண்டும். ஆனால், அவர்களை இறக்கமாட்டார்கள். ஒவ்வொரு ஜங்ஷனிலும் அந்த ஆறு வண்டிகளையும் ஒரு ரயிலில் இருந்து கழற்றிக் கொண்டு போய் அப்படியே இன்னொரு ரயிலில் சேர்த்து விடுவார்கள். முடிவில் அவர்கள் மாயூரத்தில் போட்மெயிலை அடையும் போதும், அந்த ஆறு வண்டிகளும், போட்மெயிலில் கோர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.

இ. சேர்வைகாரன்:- ஆம், அப்படித்தான் செய்வார்கள்.

மாசிலாமணி:- எந்த வண்டியிலும் இஞ்சினுக்குப் பக்கத்தில் தான் முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகள் பிணைக்கப் பட்டிருக்கும். அவைகளுக்குப் பின்னால் தான் மற்ற சாதாரண ஜனங்களுள்ள மூன்றாவது வகுப்பு வண்டிகள் இருக்கும்.

இ. சேர்வைகாரன்:- ஆம்; வாஸ்தவந்தான்.

மாசிலாமணி:- அந்த ஆறு வண்டிகளில், அவர்களுடைய ஜனங்கள் சுமார் 50-மனிதர்கள் அல்லவா போகப் போகிறார்கள். திகம்பரசாமியார், அவருடைய பெண்ஜாதி, வேலாயுதம் பிள்ளை, அவருடைய பெண்ஜாதி, கண்ணப்பா, வடிவாம்பாள், நடராஜ பிள்ளை, சுந்தரம்பிள்ளை, அவருடைய பெண்ஜாதி முதலிய நம்முடைய பகைவர்கள் எல்லோரும் அந்த 50 ஜனங்களுள் அடங்கியவர்கள் என்பது நிச்சயம். இன்னும் எங்களுடைய வழக்கில், எங்களுக்கு விரோதமாக சாட்சி சொன்னவர்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமான வேறு பலரும் அவர்களோடுகூடப் போவார்கள் என்பது நிச்சயம். அத்தனை பேரும் ஒரே அடியாய் மாண்டு போகும்படியான ஒரு காரியத்தை நாம் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காரியத்தை முடிப்பதற்கு அதிகப்படியான ஆள்களும் தேவையில்லை. இரண்டொரு மனிதரை உதவிக்கு வைத்துக் கொண்டு நீர் ஒருவரே போனால், அதுவே போதுமானது. காரியம் எளிதாய் முடிந்து போகும்.

இ. சேர்வைகாரன்:- நாங்கள் எங்கே போகிறது? எப்படிக் காரியத்தை முடிக்கிறது? உங்களுடைய யோசனையை நன்றாகத் திறந்துதான் சொல்லுங்களேன்.

மாசிலாமணி:- நான் இதுவரையில் பேசிய குறிப்புகளில் இருந்து, என்னுடைய கருத்து இன்னதென்பதை நீர் இன்னமும் கிரகித்துக் கொள்ளவில்லையா?

இ. சேர்வைகாரன்:- ஒருவிதமாகக் கிரகித்துக் கொண்டேன். இருந்தாலும் நீங்கள் உங்கள் வாயால் சொல்லுகிறதுதானே.

மாசிலாமணி:- உம்முடைய ஆள்களில் இரண்டொருவர் இதற்கு முன் ரயில்வே லைன் வேலை செய்தவர்கள் என்று நீர் முன்னொரு தடவை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

இ. சேர்வைகாரன்:- ஓகோ! சரி; இப்போது நிச்சயமாகத் தெரிந்தது. அந்த போட்மெயில் போவதற்கு முன், எங்கேயாவது ஓரிடத்தில் தண்டவாளத்தைப் பெயர்த்து வைக்கலாம் என்பது உங்களுடைய யோசனை போல் இருக்கிறது.

மாசிலாமணி:- ஆம்; ஆனால், நீங்கள் தண்டவாளத்தை எடுக்கும் இடம் சாதாரணமான இடமாய் இருக்கக் கூடாது. வண்டிகள் கீழே விழுந்தால் ஜனங்கள் மறுபடி உயிரோடு மீண்டு வர முடியாமல் போய்விட வேண்டும். அப்படிப்பட்ட இடமாகப் பார்த்துத் தண்டவாளத்தை எடுக்க வேண்டும். ஆம்; அப்படிச் செய்யலாம். சிதம்பரம் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் கொள்ளிடம் என்ற பெரிய ஆறு போகிறதல்லவா, அந்த ஆற்றில் இப்போது பிரமாதமான வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறதாக, நான் சமீபகாலத்தில் பத்திரிகைகளில் படித்தேன். அந்த ஆற்றுப் பாலத்தில், முக்கால் பங்கு தூரம் விட்டு அதற்கு அப்பால் உள்ள தண்டவாளம் ஒன்று, அல்லது, இரண்டைப் பெயர்த்து எடுத்துவிட்டால், அதுவே போதுமானது. அந்த முக்கால் பங்கு தூரத்திற்குள் முதல் வகுப்பு வண்டிகள் அவசியம் இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும், இஞ்சின் முதலிய முன் வண்டிகள் அதிமிதமான வேகத்தோடு போய் விழும்போது பின் வண்டிகளையும் இழுத்துக் கொண்டே போகும். சாதாரணத் தரையாக இருந்தால், முன் வண்டிகள் விழுந்த இடத்தில் கவிழ்ந்து நின்றுவிடும். பின் வண்டிகள் கொஞ்சம் அப்புறம் இப்புறம் நகர்ந்து கீழே விழுந்துவிடும். அந்த ஆற்றில் கனத்த வெள்ளம் போகிறது. ஆகையால் இஞ்சின் முதலிய முன் வண்டிகள் வெள்ளத்தில் இழுத்துவிடுவது நிச்சயம். நம்முடைய பகைவர்கள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் போவது நிச்சயம். அதன் பிறகு சென்னைப் பட்டணத்தில் அந்தப் பட்டாபிராம பிள்ளை இருக்கிறான். அவன் ஒருவன் தானே. அவனைத் தொலைப்பது ஒரு பெரிய காரியமல்ல. அவனுடைய மகளை அபகரித்துக் கொண்டு வருவதும் ஓர் அரிய காரியமல்ல. முக்கியமாக அந்தப் பரதேசி நாய் ஒழிந்ததென்றால், அதன் பிறகு நமக்கு எவ்வித பயமுமில்லை. நம்முடைய அண்ணன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கக் கூடியவன் அவன் ஒருவனே. மற்ற சாதாரணப் போலீசாரால் அந்தக் காரியம் இயலாது. ஆகையால், அவன் தொலைந்தால் அண்ணன் பத்திரமாக இருக்கலாம். அவரைப் பற்றி நாம் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதே இல்லை — என்றான்.

இ. சேர்வைகாரன்:- (சிறிது நேரம் யோசனை செய்த பிறகு) நீங்கள் சொல்லுகிற யோசனை ஒரு விதத்தில் நல்ல யோசனை யாகத்தான் தோன்றுகிறது. அப்படித்தான் செய்ய வேண்டும். என்று நீங்கள் ஆசைப்பட்டால் நான் அதை நிறைவேற்றி வைக்கத் தடையில்லை. ஆனால் அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவர்கள் புதன்கிழமை இரவு வண்டியில் போகப் போகிறார்கள் என்று தான் நம்முடைய ஆள் சொன்னான். அது போட்மெயிலாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவனுடைய யூகமேயன்றி வேறல்ல. அவர்கள் அந்த வண்டியில் போகாவிட்டால், நாம் செய்வதால், அவர்களுக்கு யாதொரு கெடுதலும் இல்லாமல் போய்விடும். அன்றைய தினம் போகும் போட்மெயில் விழுவதனால், நிரபராதியான வேறே ஜனங்கள் மாண்டும் காயப்பட்டும் போவார்கள். அதனால், வீண் கூக்குரல் அதிகரிக்கும்; காவல் அதிகரிக்கும்; அதன் பிறகு மறுபடியும் நாம் அந்தக் காரியத்தைச் செய்வது சாத்தியம் இல்லாமல் போய்விடும். ஆகையால் நாம் அவர்கள் போகும் வண்டி இன்னது தான் என்பதை முதலில் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அவர்கள் ஏறிப்போகும் ஆறு முதல் வகுப்பு வண்டிகளை இஞ்சினுக்குப் பக்கத்தில் தான் கோர்க்கிறார்கள் என்பது என்ன நிச்சயம். பின்னால் கார்ட் வண்டிக்குப் பக்கத்திலும், தபால் வண்டிகளுக்குப் பக்கத்திலும் சில சமயங்களில் முதல் வகுப்பு இரண்டாவது வகுப்பு வண்டிகளைச் சேர்ந்திருப்பதையும் நான் பல தடவைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நல்ல அதிர்ஷ்டசாலிகள். அதற்குத் தகுந்த படி அன்றைய தினம் தற்செயலாக அவர்களுடைய வண்டிகள் பின்பக்கத்தில் கோர்க்கப்பட்டுப் போனால், பின்பக்கத்து வண்டிகளுக்கு அவ்வளவு கெடுதல் உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைக்கிறபடி ரயில் வண்டிகள் வெள்ளத்தில் மிதந்து போகும் என்று நான் எண்ணவில்லை. இஞ்சின், வேகமாய்ப் போய்த் தண்ணிருக்குள் புகுந்து மண்ணில் புதைந்து போகும். அதற்கு மேல் சில வண்டிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழும். எல்லாவற்றிலும் வாசல், ஜன்னல் முதலியவை இருப்பதால், உள் பக்கத்தில் தண்ணீர் நுழைந்து கொள்ளும். ரயில் வண்டிகள் அதிக கனமாக இருக்கும். ஆகையால், ஒன்றன் மேல் ஒன்றாக எல்லாம் தண்ணீரில் அப்படியே உட்கார்ந்து கொள்ளும். பின்வண்டிகள் அநேகமாய் அப்படியே பாலத்தின் மேலேயே நின்றாலும் நின்றுவிடும். அல்லது அதன் மேலேயே சாய்ந்து விழுந்து, கிடந்தாலும் கிடக்கும். ஆகையால், நம்முடைய எதிரிகள் கட்டாயம் மாண்டு போவார்கள் என்பதை நாம் இப்போது திட்டமாக நிச்சயிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயம். ஒரு போட்மெயிலில் எல்லா வகுப்பு ஜனங்களும் சேர்ந்து சுமார் 1000 நபர்களாவது இருப்பார்கள். எத்தனையோ பெண்பிள்ளைகளும், குழந்தைகளும் இருப்பார்கள். நம்முடைய பகைவர்களான சுமார் ஏழெட்டு மனிதரைத் தண்டிப்பதற்காக நிரபராதியான ஆயிரம் ஜனங்களுக்குப் பெருத்த நாசத்தை விளைவிக்கும்படியான அவசியம் என்ன? எத்தனை ஜனங்கள் காயம்பட்டு ஓலமிட்டு அலறுவார்கள். அவர்களுள் நல்லவரும் இருப்பார்கள்; கெட்டவரும் இருப்பார்கள். அத்தனை பெயரும் வயிறெரிந்து கதறி அழும்படி செய்வது நியாயமாகுமா? நம்முடைய விரோதிகளுக்கு மாத்திரம் நாம் கெடுதல் விளைப்பதற்கு ஒருவித நியாயம் இருக்கிறது. அதைக் கருதி நாம் கசாப்புக் கடைக்காரர்களைப் போல பெருத்த படுகொலையில் இறங்கலாமா? எதிலும் மிதமாக நடந்து கொள்ள வேண்டும். எதிலும் நிர்ணயம் இருக்க வேண்டும். திருட்டு, கொலை முதலியவைகளைச் செய்வதில் கூட, நாம் கொஞ்சம் நியாயத்தை அனுசரித்தே காரியத்தை நடத்த வேண்டும். திருடப்போகிறவர்கள் கூட சாமிக்கு ஆடு வெட்டிக் கோழி வெட்டி, சாராயம், அவல், கடலை வைத்துப் படைத்துப் பூசை போட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்கள் கூட சுவாமிக்குப் பயந்து, அவனுடைய உதவியை நாடியே தங்கள் தொழிலை நடத்துகிறார்கள். நாம் அவர்களிலும் கேவலமானவர்கள் அல்ல. ஆகையால், நாம் இப்படிப்பட்ட பெருத்த படுகொலையில் இறங்குமுன், அதற்கு சுவாமியின் சகாயம் கிடைக்குமா என்பதை யோசித்துச் செய்ய வேண்டும். அதுவுமன்றி, நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அவர்கள் நிச்சயதார்த் தத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமானம் உடைய சொத்துக்களோடு போகப் போகிறார்கள். அவ்வளவு பெரிய சொத்து ஆற்றோடு போவது யாருக்கு உபயோகப்பட போகிறது. நாம் வேறு விதமாக ஏதாவது தந்திரம் செய்து, நம்முடைய பகைவர்களைப் பிடிப்பதோடு அந்தச் சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டால், ஏழைகளான என்னுடைய ஆள்கள் தலைக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு பிழைத்துப் போவார்கள். அந்த நன்றி விசுவாசத்தை அவர்கள் மறக்காமல், நம்மிடம் இன்னம் அதிகப் பணிவாகவும் உறுதியாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வார்கள். இந்த விஷயங்களை, நாம் கவனிக்காவிட்டாலும், இன்னொரு முக்கியமான அம்சத்தை நாம் அசட்டையாக எண்ணக் கூடாது. அதாவது, இந்த ரயில்வே லைனில் இரவு பகல் அங்கங்கே ஆள்கள் காவல்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக ஆற்றுப் பாலங்களுக்குப் பக்கத்தில் காவலாளிகள் இருப்பது நிச்சயம். ஒவ்வொரு வண்டியும் வருவதற்கு முன் இன்ஸ்பெக்டர் முதலியோர் வந்து பாலங்கள் சரியாய் இருக்கின்றனவா என்று தணிக்கை பார்த்துப் போவதுண்டு; நாங்கள் போய் தண்டவாளத்தைப் பெயர்ப்பதென்றால், இன்ஸ்பெக்டர் முதலியோர் வந்து பார்த்துவிட்டுப் போனபிற்பாடும், போட் மெயில் வருவதற்குள்ளும் அதை வெகு துரிதமாகச் செய்ய வேண்டும். தண்டவாளத்தைப் பெயர்ப்பதென்றால், அது எளிய காரியமல்ல. அதற்கு அதிக நேரமும் பிரயாசையும் பிடிக்கும். அப்போது பக்கத்திலிருந்து காவல்காரன் வந்தால், அவனை அடித்து வதைத்து, அவனுடைய உயிரை வாங்க வேண்டும். இவ்வளவு காரியத்தையும் நாம் திருப்திகரமாக முடித்தால், அப்போதும், நம்முடைய விரோதிகள் எல்லோரும் அழிந்து போவார்கள் என்ற நிச்சயம் கிடையாது. இந்தச் சங்கதிகளை எல்லாம் நன்றாக தீர்க்காலோசனை செய்து நீங்கள் உத்தரவு கொடுங்கள். அதன்படி நான் நிறைவேற்றத் தடை இல்லை.

மாசிலாமணி:- என்ன சேர்வைகாரரே! நான் எண்ணிய ஏற்பாட்டுக்குப் பெருத்த பெருத்த ஆட்சேபனைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டீரே!

இ. சேர்வைகாரன்:- நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு உசிதமாகப் படாவிட்டால் தள்ளி விடுங்கள்.

மாசிலாமணி:- (சிறிது யோசனை செய்து) சரி; அப்படியானால் இந்த உத்தேசத்தை இப்போது நிறுத்தி வைப்போம். வேறே என்ன விதமான யோசனை செய்யலாம் என்று நீர் எண்ணுகிறீர்? நீர் ஏதாவது ஒரு யோசனை சொன்னால், அதன்படி இப்போது நடப்போம். அதெல்லாம் பலிக்காமல் போகுமானால், இதைக் கடைசி அம்பாக வைத்துக் கொள்வோம். இந்தக் கலியாணம் அநேகமாய் சென்னைப் பட்டிணத்தில் தான் நடக்கும். இவர்கள் எல்லோரும் மறுபடி கலியாணத்திற்கு அங்கே போக நேரும். அப்போது வேண்டுமானால், ரயிலைக் கவிழ்க்கும் யோசனையை உபயோகப்படுத்திக் கொள்வோம். இப்போது வேறே ஏதாவது நல்ல யோசனையாகத் தோன்றினால் சொல்லும். அதை முடிப்போம். முதலில் திகம்பரசாமியாருடைய வேலை ஒழிய வேண்டும். இரண்டாவது, பட்டணத்தில் உள்ள மனோன்மணியம்மாள் சில தினங்களுக்குள் என்னிடம் வந்து சேர வேண்டும். மூன்றாவது, வேலாயுதம் பிள்ளை தயாரித்துள்ள வரிசைகளைச் சேர்ந்த நகைகள், பவுன்கள், புடவை ரவிக்கை முதலிய விலை பெற்ற முக்கிய சாமான்கள் எல்லாம் இங்கே வந்துவிட வேண்டும். இந்த மூன்று காரியங்களும் இப்போது இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைவேறினால், பிறகு மற்றவர்களுடைய காரியத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.

இ. சேர்வைகாரன்:- அதற்கென்ன, அப்படியே செய்து விடுவோம். நீங்கள் சொல்வது போல மற்ற ஏற்பாடுகள் பலிக்காமல் போகுமானால், பிறகு ரயில் வண்டியைக் கவிழ்க்கும் காரியத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு அவசரமாய் முடிய வேண்டிய காரியங்கள் மூன்று. முதலாவது திகம்பரசாமியார் இந்த உலகத்தை விட்டுப்போய் விடும்படி செய்ய வேண்டியது. அதற்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அப்படிச் செய்து விடலாமா?

மாசிலாமணி:- என்ன யோசனை?

இ. சேர்வைகாரன்:- ஒரு சிறிய பெட்டி தயார்செய்து, அதற்குள் நாலைந்து நாகப்பாம்புகளைப் போட்டு மூடி திகம்பரசாமியாருக்கு அனுப்பிவிட்டால், நமக்குப் பதில் பாம்புகள் வேலை செய்து விடும் என நினைக்கிறேன்.

மாசிலாமணி:- (ஏளனமாகப் புன்னகை செய்து) நல்ல யோசனை சொன்னீர்! காரியம் வெகு சீக்கிரம் பலிக்கும் எந்த விஷயத்திலும் ஆழ்ந்து யோசனை செய்து, பலிதமாகக்கூடிய திறமையான யோசனை சொல்லக்கூடிய நீர்கூட ஏது இப்படிப்பட்ட பைத்தியக்கார யோசனையைச் சொல்ல முன்வந்தது?

இ. சேர்வைகாரன்:- என்ன எஜமானே! நான் சொல்வது எப்படிப் பைத்தியக்கார யோசனையாகும்? அதனால் நம்முடைய எண்ணம் நிறைவேறாதா?

மாசிலாமணி:- எப்படி நிறைவேறும்? முதலில் நமக்குப் பாம்புகள் வேண்டுமே! அதற்கென்ன செய்கிறது? நம்முடைய ஊரில் பிச்சை வாங்கவரும் தொம்பர்கள் கொண்டு வருகிற பாம்புகள் விஷப்பல் சுடப்பட்ட உபயோகமற்ற பாம்புகள் அல்லவா? இவைகள் தானே நமக்குக் கிடைக்கும். இவைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன காரியத்தைச் சாதிக்கிறது?

இ. சேர்வைகாரன்:- இவ்வளவு தூரம் யோசனை செய்து காரியத்தை முடிக்க எத்தனிக்கையில் விஷப்பல் இல்லாத பாம்பையா வாங்குகிறது. அதை எல்லாம் நான் யோசிக்காமலா இந்த ஏற்பாட்டை உங்களிடம் தெரிவிப்பேன். இதோ பக்கத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில் ஒரு பாம்புப் பிடாரன் இருக்கிறான். அவன் எனக்கு ஒருவிதத்தில் தெரிந்தவன். அவனிடம் நான் ஏற்கனவே போய் இந்த விஷயமாகப் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அவன் பாம்பு பிடிப்பதில் நிரம்பவும் கெட்டிக்காரன். மகா கொடுமையான விஷமுடைய சில கருநாகங்கள் அங்கே உள்ள காட்டில் இருக்கின்றனவாம். அந்த ஜாதிப்பாம்பு அதிக பருமனாக இருக்காதாம். இரண்டு விரல் பருமன், ஒரு முழ நீளம் இருக்குமாம். பார்ப்பதற்கு கருப்பாகவும் பளபளப்பாகவும் இருக்குமாம்; அவற்றின் மூச்சுப்பட்டால்கூட மனிதர் உடனே மயங்கி ஸ்மரணைதப்பிப் போய்விடுவார்களாம். அந்தப் பாம்புகள் ஆச்சரியகரமான வேகமும் சுருசுருப்பும் உடையவை களாம். அவைகளுக்கு மனிதரைக் கண்டால் ஆக்கிரோஷமும் மூர்க்கத்தனமும் அதிகமாகக் கிளம்புமாம். பெட்டியைத் திறக்கும் முன் அவைகள் பட்சிகள் பறப்பது போல குபிரென்று கிளம்பி வெளியில் வந்து பக்கத்தில் உள்ள மனிதரைக் கடித்துவிட்டுப் போய்விடுமாம். அப்படிப்பட்ட பாம்புகளில் 4 பாம்புகள் பிடித்துத் தருவதற்கு அவன் இருபது ரூபாய் பணம் கேட்டான். அதை முதல் நாள் கொடுத்தால், மறுநாள் காலையில் பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பதாக அவன் ஒப்புக் கொண்டான். அந்தப் பாம்புகளை நாம் கொடுக்கும் பெட்டியில் அவனே வைத்துப் பத்திரப்படுத்திக் கொடுத்துவிடுவான். பெட்டியை நாம் அப்படியே வாங்கி அனுப்ப வேண்டியது ஒன்றே நாம் செய்ய வேண்டிய காரியம்.

மாசிலாமணி:- அது சரிதான். அந்த மனிதனை நாம் நம்பலாமா? இதுவோ பிரமாதமான காரியம். நாளைக்கு அந்தப் பெட்டி திகம்பரசாமியாரிடம் போகிறதாகவே வைத்துக் கொள்வோம். பாம்புகள் அவனைக் கடிக்கின்றனவோ இல்லையோ அது வேறே விஷயம்; ஆனால், யாரோ பாம்பை ஒரு பெட்டியில் வைத்தனுப்பினார்கள் என்ற சங்கதி எப்படியும் பகிரங்கத்துக்கு வரும். போலீசார் பெட்டியை வைத்துக்கொண்டு விசாரணை செய்வார்கள். ஒரு வேளை பாம்புப் பிடாரர்களை எல்லாம் தேடிப் பிடித்து விசாரணை செய்வார்கள். சன்மானம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். தற்செயலாக அந்த விவரமெல்லாம் நம்முடைய பாம்புப் பிடாரனுக்குத் தெரிந்தால், அவன் பணத்தாசை பிடித்து, இன்னார்தான் தன்னிடம் பாம்புகளை வாங்கிக் கொண்டு போனது என்ற சங்கதியை வெளியிட்டுவிட மாட்டானா? அவன் இப்போது நம்மிடம் உறுதியாய் இருப்பதாக ஆயிரந்தான் சொன்னாலும் அப்படிப்பட்ட காதறுந்த நாய்களை எல்லாம், நாம் கடைசிவரையில் நம்பி இருப்பது அபாயகரமானது. பணம் என்றால், அந்த அன்றாங்காய்ச்சி நாய் எதையும் செய்து விடுமே! அந்த விஷயத்தில் நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது அத்யாவசியமானது அல்லவா?

இ. சேர்வைகாரன்:- ஆம்; அது நிரம்பவும் முக்கியமான விஷயந்தான். அதை நான் யோசித்தே ஜாக்கிரதையாகக் காரியத்தைச் செய்திருக்கிறேன். நான் என்னுடைய சுய ரூபத்தோடு போய் அவனிடம் பழக்கம் செய்து கொள்ளவில்லை. நான் ஒரு சாயப்புவைப் போல உடைகளைத் தரித்து தாடி முதலியவைகளை வைத்துக் கொண்டு போய் அவனை இரண்டு மூன்று தடவை பார்த்துப் பேசி, இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டு வந்திருக்கிறேன். நான் உண்மையில் யாரோ ஒரு சாயப்பு என்றே அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால், ஒருவேளை பின்னால், அவன் ஏதாவது சங்கதியை வெளியில் விட்டால்கூட, யாரோ ஒரு சாயப்பு தான் பாம்புகளை வாங்கிக் கொண்டு போனார் என்று அவன் சொல்லப் போகிறான். அதற்கும் நமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

மாசிலாமணி:- அதெல்லாம் சரிதான். நீர் பெட்டியை அனுப்பினால், அதை திகம்பர சாமியார் எதற்காக உடைத்துப் பார்க்கப் போகிறான்? அப்படியே உடைத்துப் பார்க்கப் பிரியப்பட்டாலும், அவனுக்கு வேறே ஆள்கள் இல்லையா? எவனையாவது விட்டுப் பெட்டியைத் திறந்து பார்க்கச் சொல்லப் போகிறான். அப்படி எவன் திறக்கிறானோ, அவனுக்குத்தான் தலைச்சீட்டுக் கிழிந்துவிடப் போகிறது. இதெல்லாம் நிச்சயமற்ற ஏற்பாடுதான். ஒரு யோசனை செய்தால், அதன் குறிப்பு கொஞ்சமும் தவறக்கூடாது. எந்த மனிதரை நோக்கி நாம் அம்பைச் செலுத்துகிறோமோ, அந்த மனிதரின் மேல் அந்த அம்பு தவறாமல் போய்த் தாக்க வேண்டும். அதுதான் பழுத்த யோசனை. அதைவிட்டு, இப்படிப்பட்ட நிச்சயமற்ற காரியத்தில் எல்லாம் இறங்குவது என் மனசுக்குப் பிடிக்கவில்லை.

இ. சேர்வைகாரன்:- நான் என்னுடைய யோசனை முழுதையும் சொல்லுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள்.

மாசிலாமணி:- சரி; சொல்லும்.

இ. சேர்வைகாரன்:- அந்தப் பாம்புகளை ஒர் அடி சதுரமுள்ள ஒரு சிறிய மூங்கில் பெட்டிக்குள் வைத்துவிடச் செய்கிறது. அதன் மேல் கச்சேரியில் உபயோகிக்கப்படும் உயர்வான காகிதங்களைப் போட்டு அழகான டொயின் கயிற்றைக் கொண்டு பார்வைக்கு லட்சணமாகக் கட்டிவிடுகிறது. அதன் பக்கங்களில் நாலைந்து இடங்களில் காற்று உள்ளே போகவும் வரவும் சிறுசிறு துளைகள் விட்டுவிடுகிறது. அதுவுமன்றி, அப்படிக் கட்டியவுடனே அதிக நேரம் தாமதிக்காமல், ஒரு வண்டியில் அவசரமாகப் போய் மன்னார் குடியில் உள்ள அந்த மனிதரிடம் சேர்த்துவிட்டால், அவைகள் அதிகமாகச் சோர்ந்து போகாமல், மூர்க்கமாகவும் கோபமாகவும் பலமாகவும் வெளிக்கிளம்பும். என்னிடம் இருக்கும் உடைகளில் போலிஸ் எட்கான்ஸ்டேபிலின் உடுப்பு ஒரு ஜதை இருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டு பெட்டியை நானே நேரில் எடுத்துக் கொண்டு போய் அவருடைய பங்களாவில் சேர்த்து விட்டு வெளியில் வந்து வேஷத்தைக் கலைத்து விட்டு எங்கேயாவது ஒளிந்திருந்து மெதுவாக நழுவி வந்து விடுகிறேன். அந்தப் பெட்டியோடு ஒரு கடிதமும் தயார் செய்து கொண்டு போய்க் கொடுக்கப் போகிறேன். அந்தக் கடிதம் தஞ்சாவூர் ஜில்லா போலீஸ் சூப்பரின்டென்டெண்டு துரை திகம்பரசாமியாருக்கு அனுப்பியது போலத் தயாரிக்கப் போகிறேன். இப்போதிருக்கும் துரையினிடம் நான் போலீஸ் வேலையில் இருந்தவன். ஆகையால், அவருடைய கையெழுத்து இன்ன மாதிரி இருக்கும் என்பது. எனக்கு நன்றாகத் தெரியும். நான் உடனே தஞ்சாவூரில் உள்ள போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு துரையின் ஆபீசுக்குப் போய், அந்த ஆபீஸ் பெயர் அச்சடித்த சில காகிதங்களைச் சம்பாதித்துக் கொண்டு வந்துவிடுகிறேன். உள்ளே எழுத வேண்டிய விஷயங்களையும் டைப்ரைட்டிங் மிஷினைக் கொண்டு அடிக்கச் செய்து கீழே துரையின் கையெழுத்தைப் போல நானே கையெழுத்திட்டு ஒர் உறையில் போட்டு ஒட்டிக் கையில் எடுத்துக் கொள்ளுகிறேன். அந்தக் கடிதத்தில் என்ன விஷயம் எழுதுகிறதென்றால், அந்த துரை உங்கள் அண்ணன் காணாமல் போன விஷயத்தில் ரகசியமாக விசாரணை செய்ய கும்பகோணம் வந்ததாகவும், வந்த இடத்தில், சட்டைநாத பிள்ளை அணிந்திருந்த சில உடைகளும், வேறு பல முக்கியமான சாமான்களும், கடிதங்களும் கிடைத்திருப்பதாகவும், அவைகளின் உதவியைக் கொண்டு, சட்டைநாத பிள்ளை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் திகம்பரசாமியார் ஏதாவது யோசனை சொல்ல முடியும் என்று தாம் அந்தச் சாமான்களை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு ஹெட்கான்ஸ்டேபில் வசம் கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், அது நிரம்பவும் ரகசியமான விஷயம் ஆகையால், பெட்டிக்குள் இருக்கும் சாமான்களை மற்றவருக்குக் காட்டாமல், சாமியார் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் டைப் அடித்து உறையில் போட்டு ஒட்டி, அதையும் பெட்டியையும் வாசலில் நிற்கும் ஜெவானிடம் கொடுத்து, சூப்பரின்டெண்டெண்டு துரை அவசரமாகக் கொடுக்கச் சொன்னதாக சொல்லி அவனை உள்ளே அனுப்பி விட்டு, நான் ஒட்டமாக வந்து மறைந்து போகிறேன். சாமியார் கடிதத்தைப் பார்த்தவுடனே அதை உண்மை என்றே நம்பி விடுவான். அவன் எந்த விஷயத்தையும் பிறர் அறியாமல் மறைவாகச் செய்கிறவன். பெட்டிக்குள் என்ன சாமான் இருக்கிறது என்பதைத் தன்னுடைய சேவகன் கூடத் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைத்து தனியான ஒர் அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டு பெட்டியைத் திறந்து பார்ப்பான். உடனே அவனுடைய சிநேகிதர்கள் பெட்டிக்குள் இருந்து வெளியில் வரப் போகிறார்கள். அதற்குமேல் அவனுடைய தலைவிதிப்படி முடிவு ஏற்படட்டும்.

மாசிலாமணி:- (மிகுந்த களிப்பும் திருப்தியும் அடைந்து) பேஷ்! சேர்வைகாரரே! நல்ல முதல்தரமான யோசனை! இது அவசியம் பலிக்கும் என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. முழு விவரத்தையும் நீர் சொன்ன பிறகுதான், எனக்குத் திருப்தி ஏற்பட்டது. முதலில் இது பைத்தியக்கார யோசனையாகத் தோன்றியது. எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து யோசித்து, யாரும் ஆட்சேபனை சொல்ல முடியாதபடி அவ்வளவு அழுத்தம் திருத்தமான யோசனை சொல்லக்கூடிய நீர், அப்படிச் சொல்லுகிறீரே என்று நினைத்து நான் உம்மை ஏளனமாகப் பேசிவிட்டேன். அதை மனசில் வைக்க வேண்டாம். இந்த ஏற்பாட்டின்படியே காரியத்தை முடித்துவிடும். இதோடு அந்தப் பரதேசி நாய் ஒழிந்து போவது நிச்சயம். நீர் செய்வதை அதிக தாமதம் இன்றி உடனே செய்து விட்டால் அவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு சென்னைப் பட்டணம் போவதைக்கூட நிறுத்தி னாலும் நிறுத்திவிடுவார்கள். அங்கேயுள்ள பெண்ணை நாம் அபகரித்துக் கொண்டு வருவதற்கு நமக்கு வேண்டிய அவகாசம் நிரம்பவும் கிடைக்கும். ஆனால் நீர் பாம்புப் பெட்டியைக் கொண்டு போகும்போது மிகவும் ஜாக்கிரதையாய்ப் போக வேண்டும். பெட்டியின் மேல் பல இடங்களில், காற்று உள்ளே போய் வருவதற்காகத் தொளைகள் விட்டிருக்க வேண்டும் அல்லவா. பாம்புகள் ஒருவேளை நாக்கை வெளியில் நீட்டினால், அது கையில் பட்டாலும் படும். அதுவுமன்றி அவைகளுடைய மூச்சுக்காற்றை நாம் சுவாசித்தால், உடனே மயக்கம் வரும் என்று சொன்னரே, அதனாலும் உமக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இ. சேர்வைகாரன்:- பாம்புகளுக்குக் காற்றே அதிகம் தேவை இல்லை. பாம்பாட்டிகள் சாணியால் மெழுகப்பட்ட பெட்டிக்குள்ளும் குடத்துக்குள்ளும் பாம்பைப் போட்டு மூடித்தானே எப்போதும் வைத்திருக்கிறார்கள். பெட்டிக்குள்ளும் குடத்துக்குள்ளும் கொஞ்சமும் காற்று போகிறதற்கே மார்க்கம் இருக்கிறதில்லை. அப்படி இருந்தும் அது வெகுகாலம் ஜீவித்திருப்பதை நாம் பார்க்கவில்லையா. அதுவுமன்றி, பாம்புகள் புற்றிற்குள் பூமியின் கீழே உருண்டைப் போலச் சுருண்டு தானே எப்போதும் கிடக்கின்றன. உள்ளே காற்றே இராது. புற்று வாயின் வழியாக உள்ளே போகும் காற்று மகா சொற்பமாக இருக்கும். அதைக் கொண்டே பாம்புகள் ஜீவித்திருக்கின்றன. ஆகையால் பாம்புகளுக்கு நாம் தொளைகள் விடாவிட்டால்கூட, அவைகள் சாகப் போகிறதில்லை. ஆனாலும், அதிக எச்சரிப்பாக இருப்பதையும் கருதி, ஒரு கோணி ஊசி நுழையும்படியான துளைகள் ஐந்தாறு விட்டுவைப்போம். அதுவே போதுமானது. உள்ளே இருக்கும் பெட்டி இரண்டு விரற்கடை கனம் இருக்கும்படியாகச் செய்து கொண்டால், பாம்பின் நாக்கு வெளிவரையில் எட்டாது. அதுவுமன்றி, உள்ளே இருளில் கிடக்கும் பாம்பு நாம் வைத்திருக்கும் சிறிய தொளையைப் பார்த்து நாக்கை நீட்டவா போகிறது. அப்படி நீட்டினாலும், நாக்கில் அவ்வளவாக விஷம் இராது; அதுவுமன்றி, அந்தப் பெட்டியை நான் கையால் தொட்டே துக்கப் போகிறதில்லை. ஒரு கயிற்றைப் பெட்டியின் மேல் துக்குப் போட்ட மாதிரி கட்டி, கயிற்றைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போகப் போகிறேன். அதே மாதிரி, திகம்பர சாமியாருடைய பங்களாவில் இருக்கும் பாராக்காரனிடம் கொடுக்கப் போகிறேன். ஆகையால் அந்த விஷயத்தில் யாதொரு கெடுதலும் ஏற்படா தென்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். நான் இதை உடனே முடிக்கிறேன். இப்போதே நான் புறப்பட்டு அடுத்த ரயிலில் ஏறி தஞ்சாவூருக்குப் போகிறேன். நேராக போலிஸ் சூப்பரிண்டெண்டெண்டின் கச்சேரிக்குப் போய், அங்கே உள்ள என்னுடைய பழைய சிநேகிதர்களைப் பார்த்து விட்டு வருகிறவன் போல, துரை கடிதம் எழுதும் காகிதத்தில் நாலைந்து எடுத்துக் கொண்டு அடுத்த வண்டியிலேயே திரும்பி இங்கே வந்து விடுகிறேன். நாளைய தினம் காலையில் நான் உப்பிலியப்பன் கோவிலுக்குப் போய் பாம்புப் பிடாரனைக் கண்டு, நாளைக்கு மறுநாள் காலையில் நான் பெட்டியோடு வருவதாகவும், பாம்புகளைச் சித்தமாக வைத்திருக்கவும் சொல்லிப் பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன். உடனே பெட்டி முதலிய மற்ற சாமான்களையும், டைப் அடிக்க வேண்டிய கடிதம் முதலியவைகளையும் நாளைய தினமே முடித்து வைத்துக் கொள்ளுகிறேன். இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு குதிரை வண்டியும் அமர்த்திக் கொள்கிறேன். உப்பிலியப்பன் கோவிலில் பெட்டியை வாங்கிக் கொண்டு வெகு தூரத்திற்கு அப்பால் வந்த பிறகு அவ்விடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்திருக்கும் வண்டியில் ஏறிக்கொள்ளுகிறேன். உடனே வண்டியை விசையாக விட்டுக் கொண்டு மன்னார் கோயில் போய்ச் சேர்ந்து ஊருக்கு வெளியிலேயே இறங்கிக் கொண்டு, வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்தனுப்பி விட்டு, எங்கேயாவது இருந்து போலீஸ் எட்கான்ஸ்டேபிளின் உடுப்பைப் போட்டுக் கொண்டு உடனே அவனுடைய பங்களாவுக்குப் போய்க் காரியத்தை முடித்துவிட்டு வந்து உடுப்புகளை அவிழ்த்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு வேறு குதிரை வண்டி வைத்துக் கொண்டு திருத்தருப் பூண்டிக்குப் போய் அங்கிருந்து ரயிலேறி திருவாரூர், மாயூரம் வழியாக இங்கே வந்து விடுகிறேன். யாரும் என்னைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இந்த வேலையை நான் வெகு தந்திரமாக முடிக்கிறேன். இதைப்பற்றி எஜமான் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். ஆனால், நாம் சம்பந்தப்பட்ட வரையில் காரியத்திற்கு யாதொரு பழுதும் ஏற்படாமல் முடித்துவிட்டு வருவேன் என்பதை நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம். ஆனால் நாம் எதிர் பார்ப்பது போல மற்ற காரியங்களும் நிறைவேற வேண்டும். திகம்பரசாமியார் நிரம்பவும் சூட்சுமமான புத்தியுடைய மனிதன். எதிலும் சுலபத்தில் ஏமாறுகிறவன் அல்ல. அவனே தனியாக இருந்து பெட்டியைத் திறக்க வேண்டும். பாம்புகள் வெளியில் வந்து பயந்து சிதறி நாலாபக்கங்களிலும் ஓடி விட்டால், அவன் தப்பி ஓடிவிடுவான். அதெல்லாம் ஒழுங்காய் நிறைவேற வேண்டும். என்னவோ பார்க்கலாம். காரியம் பலிப்பது முக்காலே மூன்று வீசம் பங்கு நிச்சயம். மாசிலாமணி:- வாஸ்தவமே, நாம் நேருக்கு நேர் இருந்து முடிப்பதானால் எல்லாம் நிச்சயமாகவே முடியும். மறைவில் இருந்து கொண்டே காரியங்களை நடத்த வேண்டி இருக்கிறது. ஆகையால், கொஞ்ச பாகத்தைச் சந்தேகத்தில்தான் விட வேண்டி இருக்கிறது, என்னவோ நாம் செய்யக் கூடியதைச் செய்து பார்ப்போம். பலித்தால் பலிக்கட்டும். பலிக்காவிட்டால் இன்னம் ஏதாவது தந்திரம் செய்வோம். நமக்கு இதோடு ஆயிசு முடிந்தா போகிறது. நாமும் இருக்கப் போகிறோம். அவனும் இருக்கப் போகிறான்; பார்க்கலாம் ஒரு கை.

இ. சேர்வைகாரன்:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) அவனும் இருக்கப் போகிறான் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? அவன் இறக்கப் போகிறான் என்று சொல்லுங்கள்.

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) ஒகோ அப்படியே வைத்துக் கொள்ளுமே! உமக்கேன் வருத்தம்? அதைத்தானே நாம் கோருகிறது.

இ. சேர்வைகாரன்:- நீங்கள் கோரிய மூன்று காரியங்களில் ஒன்று இப்படித் தீர்ந்தது. இரண்டாவது, கலெக்டருடைய பெண்ணை அபகரித்து இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டியது. அந்த விஷயந்தான் கொஞ்சம் சிரமப்படும் என்று நினைக்கிறேன். நான் இதற்கு முன் சென்னைப் பட்டணத்துக்குப் பல தடவைகள் போய் வந்திருக்கிறேன். ஆனாலும், அது நமக்குப் புதிய ஊர். நம்முடைய சொந்த ராஜ்யம் போலிருக்கும் இந்த ஜில்லாவில் நாம் எப்படிப்பட்ட அபாரமான காரியங்களையும் சுலபத்தில் சாதித்து விடலாம். அது அயல்நாடு. அங்கே நமக்கு வேண்டிய வசதிகளும் செளகரியங்களும் கிடைப்பது துர்லபம். ஆனாலும், நாம் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அந்தக் காரியத்தை முடிக்கத் தான் வேண்டும். ஒரு காரியம் ஆகவேண்டும் என்ற பிடிவாதமான எண்ணம் விழுந்து விடுமானால், அது லண்டன் தேசத்தில் செய்ய வேண்டிய காரியமாக இருந்தாலும் செய்துதான் தீரவேண்டும். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதை எஜமானர் முதலில் தீர்த்து வைத்தால், நான் மற்ற ஏற்பாட்டைச் சொல்லுகிறேன். அந்தப் பெண்ணைக் கொண்டுவர வேண்டும் என்கிறீர்களே! அவளைக் கொண்டு வந்து கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டா?

மாசிலாமணி:- அதெப்படி முடியும்? நாம் திருட்டுத்தனமாகவும் பலவந்தமாகவும் கொண்டுவரப் போகிறோம். அந்தப் பெண்ணை நாம் கொண்டு வந்தோம் என்பதே எவருக்கும் தெரியக்கூடாது. கலியானம் என்றால் பந்து ஜெனங்கள் அறிய பகிரங்கமாகச் செய்ய வேண்டிய சடங்கல்லவா. அப்படி இருக்க, அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து ஏகாங்கியாக வைத்துக் கொண்டு நாம் கலியாணம் செய்து கொண்டால், ஜனங்கள் அதைப்பற்றி சந்தேகிப்பார்கள். அது பற்பல கேள்விகளுக்கு இடங்கொடுக்கும். அதற்கெல்லாம் நாம் எவ்விதமான சமாதானம் சொல்லுகிறது? முதலில் அந்தப் பெண்ணே வாயை மூடிக்கொண்டு சாந்தமாக கலியாணத்தை நடத்திக் கொள்வாளா? ஒரு நாளும் அவள் இணங்கி வரமாட்டாள்; அல்லது நாம் முதலில் பெண்ணை அபகரித்து வந்து ஒளிய வைத்துக் கொண்டு தந்திரமாக அவளுடைய தகப்பனிடம் போய்ப் பேசி, எனக்கு அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க இணங்கினால், பெண் இருக்கும் இடத்தை நான் காட்டுகிறேன் என்று சொன்னாலும், அவன் நமக்கு மேல் அதிக தந்திரம் செய்வான். நம்முடைய பிரியப்படி செய்வதாக முதலில் ஒப்புக் கொண்டு பெண்ணை அடைந்த பிறகு நம்மை ஏமாற்றி விடுவான். ஜெயில் தண்டனை அடைந்தவன் என்ற இழிவு எனக்கு ஏற்பட்டிருக்கையில், அவன் பகிரங்கமாகத் தன்னுடைய பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுப்பானா? ஆரம்பத்தில் இருந்தேதான் நமக்கும் அவனுக்கும் ஜென்மப் பழியாய்ப் போய்விட்டதே; அப்படி இருக்க, அவன் தன்னுடைய பெண் போனாலும் போகட்டும் என்று விட்டு விடுவானே அன்றி, அவளை எனக்கு மாத்திரம் கட்டிக்கொடுக்கவே மாட்டான். ஆகையால் கலியாணம் என்ற எண்ணத்தையே மூட்டையாகக் கட்டி துரத்தில் வைத்துவிட வேண்டியது தான்.

இ. சேர்வைகாரன்:- இந்தச் சங்கதி எல்லாம் எனக்குத் தெரியாதா? பெண்ணும், தகப்பனும் கலியாணத்திற்கு இணங்க மாட்டார்கள் என்பதும், ஜனங்கள் கேள்விகள் கேட்பார்கள் என்பதும் எனக்குத் தெரிந்த விஷயம். நான் கருதியது வேறு மாதிரியானது; எப்பாடுபட்டாவது பெண்ணை நாங்கள் கொண்டு வந்து சேர்க்கத்தான் போகிறோம். பெண் நிரம்பவும் அழகாக இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். அவளைக் கண்டவுடன் உங்களுக்கு எப்படியும் பிரியம் உண்டாகும் என்றே நினைக்கிறேன். அவளை நீங்கள் எப்படியும் உங்கள் வசப்படுத்திக் கொள்ளத்தான் போகிறீர்கள். அப்படி வசப்படுத்திக் கொண்டு கொஞ்சகாலம் இருந்த பிறகு, அவளை அனுப்பிவிட உங்களுக்கு மனம் வராதென்றே நினைக்கிறேன். அப்படி இருக்க, அவளை நீங்கள் துரத்திவிடுவது எப்படி? அப்படியே நீங்கள் துரத்தி விட்டாலும், அவள் தன்னுடைய தகப்பனிடம் போய் எல்லாச் சங்கதியையும் வெளியிட்டால், அவர்கள் உங்கள் மேல் வியாஜ்ஜியம் தொடர்ந்தாலும் தொடரலாம், அல்லது, அந்தப் பெண் உங்களிடம் வந்து இருந்ததென்ற விஷயத்தையே அவர்கள் அடியோடு மறைத்து, அவளை வேறே யாருக்காவது கட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள். அதுவுமன்றி, அந்தப் பெண்னை நாம் இங்கே கொண்டு வந்தபின், நீங்கள் அவளிடம் போய், உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற எத்தனித்தால், அவள் அதற்கு சுலபத்தில் இடங்கொடுக்காமல் முரட்டுத்தனம் செய்தாலும் செய்யலாம். ஒருவேளை அவள் சாப்பிடாமலேயே பட்டினி கிடப்பாள்; அல்லது, எந்த வகையிலாவது அவள் தன்னை மாய்த்துக் கொள்ள வழி தேடினாலும் தேடுவாள். அதற்கெல்லாம் இடங்கொடுக்காமல் நாம் ஒரு காரியம் செய்து விடுவது நலம் என்று நினைக்கிறேன். அந்தப் பெண்ணின் மனசுக்கு விரோதமாக அவளை அடைவதைவிட, அவள் ஒரு விதமாக இணங்கி வரும்படி செய்து காரியத்தைச் சாதிப்பது உசிதமானதென்று நினைக்கிறேன். என்னவென்றால் நாம் பெண்ணைக் கொண்டு வந்து இரண்டொரு நாள் சும்மா வைத்திருக்கிறது. அந்தக் காலத்தில் நீங்கள் அவளிடம் நம்முடைய உள்கருத்தை வெளியிடாமலும், அவள் சந்தேகப்படாத படியும் நடந்து கொண்டு, அவளுடைய பிரியத்தை உங்கள் பேரில் திருப்ப முயற்சி செய்து பாருங்கள். அது முடியாவிட்டால், அவள் உங்கள் பேரில் வெறுப்பாவது கொள்ளாமல் செய்து கொள்வோம். பிறகு நாம் நம்முடைய ஆள்களில் முப்பது நாற்பது பேரைக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுகிறது. அவர்கள் எல்லோரும் தக்க பெரிய மனிதர்களைப் போல் ஆடைகள் அணிந்து வரும்படி செய்தால், பார்வைக்கு அவர்கள் நம்முடைய பந்துக்கள் போலவும் சிநேகிதர்கள் போலவும் தோன்றுவார்கள். நானே பூனூல் விபூதிப் பட்டை முதலியவைகளைப் போட்டுக் கொண்டு நாணல்பில், பொரசங்குச்சி முதலிய சாமான்களை எடுத்துக் கொண்டு பஞ்சாங்கக்கார ஐயரைப் போல வருகிறேன். எல்லோரும் உட்கார்ந்து ஆடம்பரமாகக் கலியாணச் சடங்கை நடத்தி முடிவில் அந்தப் பெண்ணைப் பலவந்தமாகக் கொண்டு வந்து மணையில் உட்கார வைப்போம். நான் வாயில் வந்ததை உளறி ஏதோ மந்திரம் சொல்லுகிறது போல பாசாங்கு பண்ணுகிறேன். நீங்கள் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுங்கள். பிறகு நம்முடைய ஆள்கள் எல்லோரும் மெதுவாக வெளியில் நழுவி விடட்டும். அதன் பிறகு நீங்கள் அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் நல்ல வார்த்தையாகவே பேசி முயற்சி செய்யுங்கள். தான் அதற்குமேல் எதையும் செய்ய முடியாதென்ற எண்ணம் அவளுடைய மனசில் உண்டாகிவிடும். அதுவுமன்றி, அதற்கு மேல் தான் வேறே யாரையும் கட்டிக் கொள்ள முடியாது என்ற நினைவும் உண்டாகிவிடும். பிறகு அவள் அநேகமாய்ப் படிமானத்திற்கு வருவாள். பிறகு உங்களுக்குப் பிரியமானால், அவளை எப்போதுமே வைத்துக் கொள்ளுங்கள். அல்லது, கொஞ்ச காலத்துக்குப் பிறகு துரத்திவிட வேண்டும் என்று தோன்றினாலும், அப்படியே செய்துவிடலாம். அவள் உங்களோடு இருக்கும் வரையில், இது இன்ன ஊர் என்ற தகவலாவது, நீங்கள் இன்னார் என்ற விவரமாவது தெரியவே கூடாது. நாம் கடைசியில் அவளை அனுப்பிவிட வேண்டுமானால், இப்போது அவளை எவ்வளவு ரகசியமாகக் கொண்டு வரப் போகிறோமோ அதுபோலவே கொண்டு போய், அவளுடைய தகப்பன் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் விட்டுவிட்டு வந்து விடுவோம். அவளை நீங்கள் அனுப்பும் போது, அவள் குறைந்தது, ஏழெட்டு மாசமாவது கர்ப்பம் தரித்திருக்கும்படி நீங்கள் செய்து விடுவீர்களானால், அது எல்லாவற்றிலும் உசிதமாக இருக்கும்.

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) சேர்வைகாரரே! இது பேஷான யோசனை! நீர் சொல்லுகிறபடி செய்தால் கலியாணம் வெகு விநோதமாக இருக்கும். இவ்வளவு தூரம் யோசனை செய்து சொன்னரே கலியாணம் என்றால், மேளம் கிராமப் பிரதக்ஷிணம் முதலியவைகள் எல்லாம் வேண்டாமா?

இ. சேர்வைகாரன்:- (வேடிக்கையாகச் சிரித்து) மேளம் இல்லாமலா கலியாணம் நடக்கும். நாம் கலியாணத்தை மூன்றாவது கட்டில் வைத்துக் கொள்வோம். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மேளக்காரர் சிலரைக் கூப்பிட்டு முதல் கட்டிலிருந்து கொஞ்ச நேரம் ஊதச் செய்து அனுப்பிவிட்டால் போகிறது. என்ன விசேஷம் என்று யாராவது கேட்டால், வீடு புதிதாகக் கட்டியது. ஆகையால் கிரகப்பிரவேசம் நடக்கிறதென்று சொல்லிவிட்டால், அதைக் கேட்டுக் கொண்டு போகிறார்கள். அல்லது, மேளமே இல்லாமல் கலியாணத்தை நடத்தி விட்டாலும், கலியாணம் நடந்து போய் விடுகிறது. மேளம் இல்லாததினால் இது கலியாணமாகாது என்று அந்தப் பெண் ஆட்சேபனை சொல்லப் போகிறாளா? அதொன்றும் இல்லை. அது போலவே கிராமப் பிரதக்ஷிணம் ஏன் செய்ய வில்லை என்றும் அந்தப் பெண் கேட்கப் போகிறதில்லை. கலியாணம் என்றால், தாலி கட்டுவது ஒன்று தான் எல்லா வற்றிலும் முக்கியமானது. அதை நாம் நிறைவேற்றி விடுவோம். எதற்காக என்றால், அந்தப் பெண் முதலில் படிமானத்திற்கு வருகிறதற்கும், நாம் திருப்பிக் கொண்டு போய்விட்ட பிறகு அவள் வேறே கலியானம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் இந்தச் சடங்கு அவசியமானதென்று நினைக்கிறேன்.

மாசிலாமணி:- சரி; உம்முடைய இஷ்டப்படியே எதை வேண்டுமானாலும் நடத்தும். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நீர் மனசில் நிச்சயமாக வைத்துக் கொள்ளும்; அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள் என்பதைக் கருதி நான் அவளை இங்கே கொண்டு வர ஆசைப்படவில்லை. அவளுடைய தகப்பன் செய்த படு மோசத்திற்காகப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஆவல்தான் என் மனசில் இருந்து துண்டுகிறது. ஆகையால் அவள் அழகாக இல்லாவிட்டால் கூட அவளைக் கொண்டு வந்து கெடுத்தனுப்ப வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஆகையால், அவளோடு கொஞ்சகாலம் பழகிய பிறகு அவளை அனுப்ப எனக்கு மனம் வராமல் போய்விடுமோ என்று நீர் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டியதே இல்லை. அவள் விஷயத்திலாவது, அவளுடைய தகப்பன் விஷயத்திலாவது நான் ஒரு கடுகளவு இரக்கங் கொண்டால் கூட, எனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும். ஆகையால், எப்படி இருந்தாலும், அவளை நாம் கொஞ்ச காலம் வைத்திருந்த பின் அனுப்பிட வேண்டியதே முடிவு.

இ. சேர்வைகாரன்:- சரி; அது உங்களுடைய இஷ்டத்தைப் பொருத்தது. நான் எப்படியாவது சிரமப்பட்டு அந்தப் பெண்ணை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய சாமர்த்தியத்தின் படியும், மனப்போக்கின் படியும் நடந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. சென்னைப் பட்டணமோ, இங்கே இருந்து தொலை தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு துரத்தில் இருந்து அந்தப் பெண்ணை நாம் அதன் மனசுக்கு விரோதமாகவும் வலுக் கட்டாயமாகவும் இந்த ஊருக்கு எப்படிக் கொண்டு வருகிறது என்ற யோசனைதான் திருப்திகரமாக புலப்படவில்லை.

மாசிலாமணி:- ரயிலில் வைத்துக் கொண்டு வருவது சாத்தியம் இல்லாத காரியம்.

இ. சேர்வைகாரன்:- ஆம் ஆம்; ரயிலில் கொண்டுவர முடியாது. நாம் நம்முடைய மோட்டார் வண்டியைக் கொண்டு போய், அதற்குள் வைத்துத்தான் கொண்டு வர வேண்டும். அதைக்கூட நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாகத்தான் செய்ய வேண்டும். அதுவும் அபாயகரமானது தான். அவளை இங்கே கொண்டு வராமல், பட்டணத்திலேயே எங்கேயாவது மறைத்து வைத்துக் கொள்வதென்றால், அது வெகு சுலபமான காரியம். அப்படிச் செய்வதென்றால் நீங்களும் பட்டணத்தில் கொஞ்ச காலம் வாசம் செய்ய நேரும்.

மாசிலாமணி:- அது முடியாது. நான் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும். வேறே எங்கேயாவது போனால், போலீஸ் நாய்கள், நம்ம போகிற இடத்தைக் கேட்டுக் கொண்டு, அங்கே இருக்கிற போலீசாருக்கு எழுதுவார்கள். அவ்விடத்திலும் அவர்களுடைய உபத்திரவம் ஏற்படும். இங்கேயாவது நாம் அந்தப் பெண்ணை எவரும் கண்டுபிடிக்க முடியாத ரகசியமான இடத்தில் ஒளித்து வைக்கலாம். அங்கே நாம் அப்படிச் செய்ய முடியாது. அதுவும் அல்லாமல், நான் இங்கே இருந்து வேறே முக்கியமான பல காரியங்களைக் கவனிக்க வேண்டியவனாக இருப்பதால், நான் அந்தச் சிறுக்கிக்காக சென்னைப் பட்டணத்தில் வாசம் செய்ய முடியவே முடியாது.

இ. சேர்வைகாரன் :- அப்படியானால், நான் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்தப் பெண்ணை அவர்களுடைய பங்களாவில் இருந்து அபகரித்த உடனே, அதற்கு மயக்கம் உண்டாகும் படியாக குளோரபாரம் முதலிய மருந்துகளைப் பிரயோகித்து, மோட்டாரில் வைத்துக் கொண்டு ஒரே விசையாக ரஸ்தா வழியாகவே இந்த ஊருக்கு வந்துவிட வேண்டும். நடுவழியில் அவள் மயக்கம் தெளிந்து விழித்துக் கொண்டால், மறுபடியும் அதே வஸ்துவைக் கொடுத்துக் கிழே வீழ்த்தி இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டும். வண்டியின் பின்பக்கத்தில் கோஷா ஸ்திரீகளுக்காக வைக்கும் மறைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யாராவது நடுவில் விசாரித்தால், தஞ்சாவூர் கலெக்டர் ஆமதுடீன் சாயப்புவின் கோஷா மனைவி போகிறாள் என்று சொல்லி விடுவோம். நல்ல வேளையாக தஞ்சாவூரில் அந்தப் பெயருடைய சாயப்பு கலெக்டராக இருக்கிறார்.

மாசிலாமணி:- (சந்தோஷமாகச் சிரித்து) சபாஷ் சேர்வைகாரரே! உம்முடைய சமயோசித தந்திர ஞானத்தை நான் எப்படிப் புகழப் போகிறேன். புத்திசாலித் தனத்திலும் செளரியத்திலும் திகம்பர சாமியார்கூட உம்முடைய காலில் ஒட்டிய தூசிக்கும் நிகர் ஆக மாட்டான். அதிருக்கட்டும், நீர் எப்போது பட்டணம் போகிறீர்? இ. சேர்வைகாரன் :- எஜமான் இப்போது அனுப்பினாலும் போகத் தடையில்லை. முதலில் திகம்பரசாமியாருடைய வேலையை முடிக்கச் சொன்னால், நாளைக்கு மறுநாள் வரையில் இங்கே இருந்து அதன் முடிவைப் பார்த்துக் கொண்டு போகிறேன். திகம்பரசாமியார் மாண்டு போனால், நிச்சயதார்த்தம் இப்போது நடக்காது. இவர்கள் அதை சில தினங்கள் ஒத்தி வைப்பது நிச்சயம். எல்லாவற்றிற்கும் இவர்கள் பட்டணம் வருவதற்குள், அதை முடித்துவிட்டால் நலம் என்று நினைக்கிறேன்.

மாசிலாமணி:- இந்த இரண்டு தினங்களில் இந்தப் பரதேசியின் வேலையை முடித்துவிட்டு அன்றைய தினமே நீர் ஆள்களோடு பட்டணம் போம். மோட்டார் வண்டியை ஒருவன் வசம் அனுப்புகிறேன். அங்கே போய் எப்படியாவது முயற்சி செய்து நிச்சயதார்த்தத்துக்குள் பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிடும்.

இ. சேர்வைகாரன்:- அவர்கள் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் இருப்பதாகக் கேள்வி. பங்களா ஒதுக்குப்புறமான ஒர் இடத்தில் இருக்கும். இரவில் நாலைந்து டலாயத்துகள் காவல் இருப்பார்கள். பங்களாவுக்குள் அப்பன் மகள், நாலைந்து வேலைக்காரிகள் அவ்வளவு பேர்தான் இருப்பார்கள். நாங்கள் சுமார் 25 பேர் போய், எல்லோரையும் அடித்துப் போட்டு விட்டு, பெண்ணைத் துக்கி மோட்டாரில் வைத்துக் கொண்டு வந்து விடுகிறோம். ஆள்கள் ரயிலில் வந்து விடட்டும். நிச்சயதார்த்த தினத்திற்குள், காரியம் முடியாவிட்டால், கந்தசாமி கொடுத்தது போலவும் கலெக்டர் கொடுத்தது போலவும், மன்னார். குடியாருக்கு இரண்டு தந்திகள் கொடுத்து, பெண் மாதவிடாய் ஆகிவிட்டதால், நிச்சயதார்த்தம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், தேதி பின்னால் அறிவிக்கப்படும் என்றும், அது வரையில் யாரும் புறப்பட்டுவர வேண்டாம் என்றும் தெரிவித்து விடுகிறேன். அதே தினம் உங்களுக்கும் ஒரு விவரமான தந்தி அனுப்புகிறேன். அதில் நான் பெயர்களையே குறிப்பிடாமல் பூடகமாக சங்கதிகளைத் தெரிவிக்கிறேன். அதன்படி நீங்கள் யாரையாவது மன்னார்கோவிலுக்கு அனுப்பி அங்கே இருந்து பட்டணத்தில் உள்ள கந்தசாமிக்கும் கலெக்டருக்கும் இரண்டு தந்திகள் கொடுத்து விடுங்கள். எப்படி என்றால், வடிவாம்பாள் மாதவிடாய் ஆகிவிட்டதால் நிச்சயதார்த்தம் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது என்றும், மறுதேதி சில தினங்களில் தெரிவிக்கப்படும் என்றும் செய்தி அனுப்பிவிடுங்கள். அதற்குள் நான் காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்.

மாசிலாமணி:- சரி. இது நல்ல யோசனைதான். இரண்டு வேலைகளையும் முதலில் முடியும். மிகுதி வேலையைப் பற்றி நாம் நடக்க நடக்க யோசித்துக் கொள்வோம்.

இ. சேர்வைகாரன்:- சரி. அப்படியே முடிக்கிறேன். எனக்கு நேரமாகிறது. இன்னும் அரை மணி நேரத்தில் தஞ்சாவூருக்கு ஒரு ரயில் போகிறது. நான் அதிலேயே போய் போலீஸ் ஆபீசில் ஆக வேண்டியதை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன். உத்தரவு கொடுங்கள்.

மாசிலாமணி:- சரி, போய் வாரும்.

உடனே இடும்பன் சேர்வைகாரன் விசிப்பலகையை இழுத்துப் போட்டு, அதன்மேல் ஏறி, சுவரின் திறப்பின் வழியாக நுழைந்து அப்பால் போய்விட்டான்.

★⁠★⁠★

4-வது அதிகாரம்

பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை

மாசிலாமணியும் இடும்பன் சேர்வைகாரனும் உரையாடிக் கொண்டிருந்த தினமும், அதற்கு மறுதினமும் கழிந்தன. மூன்றாவது நாள் பிற்பகல் மூன்று மணி நேரம் இருக்கலாம். மன்னார்குடி சீமான் வேலாயுதம் பிள்ளையினது மாளிகையின் மேன் மாடத்தில் விரிக்கப்பட்டிருந்த வழுவழுப்பான ஒரு பிரப்பம் பாயின் மீது நமது மாது சிரோன்மணியான வடிவாம்பாள் தனிமையில் வீற்றிருந்தாள். அன்றைய தினம் காலையில் அவளது மாமி திரிபுரசுந்தரி அம்மாள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஒரு பட்டுச்சேலை ஆணியில் மாட்டிக் கிழிபட்டுப் போனது. ஆகையால், அன்றைய தினப்படி அலுவல்களை எல்லாம் முடித்துவிட்டு ஒய்ந்து உட்கார்ந்திருந்த வடிவாம்பாள் அந்தப் புடவையை எடுத்து வைத்து பயபக்தியோடு தைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த மாளிகையின் கீழ்க்கட்டில் பாத்திரங்கள் சுத்தி செய்து கொண்டிருந்த வேலைக்காரி ஒருத்தியைத் தவிர, வேறே எவரும் காணப்படவில்லை. எல்லோரும் தமது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு ஏதோ அலுவலை உத்தேசித்து வெளியில் போயிருந்தனர். வேலாயுதம் பிள்ளையும், அவரது மனைவியும், நாலைந்து மையில் துரத்தில் உள்ள பூவனூர் என்ற ஊரில் இருந்த தங்களது முக்கிய பந்துக்களான சில பெரிய மனிதர்களுக்குப் பாக்கு வைத்து நிச்சயதார்த்தத்திற்கு அழைத்து விட்டு வருவதற்காகப் புறப்பட்டுப் போயிருந்தனர். நடராஜ பிள்ளை நீடாமங்கலத்தில் இருந்த கீர்த்தி வாய்ந்த ஒரு தட்டானிடம் சென்றிருந்தார். கண்ணப்பா உள்ளுரில் ஜரிகைப் புடவைகள் நெய்வதில் மகா தேர்ச்சி அடைந்திருந்தவரான ஒரு பட்டுநூல்காரரது வீட்டிற்குப் போயிருந்தான். அவ்வாறு மற்ற எல்லோரும் நமது இளநங்கையைத் தனியளாய் விடுத்து வெளியிற் சென்றிருந்தனர். ஆதலால், அந்த மடமங்கை முன் கூறப்பட்டபடி தனது மாமியாரினது புடவையின் பிணியை நிவர்த்திப்பதான திருப்பணியைச் செய்து பொழுது போக்கத் தொடங்கினாள். அவள் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமே அன்றி, ஒரு நிமிஷமும் சும்மா இருக்கக்கூடாது என்று அவளது மாமன் மாமியார் கட்டளையிட்டு இருந்ததால், அவள் அந்த வேலையைச் செய்தாளோ என்றாவது, அல்லது, கிழிபட்டுப் போகும் தங்கள் வீட்டு உடைகளைத் தையல்காரனிடம் கொடுத்துத் தைத்துக் கொண்டால், அதனால் வீண் செலவு ஏற்படும் என்ற சிக்கன புத்தியினால் அவர்கள் அந்த வேலையை அவளுக்குக் கொடுத்தார்களோ என்றாவது நமது வாசகர்கள் எண்ணிவிடக் கூடாது. அந்த உத்தம குண மாது தான் பெருத்த கோடீசுவரரது ஏகபுத்திரி என்ற மமதையையாவது, தனது மாமனாரினது வீட்டில் உள்ள எல்லோரும் தன்னை ஒரு தெய்வம் போல மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செருக்கையாவது சிறிதும் கொள்ளாமல், தனது புக்ககத்து மனிதர்களோடு ஒன்றுபட்டு வேற்றுமையே பாராட்டாது மனமொத்து ஐக்கியம் அடைந்து பரஸ்பர வாத்சல்யமாகிய பெரும் பாசத்தினால் பிணிப்பட்டிருந்தாள். ஆதலால், அந்த அருங்குண நங்கை தனது மாமனார், மாமியார், புருஷன் ஆகிய எவருக்கும் எத்தகைய இழிவான பணிவிடையைச் செய்வதையும் கண்ணியக் குறைவாகக் கருதாமல், அதை ஒரு பெருத்த இன்பமாக மதித்து அளவற்ற உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் செய்து வந்தாள். ஆதலால், தனது மாமியாரினது புடவையைத் தைப்பதை அவள் ஒரு தெய்வத்திற்குப் பூஜை, நைவேத்தியம் முதலியவற்றைச் செய்து வைப்பது போன்ற பரிசுத்தமான ஒரு திருப்பணி போல மதித்து மிகுந்த பயபக்தி விநயத்தோடு அதைச் செய்து கொண்டிருந்தாள். எந்த நிமிஷத்திலும் அவளது சுந்தரவதனம் அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம் போல இனிமை, குளிர்ச்சி, ஜிலு ஜிலுப்பானகளை, வசீகரம், மந்தஹாசம் முதலியவை சதா காலமும் குடிகொண்டதாக இருந்து வந்தது. அவளது முகம் வாட்டத்தையாவது, விசனக்குறியையாவது காட்டிய சந்தர்ப்பம் முற்றிலும் அரிதாகவே இருந்தது. ஆனால் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிவந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்ட பிறகு, மேகப்படலங்கள் தோன்றி நிஷ்களங்கமாக இருக்கும் பூர்ணசந்திரனை மறைப்பது போல, அப்போதைக்கப்போது, அந்த உத்தமியின் முகம் கவலையையும் சிந்தனையையும் காட்டி மாறி மாறி வாட்டமடைந்தும் தனது இயற்கை ஒளியை வீசிக்கொண்டும் இருந்தது. சட்டைநாத பிள்ளை முதலிய துஷ்டர்கள் தண்டனை அடைந்து சிறைச்சாலை புகுந்த பின்னர், அவள் அவர்களைப் பற்றிய நினைவையும், தான் தனது பதினாறாவது வயது வரையில் அவர்களது வசத்தில் இருந்து வளர்ந்து வந்த நினைவையும் அறவே மறந்து, துன்பமே கலவாத இன்பம் அனுபவித்து வந்தவள். ஆதலால், தங்களது பகைவர்களுள் முக்கியஸ்தரான சட்டைநாத பிள்ளை தப்பி ஓடி வந்து விட்டார் என்ற செய்தி, தேவாமிர்தம் நிறைந்திருந்த பாத்திரத்தில் காலகோடி விஷத்துளி ஒன்று வந்து கலந்து கொண்டது போல அவளது மனதின் நன்னிலைமையை முற்றிலும் சீர்குலைத்து விட்டது. அவளது மனதில் புதைபட்டு இருள் அடைந்து மறைந்து கிடந்த பழைய சம்பவங்களின் நினைவுகள் எல்லாம் பிரகாசமடைந்து ஒன்றன் பின் ஒன்றாய் அவளது அகக்கண்ணாகிய அரங்க மேடையின் மேல் தோன்றிக் காட்சிக் கொடுக்க ஆரம்பித்தன. தனது குழந்தைப் பருவம் தொட்டு, தான் திருக்கண்ணமங்கை என்ற ஊரில் அஞ்சலை, நமசிவாய பிள்ளை ஆகிய இருவரையும் முறையே தாய், தகப்பன் என்று மதித்து, அவர்களது கொடுங்கோன்மையில் இருந்து உழன்று வந்த நாட்களின் நினைவும், தான் மாசிலாமணிக்கு மனைவி ஆக மறுத்ததன்மேல் அவர்கள் தன்னை வைது அடித்துப் பட்டினி போட்டுப் பலவகையில் வருத்திய நினைவுகளும் கண்னெதிரில் அப்போதே நிகழும் நாடகக் காட்சிகள் போலத் தோன்றத் தொடங்கின. கடைசியில் தான் அவர்களது வீட்டைவிட்டு, ஒரு. நாள் இரவில் வெளிப்பட்டுத் தனிவழி நடந்து மன்னார்குடியை நோக்கிச் சென்றதும், இடைவழியில் சில முரடர்கள் தன்னைப் பிடித்து இறுகக் கட்டித் துக்கிக் கொண்டு போக முயன்றதும், அக்காலை திகம்பரசாமியார் என்ற புண்ணியவான் திடீரென்று தோன்றி அதியாச்சரியகரமாகத் தன்னை அந்தப் பயங்கரமான விபத்தில் இருந்து தப்பவைத்து அழைத்துக் கொண்டு போனதும், பிறகு சத்திரத்தில் மாசிலாமணி நமசிவாய பிள்ளை முதலியோர் வந்து மறுபடி தன்னைத் தூக்கிக்கொண்டு போக எத்தனித்ததும், அப்போது கண்ணப்பா என்ற புருஷ சிங்கம் தோன்றித் தன்னை மீட்டுத் தனது மனதையும் காதலையும் ஒருங்கே கொள்ளை கொண்டு போனதும், அதன் பிறகு தான் சொர்க்க போகத்தை அடைந்தது போல் வேலாயுதம் பிள்ளையினது மாளிகையில் செல்வமும் சீருமாய் இருந்து வந்ததும் நன்றாக நினைவிற்கு வந்தன. அந்தக் காலத்தில் சட்டைநாத பிள்ளை முதலியோர் ஏராளமான ஆட்களோடு திடீரென்று தோன்றித் தன்னைப் பலாத்காரமாக அபகரித்துக் கொண்டு போய்க் கும்பகோணத்தில் சிறை வைத்தது, அவ்விடத்தில் தான் மூன்று நாட்கள் வரையில் பட்டினி கிடந்தது, மாசிலாமணி, அஞ்சலை முதலியோரது கொடுமையைச் சகிக்கமாட்டாது உயிர் துறக்க எண்ணி முடிவில் கிணற்றிற்குள் வீழ்ந்தது, பிறகு உயிர் பெற்றது, அதன் பிறகு திகம்பரசாமியார் தபால்காரனாக வேஷத்தரித்து வந்து தனக்குக் கடிதம் கொடுத்து எச்சரித்துப் போனது, கலியான தினத்தன்று தான் கூரைத் திறப்பின் வழியாக மேலே ஏற்றப்பட்டு வெளியேறி மோட்டார் வண்டியில் அமர்ந்து கண்ணப்பாவிடம் சென்றது முதலிய பயங்கரமான காட்சிகளின் நினைவெல்லாம் தோன்றித் தோன்றி மறைந்தது. ஆதலால், அவளது உடம்பு அடிக்கடி திடுக்கிட்டு நடுங்கியது. முகம் பயத்தினால் வெளிறடைந்து விகாரப்பட்டது. மயிர் சிலிர்த்து நிமிர்ந்து நின்றது. அந்த மடவன்னத்தின் மனம் முழுதும் அவ்வாறு இந்த இடத்தில் இல்லாமல் வேறு பல இடங்களில் எல்லாம் சென்று அலைந்து திரிந்து மாறி மாறித் துன்பமும் துயரமும் திகிலும் கொண்டதாய் இருந்தது. ஆனாலும், அவளது கைகள் மாத்திரம் தாமாகவே புடவையைத் தைத்துக் கொண்டிருந்தன. கண்கள் தையலை நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளது உடம்பு ஸ்தம்பித்து அசைவற்று சித்திரப்பதுமை போலக் காணப்பட்டது. பழைய சம்பவங்களின் நினைவுகளைத் தொடர்ந்து சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி வெளிப்பட்ட செய்தியும், தாம் இனி எச்சரிப்பாக இருக்க வேண்டும் என்று திகம்பரசாமியார் கண்ணப்பாவிடம் சொல்லி அனுப்பிய செய்தியும் அவளது செவிகளில் கணீர் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றின. நிரம்பவும் கண்ணியமான பதவியில் சகலமான செல்வத்தோடும் இருந்து வந்த சட்டைநாத பிள்ளை என்றைக்கும் நீங்காத இழிவை அடைந்து தஞ்சையில் கைதியின் விலங்கோடு எண்ணெய்க்குடம் தூக்கி ஜனங்களின் இடையில் செல்ல நேர்ந்த அவமானத்தை ஒருகாலும் மறக்க மாட்டார் என்றும், அவர் மகா கொடிய துஷ்டராகையால் அவர் திகம்பர சாமியாரிடத்திலும், தங்களிடத்திலும் எப்படியும் பழிவாங்க எத்தனிப்பார் என்றும், அதனால் கண்ணப்பா முதலிய அரிய மனிதர்களுக்கு எந்த நிமிஷத்தில் எவ்விதமான பொல்லாங்கு நேருமோ என்றும் அந்த மடமயிலாள் எண்ணி எண்ணி நிலை கலங்கி ஆவிசோர உட்கார்ந்து நெடுமூச்செறிந்து கொண்டிருந்தாள். அப்போது அவளது கண்கள் தையலை மாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தனவே அன்றி, அந்த மேன்மாடத்தில் வேறே எதையும் அவைகள் பார்க்கவில்லை. அவளது கவனம் முழுதும் வேறு எங்கேயோ சென்றிருந்தது. அத்தகைய சஞ்சல நிலைமையில் அவள் இரண்டு மூன்று நாழிகை காலம் வரையில் மெய்மறந்து வீற்றிருக்க, யாரோ ஒருவர் வந்து தனக்குப் பின் பக்கத்தில் நின்றபடி கைகளால் தனது கண்களைப் பொத்தியதை உணர்ந்த பிறகே, அந்த மின்னற் கொடியாள் திடுக்கிட்டு மருண்டு தனது சுய உணர்வை அடைந்தாள். தங்களது ஜென்ம விரோதியான சட்டைநாத பிள்ளையினால் தங்களுக்கு ஏதேனும் பொல்லாங்கு நேருமோ என்று அவள் எண்ணித் திகில் கொண்டிருந்த நிலைமையில், அவள் சிறிதும் எதிர்பார்க்காதபடி யாரோ ஒருவர் தனது கண்களைப் பொத்தவே, தங்களது பகைவர்தான் ஏதோ துன்மார்க்கமான நினைவோடு அங்கே வந்திருக்கிறார் என்ற சந்தேகமும் பீதியுமே அவளது மனதில் சடக்கென்று உதித்தன. அவளது கைகால்கள், உடம்பு முதலிய அங்கங்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத் தொடங்கின. மயிர்காலுக்கு மயிர்க்கால் வியர்வை குபிரென்று வெளிக்கிளம்பி தந்தம் போல இருந்த அவளது சுந்திரமேனியில் முத்து முத்தாகத் துளித்து நின்றது. ஆனாலும், அடுத்த நிமிஷத்தில் அவளது திகிலும் சஞ்சலமும் விலகிப் போயின. அப்படி வந்தவர் தமது கைகளை மிருதுவாகவும் மரியாதையாகவும் உபயோகப்படுத்தினார் என்பது அவளுக்கு எளிதில் புலப்பட்டது. ஆகையால், அவர் பலாத்காரமாகத் தனக்குத் தீங்கிழைக்க வந்த பகைவர் அல்ல என்ற நிச்சயம் ஏற்பட்டது. மேன்மாடத்திற்கு ஏறிவரும் படிக்கட்டின் வாசற்படி இருந்த பக்கம் தனது முதுகுப் பக்கத்தில் இருந்தது. ஆனாலும், தான் இருந்த இடம் அந்த வாசற்படியில் இருந்து சுமார் 10-கஜ தூரம் இருந்தது. ஆகையால், அவர் அவ்வளவு தூரம் வரையில் நடந்து தனக்கருகில் வந்ததைக்கூட உணராது தான் அவ்வளவு அதிகமாக மெய்மறந்து போயிருந்திருக்க வேண்டும், அல்லது, அவர் வேண்டும் என்றே தமது கால் விரல்களை ஊன்றி ஒசை செய்யாது தனக்கருகில் வந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனாலும் தன்னிடம் அவ்வளவு அதிகமான உரிமை பாராட்டி அப்படி விளையாடக்கூடிய மனிதர் யாராக இருக்கலாம் என்று அவள் எண்ணிப் பார்த்ததெல்லாம் வீணாயிற்று. தனது கண்ணைப் பொத்திப் பிடித்துக் கொண்டிருந்த கைகள் நிரம்பவும் மிருதுவாக இருந்தன. ஆகையால், அவர் ஆண் பிள்ளையா, அல்லது, பெண் பிள்ளையா என்பதைக்கூட அவள் நிச்சயிக்கமாட்டாதவளாய்த் தத்தளித்து நயமாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, “யார் அது? இப்படித்தானா அக்கிரமம் செய்கிறது? மனிதர் வருகிறார்கள் என்கிற குறியே இல்லாமல் திடீரென்று வந்து என்னை இப்படித்தானா பயமுறுத்தி விடுகிறது? என் உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டதே?” என்று வீணாகானம் செய்வது போல அதிமாதுரிய மான குரலில் பேசினாள்.

அவளது கண்களைப் பொத்திக் கொண்டிருந்த மனிதர் உடனே தமது குரலை மாற்றிக் கொண்டு கீச்சுக்குரலில் பேசத் தொடங்கி, “நான் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னால்தான், நான் விடுவேன். இல்லாவிட்டால், இப்படியே கண்களை மூடிக் கொண்டுதான் இருக்கப் போகிறேன்” என்றார்.

அதைக் கேட்ட வடிவாம்பாள் அந்தக் குரல் இன்னாருடையது என்ற அடையாளம் கண்டு கொள்ள மாட்டாதவளாய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனம் சாதித்து யோசித்து யோசித்துப் பார்க்கிறாள். அதுவரையில் எவரும் தன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை ஆதலாலும், அப்படி நடந்து கொள்ளக் கூடிய அவ்வளவு அன்னியோன்னியமான சிநேகிதை வேறே யாரும் இருப்பதாக நினைவு உண்டாகவில்லை. ஆகை யாலும், அந்தப் பெண்மணி முற்றிலும் குழப்பமும் கலக்கமும் அடைந்து சிறிது நேரம் தடுமாற்றம் உற்றபின் மிருதுவாகப் பேசத் தொடங்கி, “நீங்கள் யார் என்பது கொஞ்சங்கூடத் தெரிய வில்லையே! போதும் விட்டுவிடுங்கள்” என்று நயமாகக் கூறினாள்.

அந்த மனிதர், “இவ்வளவுதானா உன் சாமர்த்தியம்! இந்த அற்ப விஷயத்தைத் தெரிந்து கொண்டு சொல்ல உன்னால் முடிய வில்லையே! சரி; விட்டுவிடுகிறேன், நீ தோற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொள்; உடனே நான் என் கைகளை எடுத்து விடுகிறேன்” என்று முன்போலக் கீச்சுக் குரலிலேயே பேசினார். அதைக் கேட்ட பெண்ணரசி சந்தோஷமாகப் புன்னகை செய்து, “ஆம், நான் உண்மையில் தோற்றுத்தான் போய்விட்டேன். கண்ணுள்ளவளான என்னை நீங்கள் கண்ணில்லாக் குருடியாக்கி விட்டால், நான் தோற்றுப் போகாமல் எப்படி ஜெயமடைய முடியும்?” என்றாள்.

அந்த மனிதர் நகைத்த வண்ணம், “கண்ணில்லா விட்டால், காது கூடவா இல்லை?” என்றார்.

வடிவாம்பாள், “காதுகள் இருந்து என்ன செய்கிறது? குரல் பழைய குரலாய் இருந்தால் அல்லவா காதுகள் அடையாளம் கண்டுபிடிக்கும்” என்றாள்.

வந்தவர், “வாஸ்தவம் தான். ஆனாலும் கண்களைப் பொத்திக் கொண்டிருக்கும் இந்தக் கைகள் உடம்பில் படுகிறதனால் உண்டாகும் உணர்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா?” என்றார்.

வடிவாம்பாள், “அதுகூட என்னால் முடியவில்லை. என் அறிவு அவ்வளவு மந்த அறிவாக இருக்கிறது. நீங்கள் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு சூசனை இருந்தால் இந்நேரம் நான் சும்மா இருப்பேனா?” என்றாள்.

வந்தவர், “அப்படியானால் நீ தோற்றுப்போன குற்றத்தோடு இப்போது இன்னொரு பெரிய குற்றமும் செய்திருக்கிறாய். அது என்னவென்றால், உன்னுடைய அறிவு அபார சக்தி வாய்ந்த மகா சூட்சுமமான அறிவு. அதை நீ அலட்சியமாக எண்ணி அது மந்த அறிவென்று சொல்லுகிறது சாதாரணமான குற்றமல்ல. அது பெருத்த அபராதம். இந்த இரண்டு குற்றங்களுக்கும் நான் முதலில் உன்னைத் தக்கபடி சிகூரித்து விட்டு அதன் பிறகு நான் என் கைகளை எடுக்கப் போகிறேன்” என்றார்.

அந்த விபரீத வார்த்தையைக் கேட்ட வடிவாம்பாளினது முகம் சடேரென்று மாறுபட்டது. அவளது சந்தோஷம் எல்லாம் பறந்தோடியது. அவ்வாறு தன்னிடம் தாறுமாறாகப் பேசக்கூடிய மனிதர் யாராக இருக்கலாம் என்று அவள் பன்முறை ஆழ்ந்து யோசித்த தெல்லாம் பயன்படாமல் போயிற்று. ஆனால், அவர் பேசியது நிரம்பவும் சிநேகப்பான்மையைத் தோற்றுவித்தது ஆகையாலும், அவர் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தான் கோபிப்பது ஒழுங்கல்ல எனத் தோன்றியது ஆகையாலும், அவள் நிரம்பவும் பாடுபட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு புன்னகை வழிந்த முகத்தோடு பேசத் தொடங்கி, “நான் உங்களுடைய அடையாளத்தைக் கண்டுபிடிக்க மாட்டாமல் தோற்றுப் போனது என்னுடைய குற்றமன்று. என்னுடைய ஸ்தானத்தில் வேறே யார் இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள். இந்த விஷயத்தில் குற்றம் உங்களுடையது என்று சொல்லுவதே பொருத்தம் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல அறிவுடையவளாக இருந்து, மந்த அறிவினள் என்று சொல்லுவது இன்னொரு பெருத்த குற்றம் என்று சொல்லுகிறீர்கள். நான் நல்ல அறிவுடையவள் என்று நீங்கள் கொடுக்கும் பெருமையை நான் வகித்துக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படிப்பட்ட நல்ல அறிவை உபயோகப்படுத்தி உண்மையை அறிந்து கொள்ளமாட்டாமல் என் அறிவு மழுங்கிப் போகும்படி செய்வதும் நீங்களே. ஆகையால் இரண்டு வகையிலும் குற்றம் உங்களுடையதே அன்றி என்னுடையதல்ல. அப்படி இருக்க நீங்கள் என்னைத் தண்டிக்கப் போவதாகச் சொல்வது நியாயமாகுமா என்று யோசித்துப் பாருங்கள். என்னைத் தண்டிக்கும் அதிகாரம், என் தாயார், தகப்பனார், மாமனார், மாமியார், என் பர்த்தா ஆகிய ஐவருக்குமே உண்டு. அதுவுமன்றி, நான் ஏதாவது பெருத்த தவறு செய்துவிட்டால், நியாயாதிபதிகள் தண்டிப்பார்கள். அப்படிப் பட்ட அதிகாரம் வாய்ந்தவர்கள் கூட நீங்கள் சொல்லும் இந்த இரண்டு குற்றங்களுக்கும் என்னைத் தண்டிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். என்மேல் இப்படிப்பட்ட விபரீதமான பாத்தியம் பெற்ற நீங்கள் யார் என்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. நீங்கள் எனக்கு என்ன விதமான தண்டனை கொடுக்க உத்தேசிக்கிறீர்கள் என்பதும் விளங்கவில்லை” என்றாள். அதைக் கேட்ட மற்றவர் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “ஒஹோ! நீ இப்படி எல்லாம் சாமர்த்தியமாகப் பேசினால், உன்னை தண்டிக்காமல் நான் விட்டுவிடுவேன் என்று எண்ணிக் கொண்டாயா? நீ யாதொரு குற்றமும் செய்யவில்லை என்ற உறுதியை வைத்துக் கொண்டு பேசுவதும் தவறு; உன்னோடு எப்போதும் இருந்து பேசிப் பலவிதமாக நெருங்கிப் பழகிய ஒரு மனிதரை நீ முற்றிலும் முகமறியாதவர் போல மதித்து அன்னிய மனுஷி போல நடந்து கொள்வது சாதாரணமான குற்றமா? அதற்குத் தக்க தண்டனை இதுதான்” என்று கூறிய வண்ணம் தமது முகத்தை நீட்டி அவளது கன்னத்தில் ஒரு முத்தங் கொடுத்த பின் தமது கைகளை எடுக்கவே, அதைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த பெண்மணி, தனது ஆருயிர் நாயகனான கண்ணப்பாவே தனக்கருகில் வந்து நின்றதைக் கண்டு, உடனே வெட்கித் தலை குனிந்தவளாய், “ஆகா! என் கண்ணம்மாவின் சாமர்த்தியமே சாமர்த்தியம்! கொஞ்சங்கூட அடையாளந் தெரியாத படி குரலை மாற்றிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் என்னை ஏமாற்றி விட்டீர்களே! யாரோ பெண்பிள்ளை என்றல்லவா நான் கடைசி வரையில் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்று கூறிய வண்ணம் தனது கையில் இருந்த புடவையை ஒரு பக்கமாகப் பாயின் மீது வைத்து விட்டு எழுந்து நாணத்தோடு குனிந்து நின்றாள்.

உடனே கண்ணப்பா அந்த இடத்திற்கருகில் போடப்பட்டிருந்த வழுவழுப்பான விசிப்பலகையண்டை வடிவாம்பாளை அழைத்துக்கொண்டு சென்று, அதன்மேல் உட்கார்ந்தான். அந்த விசிப்பலகையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய சன்னகாரைத் துண்கள் இருந்தன. அந்த விசிப்பலகையின் மீது பெருத்த பெருத்த திண்டுகள் பல கிடந்தன. கண்ணப்பா இரண்டொரு திண்டுகளை வைத்துத் தலைப் பக்கத்தில் இருந்த துணண்டை வைத்து அதன்மேல் “அப்பாடா” என்று சாய்ந்து, கால்களை நீட்டி எதிர்ப் பக்கத்தில் இருந்த துணில் உதைந்து கொண்டான். வடிவாம்பாள் கரைபுரண்டு ஒடிய வாத்சல்யத்தோடு அவனது கால் பக்கத்தில் நின்று, “ஏது என் கண்ணம்மாவுக்கு இன்று இவ்வளவு அலுப்பு! வெயிலில் அதிக தூரம் போய் அலைந்துவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது! முகம் நிரம்பவும் வாட்டமடைந்திருக்கிறதே! ஏதாவது பலகாரம் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா? போய் எடுத்துக் கொண்டு வரட்டுமா?” என்று கூறிய வண்ணம் அவனது பாதங்களை மிருதுவாகவும் இன்பகரமாகவும் பிடித்து வருடத் தொடங்கினான்.

நிரம்பவும் வாஞ்சையோடு அந்த மிருது பாஷிணியின் முகத்தை நோக்கிய கண்ணப்பா,“ வடிவூ! நீ கால்பிடித்து விடுவது இருக்கட்டும். இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்” என்று கூறிய வண்ணம் ஆசையோடு அவளைப் பிடித்திழுத்துத் தனது வயிற்றின் பக்கமாகப் பலகையின் மேல் உட்கார வைத்து அனைத்துக் கொண்டு, “நீ என்னுடைய முகம் வாடி இருக்கிறதென்று சொல்லி எனக்கு உபசாரம் செய்வது இருக்கட்டும். உன்னுடைய முகம் என்றைக்கும் இல்லாதபடி நிரம்பவும் வாட்டம் அடைந்து சந்தோஷமற்றுக் காணப்படுகிறதே. அதன் காரணம் என்ன? எனக்குத் தெரியாமல், உன் மனசில் என்ன விதமான கவலை அல்லது விசனம் ஏற்பட்டது? பாதி ராத்திரியில் எல்லோரும் படுத்துத் துங்குகையில் எங்கேயாவது ஒரு பல்லி நகர்ந்தால் கூட, அதை உணர்ந்து விழித்துக் கொள்ளக்கூடிய அவ்வளவு அதிக ஜாக்கிரதையுடைய நீ இந்தப் பட்டப்பகலில் நான் மெத்தைப் படியிலிருந்து இவ்வளவு தூரம் நடந்து வந்து உன் கண்களைப் பொத்துகிற வரையில் மெய்ம்மறந்து சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருந்தாயே! அவ்வளவு பலமாய் உன் மனசைக் கவர்ந்து கொள்ளக்கூடிய விபரீதமான காரியம் ஏதாவது நேர்ந்ததா? நான் நிரம்பவும் சாமர்த்தியமாக என் குரலை அடியோடு வேறாக மாற்றிக் கொண்டதாகச் சொல்லி நீ என்னைப் புகழ்ந்ததைக்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது. என் குரலின் அடையாளத்தை நீ கண்டு கொள்ளாததற்கு உன் கவனம் பூர்த்தியாக வேறிடத்தில் சென்று கலவரப்பட்டிருந்ததே முக்கியமான காரணமன்றி, நான் பிரமாதமான சாமர்த்தியம் செய்துவிட்டேன் என்று நினைப்பது சரியல்ல. நான் உனக்குப் பின்னால் வந்து கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். நீ எதையோ சிந்தனை செய்தபடி கல் சிலைபோல அசையாமலும், மூச்சுவிடாமலும் உட்கார்ந்திருந்தாய். திடீரென்று நான் உனக்கெதிரில் வந்தால், நீ பயந்து கலங்கிக் குழப்பமடைந்து சங்கடப்படுவாய் என்று நினைத்தே நான் உன் கண்களைப் பொத்தினேன். அப்படிப் பொத்தினால், யாரோ ஒருவர் வந்திருக்கிறதாக நீ நினைத்துக் கொள்ளுவாயே அன்றி, நான் வந்திருப்பதாக எண்ணி அதிக திகில் கொள்ள மாட்டாய் அல்லவா. நான் உன் கண்களைத் திறந்து விடுவதற்குள் வேறிடத்தில் சென்றிருந்த உன்னுடைய சுய உணர்வும் கவனமும் நன்றாகத் திரும்பி விடும் என்று நினைத்தே நான் அப்படிச் செய்தேன். நான் உன் கண்களைப் பொத்தியதிலும், உன் மனசில் பயமும் குழப்பமும் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அப்படிச் செய்யாமல் நான் திடீரென்று உனக்கெதிரில் வந்தால், உன்னுடைய திகிலும் சஞ்சலமும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் ஆகையால், உனக்கு ஏற்பட இருந்த பெரிய துன்பத்தை இந்த அற்பமான துன்பத்தால் விலக்கினேன்” என்று கூறிய வண்ணம் அவளது முதுகையும், கன்னத்தையும் அத்யந்தப் பிரேமையோடு தடவிக் கொடுத்தான். அவனது சொற்களைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த பெண்மணி, “ஒகோ! அப்படியா சங்கதி! என் கண்ணம்மாவின் பிரியத்துக்கு இந்த ஈரேழு பதினான்கு லோகமும் ஈடாகுமா இப்படி என் உயிர்க்குயிராகவும் ஜீவதாரக் கடவுளாகவும் இருக்கிற தங்களுக்கும், அப்பா அம்மா முதலியோர்க்கும், அந்தத் துஷ்டன் சட்டைநாத பிள்ளையால் ஏதாவது கெடுதல் நேரிடுமோ என்ற கவலை தானாகவே என் மனசில் தோன்றி என் நினைவை எல்லாம் கவர்ந்து கொண்டது. எப்பேர்ப்பட்ட கடுமையான காவலிலிருந்து தந்திரம் செய்து தப்பித்துக் கொண்டு வந்து ஒளிந்து கொண்டிருக்கிற அந்தத் துஷ்டன் தன்னை மானபங்கப்படுத்திய மனிதர்களுக்கெல்லாம் ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பது சகஜமே. நாம் எல்லோரும் நம்முடைய உயிர்த் தெய்வம் போல மதித்து வரும் நம்முடைய சுவாமியாரை அந்தத் துஷ்டன் ஒரு நாளும் மறக்கவே மாட்டான். ஆகையால், யானைக்கும் அடிசறுக்கும் என்ற நியாயப்படி, அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், இராப்பகல் எவ்வளவோ எச்சரிப்பாக இருந்தாலும்,

அவன் ஏதாவது தந்திரம் செய்து அவரை உடத்திரவிக்க முயற்சி மா.வி.ப.1-11 செய்வானே என்ற கவலையும் என் மனசில் உண்டாயிற்று. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே நான் முழுதும் மெய்ம்மறந்து கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அப்படி இருந்த தவறுக்காக எனக்குச் சரியான தண்டனையே கிடைத்தது” என்று கூறிக் கண்ணப்பாவின் புஜத்தின்மேல் தனது கன்னத்தை வைத்துச் சாய்ந்து கொண்டு “அப்பாடா ஜில்லென்று எவ்வளவு சுகமாக இருக்கிறது ஆகா இந்த ஆனந்தம் வேறே யாருக்குக் கிடைக்கும்! என் பாக்யமே பாக்யம்!” என்று கூறி மகிழ்ச்சியே வடிவாக மாறினாள். இணைமிகை இல்லாத அந்த மங்கையர்க்கரசியின் கரைபுரண்டோடிய பிரேமையைக் கண்டு ஆனந்த மயமாக நிறைந்து பூரித்துப் போன கண்ணப்பா தந்தக் குச்சிகள் போல அழகை வழியவிட்ட அவளது கைவிரல்களைப் பிடித்து ஏதோ விஷமம் செய்தபடி நிரம்பவும் உருக்கமாகப் பேசத் தொடங்கி, “வடிவூ! என்ன நீ கூட அறியாதவள் போல இப்படிப்பட்ட கவலைகளுக்கெல்லாம் இடங்கொடுத்து விட்டாயே! நம்முடைய சுவாமியார் சாதாரண மனிதரா? அவருக்கில்லாத யூகமும் தீர்க்கதரிசனமும் வேறே யாருக்கு இருக்கப் போகிறது? சட்டைநாத பிள்ளை முதலிய எதிரிகள் வெளியில் வந்து சுயேச்சையாக இருக்கிறார்கள் என்பதை அவர்தானே தெரிந்து கொண்டு நம்மை முதலில் எச்சரித்தார். அப்படிப்பட்டவர் அயர்ந்து அஜாக்கிரதையாக இருந்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்வாரா? அது ஒரு நாளும் நடக்காது. அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு முக்கியமாக நம் எல்லோரையும், கண்மணிகளை இமைகள் காப்பது போல ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார். நமக்கு எவ்விதமான கெடுதலும் நேராதென்றே நினைக்கிறேன். அப்படி நேர்ந்தாலும் அவர் அதை நிவர்த்திக்க வழி தேடுவார். அதையும் மிஞ்சி நமக்கு ஏதாவது அபாயம் நேருவதாகவே வைத்துக் கொண்டாலும், அதைப்பற்றி நாம் இப்போது முதல் கவலைப்பட்டுக் கலங்குவதனால் என்ன உபயோகம் இருக்கிறது? நாம் நம்முடைய நல்ல மனசைக் கெடுத்துக் கொள்வது தான் மிஞ்சுமே அன்றி, வருவது வந்தே தீரும். பரீக்ஷித்து மகாராஜன் தன்னைப் பாம்பு கடிக்கப் போகிற தென்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தடுப்பதற்காக சமுத்திரத்தின் நடுவில் போய் இருந்த கதையை நீ படித்தாயே, அதை மறந்துவிட்டாயா? அவன் அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் அந்த விபத்தை விலக்க முடியாமல் போய்விட்டதல்லவா? ஆகையால் நாம் எதைப் பற்றியும் முன்னால் கவலைப்பட்டு மனசைப் புண்படுத்திக் கொள்வதே மதியீனம் என்பது என்னுடைய கைகண்ட அனுபவம். வருங்காலத்தில் நமக்கு என்ன நேரப்போகிறதென்பது நமக்குத் தெரிந்தால் நாம் அதைப்பற்றி அஞ்சிக் கலங்கி அநாவசியமான மனோபாதைக்கு ஆளாவோம் என்று தெரிந்து கொண்டுதான் கடவுள் நமக்கு எதிர்கால ஞானம் இல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். இனி என்ன நடக்கப் போகிறது என்று நாம் ஜோசியத்தின் மூலமாவது, நம்முடைய சுய யூகத்தின் மூலமாவது தெரிந்து கொண்டு அவஸ்தைப்படுவதெல்லாம் வீண் பிரயாசையே அன்றி வேறல்ல. நமக்கு மிஞ்சி என்ன துன்பம் வந்தாலும், அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற உறுதியோடும் நாம் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லாப் பொறுப்பையும் கடவுளின் மேல் போட்டு விட்டு இருந்தால், பிறகு நடப்பது நடக்கட்டும். இனி இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டு நல்ல மனசைப் புண்படுத்திக் கொள்ளாதே” என்று கூறி அவளது மனதை திடப்படுத்துபவன் போல, அவளது முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட பெண்பாவையின் கண்கள் கலங்கின. மனமும் முகமும் இளகின. அவள் நிரம்பவும் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, “கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் சுலபமாக உத்தரவிட்டு விட்டீர்கள். உங்களுடைய உத்தரவை சிரசாக வகிக்க வேண்டும் என்ற உறுதியும் ஆசையும் என் மனசில் பரிபூரணமாக உண்டாகின்றன. ஆனால், இந்தப் பாழும் மனசு நம்முடைய கட்டில் நில்லாமல் எதைக் குறித்தாவது நினைத்துக் கவலைப்பட்டு எப்போதும் சஞ்சலமடைந்து கொண்டபடியே தான் இருக்கிறது. நாம் வேறே எதை அடக்கினாலும் அடக்கலாம் போலிருக்கிறது, எவ்வளவு அரிய காரியத்தைச் சாதித்தாலும் சாதிக்கலாம் போலிருக்கிறது, இந்த மனசை அடக்கி ஒரு நிலையில் நிறுத்தி நாம் எதை விரும்புகிறோமோ அதைப்பற்றி நினைக்கவும், எதை விலக்குகிறோமோ அதைப்பற்றி நினைக்காமல் விட்டுவிடவும் செய்வது சாத்தியமற்ற காரியமாக அல்லவா இருக்கிறது. அந்தத் துஷ்டன் சட்டைநாத பிள்ளை வெளியில் வந்துவிட்டான் என்ற சங்கதியைக் கேட்ட பிறகும், நாம் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சுவாமியார் செய்தி சொல்லி அனுப்பியதைக் கேட்ட பிறகும், இந்தக் கவலை அடிக்கடி என் மனசில் தோன்றி வதைத்துக் கொண்டிருக்கிறது. நான் எவ்வளவு பாடுபட்டாலும், இந்தக் கவலை விலகமாட்டேன் என்கிறது. அந்தத் துஷ்டனை மறுபடி பிடித்துச் சிறைச்சாலையில் அடைக்கிற வரையில் இந்தக் கவலை இருந்து கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள்.

கண்ணப்பா, “வாஸ்தவம் தான். நம்முடைய சுவாமியார் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். எப்படியும் அவன் கூடிய சீக்கிரம் பிடிபட்டு மறுபடி சிறைச்சாலைக்குப் போய்ச் சேர்ந்து விடுவான். அவனால் நமக்கு அதிக கெடுதல் ஒன்றும் நேராதென்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும், உன்னைத் தனிமையில் விட்டிருப்பதும் தவறென்று நினைக்கிறேன். நானாவது, அம்மாளாவது எப்போதும் உன்னோடு கூடவே இருந்தால் உன் மனம் வேறே விஷயங்களில் சென்று கொண்டிருக்கும். இதைப்பற்றி நீ நினைக்காமல் நாங்கள் உன் மனசுக்கு வேறே வேலை கொடுத்துக் கொண்டிருப்போம். உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் உனக்குத் துன்பம் கொடுக்கும் உன் மனசை அடக்க அதுதான் சரியான வழி. இனி நான் அப்படியே செய்கிறேன். இந்த விஷயத்தை அம்மாளிடம் சொல்லி எச்சரித்து வைக்கிறேன். அது போகட்டும். எனக்குத் தாகமாக இருக்கிறது. நீ கீழே போய்க் கொஞ்சம் சுத்த ஜலம் எடுத்துக் கொண்டுவா?” என்று நிரம்பவும் நயமாகவும் அன்பாகவும் கூறினான். அதைக் கேட்ட மாதரசி பலகையை விட்டு சடக்கென்று கீழே இறங்கி விரைவாக நடந்து படிக்கட்டை அடைந்து, படிகளின் வழியாகக் கீழே இறங்கி மறைந்து போனாள். அவ்வாறு கீழ்க்கட்டுக்குச் சென்றவள் கால் நாழிகையில் மறுபடி மேலே ஏறி வந்தாள். அதற்குள் தனது கண்களை மூடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த கண்ணப்பா தனது மனையாட்டியான பேடன்னத்தின் பாதசரங்கள் கலீர் கலிரென்று ஒசை செய்ததைக் கேட்டுப் புன்னகையும் குதூகலமும் தோற்றுவித்த முகத்தோடு அவளது வருகையை எதிர்பார்த்திருந்தான். இன்பமே வடிவெடுத்தது போலவும் லக்ஷ்மி விலாசம் தாண்டவமாடும் அற்புத தேஜசோடும் தேவாமிருதத் துளிகளையும் குளிர்ச்சியையும் அள்ளி வீசிய முகாரவிந்தத்தோடும் திரும்பி வந்த பெண்மணி ஒரு வெள்ளித் தட்டில் கமலாப்பழம், மலை வாழைப்பழம், அதிரசம், சீடை, திரட்டுப்பால், தாம்பூலம் முதலிய வஸ்துக்களையும், இன்னொரு கையில் ஜிலுஜிலென்று குளிர்ச்சியாக இருந்த தண்ணீர் நிறைந்த கூஜாவையும் எடுத்துக் கொண்டு தோகை விரித்த மயில்போலக் கண்கொள்ள அழகோடு வந்து தனது கையில் இருந்த நிவேதனப் பொருட்களை எல்லாம், பலகையின் மேல் பள்ளிகொண்டிருந்த தெய்வத்தின் பக்கத்தில் மட்டுக்கடங்கா பயபக்தி விசுவாசத்தோடு வைக்க, அதைக் கண்ட கண்ணப்பா சந்தோஷ மலர்ச்சியடைந்து, “என்ன இது? நான் தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட்ால், எனக்குப் பெருத்த விருந்து தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறாயே! இவ்வளவு சாமான்களையும் போட என் வயிற்றில் இடம் எங்கே இருக்கிறது? நீயும் வந்து உட்கார்ந்துகொள். யார் சுறுசுறுப்பாகவும் அதிக சாமர்த்திய மாகவும் இந்த வேலையைச் செய்கிறார் என்பதைப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம், வடிவாம்பாளை அழைத்துத் தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, தட்டில் இருந்த அதிரசம் ஒன்றை எடுத்த அதை ஒடித்து அவளது வாயில் ஆசையோடு போட முயன்றான்.

அந்தப் பெண்மணி அவனைத் தடுத்து கையிலிருந்த அதிரசத் துண்டைத் தனது கரத்தில வாங்கி, “என்ன இது? நீங்கள் செய்வது பெருத்த அக்கிரமமாக இருக்கிறதே. சுவாமிக்கு நிவேதனம் ஆவதற்கு முன் சமையல்காரன் சாப்பிடுவது எங்கேயாவது நடக்கிற காரியமா? அப்படிச் செய்வது அடுக்குமா? முதலில் சுவாமி நிவேதனம் ஆகட்டும். எனக்கென்ன அவசரம்? நான்தானா வெயிலில் போய் அலைந்து பிரயாசைப் பட்டுவிட்டு வந்திருக்கிறேன்? நான் நிழலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மத்தியானம் சாப்பிட்டது ஜீரணமாவதற்குக்கூட இன்னம் நேரமாகவில்லையே” என்று கூறிய வண்ணம் அந்த அதிரசத் துண்டை அந்தரங்க அன்போடு அவனுடைய வாயில் போட்டுவிட்டு அவனுக்கருகில் நின்றுகொண்டு தட்டிலிருந்த வஸ்துக்களை எடுத்தெடுத்து அவனுடைய வாயில் ஊட்டி உண்பிக்கத் தொடங்கினாள். அவனும் ருசி பார்க்காமல், தான் மாத்திரம் உண்பதைப்பற்றி ஒருவாறு கிலேசமடைந்து வருந்திய கண்ணப்பா சலிப்பாக பேசத்தொடங்கி, “வடிவூ! உன்னிடம் எல்லா குணமும் பொருந்தி இருந்தும் இந்த ஒரு விஷயத்தில் தான் நீ பிடிவாதம் பிடிக்கிறாய். ஆண் பிள்ளைகளுக்கெதிரில் பெண் பிள்ளைகள் எதையும் சாப்பிடக்கூடாதென்ற தப்பான கொள்கையை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் என் மனம் எவ்வளவு தூரம் புண்படுகிறதென்பது உனக்குத் தெரிகிறதில்லை. நீயும் என்னோடுகூட இப்போது சாப்பிட்டால், அது என் மனசில் எப்படிப்பட்ட ஆனந்தத்தை உண்டாக்கும் தெரியுமா?” என்றான்.

அதைக் கேட்ட வடிவாம்பாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து கண்ணப்பாவின் அதிருப்தியை விலக்க முயன்றவளாய், “ஏது என் கண்ணப்பாவுக்கு ஒருநாளும் இல்லாமல் என்மேல் இவ்வளவு கோபம் உண்டாகிறது. எல்லாப் பலகாரங்களையும் செய்கிறவர்களாகிய நாங்கள் எங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் ஏமாறிப் போவோம் என்று பார்த்தீர்களா? எங்களுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயர் ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியாத சங்கதியா? எங்களுக்கு வைத்துக் கொண்டது போக மிச்சந்தானே உங்களுக்கு வருகிறது. அப்படி இருக்க, நாங்கள் இங்கேயும் பங்குக்கு வந்துவிட்டால், பிறகு உங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமே என்று கூறிய வண்ணம், அவனது கோபத்தைத் தணிக்க முயற்சிப்பவள் போல ஒரு கையால் அவனது மோவாயைத் தடவிக் கொடுத்து இன்னொரு கையால் பலகாரங்களை எடுத்து மேன்மேலும் வாயில் ஊட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட கண்ணப்பா, “நீ சாப்பிட்டால், எனக்கு இல்லாமல் போய்விடப் போகிறதே என்ற பயத்தினால் நீ சாப்பிடமாட்டேன் என்கிறாயா? எனக்கு இல்லாமல் போனாலும் போகட்டும். அதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் விசனமில்லை. எப்டியாவது நீ சாப்பிட்டால், அது தான் எனக்கு ஆனந்தம். உடனே என் பசி தாகம் முதலிய எல்லா உபாதைகளும் நிவர்த்தியாய் மனம் குளிர்ந்து போகும்” என்றான்.

வடிவாம்பாள்:- மனித சுபாவம் உங்களுக்குத் தெரியாததல்ல. நான் எதையும் சாப்பிடாதிருக்கிற வரையில் நீங்கள் என்னை வற்புறுத்துவீர்கள்; நான் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்; நான் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தமும் அடைவீர்கள். நான் உங்களோடு கூட உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால், அதன் பிறகு அது சர்வசாதாரணமான காரியம் ஆகிவிடும். அதனால் உங்கள் மனசில் ஆசையாவது இன்பமாவது உண்டாகப் போகிறதில்லை. அரைக்காசு கொடுத்து அழச்சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயவைக்க வேண்டும் என்று ஜனங்கள் சுலோகம் சொல்லுவார்கள். அதுபோல, கொஞ்ச நாளான பிறகு இவளை ஏனடா சாப்பிடச் சொன்னோம். இவள் நம்மைத் தனியாக விட்டுப்போக மாட்டாளா என்று ஆகிவிடும் — என்று வேடிக்கையாகக் கூறி நகைத்தாள்.

அதைக் கேட்ட கண்ணப்பாவும் சந்தோஷமாகச் சிரித்து, “என்ன வடிவூ! நீ கூட இப்படிப் பைத்தியக்காரி போலப் பேசுகிறாயே! நம்முடைய வீட்டில் சாமான்களுக்கு ஏதாவது குறைவுண்டா? அதிக சாமான்கள் செலவாகிப் போகின்றனவே என்று உன்னை யாராவது கேட்கப் போகிறார்களா? நீ சாப்பிட்டுக் குறைந்து போய்விடுமா? அப்படித்தான் நீ என்ன ராக்ஷசியா? நீ எவ்வளவு சாப்பிடக்கூடியவள் என்ற நிதானம் தெரியாதா? நம் இருவருக்கும் எவ்வளவு தேவையோ, அவ்வளவு எடுத்து வந்து வைத்துக் கொண்டால், அது சரியாய்ப் போகிறது. அப்படி இல்லாமல், அதனால் எனக்குக் குறைவுபட்டாலும், அல்லது, இல்லாமல் போனாலும், அதை நான் ஒரு பொருட்டாக எண்ணுகிறவனல்ல என்பது உனக்கு நன்றாகத் தெரியாதா. ‘ஏனடா இவளைச் சாப்பிடச் சொன்னோம். இவள் ஓயமாட்டாளா என்று நான் நினைக்கக் கூடியவனல்ல என்பது உனக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட அற்ப புத்தி என் கால் தூசியை மிதித்த மனிதனுக்குக் கூட இருக்காதே. அதை நீ நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தும் கொஞ்சமும் யோசனை செய்யாமல் சொல்லிவிட்டாயே! உயிருக்குயிராக மதிக்கும் அன்னியோன்னிய மான பந்துக்கள் ஆயிரங்காலம் ஒருவரோடு ஒருவர் கூட இருந்து சாப்பிட்டு வந்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களே என்ற பொறாமை ஏற்படுமா? மற்றவர் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஆசையுமே ஒவ்வொருவருக்கும் இருக்குமன்றி, அது ஒருநாளும் குறையாது. கஷணச்சித்தம் கூடினப்பித்தமாக நடக்கும் குணம் உடையவர்களும், உண்மையான பற்றில்லாதவர்களுமே அப்படிப்பட்ட அற்ப புத்தியோடு நடந்து கொள்ளுவார்கள். இப்போது ஒரு வீட்டில் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிசுகாலம் வரையில் சமையல் செய்து தங்களுடைய புருஷருக்கும் குழந்தைகளுக்கும் போட்டு உண்பித்து வருகிறார்களே, எவ்வளவு காலமானாலும் அவர்களுடைய அன்பு, பயபக்தி விசுவாசம், பணிவு, உருக்கம் முதலிய எதிலாவது குறைவு ஏற்படுகிறதா? ஒருநாளும் ஏற்படுகிறதில்லை. உலக அனுபவத்தைப் பார்க்கப்போனால் காலக்கிரமத்தில் அந்தக் குணங்கள் அதிகரித்து முற்றிக் கனிந்து கொண்டே போவதையே நாம் காண்கிறோம். ஆனால் அதற்கு நீ ஒரு சமாதானம் சொல்ல வருவாய். பெண்பிள்ளைகள் மாத்திரம் அப்படித்தான் நடந்து கொள்ளுவார்கள் என்றும் அது எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் பொருந்தாது என்றும் நீ சொல்லுவாய். அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். பெருந்தன்மையும், உண்மையான வாஞ்சையும், தினந்தினம் அதிகரிக்கும் பாசமும் உடையவர்களான எல்லா ஆண்பிள்ளைகளும் தம்முடைய பெண்டு பிள்ளைகளிடத்தில் அதே மாதிரிதான் நடந்து கொள்வார்கள். என் விஷயத்தில் நீ இப்படிப்பட்ட தப்பான வார்த்தையை உன் மனப்பூர்வமாகச் சொல்லி இருக்கமாட்டாய் என்பது நிச்சயமே. நீ வேடிக்கைக்காக இப்படி பேசுகிறாய் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகையால் நான் உன் மேல் கோபிப்பது சரியல்ல. ஆனாலும் இப்படிப்பட்ட கொடூரமான வார்த்தையை வேடிக்கைக்காக உபயோகப்படுத்தினால் கூட, அது என் மனசை நிரம்பவும் புண்படுத்துகிறது” என்றான்.

வடிவாம்பாள்:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து நிரம்பவும் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி) எப்படி இருந்தாலும் நாங்கள் மூடப் பெண்பிள்ளைகள் தானே. நாங்கள் வேடிக்கையாகப் பேச நினைத்தால் கூட, ஏதாவது தவறு ஏற்பட்டு விடுகிறது. உங்களைப் போன்ற ஆண்சிங்கங்கள் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சகலமான விஷயங்களிலும் நாங்கள் புருஷர்களுக்கு அடங்கிக் கீழ்ப்படிந்து அவர்களுடைய பிரியப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஸ்திரீ தர்மம். ஆனாலும், இரண்டொரு சிறிய விஷயங்களில் எங்களுக்கு சில கொள்கைகள் இருக்கின்றன. அவைகளில் நாங்கள் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருக்கத்தான் வேண்டும். முன்காலத்தில் இருந்து என்றும் அழியாக் கீர்த்தி வாய்ந்த உத்தம ஸ்திரீகள் எல்லாம் அப்படிப்பட்ட கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார்கள் என்றும், அவை அவசியமானவைகள் என்றும் நான் சில சாஸ்திரப் புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். நல்ல குலத்தில் உதித்த ஸ்திரீகள் அநேகர் அந்த மாதிரி நடப்பதையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அப்படி நடந்துகொள்வதுதான் உத்தம ஜாதி ஸ்திரீகளுடைய லட்சணம் என்று அம்மாள் முதலியோர்களும் எனக்குப் பல தடவைகளில் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் நான் எந்த விஷயத்திலும் நீங்கள் காலால் இடும் வேலையைத் தலையால் செய்கிறவளாய் இருந்தும் இந்த விஷயத்தில் மாத்திரம் அவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறேன்.

கண்ணப்பா:- (வியப்படைந்து) ஒகோ இது உன்னுடைய சொந்தப் பிடிவாதம் என்றல்லவா நான் இதுவரையில் நினைத்தேன். இதற்கு நீ சாஸ்திர ஆதாரத்தையும் பெரியவர் களுடைய கட்டளையையும் மேற்கோளாகக் கொண்டுவர ஆரம்பிக்கிறாயே. நீ குறிக்கும் கொள்கை இன்னதென்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. பலகாரம் சாப்பிடும் விஷயத்தில், ஸ்திரீகள் புருஷரோடு சாப்பிடக் கூடாது என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறதோ தெரியவில்லையே!

வடிவாம்பாள்:- (வேடிக்கையாக நகைத்து) சாஸ்திரங்கள் பல காரத்தை மாத்திரமா குறித்துச் சொல்லும். அப்படி இல்லை. உத்தம ஜாதி ஸ்திரிகள் தங்களுடைய பசி, தாகம், தேகப்பிணி முதலிய எந்த விதமான உபாதையையும் புருஷருக்கு எதிரில் நிவர்த்தித்துக் கொள்வதும் கூடாது. அப்படிப்பட்ட பாதைகள் ஸ்திரீகளுக்கு உண்டாகின்றனவா என்பதாவது, அதை அவர்கள் எப்போது நிவர்த்தி செய்து கொள்ளுகிறார்கள் என்பதாவது புருஷருக்குத் தெரியவே கூடாது. பாதை என்றால், பஞ்சேந்திரியங்களாலும் ஸ்திரீகளுக்கு ஏற்படக்கூடிய சகலமான உபாதைகளும் அதற்குள் அடங்கியவைகளே. தேவர்களுக்கு எப்படிப் பசி, தாகம், பிணி முதலியவை இல்லை என்று நாம் கருதுகிறோமோ, அதுபோல, ஸ்திரீகளும் புருஷர்களால் கருதப்பட வேண்டும். அந்த விதமாக ஸ்திரீகள் நடந்து கொண்டால், அவர்களுக்கும் சுகிர்தம், அதனால் புருஷர்களுடைய மனசிலும் நிம்மதியும் ஆனந்தமும் உண்டாகும். அப்படி உண்டாகும் நிலைமையே நீடித்து சாசுவதமாக நிற்கக் கூடியது. இப்போது தாங்கள் பிரியப்படுகிறீர்கள் என்று நான் உங்களோடு கூட உட்கார்ந்து உண்ணத் தொடங்கினால், அதனால், இப்போது நீங்கள் மிகுந்த சந்தோஷம் அடைவீர்கள் என்பது நிச்சயமானாலும், இது நீடித்து நிற்காது. இதனால் பற்பல கெடுதல்கள் உண்டாவதோடு, ஸ்திரீகளிடத்தில் புருஷருக்கு நீடித்து நிற்க வேண்டிய சாசுவதமான பற்றும் பாசமும் சரியானபடி ஏற்படாமல் குறைவுபட்டுப் போகும். நீங்கள் எங்களுக்கு இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சமத்துவம் கொடுத்துக் கொண்டே போனால், அதற்கு ஓர் எல்லை இராது. படிப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் சமத்துவம் கொடுத்துக் கொண்டே போக நேரும். முடிவில் அது இருவருக்குள்ளும் அதிருப்தியையும், அருவருப்பையும், வேற்றுமையையும், சச்சரவையும், துன்பங்களையும், துயரத்தையும் உண்டாக்கிக் கொண்டே போகும். ஸ்திரீகள் புருஷர்களுடைய மனசில் சாசுவதமான நீடித்த வேரூன்றிய அன்பையும் மனோலயத்தையும் திருப்தியையும் சந்தோஷத்தையும் உண்டாக்க வேண்டுமானால், தங்களுடைய சுயேச்சையையும் சுயத்தேவைகளையும் வெளியில் காட்டாமல் அடக்கி, புருஷர்களுக்கு எப்படிப்பட்ட அற்ப மனசஞ்சலமும் உண்டருக்க ஆஸ்பதமாக இராமல் எப்போதும் சந்தோஷம், இன்பம், பணிவு, சேவை முதலியவைகளின் அவதாரம் போலவே இருந்து வரவேண்டும் என்பது இதற்கு முன்னிருந்து சென்றவர் களான உத்தமஸ்திரீ ஜாதிகளின் கொள்கை. அது போலவே நடந்து வரவேண்டும் என்பது என்னுடைய பிடிவாதமான மனஉறுதி. ஆகையால் என் கண்ணம்மா இந்த அற்ப விஷயங்களில் எல்லாம் என்மேல் கோபமாவது அருவருப்பாவது கொள்ளக் கூடாது; நான் கைக்கொண்டிருக்கும் ஸ்திரீ தர்மத்துக்கு யாதொரு பங்கமும் ஏற்படாமல் நீங்கள் என்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அடியாளுடைய ஜீவாதாரமான வேண்டுதலை — என்று நிரம்பவும் பணிவாகவும் அடக்கமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா முன்னிலும் அதிக வியப்படைந்து நகைத்து, “ஓகோ! அப்படியா சங்கதி! இப்போதுதான் உண்மை விளங்குகிறது. இதற்கு முன்னிருந்த ஸ்திரீகள் எல்லோரும் சேர்ந்து புருஷரைத் தம்முடைய வசப்படுத்தி அடிமைகள் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திருக்கும் இந்தச் சதி ஆலோசனையில் நீயும் சேர்ந்து கொண்டிருப்பவள் என்பது இப்போது தான் தெரிந்தது. உன்னுடைய மன உறுதியையும், விவரத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும். உன் பிரியம் போல நடந்து கொள். ஸ்திரீகள் புருஷர்களிடம் அதிகப் பணிவாகவும் அடிமைகள் போலவும் நடப்பதெல்லாம், அவர்களைத் தங்களுக்கு அடிமை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு செய்யப்படும் சூட்சுமம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இருந்தாலும், இந்தக் காலத்தில் அன்னிய தேசத்துப் படிப்பும் நாகரிகமும் நம்முடைய தேசத்தில் பரவப் பரவ, அந்த சூட்சுமம் எல்லாம் இருந்த இடந்தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. நீ வேறே எங்கும் போக வேண்டாம். சென்னப் பட்டணத்திற்கு போய்ப் பார். அங்கே வெள்ளைக்காரப் புருஷர்களும் ஸ்திரீகளும் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்று பார். அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று, இங்கிலீஷ் படித்த பெரிய மனிதர்களில் எண்ணிறந்தவர்கள் அவர்களைவிட ஒன்பது படி அதிகமாகவே தாண்டி தத்ரூபம் சீமை மனிதர்களைப் போல நடந்து கொள்ளுகிறார்கள். ஸ்திரீகள் தத்தம் புருஷர்களோடு சேர்ந்து கடற்கரைக்குப் போவதும், பலகாரக் கடைகளில் ஒன்று சேர்ந்து உண்பதும், இன்னும், பயாஸ்கோப், நாடகம் முதலிய இடங்களில் அன்னிய புருஷருக்கிடையில் தம்முடைய மனைவியைக் கொண்டுபோய்த் தமக்கருகில் உட்கார வைப்பதும், இது போன்ற எத்தனையோ புதுமைகளைக் காணலாம். தம்பி கந்தசாமியின் நிச்சயதார்த்தம் நெருங்கிவிட்டது. நாம் எல்லோரும் பட்டணம் போகப் போகிறோமே. அப்போது எல்லா விநோதங் களையும் நீ பார்க்கத்தான் போகிறாய். பட்டணத்தில் நம்முடைய சம்பந்தி வீட்டாரும் புதிய நாகரிகப்படி நடப்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீ ஒருத்தி தான் அங்கே இருப்பவர்களுள் சுத்த கர்நாடகமாகவும் பட்டிக்காட்டு மனுவதி யாகவும் விளங்கிப் போகிறாய். அந்தப் பழிப்புக்கெல்லாம் நீ ஆளாக இஷ்டப்பட்டால், நீ உன்னுடைய பிரியப்படியே நடந்து கொள்” என்றான்.

வடிவாம்பாள்:- பட்டணத்துக்கு வந்தால், நான் கவனிக்க வேண்டிய நம்முடைய வீட்டுக்காரியங்களைப் பார்ப்பதிலேயே என் பொழுதெல்லாம் போய்விடப் போகிறது. மற்ற விநோதங் களை எல்லாம் நான் எதற்காகக் கவனிக்கப் போகிறேன். அப்படிக் கவனித்தாலும், அதற்காக நான் என்னுடைய ஒழுங்கை மீறி நடக்கப் போகிறதில்லை. புது நாகரிகக்காரர்கள் என்னை எப்படி தூஷித்தாலும் தூஷிக்கட்டும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் மனிதர்களைக் கண்டால், கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக நடந்து எதை வேண்டுமானாலும் செய்கிறவர்களுக்குப் புரளியாகத்தான் இருக்கும். ஒரு குடும்ப ஸ்திரீ கொண்ட புருஷனுக்கும், மாமியார் மாமனார் முதலியோருக்கும் அடங்கிப் பணிவாக நடந்து, வீட்டு அலுவல்களை எல்லாம் செய்யும் விஷயத்தில் எவ்வளவோ பாடுபட்டு இரவு பகல் உழைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு தாசி எல்லாக் கட்டுப்பாட்டையும் விலக்கிவிட்டு எவருக்கும் அடங்காமல் சுயேச்சையாக நடந்து கண்டது காட்சி கொண்டது கோலமாக இருக்கிறாள். குடும்ப ஸ்திரீயாய் இருப்பதைவிட தாசியாய் இருப்பது சுலபமானது; இன்பமுடையதாகத் தோன்றுவது. அப்படி இருந்தும் நூற்றுக்குத் தொண்ணுற்றென்பது பேர் சகல கஷ்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்பட்டு குடும்ப ஸ்திரீயாக இருப்பதையே நலமாகக் கொள்கிறார்கள். அற்பத்திலும் அற்பமான எண்ணிக்கை உள்ளவர்களே தாசியாக மாறுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உலகத்தில் பெரும்பாலோரான ஸ்திரீகள் புருஷருக்கு அடங்காமல் அவர்களைக் கட்டிக்கொள்ளாமல் சுயேச்சையாக இருந்து வாழ்வதை மேற்கொள்ளக் கூடாதா? தாசிகளின் சுயேச்சையான வாழ்வு போலி வாழ்வே அன்றி வேறல்ல. தாசியாகப் போனாலும் விபசார குணமுள்ள புருஷர்களுடைய சேர்க்கை அவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. குடும்ப ஸ்திரீகள் தாலிகட்டின ஒரு புருஷனுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டியவளாக இருக்கிறாள். தாசியோ தன்னை நாடிவரும் நூற்றுக்கணக்கான புருஷர்களுக்கு எல்லாம் அடங்கி நடக்க வேண்டியவள் ஆகிறாள். ஒரு கட்டுப்பாட்டுக்குப் பயந்து அதைவிட்டு விலகிப் போனால், அதைவிட நூறுமடங்கு அதிகமான கஷ்டமும் துன்பமும் வந்து சேருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அப்படி இருந்தும், கட்டுப்பாட்டை அலட்சியம் செய்து தங்களுடைய பிரியப்படி காரியங்களை நடத்துகிறவர்களை எல்லாம், நாம் தடுக்க முடியாது. எந்தக் காலத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்; அவர்கள் நம்மைப் பார்த்து துரஷனைதான் செய்வார்கள். அதனால் எல்லாம் நாம் மனத்தளர்வு அடையலாமா? அதை எல்லாம் நாம் பொருட்படுத்துவதே நம்முடைய யோக்கியதைக்குக் குறைவு. அன்னிய தேசத்தாரைப் பார்த்துக் கெட்டுப் போகிறவர்கள் போகட்டும். அவர்களுடைய தாட்சணியத்துக்காக, நாம் நம்மைத் திருத்திக் கொள்ள முடியுமா? எத்தனையோ யுகம் யுகமாக இருந்து அழியாப் புகழ்பெற்று வரும் நம்முடைய நாட்டின் ஸ்திரீ தர்மங்களை நாம் கைவிடவும் முடியாது. அப்படிக் கைவிட்டால், இந்த நாடு வெகு சீக்கிரம் சீர்கெட்டு அழிந்து போவது நிச்சயம்” என்றாள்.

கண்ணப்பா:- நீ சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் இப்போது நம்முடைய நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால், வெகு சீக்கிரத்தில் நம்முடைய மனிதர்களுடைய நடையுடை பாவனைகளில் பெருத்த பெருத்த மாறுபாடுகள் உண்டாகிவிடும் என்ற ஒரு நிச்சயம் என் மனசில் உண்டாகிவிட்டது. இங்கிலீஷ் படிப்பு நம்முடைய நாட்டில் பரவுவது வருஷத்துக்கு வருஷம் அதிகப்பட்டுக் கொண்டே போகிறது. அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பெண் மக்களுக்குள்ளும் நுழையத் தலைப்பட்டுவிட்டது. இங்கிலீஷ் படித்தவர்களுள் பெரும்பாலோர் தம்முடைய பழைய தர்மங்களை எல்லாம் அடியோடு மறந்து புது மனிதர்களாக மாறிப் போயிருக்கின்றனர். முக்கியமாக நம்முடைய நாட்டில் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற ஜாதியாரைவிட, பிராம்மணர்களே இங்கிலீஷ் பாஷையை அதிகமாக நாடுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதனால் பிழைப்புக்கு நல்ல மார்க்கம் ஏற்படுகிறதென்று அதை நாடுகிறார்கள். ஓர் ஊரில் பிராம்மணர் வீடுகள் இருபது இருந்தால் அத்தனை வீட்டுப் பிள்ளைகளும் இப்போது இங்கிலீஷ் பாஷை கற்றுக் கொள்ளுகிறதையே வேதபாராயணம் செய்வதைவிட அதிக சிரத்தையாகச் செய்யத் தலைப்படுகிறார்கள். அநேகமாய் எல்லோரும் ஏதாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டு வெளியூர்களுக்குப் போய் விடுகிறார்கள். போன தலைமுறையில் இருந்த பிராம்மன அக்கிரஹாரங்கள் எல்லாம் இந்தத் தலைமுறையில் பாழ்த்துக் குட்டிச்சுவர்களாய் நிற்கின்றன. நம்முடைய வேத சாஸ்திரங்களைப் படிப்பதெல்லாம் அடியோடு இல்லாமல் போய்விட்டது. வைதிகப் பிராம்மணர்களுடைய வயிற்றில் உதித்த கீழ்க்கடைகள் எல்லாம் இங்கிலீஷ் பாஷையில் தேறி பெரிய பெரிய பட்டணங்களில் போய் அடைந்து கொண்டு, உத்தியோகத்தில் மேன்மேலும் அபிவிருத்தி அடைந்து அதிகப் பொருள் தேடுவதையே புருஷார்த்தமாகக் கைக்கொண்டு நம்முடைய பழைய ஆசார ஒழுக்கங்களை எல்லாம் விட்டு சமபந்தி போஜனம், ஜாதி மத சமத்துவம் முதலிய கொள்கைகளை எல்லாம் அனுபவத்தில் நடத்திக் காட்டுகிறார்கள். சென்னப் பட்டணத்திலும் சரி, மற்ற ஊர்களிலும் சரி, நூற்றுக்கணக்கான காப்பிக் கடைகள் ஏற்பட்டுவிட்டன. நம்முடைய ஊரில் உள்ளயாக — எக்ஞங்கள் செய்த மகா மகா சிரேஷ்டர்களுடைய பிள்ளைகள் எல்லாம் தலை மயிரை வெள்ளைக்காரர்களைப் போல வெட்டி விட்டுக் கொண்டு காப்பி ஓட்டல்களில் எல்லோருடனும் ஒரே மேஜையில் உட்கார்ந்து பலகாரங்கள் சாப்பிடுகிறார்கள். அதில் இன்னொரு வேடிக்கை நடக்கிறது. நாம் எல்லோரும் நம்முடைய வீட்டில் சிறிய குழந்தைகள் சாதம் சாப்பிடும் தட்டை எச்சில் தட்டு என்று இழிவாக நினைத்து, அதை ஒதுக்குப்புரமான ஒரு மூலையில் வைக்கிறோம். ஒரு குழந்தையின் தட்டை இன்னொரு குழந்தைக்குப் போடக்கூடாதென்று நினைப்பதோடு அதை வேறே யாரும் தொடவும் கூடாதென்று வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா; அதுபோல பட்டணத்தில் சொந்த வீடுகளில் பெண்டுகள் குழந்தைகளின் சாப்பாட்டுத் தட்டுகளை விலக்கி தூரத்தில் வைக்கிறார்கள். புருஷர்களோ காப்பிக் கடைகளில் எச்சில் என்பதையே கவனிப்பதில்லை. மற்றொருவன் வாயில் வைத்து சப்பிக் குடிக்கும் குவளையை, உடனே கொண்டு போய் ஒரு தொட்டியில் வைத்திருக்கும் தண்ணீரில் போட்டு அலம்பி, அதிலேயே காப்பி எடுத்து இன்னொரு பிராம்மணருக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள். அதை அவர் தம்முடைய திருவாயில் வைத்து சப்பிக்குடிக்கிறார். அது இன்னொருவருக்குப் போகிறது. இம்மாதிரி ஒரு பாத்திரத்தின் ஆயிசு முடிவதற்குள், அது கோடாது கோடி மனிதர்களின் வாய்க்குள் புகுந்து புறப்படுகிறது. இம்மாதிரி செய்து செய்து பழகிப் போனபடியால், இப்படிச் செய்வதில் ஜனங்கள் எள்ளளவும் லஜ்ஜையாவது கிலேசமாவது கொள்ளுகிறதே இல்லை. சமீபத்தில் நான் சென்னப் பட்டனம் போயிருந்த காலத்தில் நல்ல நல்ல வைதிகர்கள் எல்லாம் காப்பி ஓட்டலுக்குள் போய் சங்கை இல்லாமல் குடித்துவிட்டு வந்ததை நான் என் கண்ணால் கண்டேன். பிறருடைய கண்ணுக்கெதிரில் சாப்பிட்டால், கண் திருஷ்டி தோஷம் வந்துவிடும் என்று சொல்லி, இதுவரையில் எவ்வளவோ ஜாக்கிரதையாகவும் ஒழுங்காகவும் நடந்து வந்தவர்கள் எல்லாம் அடியோடு மாறிவிட்டார்கள். ஒரே ஜாதியைச் சேர்ந்த மனிதர்களில் ஒருவர் கொஞ்சம் மட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால், அவரை மற்றவர் தம்மோடு கூட வைத்துக் கொண்டு போஜமை செய்வதில்லை என்ற கட்டுப்பாடு பட்டிக்காடுகளில் இன்னமும் இருந்து வருகிறதே. பட்டணங்களில் காப்பிக் கடைகளில் அந்த விதிகள் எல்லாம் போன இடத் தெரியாமல் பறந்து போகின்றன. இங்கிலீஷ் படிப்பும், காப்பிக் கடைகளும் எப்படிப்பட்ட மனிதர்களையும் புது மனிதர்களாக மாற்றிவிட்டன. எச்சில், விழுப்பு, தீட்டு என்ற எந்த விஷயத்தையும் ஜனங்கள் பொருட்படுத்துவதையே அடியோடு விட்டுவிட்டார்கள். ஒரு நாள் நான் ஹைகோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். நம்முடைய ஊரில் உள்ள ஒரு சாஸ்திரியின் பிள்ளை அங்கே வக்கீலாக இருக்கிறார். அவர் ஒரு மூலையில் இருந்து கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் குடித்துக் கொண்டு நின்றார்; என்னைக் கண்டவுடன் அதை எறிந்துவிட்டுக் கையை இடுப்புத் துணியில் துடைத்துக் கொண்டார். நான் அதைக் கவனிக்காதவன் போல இருந்துவிட்டேன். அவர்தான் அப்படி இருந்தார் என்றால் பக்கத்து ஊரில் உள்ள இன்னொரு தாதாசாரியாருடைய பிள்ளையும் வக்கீலாக இருக்கிறார். அவர் என்ன செய்தார் என்றால், எப்போதும் கையில் ஒரு குண்டூசியை வைத்துப் பல்லைக் குத்தித் தமது கையை தலைமுகம் முதலிய இடங்களில் எல்லாம் துடைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி நான் இன்னமொரு செய்தியும் கேள்விப்பட்டேன். அவர் தங்கப் பதுமை போல இருக்கும் தம்முடைய சம்சாரத்தை அலட்சியம் செய்துவிட்டு, பறைச்சிக்கும், வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ஒரு சட்டைக்காரியோடு சகவாசம் செய்து வருகிறாராம்; அவளுக்குச் சொந்த வீடு முதலிய செளகரியங்களை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்து அவளுக்கு அடிமை போல இருந்து வருகிறாராம். இவைகளை எல்லாம் நான் சொல்வதில் இருந்து, நான் பிராம்மணர்களையாவது மற்றவர்களையாவது தூவிக்கிறேன் என்று நீ நினைத்துவிடக் கூடாது. இவைகளுக்கு எல்லாம் இங்கிலீஷ் பாஷை கற்பதே முதன்மையான காரணம் என்று நினைக்கிறேன். அப்படிக் கற்பதனால், ஜனங்கள் வித்தை கற்கவும் உத்தியோகம் பார்க்கவும் பெரிய பட்டணங்களில் போய் அடைகிறார்கள். சிறிய கிராமங்களாக இருந்தால், அவ்விடத்தில் ஜனங்கள் கொஞ்சமாக இருப்பதால், கட்டுப்பாடு இருக்கும். கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்களை மற்றவர்கள் இகழ்வார்கள். பொது ஜனங்களின் அபிப்பிராயத்துக்காக பயந்து எல்லோரும் ஒழுங்கான வழியில் தத்தம் மதாசாரக் கிரமப்படி நடப்பார்கள். பெரிய பட்டனங்களில், ஒருவனுடைய செய்கைகள் மற்றவன் கவனிக்கிறதில்லை; கவனிப்பதற்கு அவகாசம் இருப்பதும் இல்லை. கவனித்துக் கண்டிக்கப் போனாலும், ஒருவனுடைய நடத்தையாவது செய்கையாவது இன்னொருவன் துவித்தால், அது அவதூறுக் குற்றம் என்று இங்கிலீஷ் சட்டம் சொல்லுகிறது. ஆகையால், அது குற்றமாக முடிகிறது. மனிதரில் பெரும்பாலோர் எப்போதும் மற்றவருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கியே ஒழுங்காக நடக்கும் சுபாவம் உடையவர்கள். எவரும் தம்மைக் கண்டிக்கிறதும் இல்லை என்ற ஒரு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆகையால், நல்ல உயர்குலத்தில் உதிக்கிறவர்கள் கூட படிப்படியாகக் கெட்டு ஹீனமார்க்கங்களில் நடந்து விடும்படிபட்டன. வாழ்க்கை, காப்பிக் கடைகள் முதலியவைகளால் எத்தனையோ யுகங்களாக நமது ரிஷிகளும் முன்னோர்களும் ஏற்படுத்தி ஸ்தாபித்து வைத்திருந்த மதாசார ஒழுக்கங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டதை நாம் கண்ணால் பார்க்கிறோம். அந்த இங்கிலீஷ் படிப்பு நம்முடைய தேசத்தில் 100-க்கு 6 பேருக்குத் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும், இன்னும் மற்றவருக்கும், முக்கியமாக நம்முடைய பெண் பிள்ளைகளுக்கும், அது கற்பிக்கப்பட வேண்டும் என்றும், நம்முடைய தலைவர்கள் கோஷித்து வருகிறார்கள்; சில பட்டணங்களில் கட்டாயப்படிப்பு ஏற்படுத்திவிட்டார்கள். காலக்கிரமத்தில் எல்லா ஊர்களிலும் கட்டாயப் படிப்பு பரவிவிடும். இன்னம் இரண்டொரு தலைமுறைகளில் நம்முடைய நாட்டில் உள்ள ஒவ்வோர் ஆண் பிள்ளையும் ஒவ்வொரு பெண் பிள்ளையும் அவசியம் இங்கிலீஷ் பாஷை கற்க நேரிடும். அதன் பிறகு நம்முடைய தேசம் எந்த நிலைமையில் இருக்கும் என்பதை நாம் இப்போதே ஒருவிதமாக யூகித்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் படித்த ஆண் பிள்ளைகள் மாறி இருப்பது போல, இங்கிலீஷ் படித்த பெண் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அவர்களுள் பெரும் பாலோர் விபரீதமான நோக்கங்களையும் நடையுடை பாவனைகளையும் உடையவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். உன்னைப் போல, பழைய காலத்து வழக்கப்படி நடக்கும், ஸ்திரீகள் எல்லாம் அக்ஞான இருளில் அழுந்தி அடிமை நிலைமையில் இருப்பதாக அவர்கள் கருதி, உங்களை இந்த நிலைமையில் இருந்து கைதுக்கி விடுவதற்காக சில சங்கதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்தால், நம்முடைய தேசம் வெகு சீக்கிரத்தில் சகலமான விஷயங்களிலும் வெள்ளைக்காரர் தேசம் போலவே மாறிவிடும் என்ற உறுதி நிச்சயமாக ஏற்படுகிறது. இப்படி நம்முடைய தேசமே அடியோடு தலைகீழாக மாறிக் கிடக்கும் இந்தக் காலத்தில், நீ புருஷனுக்கெதிரில் பலகாரம் சாப்பிடமாட்டேன் என்பது நிரம்பவும் அநாகரிமாகத் தோன்றுகிறது. ஆண் பிள்ளைகளுக்கெதிரில், ஸ்திரீகள் எவ்விதமான தேக பாதையையும் காட்டிக்கொள்ளக் கூடாதென்று நீ சொல்வது சர்வ சிலாக்கியமான கொள்கைதான். அப்படியேதான் நம்முடைய பூர்வீக ஸ்திரிகள் நடந்து வந்தார்கள். இன்னமும் அநேகர் நடந்து வருகிறார்கள். அப்படி நடந்தால், புருஷர்களுடைய கண்களுக்கு, ஸ்திரிகள் தத்ரூபம் தேவதைகள் போல இன்ப வடிவமாகத் தோன்றுவார்கள் என்பது நிச்சயமே. அப்படிப்பட்ட அருமையான கொள்கை களை எல்லாம் நம்முடைய ஸ்திரீகள் சுத்தமாக விட்டொழிக்க வேண்டும் என்று நவீன நாகரிகத்தார் படும்பாடு அற்ப சொற்பமல்ல. அந்தக் கொள்கை வெள்ளைக்காரர்களுடைய கொள்கைக்கு நேர் விரோதமானது. இப்போது எல்லா விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய நாகரிகமே தலையெடுத்து இந்நாட்டில் பரவி வருகிறது. ஆகையால், வெகுசீக்கிரத்தில் உன்னுடைய கொள்கைகள் எல்லாம் அழிந்து போய்விடுமே என்ற ஒரு பெருத்த ஏக்கம் என் மனசை வாட்டுகிறது. உன்னைப் பற்றி நான் பயப்படவில்லை. யார் என்ன விதமாக நடந்து கொண்டாலும் நீ உன்னுடைய மனவுறுதியில் தளர்வடைய மாட்டாய் என்பது நிச்சயம். ஆகையால், நாம் நம்மைப்பற்றி வருந்தவில்லை. இனி வரப்போகும் சந்ததியாரின் நிலைமை எப்படி இருக்குமோ என்பதுதான் நிரம்பவும் கவலையை உண்டாக்குகிறது. பதினைந்து வருஷ காலத்துக்கு முன் இருந்த நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் நூறு மடங்கு வேறுபாடு ஏற்பட்டுப் போய்விட்டது. இன்னம் நம்முடைய ஆயிசு கால முடிவுக்கும் நாம் என்னென்ன மாறுபாடுகளைப் பார்க்க நேருமோ தெரியவில்லை. இதோ நம்முடைய கந்தசாமிக்கு நாம் பார்த்திருக்கிற பெண் மனோன்மணி இருக்கிறாளே, அவள் பி.ஏ., வகுப்பில் படிக்கிறாளாம். அவள் தன்னுடைய புருஷனிடத்தில் எப்படி நடந்து கொள்வாளோ என்னவோ தெரியவில்லை. நம்முடைய கந்தசாமியோ மகா கண்டிப்பான குணம் உடையவன்; எப்படிப்பட்ட மாசற்ற நடத்தை உடைய மனிதர்களிடத்திலும் குற்றங் கண்டுபிடித்துக் கண்டிக்கக்கூடிய மகா நுட்பமான மனசை உடையவன். அவனும் மனோன்மணியும் எப்படி ஒற்றுமையாக இருந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுவரையில் இருந்து இறந்து போனவர்கள் எல்லாம் நல்ல புண்ணியசாலிகள் தான். அவர்களுக்கு எல்லாம் நல்ல பணிவான பதிவிரதா சிரோன்மணிகள் எல்லாம் பெண்ஜாதிகளாக வந்து வாய்த்து, அவர்களுடைய பிரியப்படி நடந்து கொண்டார்கள். இனி ஏற்படப் போகும் தலைமுறையில் உள்ள மனிதர்கள் தங்களுடைய பெண்ஜாதிகளோடு எப்படித்தான் ஒற்றுமையாக இருந்து குடும்பம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை” என்றான். அவன் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நற்குண மடந்தையான வடிவாம்பாள், “இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை எல்லாம் ஏற்படுத்திய நம்முடைய முன்னோர்கள் மதியினர்கள் அல்ல. அவர்கள் சகலமான சூட்சு மங்களையும் தந்திரங்களையும் தெரிந்து கொண்ட மேதாவிகள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. குடும்ப வாழ்க்கையின் மர்மங்களையும் ஸ்திரீ புருஷர்கள் ஒருவரிடத்தொருவர் நடந்து கொள்ள வேண்டிய உத்தமமான தர்மங்களையும் அவர்கள் கடைந்து வெண்ணெய் போலத் திரட்டி எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். அது எப்போதும் அழியாத சாசுவதமான தர்மம். அதற்கு ஒருநாளும் கெடுதல் நேராது. கலியுகம் 5000-ம் வருஷத்துக்கு மேல், உயர்குலத்து மனிதர்களுடைய ஆசார தர்மங்கள் எல்லாம் சிதைவடைந்து போகும் என்றும், நீசர்களுடைய தர்மங்களே தலையெடுத்து நிற்கும் என்றும் நம்முடைய முன்னோர்கள் தம்முடைய தெய்வீக சக்தியினால் தீர்க்க தரிசனமாகச் சொல்லி முன்னரே எழுதி வைத்திருக்கிறார்கள். அதுபோலவே தான் இப்போது அனுபவத்தில் மனிதர்கள் நடக்கிறார்கள். இப்போது ஜனங்கள் மாறுபட்டு நடப்பது எனக்கு அவ்வளவு விநோதமாகத் தோன்றவில்லை. இப்படி ஜனங்கள் மாறுபடுவார்கள் என்று எத்தனையோ லட்சம் வருஷங்களுக்கு முன்னிருந்த நம்முடைய முன்னோர்கள் கண்டு புராணங்களில் எழுதினார்களே அதைப்போன்ற அற்புதமும் ஆச்சரியமும் வேறே இருக்கப் போகிறதா? இதற்கு முன் இரணியன், இரணியாகூடின், இராவணன் முதலிய எத்தனையோ துஷ்டர்கள் கடவுளுடைய ஆதிக்கத்தையே மறுத்து, தம்மையே கடவுளாக மதித்து மமதை பேயினால் பீடிக்கப்பட்டு உலகை ஆட்டி வைக்கவில்லையா? இந்த உலகம் தோன்றிய முதல், எத்தனையோ விதமான புதிய புதிய மதஸ்தர்களும் நாஸ்திகர்களும் தோன்றி ஜனங்களின் மனப்போக்கையும் நினைவுகளையும் கொள்கைகளையும் கலக்கி மாற்றவில்லையா? இப்படிப்பட்ட கோடாது கோடி மாறுதல்களும், நூதன சக்திகளும், நூதன கோட்பாடுகளும் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன; மனிதருடைய மனத்தை மாற்றிக் கொண்டே போகின்றன; அப்படி ஒவ்வொன்றும் கொஞ்ச காலம் இருந்து அழிந்து போகிறது. கடைசியில் மரத்திற்குள் ஆணி வைரம் உறுதியாக நிலைத்து நிற்பது போல கடவுளின் சனாதன தர்மம் என்றைக்கும் அழியாமல் நிலைத்து நின்று துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. நம்முடைய தேசமோ எத்தனையோ கற்ப காலங்களையும், யுகங்களையும் கண்டு கணக்கு வைத்துக் கொண்டு வருகிற மகா அற்புதமான தேசம். வெள்ளைக்காரருடைய தேசத்தில் சுமார் 2500 ௵ த்திற்கு முன் என்ன இருந்தது என்பதே எவருக்கும் தெரியாது. இந்த 2500-௵ காலத்தில் பிறந்து இறந்த அரசர்களின் செய்கைகளையும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை முதலிய துர்க்குணங்களாலும் மதவைராக்கியத் தாலும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மடிந்த விவரங்களையும், அந்தத் தேசத்தில் சட்டங்களும் நீதி ஸ்தலங்களும் ஒவ்வொன்றாக விருத்தியாகிக் கொண்டே போன விவரங்களையும் எழுதி அதற்குத் தேச சரித்திரம் என்று பெயர் கொடுத்து வெள்ளைக்காரர் பெருமை பாராட்டி அதைப்போன்ற தேசசரித்திரம் நம்முடைய நாட்டில் இல்லை என்று சொல்லி நம்மை அநாகரிகமான மனிதர்கள் என்று சொல்லி இகழ்கிறார்கள். எத்தனையோ லட்சம் லட்சம் ஆண்டுகளாக இருந்து நாகரிகம் அடைந்து வந்திருக்கும் நம்முடைய தேசத்தில் இருந்து ஆண்டு வந்த அரசர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதைவிட, கடலின் நீர்த்துளிகளைக் கணக்கெடுத்து விடுவது சுலபம் என்று நினைக்கிறேன். அத்தனை அரசர்களின் செய்கைகளையும் சரித்திரங்களையும் புஸ்தகமாக எழுதினால், அவைகளை வைப்பதற்கு இந்த உலகத்தில் போதுமான இடம் இருக்குமா என்பதே சந்தேகம். அவைகளை ஒரு மனிதன் படித்து முடிப்பதென்றால், அவன் எத்தனை கோடி கற்பகாலம் ஜீவித்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அந்தச் சரித்திரங்களை எல்லாம் படித்து மனிதர்கள் புதுமையான சங்கதி எதைத்தான் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எந்தத் தேசத்தின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அது மண்ணாசை பெண்ணாசை, பொன்னாசை, மதப்போர் முதலிய விஷயங்களிலும், அவை சம்பந்தமான சச்சர்வுகளிலுமே போய் முடிகிறது. எத்தனை கதைகள் படித்தாலும், சரித்திரங்கள் படித்தாலும், புராணங்கள் படித்தாலும், எல்லாவற்றிற்குள்ளும் நிற்கும் சாராம்சம் ஒரே மாதிரியானது தானே. அதுவுமன்றி வெள்ளைக்காரர்கள் சுமார் 2000 வருஷங்களுக்கு முன்பு நாகரிகமற்ற காட்டு மனிதர்களாய் இருந்ததாக அவர்களுடைய சரித்திரங்களே சொல்லுகின்றன. அப்போது அவர்களிடம் ராஜாங்க நிர்வாக முறைகளும் சட்டங்களும் நீதி ஸ்தலங்களும் இருந்ததில்லை. அவைகள் படிப்படியாக வளர்ந்து தற்கால நிலைமையை எப்படி அடைந்ததென்ற விவரமெல்லாம் அவர்களுடைய தேச சரித்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அப்படிப்பட்ட அபிவிருத்தியைக் காட்டிய தேசசரித்திரம் நம்மிடம் இல்லையாம். அதனால் நாம் நாகரிகமற்றவர்களாம். இந்த மாதிரி ஒரு புஸ்தகம் சொல்லுகிறது. அவர்களுடைய தேசத்தில் சமீபகாலம் வரையில் ஒன்றும் இல்லாமல் இருந்து பிறகு எல்லாம் வளர்ந்து வந்திருப்பதால், அவர்களுடைய தேச சரித்திரத்தில் அந்த விவரம் இருப்பது சகஜமே. நம்முடைய தேசம் எத்தனையோ யுகங்களுக்கு முன்பே சகலமான துறைகளிலும் பரிபூர்ணமான நிலைமையை அடைந்து, அதற்குமேல் போக முடியாது என்ற ஓர் எல்லை முடிவை அடைந்து அது சர்வ சாதாரணமான பழைய சங்கதியாக இருந்து வருகிறது. சகலமான ராஜாங்க நீதிகளும், அரசன், பிரஜைகள், தகப்பன், தாய், பிள்ளை, சகோதரன், மருமகள் முதலிய ஒவ்வொரு வகுப்பினரும் எவ்வித தர்மத்தைக் கடைப்பிடித்து, மற்றவரிடம் எப்படி ஒழுக வேண்டும் என்ற சகலமான முறைகளும் நீதிகளும் பரிபக்குவ நிலைமை அடைந்து கற்கண்டுக் கட்டி போலத் திரட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டு பெரிய பண்டக சாலைகளில் புகுந்து பார்த்தால், மனிதர் தெரிந்து கொள்ளக் கூடிய சகலமான நீதிகளும் தர்மங்களும் அவற்றில் அடங்கி இருக்கின்றன. வேதாந்த விஷயமாகப் பார்க்க வேண்டுமானால் பகவத்கீதை என்ன, உபநிஷத்துகள் என்ன இவைகளில் கண்டுள்ள முடிவைவிட அதிகமாக மனிதர் எட்ட முடியாது. மனிதர் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் அரசன் முதல் சகலமானவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் முதலியவைகள் இன்னின்னவை என்ற விஷயத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காண வேண்டுமானால், நம்முடைய திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு மிஞ்சிய நூல் இந்த உலகத்திலேயே இராதென்று சொல்ல வேண்டும். இன்னும் மற்றப்படி வான சாஸ்திரம், கவிகள், தர்க்கங்கள், மதவிஷயங்கள் முதலிய சகலமான துறைகளிலும் ஒப்பும் உயர்வும் அற்ற நூல்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டு ஆகாயத்தில் தனிச்சுடர் விட்டெரிந்து நிற்கும் சூரிய சந்திரர்கள் போல எக்காலத்திலும் அழியாமல் மணித்திரள்கள் போல இருந்து மங்காமல் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை எல்லாம் நம்மவர்கள் படிக்காமல் அலட்சியம் செய்து, மேல் நாட்டில் இருந்து வரும் குப்பைகளைப் படித்து அவற்றில் காட்டப்பட்டுள்ள போலி நாகரிகத்தைக் கண்டு மதிமயங்கி, தங்களுடைய குல ஆசாரம் மத ஆசாரங்களை அறவே விலக்கிவிட்டு இரண்டுங்கெட்ட மூடர்களாய் உழலுகிறார்களே என்பதுதான் என் மனசை வதைக்கிறது. மனிதனுக்கு இந்த உலகத்தில் பொருள் ஒன்றே பிரதானம் என்று சொல்ல முடியாது. ஒரு குறித்த மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் மற்ற சகலமான மனிதருக்கும் தான் சமம் என்று பாவித்து கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுயேச்சையாக நடக்க எண்ணுவது ஒருநாளும் சாத்தியமான காரியமல்ல. உலகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தேதான் தீரும். வெள்ளைக்காரர்கள் புருஷன், பெண்ஜாதி, பிள்ளைகள் முதலிய எல்லோரும் சமமானவர்கள் என்ற கொள்கைளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் உள்ளவன் பெரியவன்; அவனே பலிஷ்டன். அவனுக்கு மற்றவர் அடிமைகளாக நடக்க வேண்டும் என்ற கொள்கையை அவர்கள் அனுபவத்தில் கையாண்டு வருகிறார்கள். நம்முடைய நாட்டின் கொள்கை அதுவல்ல; பொருள் நிலைத்து நிற்பதல்ல. ஒரு மனிதன் தன்னுடைய ஆயிசு காலத்திற்குள் எத்தனையோ கோடி ரூபாய்களைச் சம்பாதித்து வைத்தாலும், அவன் கடைசிக் காலமடைந்து அவனை நடைத் திண்ணையில் தூக்கிப் போடுவதற்கு முன் அவனுடைய சொத்துகளை எல்லாம் அவனுடைய வார்சுதார்கள் பங்கு போட்டுக் கொள்ளுகிறார்கள். அவனுடைய தேகபலம் ஒடுங்குகிற வரையில்தான் பொருள் அவனுடையது என்று கருதப்படுகிறது. அவன் கடைசிக் காலம் அடைந்து பலவீனப்பட்டுப் போகும் காலத்தில் அவனுடைய பொருள் மற்றவருக்குச் சொந்தமாகிவிடுகிறது. ஆகையால், பொருள் மனிதனுடைய தேகத்தோடு சம்பந்தப்பட்டதே அன்றி, அவனுக்குள் இருக்கும் என்றைக்கும் அழியாத ஜீவாத்மாவுக்கும் அந்தப் பொருளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மனிதருடைய உடம்பு எப்படி அற்ப காலத்தில் அழியும் தன்மை உடையதோ, அதுபோல, அதோடு சேர்ந்த பொருளும் விலகிப்போகும் தன்மை உடையது. மனிதன் என்றால் அது முக்கியமாக ஜீவாத்மாவைக் குறிக்குமே அன்றி, மூப்புப் பிணி சாக்காடு முதலியவற்றிற்கு இலக்கானதும், நீர்க்குமிழி போன்றதுமான உடம்பைக் குறிக்காது. ஆகையால் மனிதருக்குப் பொருள் பிரதானமல்ல. அவர்களுக்கு இன்றியமையாத தேக பாதைகளுக்கும் தேவைகளுக்கும் அற்ப பொருள் வேண்டும் என்பது அவசியமானாலும், உண்மையான தேவைக்கு மிஞ்சின அதிகப் பொருளைத் தேடுவதும், அதன் பொருட்டு மனிதர் தமது ஆயிசு காலத்தை வீணாக்குவதும் மதியீனமாய் இருப்பதோடு, பெருத்த நஷ்டமாகவும் முடிகிறது. உலகத்தில் உள்ள மனித கோடியை நாம் ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் படிப்படியாக முதிர்ச்சி அடைந்து பரிபக்குவ நிலைமையை நோக்கிக் கனிந்து கொண்டே போகிறது. கடவுளை நாம் நேரில் காணவே முடியாது. ஆனால் கடவுளின் தன்மையை அடைந்து கொண்டே போகும் ஜீவாத்மாக்களை நாம் மனித ரூபமாகக் கண்ணுக்கெதிரில் பர்ர்க்கிறோம். தகப்பன் என்றும் தாய் என்றும், பிள்ளை என்றும், அரசன் என்றும், பிரஜைகள் என்றும், குரு என்றும், சிவடியன் என்றும் ஜீவாத்மாக்கள் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டு, ஒன்றிடத்தொன்று பயின்று, ஒன்றுக்கொன்று துணையாயிருந்து, ஒவ்வொன்றும் சிறுகச் சிறுகப் பரிபக்குவ நிலைமையை அடைந்து கடவுளின் தன்மை பெற்று முடிவில் பரமாத்மாவோடு ஐக்கியப்படும் காலத்தை எதிர்நோக்கிச் செல்லுகிறது. எல்லா ஜீவாத்மாக்களும் ஒரே நிலைமையான பக்குவ நிலைமையில் இருக்கிறதென்று நாம் சொல்ல முடியாது. ஒன்று அபாரமான முதிர்ச்சி அடைந்ததாக இருக்கிறது. ஒன்று அக்ளுான நிலைமையில் இருக்கிறது. எல்லோரும் கல்விகற்றுக் கொண்டதனாலேயே எல்லோரும் சமமான முதிர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மனப்பக்குவம் அடைந்தவன் ஒருவனும் பெரிய பரீட்சையில் தேறுகிறான். பக்குவம் அடையாத ஒருவனும் அதே பரீட்சையில் தேறுகிறான். முன்னவன் நீதிநெறி வழுவாதவனாகவும் மனோதிடம் உடையவனாகவும் இருப்பான். பின்னவன் நாஸ்திகனாகவும் துன்மார்க்கங்களில் அஞ்சாது பிரவர்த்திப்பவனாகவும் நடத்தைத் தூய்மை அற்றவனாகவும் இருப்பான். ஆகையால் மனிதனுடைய ஜீவாத்மாவின் பிரம்ம ஞானத் தேர்ச்சிக்கும், மனிதன் இங்கிலாந்து தேசத்துச் சரித்திரத்தைக் குருட்டு நெட்டுருப் போட்டுப் பரீட்சையில் தேறுவதற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே கிடையாது. நம்முடைய தேசத்தவர் கடவுளை அடைவதற்குக் கடவுளுடைய துணையை அடிப்படையாக வைத்துக் கொண்டிருந்தாலும், முதிர்ச்சி அடையாத ஒரு ஜீவாத்மா தன்னோடுகூட இருக்கும் முதிர்ச்சி அடைந்த இன்னொரு ஜீவாத்மாவைப் பணிந்து அதன் துணையைக் கொண்டே வழி தெரிந்து முன்னுக்குச் சென்று முதிர்ச்சியடைய வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள். ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை மணந்து கொண்டால், அந்த புருஷனுக்குள் இருக்கும் ஜீவாத்மா லிதிரீக்குள்ளிருக்கும் ஜீவாத்மாவைவிட அதிக முதிர்ச்சி அடைந்திருப்பதாகவே பொதுவாக நம்முடைய பெரியோர்கள் கருதி பெரியதை அடுத்துச் சிறியது முன்னேற்றம் அடைந்து உய்ய வேண்டும் என்ற சுலபமான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுபோலவே, குருவுக்கு சிஷ்யர்களும், அரசனுக்குப் பிரஜைகளும், பெற்றோருக்குப் பிள்ளைகளும் அடங்கிப் பணிவாக நடக்க வேண்டும். இதுவே மனித தர்மம். இதனால் சாசுவதமான ஜீவாத்மா மறுமையில் முதிர்ச்சி அடைவது முக்கியமான நோக்கம். அதுவுமன்றி இகலோகத்தில் ராஜ்ய பாரத்திலும், குடும்பங்களிலும், ஒற்றுமை, இன்பம், க்ஷேமம், நல்லொழுக்கங்கள் முதலியயாவும் தாமாகவே பெருகும். இந்த சூட்சுமங்களை எல்லாம் நம்முடைய தேசத்து முன்னோர் எத்தனையோ யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்து அதற்குத் தகுந்தபடி தர்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஸ்திரீகள் தம்முடைய புருஷர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அருமையான சூட்சுமங்களை எல்லாம் நம்முடைய முன்னோர்கள் அனுபவ பூர்வமாய்க் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றின்படியே நாம் நடக்க வேண்டுமேயன்றி, மேல்நாட்டுப் போலி நாகரிகங்களை எல்லாம் தாட்சணியம் பாராமல் குப்பையில் தள்ள வேண்டும். இப்போது மேல்நாட்டு நாகரிகம் நம்முடைய தேசத்தின் சனாதன தர்மங்களை எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்தில் கபளிகரம் செய்துவிடுமோ என்று நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். இதற்கு முன் இருந்த நம்முடைய ரிஷிகளின் விதைகளும், மேதாவிகளின் விதைகளும், மற்ற மிருக பட்சி விருகூடிங்களின் விதைகளைப் போல சிரஞ்சீவியாகவே இருந்து கொண்டிருக்கின்றன. ஏதோ இரண்டொரு வருஷங்களில் ஒரு வயலில் விளையும் நெல், பூச்சி அரிப்பதனால் கெட்டுப் போகிறதில்லையா, அப்படி இருந்தாலும், உலகத்தில் உள்ள நெல் விதையின் இயற்கையான குணம் முழுதும் மாறியா போகிறது. இல்லை அல்லவா. அதுபோல நம்முடைய தேசத்து மனிதர்களுடைய பூர்வீக அறிவு முதிர்ச்சியும் பரிபக்குவ ஞானமும் மாறிப்போய் போலி மார்க்கங்களைப் பின்பற்றும் என்று நீங்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். தட்டானுடைய பட்டறையில் உருமாறிக் கெட்டுப்போய்ப் பலவிதமாகச் சிதறிப் போகும் தங்கத் துண்டுகள் எல்லாம் முடிவில் குகைக்குள் வைத்து உருக்கப்பட்டு எப்படி மணித்திரளாக மாறிப் பழைய பிரகாசத்தோடு புனர்ஜென்மம் எடுக்கிறதோ, அதுபோல காலமாகிய தட்டானுடைய பட்டறையில் சின்னாபின்னப்பட்டு சிதறிப்போகும் தர்மங்களும் கொள்கைகளும் மனிதருடைய அனுபோகமாகிய குகைக்குள் நுழைந்து நல்ல அறிவாகிய அக்னியால் உருக்கப்படுமானால், எவை உண்மையான வைகளோ, எவை நிரந்தரமானவைகளோ அவை பூரண தேஜஸோடு நிலைத்து நின்று பிரகாசிக்கும். அதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. பொருள் உள்ள பணக்காரர்களே பெரியவர்கள், பூசனைக்கு உரியவர்கள் என்பது அயல் நாட்டாரின் கொள்கை. நம்முடைய நாட்டாரின் கொள்கை சகலத்தையும் துறந்து ஆசாபாசங்களை அகற்றி, தமக்கென்று ஓர் அற்பப் பொருளையும் வைத்திராத துறவிகளையே நாம் பெரியவர்கள் என்றும், பூசனைக்கு உரியவர்கள் என்றும் மதித்து வணங்குகிறோம். நமக்கு மனிதர் ஒரு பொருட்டல்ல. அவருடைய ஜீவாத்மாவின் நடத்தைத் தூய்மையும், குணத் தூய்மையும் பரிபக்குவ நிலைமையுமே நமக்கு முக்கியமானவை. மனிதரை மனிதர் வணங்குவதை நாம் அவருக்குள்ளிருக்கும் தெய்வாம்சம் பொருந்திய ஜீவாத்மாக்களை வணங்குவதாகக் கருதுகிறோம் ஆதலால், அப்படி வணங்குவதை நாம் ஓர் இழிவாகக் கருதுகிறதில்லை. கீழ்ச்சாதியாரான நந்தனிடத்தில் பரிபக்குவ நிலைமை இருந்ததைக் கண்டு பிராம்மணர் அவருடைய காலில் விழுந்து உபதேசம் பெற்றுக் கொள்ளவில்லையா. அதுபோல நம்முடைய நாயன்மார்களிலும், ஆழ்வார் ஆசாரியர்களிலும், கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்களும், பரம ஏழைகளும் எத்தனைபேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் அவர்களுடைய ஜாதி முதலியவற்றின் இழிவைக் கவனியாது தெய்வங்களாக எண்ணிப் பூஜிக்கவில்லையா. அப்படி நாம் செய்வது எதனால்? அவர்களுடைய ஜீவாத்மாக்களின் முதிர்ச்சியைக் கருதியே நாம் அவர்களை நமக்கு வழிகாட்டிகளாக மதித்து வணங்குகிறோம். அயல்நாட்டார் இப்போது நாளடைவில் இந்தக் கொள்கைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு தம்முடைய மனப்பான்மையைத் திருத்திக் கொண்டு வருவதாகத்தான் தெரிகிறது. நம்முடைய தேசத்தை அவர்கள் மாற்றுகிறார்களா, அல்லது, அவர்களுடைய தேசம் மாறப்போகிறதா என்பது காலக்கிரமத்தில் நன்றாகத் தெரிந்து போகும். கடவுள் சிருஷ்டிக்கு எது பொருத்தமானதோ, அவருக்கு எது உகந்ததோ அது எப்படியும் நிலைத்து நிற்கும். எப்படிப்பட்ட மனிதர்களானாலும் அதை அழிக்க முடியாது. மனிதரை மனிதர் பணியாமல் ஒவ்வொருவரும் தன்னரசாய் எஜமானத்துவம் வகித்தால், அவர்களைப் பணிவதற்கே மனிதர் இல்லாமல் போய்விடுவது நிச்சயம். அப்படிப்பட்ட நிலைமை கடவுளுக்கு விருப்பமானதாக இருந்தால், அதுவே ஏற்படட்டும். அந்தக் காலம் நம்முடைய தலைமுறையில் உண்டாகாதென்பது நிச்சயம். அதுவரையில் நான் நம்முடைய பெரியோர்களுடைய கொள்கைப்படியே நடந்து காலத்தைத் தள்ளிவிடுகிறேன். இனி வரும் பெண்ஜாதிகள் புருஷரோடு சமதையாக வெளியில் உத்தியோகம் பார்க்கட்டும். வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு பேரும் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடட்டும். அவரவர் தம் தம் வேலையைத் தாமே செய்து கொள்ளட்டும். அப்போது வேலைக் காரியும் தான் எஜமானியாய் இருக்க வேண்டும் என்று பிரியப்படுவாள். ஆகையால், எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்திருந்து எல்லோரும் எஜமானர், எல்லோரும் தமக்குத் தாமே வேலைக்காரர் என்று காரியங்களை நடத்திக் கொள்ளட்டும்” என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா நிரம்பவும் குதுகலமாகச் சிரித்து, “பலே! பலே! பேஷ்! நீ சொல்வதைப் பார்த்தால், இனிமேல் வரும் பெண்ஜாதிகள் ‘குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்க்கும்படியான சிரமம் எங்களுக்கு மாத்திரம் ஏன் இருக்க வேண்டும்? அதையும் ஆண்பிள்ளைகளே செய்து கொள்ளட்டும்’ என்று சொல்லி அந்த விஷயத்திலும் சமத்துவம் பாராட்டுவார்கள் என்று நீ சொல்வாய் போலிருக்கிறதே” என்றான்.

வடிவாம்பாள், “ஆம். வாஸ்தவம்தான். இனி புருஷர்கள் அதையும்தான் செய்ய வேண்டும். எல்லோரும் சமத்துவம் பாராட்டி ஒருவரை ஒருவர் அண்டாமல் இருக்கையில், ஸ்திரீகள் பிள்ளைப் பேறு முதலிய துன்பங்களில் அகப்பட்டுக் கொண்டு வீட்டில் படுத்திருந்தால், அந்தக் காலத்தில் மாத்திரம் அவர்களை ரஷிப்பதான இழிதொழிலை புருஷர் ஏற்றுக் கொள்ளுவார்களா? மானமுள்ள ஸ்திரீயாக இருந்தால், அவள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் புருஷருடைய உதவியை நாடாமலேயே இருக்க வேண்டும் அல்லவா. நீங்கள் சொல்வதும் சரியான விஷயமே. அப்படித்தான் நடக்கும்” என்றாள்.

கண்ணப்பா வேடிக்கையாக நகைத்து, “இப்படிப் புருஷரும் ஸ்திரீயும் ஒத்துழையாக் கொள்கையை மேற்கொண்டு சமத்து வத்தை நாடினால், அதன் பிறகு பிள்ளை குட்டிகள் என்ற பேச்சே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது உலகமும் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வந்துவிடும் அல்லவா” என்றான்.

வடிவாம்பாள், “ஆம், அதற்குத் தடை என்ன” என்று கூறி மேலே ஏதோ பேச வாய் எடுக்கையில், “அம்மா! அம்மா ஒரு விபரீதச் சங்கதி வந்திருக்கிறது. சீக்கிரம் வாருங்கள்” என்று ஒரு குரல் உண்டாயிற்று. அந்த விபரீதக் குரலைக் கேட்ட கண்ணப்பாவும் வடிவாம்பாளும் திடுக்கிட்டு வேடனைக் கண்ட மான் போல மருண்டு விசிப்பலகையை விட்டுச் சடேரென்று கீழே இறங்கினார்கள். கீழ்க்கட்டில் பாத்திரங்கள் சுத்தி செய்து கொண்டிருந்த வேலைக்காரி மெத்தைப்படியில் நின்று அவ்வாறு கூக்குரல் செய்ததாக அவர்கள் உடனே உணர்ந்து கொண்டனர். கண்ணப்பா, “யார் அது? இப்படி வா? என்ன விபரீதச் சங்கதி வந்திருக்கிறது? சீக்கிரமாகச் சொல்” என்று பதைபதைப்பாக கேட்க, வேலைக்காரி உடனே மேலே ஏறிவந்து அவர்களுக்கு எதிரில் பணிவாக நின்று கொண்டு, “நான் குப்பையை வெளியில் கொண்டுபோய்க் கொட்டப் போனேன். ஜனங்கள் பிரமாதமாகப் பேசி ஆச்சரியப்பட்டுக் கொண்டு ஓடுகிறார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா பெரிதும் திகைப்பும் வியப்பும் அடைந்து, “ஜனங்கள் எங்கே ஓடுகிறார்கள்? என்ன விசேஷம் நடந்ததாம்” என்றான்.

வேலைக்காரி, “நம்முடைய திகம்பர சாமியார் ஐயா இருக்கிறார்கள் அல்லவா. அவர்களின் மேல் நாலைந்து பாம்புகள் விழுந்து கடித்து விட்டு ஓடிப்போய் விட்டனவாம். அவர் ஸ்மரணை தப்பிப் போய் இறக்கும் நிலைமையில் இருக்கிறாராம். எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் என்றாள்.

அந்தச் சொற்களைக் கேட்ட கண்ணப்பாவும் வடிவாம்பாளும் பிரமித்து ஸ்தம்பித்துத் துடிதுடித்துப் போயினர். தாங்கள் கேட்பது மெய்யோ பொய்யோ என்றும், ஒருவேளை அந்த வேலைக்காரிக்குப் பைத்தியம் பிடித்துப் போயிருக்குமோ என்றும் சந்தேகிக்கத் தொடங்கினரே அன்றி திகம்பர சாமியாருக்கு அத்தகைய பெருத்த அபாயம் நேர்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தையே கொள்ள மாட்டாதவராய்ப் பதைபதைத்துப் போயினர்.

மறுபடியும் கண்ணப்பா வேலைக்காரியைப் பார்த்து, “நீ சொல்வது நம்பத்தகாத விஷயமாக இருக்கிறதே. நம்முடைய சுவாமியாரை நாலைந்து பாம்புகள் கடித்து விட்டன என்கிறாய். அத்தனை பாம்புகளும் எங்கே கூடியிருந்தன? அவர் அந்த இடத்திற்கு எதற்காகப் போனார்? நாலைந்து நல்ல பாம்புகள் அவரைக் கடித்தால், அவர் அதே கூடிணத்தில் விழுந்து இறந்து போய்விடுவார். உடனே பாம்புகளும் ஓடிப்போய் விடும். அவர் தம்மைப் பாம்புகள் கடித்ததென்று எப்படி வெளியிட்டிருக்க முடியும்? ஜனங்கள் சொல்லும் விவரத்தையும் அவர்கள் அவருடைய ஜாகைக்கு ஒடுவதையும் கவனித்துப் பார்த்தால், அவருக்கு அந்த விபத்து அவருடைய பங்களாவிலேயே நேர்ந்திருக்க வேண்டும் என்றல்லவா நாம் நினைக்க வேண்டிருக்கிறது. அவருடைய பங்களாவில் அதிக அடைப்புகளாவது நெருக்கமான பூச்செடிகளாவது இல்லையே. அப்படி இருக்க, ஒரே காலத்தில் நாலைந்து பாம்புகள் அந்தப் பங்களாவுக்குள் எப்படி வந்திருக்கும்? ஒருவேளை அந்தப் பங்களாவில் ஏதாவது பாம்புப் புற்று இருந்து அதை அவர் வெட்டச் சொன்னால், அதற்குள் ஒன்றாகச் சேர்ந்திருந்த பாம்புகள் உடனே வெளிப்பட்டு அவரைக் கடித்திருக்கலாம் என்று நினைப்பதற்கு இடம் உண்டு. எனக்குத் தெரிந்த வரையில், அங்கே பாம்புப் புற்றே இல்லையே” என்றான்.

அதைக் கேட்ட வேலைக்காரி, “அந்த விவரம் எதையும் நான் கேட்கவில்லை. ஜனங்கள் ஓடுகிற அவசரத்தில், நான் கேட்டதற்குச் சரியான உத்தரமே சொல்லாமல் எல்லோரும் பறக்கிறார்கள். பாம்புகள் கடித்தது சாமியார் ஐயாவைத்தானா என்ற விஷயத்தை தெரிந்து கொண்டேன். பாம்புகள் கடித்த உடனே அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டாராம். பக்கத்தில் இருந்த ஜெவான் பாம்புகள் ஓடியதைக் கண்டும், அவருடைய உடம்பில் இருந்த பற்குறிகளைக் கொண்டும், அவைகள் அவரைக் கடித்துவிட்டன என்று தெரிந்து கொண்டு கூக்குரலிட்டானாம். அநேக மந்திரவாதிகளும், வைத்தியர்களும் வந்து கூடி வைத்தியம் முதலிய சிகிச்சைகள் செய்கிறார்களாம். ஆனால் அவர் பிழைக்க மாட்டாராம். இன்னம் கொஞ்ச நேரத்தில் பிராணன் போய்விடும் போலிருக்கிறதாம். மற்ற விபரம் எதுவும் தெரியவில்லை” என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்கும் போதே வடிவாம்பாளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டு இரண்டு கன்னங்களின் வழியாகத் தாரை தாரையாக வழிந்தோடத் தொடங்கியது. அங்கம் பதறியது; அவள் பைத்தியம் கொண்டவளைப் போல மாறித் தனது கைகளைப் பிசைந்து கொண்டு, “ஐயோ! தெய்வமே அப்படிப்பட்ட மகானுக்கு இவ்விதமான முடிவை ஏற்படுத்த உன் திருவுள்ளம் இடம் கொடுத்ததா? ஆகா! இதுவும் உன் சோதனையா?” என்று கூறிப் பிரலாபித்துக் கலங்கி அழத் தொடங்கினாள்.

உடனே கண்ணப்பா, “வடிவூ! நாம் இனியும் தாமதித்து இங்கே ஒரு நிமிஷங்கூட இருப்பது தவறு; வா, போகலாம். நாம் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருப்பதற்குள், காரியம் விபரீதத்துக்கு வந்துவிடும். நாம் இருவரும் நடந்தே அவருடைய ஜாகைக்குப் போவோம்” என்று கூறிவிட்டு வேலைக்காரியைப் பார்த்து, “நீ வாசற்கதவைப் பூட்டிக் கொண்டுபோய், நம்முடைய ஆள்களில் யாரையாவது ஒருவனை உடனே பூவனூருக்குத் துரத்தி அப்பாவுக்கும் அம்மாளுக்கும் இந்தச் சங்கதியைச் சொல்லும்படி செய்துவிட்டு, இங்கே வந்து இரு. அவர்கள் அதற்குள் திரும்பி வந்துவிட்டால், அவர்களுக்கு இந்தச் சங்கதியைச் சொல்லி, உடனே அவர்களை சுவாமியாருடைய பங்களாவுக்கு அனுப்பு” என்று கூறியவுடன் வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு விரைவாக வீட்டைவிட்டு வெளிப்பட்டு திகம்பர சாமியாருடைய ஜாகையை நோக்கி ஒட்டமும் நடையு மாய்ச் செல்லலானான்.

★ ★ ★

5-வது அதிகாரம்

மோகினி அவதாரம் - எதிர்பாரா விபத்து

சென்னப்பட்டனத்தின் வடமேற்குப் பாகத்திற்கு புரசைப் பாக்கம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது சுமார் நான்கு மைல் சுற்றளவுள்ள பாகம். அந்தப் பேட்டையில் சாதாரண ஜனங்கள் வசிப்பதற்கு ஏராளமான தெருக்களும், பெரிய பெரிய ரஸ்தாக்களும், கடைத்தெருக்களும் இருக்கின்றன. அந்தத் தெருக்களை விட்டு விலகி நாலாபக்கங்களிலும் பெருத்த தனிகர்களும் உத்தியோகஸ்தர்களும், துரைமார்களும் வசிப்பதற்கு நூற்றுக்கணக்கான பெரிய பெரிய பங்களாக்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் இருந்து பூந்தமல்லிக்குப் போகும் ராஜபாட்டையானது புரசைப்பாக்கத்தில் நுழைந்தே செல்லுகின்றது. ஆகையால், அந்தப் பாட்டையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான அழகிய பங்களாக்கள் வெகுதூரம் வரையில் அமைந்திருக்கின்றன. அவற்றின் முடிவில் இன்னமும் தனவந்தர்கள் லட்சக்கணக்கில் திரவியத்தைச் செலவிட்டுப் புதிது புதிதாக பங்களாக்களையும், மாட மாளிகைகளையும் கட்டிக்கொண்டே போகிறார்கள். அந்த ராஜபாட்டை சென்னையில் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து சிறிது தூரம் வரையில் வீடுகளும் பங்களாக்களும் அடுத்தடுத்து நெருங்கி இருக்கக் காணலாம். அது மேற்குத் திக்கில் போகப்போக, அதன் இருபக்கங்களிலும் உள்ள பங்களாக்கள் வெகு தூரத்திற்கு ஒன்றாக இருப்பதோடு நிரம்பவும் விசாலமான தோட்டம் உத்யானவனம் மதில் சுவர்கள் முதலியவற்றால் சூழப்பட்டனவாகவும் இருக்கின்றன. அவ்வாறு காணப்படும் ஒவ்வொரு வனமாளிகையும் ஒவ்வொரு பிரத்தியேகமான ஊர் என்றே நாம் அநேகமாய் மதிக்க வேண்டும். சென்னையில் பட்டப்பகலில் நேருக்கு நேர் மோசம், புரப்பட்டு, முடிச்சவிழ்த்தல், ஏமாற்றுதல் முதலிய செய்கைகள் நடைபெறுவது சகஜமாக இருந்தாலும், இரவில் கன்னம் வைத்தோ, கூரைமேல் ஏறியோ வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கள்ளர்கள் அநேகமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆதலால், ஜனங்கள் ஊர்க்கோடிகளில் தன்னந்தனியான வனமாளிகைகளில் பயமின்றி இருந்து வருகிறார்கள். அவ்வாறு வசித்தவர்களுள் சென்னை பெரிய கலெக்டர் பட்டாபிராம பிள்ளையும் ஒருவர். அவர் சர்க்கார் வேலையில் இருந்து 24-வருஷ காலம் கடத்திவிட்டார். ஆதலால், இன்னம் ஒரு வருஷகாலம் சேவித்துவிட்டு உபகாரச் சம்பளம் பெற்று வேலையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தமையால், வேலையை விடுத்த பிறகு புரசைப்பாக்கத்திலேயே தமது சாசுவதமான வாசஸ்தலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தேசத்தோடு, அவர் அவ்விடத்தில் விலைக்குக் கிடைத்த ஒரு பிரம்மாண்டமான பங்களாவை சற்று ஏறக்குறைய 75000 ரூபாய்க்கு வாங்கி அதில் இருந்து வந்தார். அந்தப் பங்களா பூந்தமல்லிக்குப் போகும் ராஜ பாட்டையின் பக்கத்தில் இருந்தது ஆனாலும், அதன் இரண்டு பக்கங்களிலும் சுமார் 1½-பர்லாங்கு தூரத்திற்கு அப்பாலேயே இதர பங்களாக்கள் இருந்தன. அவருடைய பங்களா பாட்டை ஒரமாக அகலத்தில் சுமார் கால் பர்லாங்கும், முன்னுக்குப் பின் நீளத்தில் அரை பர்லாங்கும் பரவி இருந்ததன்றி அதன் நாற்புறங்களிலும் ஒன்றரை ஆள் உயரம் கட்டப்பட்டிருந்த பெருத்த மதில் சுவர்களினால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சுவர்களின் மேல் ஏறி எவரும் உள்ளே வராதபடி அதன் மேற்புறங்களில் கூர்மையான கண்ணாடித் துண்டுகள் பதிக்கப் பெற்றிருந்தன. பாட்டையை ஒட்டினாற் போல இருந்த முன்பக்கத்து மதில் சுவரில் மேற்குப் பக்கம் நகர்ந்தாற் போல, ஒரு பெருத்த வாசற்படியும் இரும்புக் கம்பிக் கதவுகளும் காணப்பட்டன. அந்தக் கதவின் உள்பக்கத்தில் ஒரு பக்கத்தில் பலகைகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய காவல் வீடு காணப்பட்டது. அதன் முன்பக்கத்தில் எப்போதும் ஒரு பாராக்காரன் உட்கார்ந்திருப்பான். அந்த பங்களாவின் உட்புறத்தில் எங்கு பார்த்தாலும் மா, பலா, நார்த்தை, தென்னை, கமுகு, ஆல், நெல்லி முதலிய விருகூடிங்களும், வாழை மரங்களும் நிறைந்து பெருத்த தோப்புபோல அடர்த்தியாக இருந்தன. தரையில் நாட்டுப் புஷ்பங்களின் பாத்திகளும் சீமை குரோடன்களிருந்த தொட்டிகளும், சிவப்புக் கற்றாழை, மருதாணி முதலியவற்றின் வேலிகளும் அழகாகவும் ஒழுங்காகவும் காணப்பட்டன. அத்தகைய சிங்கார வனத்தின் இடையில் இருந்தும், மேன்மாடம் உள்ளதுமான கட்டிடம் வெள்ளைக்கார துரைகள் வசிக்கும் மாளிகைபோல அமைக்கப்பட்டிருந்தது. பாட்டையின் ஒரத்தில் இருந்த இரும்புக் கம்பிக் கற்களால் வழுவழுப்பாகவும் மேடு பள்ளமென்பது இல்லாமல் சமமாகவும் ஒரு பெரிய பாதை காணப்பட்டது. அந்தப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சமதூரத்தில் தென்னை மரங்களும், கமுகு மரங்களும் காய்க்குலைகளைத் தாங்கி நின்றன. அவற்றின் அடியில் ஒரே அளவாக வெட்டிவிடப்பட்ட மருதாணி வேலியும், அதற்கு முன்னால் பல நிறங்களைக் கொண்ட வரிசையான ரோஜாப் புஷ்பத்தொட்டிகளும் காணப்பட்டன. அந்தத் தொட்டிகளை அடுத்தாற் போல அருகம்புல் வளர்ந்த தரை, பாட்டையில் வந்து முடிந்த இடத்தில், பீங்கான்களால் ஆன சிறிய சிறிய ஒடுகள், மருதாணி வேலியான மீசைக்குப் பக்கத்தில் பல்வரிசை போலப் பாட்டை ஒரத்தில் பதிப்பிக்கப் பெற்றிருந்தன. அந்தப் பாட்டையின் வழியாக உள்ளே சென்றால், நடுவில் இருந்த கட்டிடத்தின் முன்னால் கள்ளிக்கோட்டை ஒடுகள் போர்த்தப் பெற்றதும் கொட்டகைப் பந்தல் போல இருந்ததுமான மண்டபத்தின் கீழே போய்ப் பாதை முடிவடைந்தது. அந்த மண்டபத்தின் நான்கு பெரிய துண்களைச் சுற்றிலும் அழகிய பூத்தொட்டிகள் அழகு செய்து கொண்டிருந்தன. அந்த மண்டபத்தில் இருந்து படிக்கட்டின் வழியாகக் கட்டிடத்திற்குள் நுழைந்தால், முன் பக்கத்தில் பூத்தொட்டிகள் நிறைந்த விசாலமான ஒரு தாழ்வாரம் காணப்படும். மேற்படித் தாழ்வாரத்தின் மேற்கூரையில் இருந்து சிறிய சிறிய பூத்தொட்டிகளிலும், மின்சார விசிறிகளும் மின்சார விளக்குக் குண்டுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தாழ்வாரத்தில் நான்கு டலாயத்துகள் வெள்ளி வில்லைகள், வெள்ளி ஜரிகை தைத்த டவாலிப் பட்டைகள் முதலியவற்றை அணிந்தவராய் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்தத் தாழ்வாரத்தை அடுத்தாற் போல உட்புறத்தில் ஒரு பெருத்த கூடம் இருந்தது. கலெக்டரைப் பார்ப்பதற்கு யாராவது நண்பர்களோ, அல்லது குமாஸ்தாக்களோ, அல்லது கட்சிக்காரர்களோ வருவார்களானால், அவர்களோடு பேசுவதற்கு அந்த இடம் ஒரு தர்பார் மண்டபம் போல உபயோகிக்கப்பட்டு வந்தது. ஆகையால், அந்த இடம் நிரம்பவும் அலங்காரமாகக் காணப்பட்டது. அவ்விடத்தில் பளபளப்பான விலை உயர்ந்த நாற்காலிகளும், சோபாக்களும், பூத்தொட்டிகளும், மேஜைகளும், சட்டப் புஸ்தகங்கள் நிறைந்த கண்ணாடி பீரோக்களும், அலமாரிகளும் காணப்பட்டன. சுவர்களில் மான் கொம்புகளும், படங்களும் நிறைந்திருந்தன. மேலே இருந்து மின்சார விசிறிகளும் விளக்குகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தரை முழுதும் வழுவழுப்பான பிரப்பம் பாயினால் மூடப்பட்டிருந்தது. அந்தக் கூடத்தில் இருந்து அப்பால் உள்ள விடுதிகளுக்குப் போக இரண்டு வாசல்கள் காணப்பட்டன. அவற்றின் கண்ணாடிக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ஜரிகைப்புட்டாக்கள் நிறைந்த பனாரீஸ் பட்டுத் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டு வழிகள் மறைக்கப்பட்டிருந்தன. அந்த வாயில்களின் வழியாக நாம் உள்ளே சென்றால், அப்புறத்தில் சகலமான வசதிகளும் நிறைந்த பல அறைகளும், சிறிய கூடங்களும், தாழ்வாரங்களும் காணப்பட்டன. ஒரு தாழ்வாரத்தின் நடுவில் இருந்து மேலே சென்ற படிகளின் வழியாக ஏறிச் சென்றால், அது மேன்மாடத்தில் கொண்டு போய்விடுகிறது. அவ்விடத்தில் கட்டில் மெத்தைகள் நிறைந்த செளகரியமான சயனக்கிரகங்களும், புஸ்தக சாலை முதலிய அறைகளும் முன் பக்கத்தில் தாழ்வாரமும் அமைந்திருந்தன. அடிக்கட்டில் இருந்தது போல மேன்மாடத் திலும் பூத்தொட்டிகள், நாற்காலிகள், சோபாக்கள், மேஜைகள், நிலைக்கண்ணாடிகள், படங்கள் முதலிய அலங்காரங்கள் எல்லாம் சம்பூர்ணமாக நிறைந்திருந்தன. அவ்வளவு பிரம்மாண்டமான பங்களாவின் நடுவில் அத்தனை வைபவங்களோடு கூடியிருந்த மாளிகைக்குள் மேன்மாடத்தில் ஒரே ஒரு யெளவன மங்கை காணப்பட்டாள். அவள் இருந்த விடுதிக்குப் பக்கத்தில் அவள் கூப்பிடும் குரலுக்கு விடைகொடுக்க ஒரு பணிப்பெண் எப்போதும் ஆஜராய் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிடத்தின் அடிக்கட்டின் பின்பாகத்தில் வெகு துரத்திற்கு அப்பால் இருந்த அறையில் இன்னொரு வேலைக்காரி சமையல் சம்பந்தமான ஏதோ அலுவல்களைச் செய்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிடங்களின் பின்புறத்தில் மதிலின் ஒரமாக வண்டிகள் நிற்பதற்காக ஒரு கட்டிடமும், தோட்டக்காரனும் அவனது மனைவியும் குடியிருப்பதற்காக ஒரு சிறிய விடும் காணப்பட்டன.

அத்தகைய லட்சணங்கள் வாய்ந்த ரமணியமான வன மாளிகைக்குள் நாம் சென்று பார்க்கும் தினம் சனிக்கிழமை. ஆதலால், கலெக்டர் பட்டாபிராம பிள்ளை சென்னை துறை முகத்திற்கு எதிரில் இருக்கும் தமது கச்சேரிக்குப் போயிருந்தார். அவரது ஏகபுத்திரியான மனோன்மணி என்ற மடந்தையே மேன் மாடத்தில் காணப்பட்டவள். அப்போது பகல் இரண்டு மணி வேளை. ஆதலால், அந்த மடந்தை காலை பத்தரைமணிக்கே தனது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு மேன்மாடத்தில் தனது சயனக்கிரகத்தில் ஒரு கட்டிலின் மேல் உட்கார்ந்து கையில் ஒர் இங்கிலீஷ் புஸ்தகத்தை வைத்துப் படித்தபடி திண்டில் சாய்ந்திருந்தவள் அப்படியே துக்கத்தில் ஆழ்ந்திருந்து பகல் சுமார் இரண்டு மணிக்கு விழித்தெழுந்து உட்கார்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழன்று, குளிர்ந்த காற்றோட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், பகல் வேளையின் உக்கிரத்தைத் தாங்க மாட்டாதவளாய், அவள் துவண்டு துவண்டு திண்டில் சாய்ந்து கொட்டாவி விட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு இருந்தபடி புஸ்தகத்தை எடுத்துப் படிக்க முயற்சிப்பதும், கைகள் சோம்பிப் புஸ்தகத்தைக் கீழே நழுவவிடுவதால் அது பொத்தென்று மெத்தையின் மேல் விழுவதுமான காட்சி தென்பட்டது. அந்த மடந்தைக்கு சுமார் 17 அல்லது 18 வயது நிறைந்திருக்கலாம். அதிக உயரமாகவும், அதிகக் குள்ளமாகவும் இல்லாமல் அவள் நடுத்தர உயரம் உடையவளாய்க் கொடிபோல மெலிந்திருந்தாள். முகம் கோழி முட்டையின் வடிவம் போலச் சிறிது நீண்டு உருட்சியாக இருந்ததோடு சூட்சுமமான பகுத்தறிவும் வசீகரமும் வாய்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் அவள் ஓயாமல் இங்கிலீஷ் படிப்பதிலேயே தனது பொழுதை எல்லாம் போக்கி வந்தாள் ஆதலால், அதனால் அவளது மூளை பண்பட்டு வந்தது ஆனாலும், முகம் உடம்பு கை கால்கள் முதலியவற்றின் புதுத்தன்மையும், ஜொலிப்பும், தளதளப்பும் பரிபூர்ண நிலைமை அடையாமல் குறைவுபட்டுத் தோன்றின. அவளுக்குச் சகலமான செல்வங்களும் செளகரியங்களும் குறைவற இருந்தன. ஆனாலும், தேக உழைப்பு இல்லாமையாலும், உட்கார்ந்த இடத்திலேயே படித்து மூளையையும் தேகத்தையும் உருக்கிக் கொண்டிருந்தாள் ஆதலாலும், பசி ஜீரணசக்தி தேகபுஷ்டி முதலியவை குன்றிப் போனதாகத் தோன்றின. ஆகவே, அந்த மடந்தை படிப்பின் விஷயமாகச் செலவு செய்து வந்த தேகபலம், ஆகாராதிகளின் மூலமாக அவளது தேகத்திற்குக் கிடைத்த புஷ்டிக்கு அதிகப்பட்டதாகவே இருந்து வந்தது. ஆகவே அவள் சம்பூர்ணமான செல்வங்களுக்கு உரியவளாக இருந்தும், பக்குவ காலப் பெண்ணாக இருந்தும், தேகத்திற்கு உழைப்பைக் கொடுக்காமல் மூளைக்கு மாத்திரம் அதிக உழைப்பைக் கொடுத்து வந்ததால், அவள் ஊதினால் பறக்கும் தன்மை உடைய புஷ்ப இதழ் போலச் சிறிதும் பலம் இன்றி அழகொன்றையே உடையவளாய்க் காணப்பட்டாள். அந்த யெளவன மடந்தை அதிகமான ஆபரணங்களை அணியாமல், மிதமாகவே அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அவளது காதுகளில் வைரக் கம்மல்கள் இருந்தன. மூக்கில் வைரத் திருகுகள் காணப்பட்டன. ஓயாமல் படித்துப் படித்துக் கண்களின் சக்தி குறைவுபட்டுப் போனமையால், அவளது முகத்தில் தங்க மூக்குக் கண்ணாடிகள் ஜ்வலித்துக் கொண்டிருந்தன. கைகளில் இரண்டு தங்க வளையல்களும், கழுத்தில் நல்ல முத்துமாலை ஒன்றும், உள்ளங் கழுத்தில் வைர அட்டிகை ஒன்றும் காணப்பட்டன. இடுப்பில் தங்க ஒட்டியானமும், மணிக்கட்டில் கைக்கடியாரம் ஒன்றும் தவறாமல் எப்போதும் இருந்து வந்தன. அவள் கட்டிலில் இருந்து கால்களை ஊன்றிக் கீழே இறங்கினால், அடியில் ஆயத்தமாகக் கிடந்த வெல்வெட்டு சிலிப்பரை மாட்டிக் கொண்டுதான் அவள் காலை அப்பால் எடுத்துவைப்பாள். அவள் அணிந்திருந்தது வெள்ளை வெளேரென்று துல்லியமாக வெளுத்திருந்த மஸ்லின் சேலையானாலும், அதன் தலைப்புகளிலும், ஒரங்களிலும், ஜரிகை பூக்கள் நிறைந்த வெல்வெட்டு கரைகள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. அந்தச் சேலையின் ஒரங்களிலும் அவள் அணிந்திருந்த இங்கிலிஷ் ஜாக்கெட்டுகளிலும் ஏராளமான தொங்கல்கள் (லேஸ்கள்) வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. அவளது தேகம் சதைப்பிடிப்பின்றி மெலினம் அடைந்திருந்ததானாலும், அவளது சிரத்திலிருந்த அளகபாரம் மாத்திரம் கன்னங்கரேல் என்று கருத்துப் பெருத்துச் சுருள்விழுந்து காடு போல அடர்ந்து கணைக்கால் வரையில் நீண்டதாக இருந்தது ஆகையால், வேலைக்காரி அதை அழகாகப் பின்னி விசாலமான ஜடை போட்டு, அதன்மேல் ஒரு ரோஜாப் புஷ்பத்தையும் வைர ஜடைபில்லை ஒன்றையும் சொருகி வைத்திருந்தாள். ஆதலால், அந்த ஜடை கட்டிலில் வெகு நீளம் நீண்டு கிடந்து அவளது பின் அழகை நிரம்பவும் சிறப்பித்துக் கொண்டிருந்தது. தான் படித்து வந்த கலாசாலையில் மற்ற எவரும் முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவதே இல்லை என்று அவள் உணர்ந்து கொண்டாள் ஆகையால், தான் மாத்திரம் அவ்வாறு செய்து கொண்டால், கலாசாலையின் தலைவியான வெள்ளைக்கார உபாத்தியாயினிக்கு அது ஒருவேளை அருவருப்பாக இருக்குமோ என்ற நினைவினால் அந்த மடந்தை மஞ்சள் பூசி நீராடுவதைப் பல வருஷங்களுக்கு முன்னிருந்தே நிறுத்திவிட்டு ரோஸ்பவுடர் முதலிய வஸ்துக்களை உபயோகித்து வந்தாள். கண்ணுக்கு மை திட்டிக் கொள்வதை வெள்ளைக்கார ஸ்திரிகள் அநாகரிகம் என்று மதிப்பதால், அதையும் நமது மனோன்மணி விலக்கிவிட்டாள். நெற்றியில் கருஞ்சாந்துத் திலகமிடுவதைக் கண்டு வெள்ளைக்கார உபாத்தியாயினிகள் சிறிதளவு பொறுமை காட்டினர் ஆதலாலும், மற்றப் பெண்கள் திலகமிட்டுக் கொண்டு வந்தனர் ஆதலாலும், மனோன்மணி அதை மாத்திரம் விலக்காமல் வைத்துக் கொண்டிருந்தாள். அது நிற்க, தாம்பூலந் தரிக்கும் வழக்கமே வெள்ளைக்காரரிடம் இல்லை. ஆதலால், நம்மவர் தாம்பூலம் தரித்து வாய், பல் முதலியவற்றைச் சிவக்க வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவர்கள் நம்மைக் காட்டு மனிதர்கள் என்று நினைப்பதால், மனோன்மணி தாம்பூலம் என்று ஒரு வஸ்து இருக்கிறது என்பதை மறந்து, தனது பற்களை வெள்ளை வெளேர் என்று துல்லியமாக வைத்துக் கொண்டிருந்தாள். அவளது பக்குவ காலத்திற்குத் தக்கபடி முகத்தில் சதைப்பிடிப்பு ஏற்படாமல் இருந்ததனால், அவள் வாயைத் திறந்த போதெல்லாம், பளிச்சென்று பிரகாசித்த பற்கள் முகத்திற்குத் தேவையான அளவிற்கு மிஞ்சிப் பெருத்திருப்பது போலத் தோன்றி விகாரப்படுத்தின. ஆனால், அவள் வாயைத் திறவாமல் மற்ற அலங்காரங்களோடு வெல்வெட்டு ஜோடு தரித்து நடக்கும்போது, பார்சீ தேசத்து ராஜகுமாரி போல அற்புத வனப்போடும் வசீகரத்தோடும் காணப்பட்டாள். தான் வித்தை கற்க வேண்டும் என்ற ஒருவித அறிவுத் தாகமும், மனோவேகமும் மாத்திரம் அவளிடம் மிதமிஞ்சி இருந்ததாகக் காணப்பட்டனவே அன்றி, யெளவன காலத்திற்குரிய பஞ்சேந்திரிய வேட்கை எல்லாம் வறண்டு மலினமடைந்து போனதாகவே தோன்றியது. ஆகையால், தான் ஒரு புருஷனை அடைய வேண்டும் என்ற தாகமாவது, குடும்ப வாழ்க்கையில் தான் ஈடுபட்டு அதன் சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பிரேமையாவது அவளது மனதில் தோன்றி அவளை ஊக்கியதாகத் தோன்றவே இல்லை. தான் இங்கிலிஷ் பாஷையில் பி.ஏ., பட்டம் பெற்றவள் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதும், அந்தப் பாஷையில் தான் வாக்கு வன்மையோடு அழகாக எவருடனும் பேசும் திறமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அந்தப் பாஷையில் உள்ள சகலமான புஸ்தகங்களையும் கற்று மேதையாக வேண்டும் என்பதே அவளுடைய முழுமனதையும் கவர்ந்த பெரு வேட்கையாக இருந்தது. அதுவுமன்றி, இங்கிலீஷ் பாஷை படிக்காத மனிதர் மனிதரல்ல என்றும், அவ்வாறு இருந்து உழலும் நமது நாட்டு ஸ்திரீகள் எல்லோரும் அறிவில் நிரம்பவும் தாழ்ந்த நிலைமையில் இருப்பவர்கள் என்றும் இந்த நாட்டில் தன்னைப் போல ஒவ்வொரு ஸ்திரியும் இங்கிலீஷ் படித்து, மேல் நாட்டு கல்வியைக் கரைகாண வேண்டுவது அவசியம் என்றும் அவள் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பெண் பாடசாலைகளில் உள்ள உபாத்தியாயினிகளும், மாணவிகளும், தாமும் வெள்ளைக்கார ஸ்திரீகள் பேசுவது போல மிருதுவாகவும் அழகாகவும் பேச வேண்டும் என்ற கருத்தோடு தமிழ்ப் பாஷையில் ‘ஸ்’ என்ற எழுத்தை சகலமான இடங்களிலும் எதேஷ்டமாகப் பிரயோகிப்பது சர்வ சாதாரணமாகப் போய்விட்ட தாகையால், அவர்களிடம் பயின்ற நமது மனோன்மணியிடத்திலும் அந்த லட்சணம் பூர்த்தியாக நிறைந்திருந்தது. உதாரணமாக, அவள் தன்னுடைய வேலைக்காரியை அழைத்து ஏதாவது உத்தரவிட வேண்டுமானால், “அடீ லெம்பகம்! நம்முடைய தோட்டக்கார ஸொக்கலிங்கனிடம் போய் ஒரு ரோஸாப்பூ மாலை ஸெய்ய ஸொல்லு. நல்ல வாஸனையுள்ள புஸ்பமாய்ப் பார்த்து ஸேர்த்துக் கட்டஸொல்லு” என்று அவளது வார்த்தைகள் நம்முடைய செவிகளில் தொனிக்கும். அவள் நடை உடை பாவனை முதலிய வெளிப்படையான விஷயங்களில் அத்தகைய மாறுபாடுகள் உடையவளாகத் தோன்றினாலும், மனவுறுதி தேக பரிசுத்தம் முதலிய அடிப்படையான அம்சங்களில் நிஷ்களங்கமானவளாக இருந்தாள். அன்னிய மனிதரைக் கண்டு ஸ்திரீகள் நாணி மறைவது அநாவசியம் என்றும், அது அக்ஞான நிலைமையில் இருப்பவரே செய்யத் தகுந்த காரியம் என்றும் அவள் நினைத்திருந்தாள். தான் உண்மையாகவும் நேரான வழியிலும் நடக்க வேண்டும், தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியான கொள்கைகள் அவளிடம் வேரூன்றி இருந்தது நன்றாகத் தெரிந்தது. மற்றபடி அன்னியரைக் கண்டு தான் நாணுவதாவது, அஞ்சுவதாவது அநாகரிகமான செய்கை என்பது அவளுடைய உறுதியான கோட்பாடு. ஜாதிமதம் என்ற வித்தியாசங்களே தப்பான ஏற்பாடுகள் என்பதும் அவளுடைய எண்ணம். மனிதர் சுத்தமான உடை உடுத்தி பார்ப்பதற்கு விகாரம் இல்லாமல் இருந்தால், அவர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற நினைவையும் அவள் கொண்டிருந்தாள். தவிர, அவள் எப்போதும், செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்து வளர்ந்தவள் ஆதலால், அவளது புத்தி அற்ப விஷயங்களில் எல்லாம் செல்லாமல் பெரும் போக்காகவே இருந்தது. அவள் வீணை முதலிய ஏதாவது சிறந்த சங்கீத வாத்தியத்தில் தேர்ச்சியடைய வேண்டும் என்பது அவளது தந்தையின் விருப்பம். ஆனாலும், அவளது கவனம் பொழுது முதலியவை முழுதும் இங்கிலிஷ் படிப்பிலேயே பூர்த்தியாகச் சென்று கொண்டிருந்தது. ஆகையால், சங்கீதம் அவளது மனதை அவ்வளவாகக் கவரவில்லை.

இத்தகைய குணாதிசயங்கள் வாய்ந்தவளாக நமது மனோன்மணியம்மாள் அலுத்து, முன் விவரிக்கப்பட்டபடி ஸொகுலான கட்டில் மெத்தைகளின் மேல் சாய்ந்து, புஸ்தகமும் கையுமாக உறங்கியும், இடையிடையில் கண்களை விழித்துப் பார்த்துக் கொண்டும் இருக்க, அந்த விடுதியின் வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரி ஓசை செய்யாமல் உள்ளே வந்து அவளுக்கெதிரில் நிற்காமல் மறைவாக நின்று, “அம்மா! அம்மா!” என்று நிரம்பவும் பணிவாக அவளைக் கூப்பிட்டாள்.

அதைக் கேட்ட மனோன்மணி, “யார் அது? சண்பகம்! நான் கூப்பிடாவிட்டால் வரவேண்டாம் என்று சொல்லி இருந்தேனே! ஏன் வந்தாய்” என்றாள்.

அதைக் கேட்ட வேலைக்காரி, “வாசலில் யாரோ மனிதர் வந்திருக்கிறார்களாம். அவர்கள் உங்களோடு பேச வேண்டுமாம். டலாயத்து வந்து சங்கதியைச் சொல்லிவிட்டு இதோ வாசலில் நிற்கிறான்” என அந்தச் சிங்கதியைச் சொல்லி, “உங்களுடைய உத்தரவைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று வந்தேன். வேறொன்றும் இல்லை” என்று மிகுந்த பணிவோடு கூறினாள்.

அதைக் கேட்ட மனோன்மணி நிச்சலனமாக இருந்தபடியே பேசத் தொடங்கி, “யாரோ வந்தால், அதை என்னிடம் ஏன் சொல்ல வேண்டும்? அப்பா கச்சேரிக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்புகிறது தானே? எனக்குத் திங்கள் கிழமை தினம் பரீட்சை. ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு விலை மதிப்பற்றதாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் வந்து ஏன் இடையூறு செய்கிறீர்கள்?” என்றாள்.

வேலைக்காரி, “அவர்கள் பெரிய எஜமானைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் அல்லவாம்; உங்களைப் பார்த்து விட்டுப் போவதற்காக வந்திருக்கிறார்களாம்?” என்றாள். - -

மனோன்மணி சிறிது வியப்படைந்து, “என்னைப் பார்ப்பதற்காகவா வந்திருக்கிறார்களாம்? எனக்குப் பழக்கமானவர்கள் யார் இருக்கிறார்கள்? அவர்கள் ஆண்பிள்ளையா பெண்பிள்ளையா? அவர்கள் எங்கே இருந்து வந்திருக்கிறார்களாம்? அந்த விவரத்தை எல்லாம் டலாயத்து விசாரிக்கவில்லையா?” என்றாள்.

வேலைக்காரி, “அவன் விசாரித்துக் கொண்டுதான் வந்திருப்பான். நான் அவனிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு வரவில்லை. அவனையே உள்ளே கூப்பிடட்டுமா? இல்லா விட்டால் நான் அவனிடம் போய் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு வரட்டுமா?” என்றாள்.

மனோன்மணி, “நீ வரும்போதே எல்லாச் சங்கதிகளையும் நன்றாக விசாரித்துக் கொண்டல்லவா வரவேண்டும். நான் கேட்பதற் கெல்லாம் நீ அடிக்கடி வெளியில் போய் சங்கதியைத் தெரிந்து கொண்டு வருவதென்றால், என் பொழுதெல்லாம் வினாயல்லவா போய்விடும். அவனையே இங்கே கூப்பிடு” என்று கூறிய வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி, அருகில் கிடந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டாள்.

உடனே வேலைக்காரி அங்கிருந்தபடியே, “டலாயத்தையா! இங்கே வாரும்” என்று மிருதுவான குரலில் கூப்பிட, அவன் உள்ளே வந்து குனிந்து வணங்கி மனோன்மணிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் பணிவாக நின்றான்.

உடனே மனோன்மணி, “டலாயத்! வாசலில் யார் வந்திருக்கிறது? அவர்கள் ஆண் பிள்ளைகளா, பெண் பிள்ளைகளா? எங்கே இருந்து வந்திருக்கிறார்களாம்? தாங்கள் இன்னார் என்று அவர்கள் சொன்னார்களா? அப்பா கச்சேரிக்குப் போயிருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லவில்லையா?” என்றாள்.

உடனே டலாயத், “அம்மணி அவர்கள் கோமளேசுவரன் பேட்டையில் இருந்து வந்திருக்கிறார்களாம். அம்மாள் ஒருவரும், ஐயா ஒருவரும் வந்திருக்கிறார்கள். அவர்களோடு ஒரு வேலைக்காரப் பெண் ஒருத்தி ஒரு தாம்பளத்தில் ஏதோ சாமான்களை வைத்து அதை ஒரு பீதாம்பரத்தால் மூடி வைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் ஒரு பெட்டி வண்டியில் வந்திறங்கினார்கள். அந்த ஐயாவுக்கு சுமார் 25 வயசிருக்கலாம். அம்மாளுக்கு 20 வயசிருக்கலாம். பார்ப்பதற்கு அவர்கள் தக்க பெரிய இடத்து மனிதர்கள் போல இருக்கிறார்கள். வண்டி நம்முடைய வாசலில் வந்து நின்ற உடன், யாரும் கீழே இறங்கவில்லை. அந்த ஐயா வண்டியில் இருந்தபடி என்னைக் கூப்பிட்டு பெரிய எஜமான் இருக்கிறார்களா? என்று கேட்டார். அவர்கள் கச்சேரிக்குப் போயிருப்பதாக நான் சொன்னேன். பிறகு அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு ‘அம்மாள் உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டார்கள். நீங்கள் மெத்தையில் படித்துக் கொண்டிருப்பதாக நான் சொன்னேன். உடனே அந்த ஐயா தமக்குப் பக்கத்தில் இருந்த அம்மாளைப் பார்த்து நான் வெளியில் இருக்கிறேன். நீ மாத்திரம் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு மெத்தைக்குப் போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்து சேர். மறுபடி நான் இன்னொரு நாள் பெரியவர் இருக்கும்போது வந்து அவர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து ‘அப்பா டலாயத்து! நீ மெத்தைக்குப் போய், மன்னார்குடியில் உள்ள இவர்களுடைய புதிய சம்பந்தியம்மாளின் தங்கை பெண்ணைப் பார்த்துவிட்டுப் போகிறதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு வா’ என்றார். அவர்கள் வண்டியிலேயே இருக்கிறார்கள். உங்களுடைய சந்தர்ப்பத்தை அறிந்து கொண்டு வருவதாக நான் சொல்லிவிட்டு வந்தேன்” என்றான்.

மனோன்மணியம்மாள் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பின், “திங்கட் கிழமை தினம் பரீட்சை; அதற்காக நான் சாப்பாட்டைக் கூட நினைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சமயத்தில் இவர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். வருகிறவர்கள் முன்னால் தெரிவித்து வரக்கூடாதா? அப்படித் தெரிவித்திருந்தால், அப்பா இங்கே இருக்கும் நேரத்தைத் தெரிவித்திருக்கலாம். அல்லது, திங்கட்கிழமைக்குப் பிறகு வரும்படி எழுதி இருக்கலாம். அப்படி வந்திருந்தால் நம்முடைய வேலையும் கெடாது. அவர்களுடைய எண்ணமும் நிறைவேறும். அப்படிச் செய்யாமல், தாங்கள் நினைத்துக் கொண்டவுடனே புறப்பட்டு வந்து விட்டார்கள். இப்படி வருவதனால் எதிராளியை அசெளகர்யத்துக்கு ஆளாக்குகிறோமே என்பதை உணர்கிறதே இல்லை; இது தான் இந்தக் கருப்பு மனிதர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் உள்ள தாரதம்மியம். எந்த விஷயத்திலும் வெள்ளைக்காரர்கள் ஒழுங்காகவும், முன்யோசனையான தக்க ஏற்பாடுகளுடனுமே நடந்து கொள்வார்கள். அவர்களுக்குப் பொருளைக் காட்டிலும் பொழுதே நிரம்பவும் முக்கியமானது. அநாவசியமாக அவர்கள் ஒரு நிமிஷப் பொழுதைக்கூட வீணாக்க மாட்டார்கள்; அவர்கள் தங்களுடைய செளகரியத்தையும் பிறருடைய செளகரியத்தையும் கலந்து இரண்டிற்கும் கெடுதல் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். இப்போது வந்திருக்கும் அம்மாள் இங்கே வந்தால் இலேசில் என்னை விட்டுப் போவார்கள் எனத் தோன்றவில்லை. அவர்கள் படிப்பின் யோக்கியதையையும், காலத்தின் அருமையையும் அறிந்தவர்களாக இருந்தால், என்னுடைய அவசர சந்தர்ப்பத்தை உணர்ந்து உடனே போய்விடுவார்கள். அந்த அம்மாள் அநேகமாகப் படிக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். வந்தால் சாயுங்காலம் வரையில் அநாவசியமான விஷயங்களை எல்லாம் பேசி என் பொழுதை எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்பது திண்ணம் ஆகையால், நான் இவர்களை, இப்போது பார்ப்பதைவிட, பார்க்காமல் இருப்பதே நல்லதென்று நினைக்கிறேன். பெண்ணை இவர்கள் பார்த்து என்ன செய்யப் போகிறார்கள்? வாசிக்காத முட்டாளாக இருந்தால், பெண்ணைப் பார்த்து அதன் குணா குணங்களை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். நான் பி.ஏ. வகுப்பில் படிக்கிறேன் என்பது இவர்களுக்கு எப்படியும் தெரிந்திருக்கலாம். அதில் இருந்தே என்னுடைய யோக்கியதையை இவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் அழகாக இருக்கிறேனா என்று பார்க்க இவர்கள் ஒருவேளை ஆசைப்படலாம். அதைப் பார்ப்பதற்கு என் புருஷர் ஆசைப்படுவது நியாயமேயன்றி, இவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து நான் எப்படி இருக்கிறேன் என்று என் புருஷரிடம் தெரிவிக்கப் போகிறார்களோ? நாம் ஒரு காரியம் செய்யலாம். தபால் கார்டு அளவில் எடுக்கப்பட்ட என்னுடைய போட்டோகிராப் படம் நாலைந்து இருக்கின்றன. ஒரு படத்தை ஒரு காகிதத்தில் வைத்து மடித்துத் தருகிறேன். அதை எடுத்துக் கொண்டு நீ போய், அந்த ஐயாவிடம் எனக்குத் திங்கட்கிழமை முக்கியமான ஒரு பரீட்சை இருக்கிறது. அதற்காக நான் அநேகம் புஸ்தகங்கள் படிக்க வேண்டும். திங்கள் கிழமைக்குப் பிறகு ஒரு நாள் குறித்து எழுதினால் அன்று தயாராக இருக்கிறேன். இப்போது அவர்களோடு சம்பாஷிக்கும் படியான இன்பத்தை மறுக்க நேர்ந்ததைப்பற்றி வருந்துகிறேன். நான் அவர்களுக்கு என் நன்மதிப்பைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக இந்தப் படத்தைக் கொடுக்கச் சொன்னேன்’ என்று நீ சொல்லி, அவரிடம் இந்தப் படத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பிவை. திங்கட்கிழமைக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிய வண்ணம் எழுந்து, பக்கத்தில் இருந்த மேஜையின் சொருகு பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த தனது புகைப்படம் ஒன்றை எடுக்கத் தொடங்கினாள்.

அவள் தெரிவித்த முடிவு டலாயத்துக்கும் வேலைக்காரிக்கும் அவ்வளவு உசிதமானதாகத் தோன்றவில்லை ஆதலால், அவர்கள் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனோன்மணியின் சொல்லுக்கு வேறாக நடக்க டலாயத்து அஞ்சினான் ஆதலால், அவன் மெளனமாக நின்றபடி வேலைக்காரிக்கு ஏதோ சைகை செய்தான். உடனே வேலைக்காரி நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “அம்மா! வந்திருக்கிறவர்கள் நம்முடைய புது சம்பந்திகளின் நெருங்கிய பந்துக்களாக இருக்கிறார்கள். நல்லகாலம் பார்த்து அவர்கள் பெண்னைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். இது நல்ல சுபகாரியம்; இதைத் தடுப்பது அபசகுனம் போல் இருக்கும். அவர்கள் புதிய மனிதர்கள்; தங்களை நாம் அவமதித்ததாகவும் எண்ணிக் கொள்வார்கள். ஆகையால், வந்த மனிதருக்கு மரியாதை செய்யாமல் அவர்களை இப்படித் திருப்பி அனுப்புவது ஒழுங்கல்ல என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. எல்லாவற்றிற்கும் நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இதோ டெலிபோன் இருக்கிறதல்லவா. இதை எடுத்து கச்சேரியில் இருக்கும் பெரிய எஜமானரைக் கூப்பிட்டு இன்னார் வந்திருக்கிறார்கள் என்ற சங்கதியையும், நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தையும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் அதை ஒப்புக் கொண்டால், அப்படியே செய்து விடுவோம். பிறகு பெரிய எஜமான் வந்து நீங்கள் செய்த காரியத்தைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட மனோன்மணி தனது பொழுது அநாவசியமாய்க் கழிவதை நோக்கி அதிருப்தியும் அவசரமும் காண்பித்தவளாய், “இவர்கள் நினைத்தபோது சொல்லாமல் வருகிறது. உடனே, நான் என்னுடைய அவசர வேலையை எல்லாம் போட்டுவிட்டு இவர்களோடு உட்கார்ந்து பேசவேண்டும். இதனால் என்னுடைய பரீட்சையில் நான் தவறிப்போய், இன்னொரு வருஷம் இதே வகுப்பில் இருந்தாலும் பாதகமில்லை. எப்படியாவது இவர்களுடைய இஷ்டப்படி நான் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் இவர்களை அவமரியாதைப் படுத்துகிறதாக எண்ணிக் கொள்ளுகிறதோ? நியாயம் நன்றாய் இருக்கிறது. என்னுடைய சந்தர்ப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இவர்கள் வந்தது என்னை அவமரியாதையாக நடத்துகிறது என்பது இவர்களுக்கு ஏன் தெரியவில்லை? வெள்ளைக்காரராய் இருந்தால், நாம் இப்படிச் சொல்லி அனுப்புவதைப் பற்றி கொஞ்சமும் வருத்தமே பாராட்ட மாட்டார்கள். முதலில் அவர்கள் இப்படி திடும்பிரவேசமாக வரவே மாட்டார்கள். அதுவும் தவிர, சகுனம், அபசகுனம் என்பதிலேயே எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நம்முடைய ஜனங்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளில் சகுனம் பார்ப்பதென்பது பெரிய முட்டாள்தனம். அவர்கள் வரும்போது நான் தயாராக இல்லாவிட்டால், அது அபசகுனம். அவர்கள் வரும் போது பூனை குறுக்கே வந்தால் அது அபசகுனம். இதை எல்லாம் நினைக்க நினைக்க, எனக்குச் சிரிப்பு வருகிறது. பூனை வயிற்றுப் பசியைத் தாங்க மாட்டாமல், எங்கேயாவது எலி அகப்படாதா என்று நினைத்துத் தேடிக்கொண்டு போகிறது. அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. மனிதன் மூக்கில் காற்று சிக்கிக் கொள்வதால் தும்முகிறான். அதற்கும் நாம் நினைத்துப் போகும் காரியத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஒவ்வோரிடத்திலும் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் இப்படி ஊமை ஜாடை காட்டிக் கொண்டிருப்பதுதான் கடவுளுக்கு வேலை போல் இருக்கிறது. இப்படிக் கடவுள் செய்வதாக இருந்தால், அவர் நேரிலேயே வந்து அதைச் சொல்லிவிட்டுப் போவது சுலபமான வேலை அல்லவா? மற்ற எந்த தேசத்தாரும் சகுனம் என்பதையே பார்க்கிறதில்லையே. அங்கே பூனைகள் குறுக்கே போய்க் கொண்டுதான் இருக்கின்றன. மனிதர் ஒரு காரியம் செய்யத் தொடங்குகையில், மற்றவர் தும்முவதும் உண்டு. ஆனால் கடவுள் அந்தத் தேசங்களில் அப்போது அங்கே இருந்து சைகை காட்டுகிறதில்லை போலிருக்கிறது. நம்முடைய தேசத்தில்தான் கடவுள் வேண்டும் என்று இந்த வேலையைச் செய்து வருகிறார் போல் இருக்கிறது. இந்தப் பைத்தியக்கார நினைவெல்லாம் நம்முடைய தேசத்தை விட்டு எப்போது போகிறதோ அப்போதுதான் இந்தத் தேசம் கூேடிமமடையும். ஜனங்களும் உண்மையான அறிவாளிகள் என்று அன்னிய தேசத்தாரால் கருதப்படுவார்கள். அது போகட்டும். நீ சொல்லுகிறபடி டெலிபோன் மூலமாக அப்பாவோடு பேசி வேண்டுமானால், சங்கதியை அவர்களிடம் சொல்லிப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம் படத்தை மேஜையின் மீது வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த டெலிபோனண்டை போய், தனது தந்தையிருந்த கலெக்டர் கச்சேரியின் டெலிபோனுடன் அதைச் சேர்க்கச் செய்து, அவருடன் பேசத்தொடங்கி, விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்து, தான் செய்ய உத்தேசித்த காரியத்தையும் கூறினாள்.

அவள் தெரிவித்த வரலாறுகளைக் கேட்ட பட்டாபிராம பிள்ளையினது மனதில் ஒருவித வியப்பும் சந்தேகமும் உண்டாயின. அவர் மன்னார்குடியில் அடிஷனல் மாஜிஸ்டிரேட்டாக இருந்த காலத்தில் வேலாயுதம் பிள்ளையினது குடும்ப வரலாறுகளை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். அதன் பிறகு, இரண்டொரு வருஷ காலமாகத் தமது புதல்வியைக் கந்தசாமிக்கு மணம்புரிவிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்த காலத்தில், அவர் தமது புதிய சம்பந்தியின் குடும்ப வரலாறுகளையும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் யார் யார் எந்தெந்த ஊரில் இருக்கின்றனர் என்ற விஷயங்களையும் நன்றாக அறிந்திருந்தார். அதுவுமன்றி, தமக்கு மாப்பிள்ளையாக வரப்போகும் கந்தசாமி கோமளேசுவரன் பேட்டையில் தனியான ஜாகை வைத்துக் கொண்டு வேலைக்காரியின் மூலமாகத் தனது போஜனத்தைச் செய்து கொண்டு படித்துவருகிறான் என்ற விவரமும் அவருக்கு நன்றாகத் தெரியும். வேலாயுதம் பிள்ளையின் சம்சாரத்துக்குத் தங்கை ஒருத்தி இருப்பதாகவே எவரும் அவரிடம் தெரிவித்ததில்லை. ஆதலால், மனோன்மணி தெரிவித்த செய்தி நிரம்பவும் புதுமையாக இருந்ததன்றி, அப்படிப்பட்ட சிறிய தாய் ஒருத்தி கோமளேசுவரன் பேட்டையில் இருந்தால், கந்தசாமி அவளிடம் இராமல் தனியாக இருக்க மாட்டான் என்ற ஒர் ஐயமும் தோன்றியது. ஆனாலும், அதற்குப் பலவித சமாதானங்களும் புலப்பட்டன. அவள் தனது சிறிய தாயாக இருந்தாலும், தான் அவளுடைய வீட்டில் நெடுங்காலம் போஜனம் செய்து வருவது இரு திறத்தாருக்கும் அசெளகரியம் என்று நினைத்துக் கந்தசாமி தனியாக இருந்து வருகிறானோ என்ற எண்ணமும் தோன்றியது. ஆகவே, பட்டாபிராம பிள்ளை தமது புதல்விக்கு அடியில் வருமாறு மறுமொழி கூறினார். “வந்திருப்பவர்கள் தக்க கண்ணியமான மனிதர்கள்; அவர்களுடைய சம்பந்தத்தை நாம் அடையப் போகிறோம். நீ அவர்களுடைய வீட்டில் போய் வாழ்க்கை நடத்தப் போகிறாய். அவர்களை நாம் தக்க மரியாதை செய்து வரவேற்று உபசரித்து அனுப்புவதே நியாயமன்றி, நமக்கு அதனால் அசெளகரியம் ஏற்படுகிறதென்று நினைத்து அவர்களைப் பார்க்காமல் அனுப்புவது முற்றிலும் தவறான விஷயம். இப்படி நாம் நடந்து கொண்டால், நாம் மரியாதை தெரியாத சுத்த அநாகரிகர்கள் என்ற பெயரெடுக்க நேரும். இந்தப் பரீட்சை தவறிப் போவதனாலும் பாதகமில்லை. அல்லது; இன்று, நாளை இரவுகளில் இரண்டொரு மணி நேரம் அதிகமாகப் படித்தால், இப்போது செலவாகும் காலத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், நீ வேலைக்காரியின் மூலமாய் அவர்களை வரவேற்று அவர்களோடு வந்திருக்கும் உன் சிறிய மாமியாரை உபசரித்து வைத்து சம்பாவித்துக் கொண்டிரு. என்னுடைய கச்சேரி இன்று சனிக்கிழமை ஆகையால், 4 மணியோடு மூடப்படும். நான் உடனே புறப்பட்டு வந்து சேருகிறேன். நான் வருகிற வரையில் இருக்கும்படி நான் கேட்டுக் கொண்டதாக அவர்களிடம் தெரிவித்து, அவர்களை இருக்கச் செய். நான் கச்சேரியை விட்டுப் புறப்பட, இன்னம் 3 மணி காலம் இருக்கிறது. இதற்குள் நான் மன்னார்குடிக்கு ஓர் அவசரத் தந்தி அனுப்பி, இவர்களைப் பற்றிய வரலாறு முழுதையும் மறுதந்தி மூலமாய் விவரமாகத் தெரிந்து கொண்டு வந்து சேருகிறேன். அவர்களிடம் அசட்டையாக இராமல், ஜாக்கிரதை யாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்” என்று மறுமொழி கிடைக்கவே அதைப் பெற்ற மனோன்மணி அரை மனதோடு அதை ஏற்றுக் கொண்டு வேலைக்காரியிடம் அதைத் தெரிவித்து, வண்டியில் வந்திருக்கும் மனிதர்களை உபசரித்து உள்ளே அழைத்து வரும்படி தெரிவிக்க, அவளும் டலாயத்தும் உடனே வெளியில் சென்றனர்.

பட்டாபிராம பிள்ளை தமது புத்திரிக்குத் தெரிவித்தபடி மன்னார்குடிக்கு ஒர் அவசரத் தந்தியை உடனே அனுப்பியதோடு, மறுமொழிக்கும் பணம் கட்டி அதை அனுப்பி வைத்தார்.

கால் நாழிகை காலம் கழிந்தது. விருந்தாக வந்த வேஷக்காரர்களை அழைத்துக் கொண்டு வேலைக்காரி மேன் மாடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவர்களோடு வந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ஒரு தட்டில் ரவிக்கைத் துண்டுகள், பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள் முதலிய வஸ்துக்களை சுமந்து வந்தாள். தனது இளைய மாமியார் திவ்ய தேஜோமயமான அழகும் அலங்காரமும் வாய்ந்த மகா வசீகரமான யெளவனப் பெண்மணியாக இருந்ததைக் கண்ட மனோன்மணியம்மாள் அளவற்ற பிரமிப்பும் ஆச்சரியமும் ஒருவித சந்தோஷமும் அடைந்தவளாய் மாறினாள்.

கந்தசாமி இயற்கையிலேயே அற்புதமான தேக அமைப்பும் வசீகரமான முகத்தோற்றமும் வாய்ந்த யெளவனப் புருஷன் ஆதலாலும், அவன் தனது கலாசாலையில் நடத்தப்பட்ட நாடகங்களில் பல தடவைகளில் ஸ்திரி வேஷந் தரித்து அவ்விஷயத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான் ஆதலாலும், அவன் மனோன் மா.வி.ப.I-14 மணியைப் பார்க்க வந்த தினத்தில் முன் தடவைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிக விசேஷமாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தான் ஆதலாலும், அவன் வேஷந் தரித்து வந்திருக்கிறான் என்று எவரும் சிறிதும் சந்தேகிக்காதபடி அவன் தத்ரூபம் யெளவன ஸ்திரீ போலவே காணப்பட்டான். உண்மையில் அவனுக்கு இருபது வயதிற்கு அதிகம் ஆயிருந்தது. ஆனாலும், ஸ்திரீ வேஷத்தில் அவனது வயது இரண்டு மூன்று குறைந்தே தோன்றியது. நாடகங்களில் வேஷங்களுக்குத் தேவையான உயர்ந்த பனாரீஸ் புடவைகள், பளபளப்பான நகைகள் முதலியவைகளை சில வியாபாரிகள் வாடகைக்குக் கொடுத்து வாங்கிக் கொள்வது வழக்கம் ஆதலால், அவர்களிடம் பழகியிருந்த கோபாலசாமி அன்றைய தினம் கந்தசாமிக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களை எல்லாம் அந்த வர்த்தகர் ஒருவரிடம் வாடகைக்கு வாங்கிக் கொண்டு வந்திருந்தான். கந்தசாமி அந்த ஆடை ஆபரணங்களில் தனது ஆண்வடிவத்தை முற்றிலும் மறைத்து மனதை மயக்கும் சுந்தரமும் வசீகரமும் பரிபூர்ணமாக நிரம்பப் பெற்ற மடமங்கை போல மாறி உண்மையிலேயே ஸ்திரீயாகப் பிறந்தோர் அனைவரும் நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற அரிய குணங்களைத் தன்னிடம் கற்றுக்கொள்ளத் தக்கபடி அழகாக நாணிக் கோணி அன்னநடை நடந்த மான்போல மருண்டு புடவைத் தலைப்பை அடிக்கடி இழுத்திழுத்துத் தனது உடம்பை மூடிக்கொண்டு காலின் கட்டை விரலைப் பார்த்தபடி நடந்து வந்த காட்சி கண்கொள்ள வசீகரக் காட்சியாக இருந்தது. அப்போதே மலர்ந்து விரிந்த ரோஜாப் புஷ்பத்தைத் தாங்கிய பூங்கொம்பு தென்றல் காற்றில் அசைந்து துவளுவது போல, அவனது பொற்கொடி போன்ற மேனி அழகாகத் துவண்டு நெளிந்து, காண்போர் மனதைக் கொள்ளை கொண்டது. அவனோடு கூடவே சதாகாலமும் இருந்து பழகியவனும், அவன் பெண் வேஷந் தரிக்கையில் பக்கத்திலேயே இருந்தவனுமான கோபாலசாமியே அவனது மாறுபட்ட கோலத்தைக் கண்டு பிரமித்து, அவன் உண்மையில் ஸ்திரீதானோ என்று சந்தேகித்ததன்றி, அவனைக் கட்டிப்பிடித்து ஒருதரமாவது ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அடைந்தான் என்றால், மற்றவர்களது திருஷ்டிக்குக் கந்தசாமியின் கட்டழகும் வடிவமும் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பது கூறாமலே விளங்கும். அவன் ஸ்திரீ வேஷந்தரிக்கும் போதெல்லாம், பெரிய கண்ணாடி ஒன்றில் அவன் தனது அற்புத வடிவத்தைக் கண்டு தனக்குத் தானே பூரிப்பும் ஆனந்தப் பெருக்கும் அடைந்து, அத்தகைய அழகு வாய்ந்த மனைவி தனக்கு வாய்க்கப் போகிறாளா என்று பன்முறை நினைத்து நினைத்து உருகி இருக்கிறான். அதுவுமன்றி, அவன் வேஷந் தரித்திருக்கும் காலத்தில் அவனைக் காண்போர் எல்லோரும், அவனது அற்புத எழிலைக் குறித்து அபாரமாகப் புகழ்ந்து, அவன் ஆண்பிள்ளை என்று எவரும் சந்தேகிக்க இடமே இல்லை என்று பன்முறை உறுதி கூறியதை அவன் கேட்டிருந்தவன் ஆதலால், அவன் மனோன்மணியைப் பார்க்க வந்த காலத்தில், தான் ஆண்பிள்ளை என்பதை எவரேனும் கண்டு கொள்ளுவார்களோ என்ற கவலையையே அவன் சிறிதும் கொள்ளாமல், நிரம்பவும் மனோதிடத்தோடும் துணிகரத்தோடும் அளவற்ற உற்சாகத்தோடும் வந்திருந்தான். அதுவுமன்றி, பெட்டி வண்டியிலேயே போய்ப் பெட்டி வண்டியிலேயே வந்துவிட வேண்டும் என்றும், மனோன்மணியிடம் அரைமணி நேரத்திற்கு அதிகப்படாமல் இருந்து, அவள் சந்தேகப்படாதபடி சம்பாவித்து விட்டுத் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். ஆதலால், தான் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருப்பதைப் பிறர் கண்டுபிடிக்கவே சந்தர்ப்பம் ஏற்படாது என்ற உறுதியைக் கொண்டவனாய் வந்திருந்தான் ஆதலால், கந்தசாமி இயற்கையிலேயே பெண்ணாய்ப் பிறந்து பெண் தன்மைகளில் பழகினவன் போல நிரம்பவும் திறமையாக நடித்தவனாய் மனோன்மணி இருந்த விடுதியை அடைந்தான். ஒருகால் மனோன்மணியம்மாள் கேட்பாளாகில், அவனது பெயர் கொடி முல்லையம்மாள் என்று சொல்வதென்று கந்தசாமியும் கோபாலசாமியும் தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந் தனர். கோபாலசாமியோ உயர்ந்த சட்டை, தலைப்பாகை, ஜரிகை வஸ்திரங்கள், தங்க மூக்குக் கண்ணாடி, கைத்தடி, தங்கச் சங்கிலி உள்ள கடிகாரம் முதலிய அலங்காரங்களோடு நிரம்பவும் பெரிய மனிதன் போலக் காட்டிக் கொண்டு கொடிமுல்லை யம்மாளுக்குப் பின்னாகத் தொடர்ந்து வந்து சேர்ந்தான். கந்தர்வ ஸ்திரீ போன்ற மனமோகன ரூபம் உடையவளாய்த் தோன்றிய கொடிமுல்லை அம்மாளோடு கூட வருவதையும், தான் அவளது கணவன் என்று மற்றவர் கருதுவதையும் கோபாலசாமி நிரம்பவும் பெருமையாக மதித்ததன்றி, அதைப்பற்றி மிகுந்த உற்சாகமும், பூரிப்பும் அடைந்தவனாகக் காணப்பட்டான். அதற்கு முன்னரே, கோபாலசாமியும் கந்தசாமியும் பேசி முடித்த காலத்தில் கந்தசாமி மாத்திரம் மனோன்மணியண்டை போய் அவளுடன் பேசுவதென்பதும், கோபாலசாமி வெளியில் இருப்பதென்பதும் அவர்களது ஏற்பாடு. ஆனால், மனோன்மணி அம்மாள் எல்லோரையும் மேலே அழைத்து வரும்படி டலாயத்தினிடம் செய்தி சொல்லி அனுப்ப, அவன் கீழே சென்று அந்தச் செய்தியைத் தெரிவிக்க, தனது நண்பனுக்கு மனைவியாகப் போகும் யெளவனப் பெண் ஏகாந்தமாய் இருக்கும் மேன் மாடத்திற்கு வர கோபாலசாமி விரும்பாமல், தான் கீழேயே இருப்பதாகக் கந்தசாமியிடத்தில் ரகசியமாகக் கூறினான் ஆனாலும், கந்தசாமி அவனையும் தன்னோடு கூட வரும்படி வற்புறுத்தி மேலே அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இருவரும் மேன்மாடத்தை அடைந்து மனோன்மணி அம்மாளினது வடிவத் தோற்றத்தையும் நடையுடை பாவனைகளையும் பார்த்தவுடனேயே, அவள் எப்படி இருப்பாள் என்று அதற்கு முன் கடற்கரையில் அவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போலவே அவள் சகலமான அம்சங்களிலும் இருக்கிறாள் என்ற அபிப்பிராயமே அவர்களது மனதில் பட்டது. அவள் இந்திய ஸ்திரீகளின் நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற குணங்கள் இன்றி வெள்ளைக்கார ஸ்திரீகளைப் போல எல்லோரிடமும் தாராளமாகவும் கூச்சம் இன்றியும் நடந்து கொள்வதைக் காண கோபாலசாமியின் மனம் பெரிதும் கிலேசம் அடைந்தது. கந்தசாமி அடக்கம், பணிவு, நாணம் முதலிய குணங்கள் சம்பூர்ணமாக நிறைந்துள்ளவளையே தான் அடைய விரும்புவதாகப் பன்முறை கூறியிருந்தான் ஆதலால், அந்தக் குணங்கள் எல்லாம் இல்லாதவளாய் அந்தப் பெண் காணப்பட்டமையால், கந்தசாமி அவளை மணக்கச் சம்மதிக்க மாட்டான் என்பது நிச்சயமாகத் தோன்றியதன்றி, வந்திருப்பது தனது கணவன் என்பதை அறியாமல் அவள் தாறுமாறாக நடந்துகொண்டு விடுவாளோ என்று கவலையுற்று, அவள் பேச ஆரம்பித்த போதெல்லாம் அவனது மனம் ஒருவித அச்சத்தையும் கூச்சத்தையும் அடைந்தது. அவர்கள் இருவரும் சம்பாஷிக்கும்போது தான் அவ்விடத்தில் இருப்பது தவறென்றும், எப்படியாவது தான் கந்தசாமியைத் தனிமையில் விட்டுப் பிரிந்து கீழே போய்விட வேண்டும் என்றும் அவன் தனக்குள்ளாகவே தீர்மானித்துக் கொண்டான். தனது நண்பன் அவனது மனைவியின் நடை நொடி பாவனைகளைப் பரீட்சிக்கையில், அவள் ஏதாவது தவறாக நடந்து கொண்டால், அப்போது கந்தசாமி மாத்திரம் இருந்தால், அது அவனது மனதில் அதிகமாய் உறைக்காதென்றும், அதை அவன் அதிகமாய்ப் பாராட்டமாட்டான் என்றும் அவர்களோடு பிறரும் பக்கத்தில் இருந்தால் அப்போது அந்தத் தவறு கந்தசாமிக்குப் பன்மடங்கு பெரிதாகவும் மன்னிக்கத் தகாத பெரிய குற்றமாகவும் தோன்றும் என்றும் கோபாலசாமி நினைத்தான். ஆகவே மனோன்மணியின் குணாதிசயங்கள் அதிகமாய் வெளியாகும் முன் தானும் வேலைக்காரப் பெண்ணும் அவர்களை விட்டுப் பிரிந்து கீழே போய்விடுவதே நலமானதென்றும், அவர்களுக்கு ஒருவேளை கலியாணம் முடிவதாக இருந்தாலும், தாங்கள் இருப்பதால், அது தவறிப் போனாலும் போகக்கூடும் என்றும், கோபாலசாமி தனக்குள் நினைத்து ஒருவிதமாக முடிவு செய்து கொண்டிருந்தான்.

ஆனால் கந்தசாமியின் மனநிலைமையோ இன்னதென்று விவரிக்க இயலாத குழப்ப நிலைமையாக இருந்தது. மனோன்மணி பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள் என்று கேள்வியுற்ற முதலே, அவள் வெள்ளைக்காரர் நாகரிகத்தைப் பூர்த்தியாகப் பின்பற்றினவளாகத் தான் இருப்பாள் என்று அவன் நிச்சயித்துக் கொண்டான். ஆனாலும், தான் எப்படியாவது முயற்சித்து அவளைப் பார்த்து அவளுடன் பேசி அவளது மன நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒருவித அவாவினால் தூண்டப்பட்டு அவ்விடத்திற்கு வந்தவன் ஆதலால், அவள் வெள்ளைக்காரி போல இருந்தது அவனுக்கு வியப்பாகவாவது புதுமையாகவாவது தோன்றவில்லை. ஏனெனில், அவள் அப்படித்தான் இருப்பாள் என்று அவன் முன்னரே நிச்சயித்து இருந்தான். ஆகையால், எதிர்பார்க்காத விஷயம் உறைப்பது போல எதிர்பார்த்த விஷயம் மனதில் அவ்வளவாக உறைக்காது அல்லவா. ஆனால் ஆடை ஆபரணங்களிலும், அலங்காரத்திலும், நடை நொடி பாவனைகளிலும் அவள் எவ்வளவுதான் வெள்ளைக்காரி போலத் தோன்றினாலும், அவளிடம் பலமான மன உறுதியும், தேகபரிசுத்தமும், ஒருவிதமான மிருதுத் தன்மையும், உள்ளும் புறமும் ஒத்த கபடமற்ற நடத்தையும் ஸ்பஷ்டமாகத் தென்பட்டன. பிறருக்குத் தான் கீழ்ப்படிந்து நடப்பது அநாவசியம் என்ற எண்ணத்தை அவள் உறுதியாகக் கொண்டிருந்தாள் என்பது எளிதில் விளங்கியது. ஆனாலும், தான் தனக்கு மரியாதை செய்து எவரையும் அன்பாகவும் மிருதுத் தன்மையோடும் உபசரித்து நடத்த வேண்டும் என்ற மேலான குனம் அவளிடம் நிரம்பி இருந்ததாகக் கந்தசாமி உணர்ந்தான். அவளது யெளவன காலத்திற்குரிய செழிப்பும், அவளது இயற்கை அழகிற்குரிய பரிபூர்ணமான மலர்ச்சியும் அவளிடம் காணப்படாவிட்டாலும், அவளது அலங்காரமும் பக்குவகால வனப்பும் ஒருவாறு காந்த சக்தி போலக் கந்தசாமியின் மனதைக் கவர்ந்தன. அவள் தன்னை மணக்க நிச்சயிக்கப்பட்டிருக்கிறவள் என்ற நினைவு அவனது மனத்திலிருந்து அதை ஒருவாறு இளக்கி அவளது விஷயத்தில் அன்பையும் இரக்கத்தையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆகையால், அந்த நினைவும், அவளிடம் காணப்பட்ட மேலே குறிக்கப்பட்ட வசீகர சக்தியும் ஒன்றுகூடி அவளது வெளித்தோற்றமான குற்றங்கள் அவனது மனதில் அவ்வளவாக உறைக்காதபடி செய்து கொண்டிருந்தன. மனோன்மணியம்மாளினது மனதில் அப்போது எவ்விதமான உணர்ச்சிகள் உண்டாயின என்பதை நாம் கவனிப்போம். முன்னரே விவரிக்கப் பட்டுள்ளபடி, அவள் இங்கிலீஷ் கல்வியைக் கரைகான வேண்டும் என்றும், பெரிய பெரிய பரீட்சைகளில் தேறிப்பட்டங்கள் பெற வேண்டும் என்றும், அதனால் தனக்கு மிகுந்த பூஜிதையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவள் ஒரே உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டிருந்தவள் ஆதலால், அவளது மனம் கலியானத்தில் அவ்வளவாகச் செல்லவில்லை. ஆனால் அவள் பக்குவகாலம் அடைந்து சில ஆண்டுகள் சென்று விட்டமையால், அவளது தந்தை அவளது மனத்தை எப்படியாகிலும் சீக்கிரத்தில் முடித்துவிட எண்ணித் தமது எண்ணத்தை அவளிடம் வெளியிட, அவள் அதற்கு இணங்காமல் மேலும் சில வருஷகாலம் கழிந்த பிறகு கலியான விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்றும் கூறினாள். தந்தை அதை ஒப்புக் கொள்ளாமல் அவ்வளவு வயதிற்கு மேல் இந்திய மாதர் கலியாணம் இன்றி இருப்பது துஷணைக்கு இடமாகும் என்று கூறிப் பலவகையில் நற்புத்தி புகட்டியதன்றி, கந்தசாமி என்பவன் சகலமான அம்சங்களிலும் அவளுக்குத் தக்க கணவன் என்றும், மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை வீட்டாரின் சம்பந்தம் எப்படிப்பட்டவருக்கும் கிடைப்பது அரிது ஆகையால், அதைத் தாம் தள்ளக் கூடாதென்றும், பின்னால் அவ்வளவு ஏற்றமான சம்பந்தம் கிடைக்காது என்றும், ஆகையால் தாம் உடனே கலியானத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து அவளை நிரம்பவும் நயமாக வற்புறுத்தித் தமது கருத்திற்கு இணங்கும்படி செய்திருந்தார். அது முதல் அவளது மனதில் அடிக்கடி கந்தசாமி என்ற யெளவனப் புருஷனது நினைவு தோன்றவே, அவனே தனக்குக் கணவனாகப் போகிறான் என்ற எண்ணம் உண்டான போதெல்லாம், இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித இன்ப ஊற்று அவளது மனதில் சுரக்கத் தொடங்கியது. அவன் கருப்பாய் இருப்பானோ, அல்லது, சிவப்பாய் இருப்பானோ, அழகாய் இருப்பானோ, அல்லது விகாரமாய் இருப்பானோ என்ற ஆயிரக்கணக்கான சந்தேகங்களும் கேள்விகளும் அவளது மனதில் பிறந்து, அவனைத் தான் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற விலக்க இயலாத ஒருவித வேட்கையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், அதைத் தனது தந்தையிடம் வெளியிட லஜ்ஜைப்பட்டுத் தனது படிப்பு மும்முரத்தில் அதன் பாதையை அவ்வளவாக உணராமல் இருந்து வந்தான். ஆனால், அவள் கலியாணம் செய்து கொள்வதென்றால், தானும் தன் கணவனும், வெள்ளைக்காரர்கள் இருப்பது போல, சம அதிகாரம் சுயேச்சை முதலியவற்றோடு இருந்து வாழ்வோம் என்றே எண்ணி இருந்தாளன்றி, இந்திய மாதர்கள் நடப்பது போலத் தான் புருஷனிடம் பணிவாகவும் அவனது மனதிற்குகந்த விதமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கனவிலும் நினைத்தவளே அன்று. அது நிற்க, தனது புருஷனால் வணங்கப்படும் அவனது பெற்றோர் பெரியோர்களிடத்தில் தானும் பணிவாக நடந்து அவர்களுக்கு எல்லாம் சிச்ருஷை செய்ய வேண்டும் என்ற சங்கதியை அவள் காதாலும் கேட்டவளே அன்று. பொதுவாக இந்திய மாதர் படிக்காத மூடர்களாக இருப்பது பற்றி, புருஷர்கள் அவர்களைக் கேவலம் அடிமைகள் போல இழிவாக நடத்துகிறார்கள் என்றும், எல்லா ஸ்திரீகளும் இங்கிலிஷ் பாஷை கற்று அறிவாளிகளாய்த் தங்களது புருஷர்களால் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவள் நினைத்திருந்தாள். கந்தசாமி நன்றாய்ப் படித்தவன் என்றும் நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவன் என்றும் அவள் கேள்வியுற்றிருந்தவள் ஆகையால், தானும் அவனுக்குச் சமதையாகப் படித்திருப்பதால், அவன் தன் மீது அதிகாரம் செலுத்த மாட்டான் என்ற உறுதியைக் கொண்டிருந்தாள். ஒயாப் படிப்பினால், அவளது மனோமெய்களின் சக்தி ஒருவாறு மலினம் அடைந்திருந்தது. ஆனாலும், அவளது பருவகால லக்ஷணப்படி இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித தாகம் அவளது மனதின் ஒரு மூலையில் இருந்து வருத்திக் கொண்டிருந்தது. தனக்கு மற்ற சகலமான விஷயங்களிலும் குறைவே இல்லாதிருந்தாலும், ஏதோ ஒரு குறை மாத்திரம் இருந்து வந்ததாகவும், அது பூர்த்தியாகாத வரையில் தனது மனம் சாந்தம் அடையாதென்றும், தனது வாழ்க்கை சந்துஷ்டி அற்றதாய் இருக்கும் என்றும், கனவுபோல ஒரு நினைவு தோன்றிக்கொண்டே இருந்தது. தான், எவ்வளவு தான் இங்கிலீஷ் பாஷையைப் படித்துக் கரைகண்டாலும், அபாரமான செல்வத் திற்கு உரியவளாக இருந்தாலும், சகலமான செல்வாக்கும் உடையவளாக இருந்தாலும், நல்ல படிப்பாளி என்றும், பட்டதாரி என்றும் சகலராலும் அபாரமாகப் புகழப் பெற்றாலும், தன்னிடம் வாஞ்சை உள்ள எத்தனையோ உறவினரும், நண்பர்களும் தனக்கு இருந்தாலும், புருஷன் என்ற அந்த அற்புதக் கவர்ச்சி வாய்ந்த ஒரு துணைவன் தனக்கு ஏற்பட்டாலன்றி, தன் மனதிலிருந்த விவரிக்க முடியாத தாகம் தீராதென்று அவள் தனக்குத் தானே உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கும் மற்ற ஸ்திரீகளுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஒரு பெண் தனது புருஷனிடம் அபாரமான பிரேமையும் பாசமும் உடையவள் ஆகிவிடுவதால், அவள் தனது புருஷனைச் சேர்ந்த மனிதர் எவரைக் காணினும் அவர்களிடத்தில் அபாரமான வாஞ்சை மரியாதை முதலியவற்றை இயற்கையிலே காட்டுவது உலக அனுபவம் அல்லவா. அத்தகைய குணம் மனோன்மணி இடத்தில் காணப்படவில்லை. அவளது மனதில் புருஷனைப் பற்றித் தோன்றிய ஒருவிதமான பிரேமை கந்தசாமி ஒருவனோடு நின்று விட்டதே அன்றி, அவனைச் சேர்ந்த மற்ற மனிதர்கள் வரையில் எட்டவில்லை. ஆகவே, தனது சிறிய மாமியாரும், அவளது புருஷரும் வந்திருப்பதாகக் கேள்வியுற்றவுடனே, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையாவது ஆவலாவது, அவர்களை உபசரித்து அன்பாக நடத்தி மரியாதை செய்து விருந்தளித்து அனுப்ப வேண்டும் என்ற பிரியமாவது உண்டாகவில்லை. தமக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத அன்னிய மனிதர் வந்தால், வெளிப் பார்வைக்காக மரியாதை வார்த்தை கூறி உபசரித்து அனுப்புவது போல, அவர்களது விஷயத்திலும் தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானதே அன்றி அவர்களது விஷயத்தில் ஆழ்ந்த பற்றாவது அன்பாவது தோன்றவில்லை. ஆனாலும், அவள் தனது ஆசனத்தை விட்டெழுந்து சிறிது தூரம் எதிர்கொண்டு வந்து மலர்ந்த முகத்தோடு கொடிமுல்லை அம்மாளைப் பார்த்து, “வாருங்கள். இதோ இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று அன்பாகக் கூறிவிட்டு கோபாலசாமியை நோக்கி, “நீங்களும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி உபசரித்தாள். அவள் தன்னோடு தாராளமாகப் பேசியதைக் கேட்க, கோபாலசாமியின் மனது கூசியது. அவனது உடம்பு குன்றிப் போயிற்று. ஆனாலும் அவன் அதைக் காட்டிக் கொள்ளாமல், தனது கடைக்கண் பார்வையைச் செலுத்தி கந்தசாமியின் முகமாறுபாட்டைக் கவனித்தபடி சிறிது தூரத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டான். கொடி முல்லையம்மாள் தனது புருஷன் பக்கத்தில் இருப்பதைக் கருதி நாணிக் குனிந்து வந்தவள் நிமிர்ந்து மனோன்மணியம்மாளை நோக்கி சந்தோஷமாகப் புன்னகை செய்து , “வருகிறேன். அம்மா!” என்று நிரம்பவும் மிருதுவான குரலில் உத்தம ஜாதி ஸ்திரீ போல மறுமொழி கூறினாள். ஆனால், அவள் நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளாமல், பக்கத்தில் இருந்த கட்டிலண்டை போய் கோபாலசாமியின் திருஷ்டியில் படாதபடி நாணிக்கோணி மறைவாக நின்று கொண்டாள்.

அதைக் கண்ட மனோன்மணியம்மாள் வியப்படைந்து, “ஏனம்மா நிற்கிறீர்கள்? நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்களேன்” என்று நயமாகவும், அன்பாகவும் வற்புறுத்திக் கூறிய வண்ணம் கொடிமுல்லையம்மாளை உற்று நோக்கினாள். பெண் வேஷந்தரித்து வந்திருந்த கந்தசாமியை நாம் கந்தசாமி என்று குறிப்பிடுவது சுவைக்குறைவாகத் தோன்றும் ஆதலால், நாம் அவனைக் கொடிமுல்லையம்மாள் என்று குறிப்பிடுகிறோம் என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆதலால், அதுபற்றி நாம் எவ்வித சமாதானமும் கூறவேண்டிய அவசியம் இராதென்று நினைக்கிறோம்.

நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று மனோன்மணியம்மாள் மறுபடியும் கூறி உபசரித்ததைக் கேட்ட கொடி முல்லையம்மாள் முன்னிலும் பன்மடங்கு அதிக கிலேசம் அடைந்தவள் போல நடித்து மனோன்மணி அம்மாளை இனிமையாகப் பார்த்து, “பரவாயில்லை. நாங்கள் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகப் போகிறவர்கள் தானே. நான் இப்படியே நிற்கிறேன். இந்நேரம் வண்டியில் உட்கார்ந்து தானே வந்தேன். நிற்பதே காலுக்குச் சுகமாக இருக்கிறது. நீங்கள் நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று மறுமொழி கூறிய வண்ணம் அடிக்கடி கோபாலசாமியினது முகத்தைப் பார்த்தாள். தனது புருஷனுக்கு எதிரில் தான் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளக் கூடாது ஆகையால், தான் அவ்வாறு நிற்கிறாள் என்பதைத் தனது பார்வை எளிதில் காட்டும்படி அவள் செய்து கொண்டாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்ளாத மனோன்மணி அம்மாள் மிகுந்த வியப்பும் ஒருவித அருவருப்பும் அடைந்தாள். வெளிப் பார்வைக்கு நல்ல அழகும் நேர்த்தியான அலங்காரமும் வாய்ந்து பகட்டாக இருக்கும் கொடி முல்லையம்மாள் அவ்வாறு அநாகரிகமாகவும் மூடத்தனமாகவும் நடந்து கொள்ளுகிறாளே என்றும், அவள் பட்டிக்காட்டு மனிஷி என்றும், எழுத்து வாசனை அறியாத ஞான சூன்யமாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டவளாய், மனோன்மணி மறுபடி அவளை நோக்கி, “ஏனம்மா! விருந்தாளியாக வந்த நீங்கள் நிற்க, நான் உட்காரலாமா? நீங்கள் சொல்லும் வார்த்தை என்னை அவமதிப்பது போல் இருக்கிறதே, நீங்கள் இந்நேரம் வண்டியில் உட்கார்ந்து வந்தது உண்மையே! அதனால் இப்போது நிற்பது காலுக்குச் சுகமாக இருக்கிறது என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் எங்களுடைய மரியாதையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா? எங்களுடைய வீட்டைத் தேடிவந்த மனிதரை நிற்க வைத்துப் பேசி அனுப்புவது ஒழுங்காகுமா? அல்லது, நீங்கள் நிற்கும் போது நான் உட்கார்ந்து கொள்வதுதான் மரியாதையாகுமா?” என்றாள்.

கொடி முல்லையம்மாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “உங்கள் மனசை ஏன் வருத்த வேண்டும். இதோ நான் உட்கார்ந்து கொண்டேன். தயவு செய்து நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் கோபாலசாமியை மறைத்துக் கொண்டிருந்த ஒரு சோபாவின் பக்கத்தில் போய் மிகுந்த கிலேசத்தோடு சுருட்டி முடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

அதைக் கண்ட மனோன்மணி அம்மாளினது வியப்பு அளவிடக் கூடாததாய்ப் பெருகியது. தான் கலியாணம் செய்து கொள்ளப் போகும் கந்தசாமியின் சிறிய தாயார் வெளிப்பார்வைக்கு அவ்வளவு வசீகரமாக இருந்தும், நடத்தையில் சுத்த கர்னாடக மனிஷியாக இருக்கிறாளே என்ற நினைவும், அவளைப் போலவேதான் தனது மாமியார் முதலிய மற்ற எல்லோரும் இருப்பார்களோ என்ற கவலையும், அவர்களைப் பற்றி ஒர் இழிவான அபிப்பிராயமும் மனோன்மணியம்மாளினது மனதில் உண்டாயின. அவ்வாறு முற்றிலும் அநாகரிகமாகவும் தாறுமாறாகவும் நடந்து கொள்ளும் மனிஷியைத் திருத்தி அவளை நாற்காலியில் உட்காரச் செய்யும் வரையில் தான் நிற்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று நினைத்த மனோன்மணியம்மாள் தனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மீது மெதுவாக உட்கார்ந்தவளாய்க் கொடி முல்லையம்மாளை நோக்கி, “அம்மா! நீங்கள் நல்ல உயர்வான பட்டுப்புடவை கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்; அதோடு தரையில் உட்கார்ந்து கொள்ளுகிறீர்களே, புடவை அழுக்கடைந்து அசுசியாய்ப் போய்விடாதா? மனிதர்கள் வந்தால் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு தானே இத்தனை நாற்காலிகள் போட்டு வைத்திருக்கிறார்கள். இது வரையில் எத்தனையோ விருந்தாளிகள் இங்கே வந்திருக்கிறார்கள். யாரும் உங்களைப் போல இப்படித் தரையில் உட்கார்ந்ததே இல்லை. நீங்கள் ஒருவர்தான் இப்படிச் செய்தது. எங்களோடு சரி சமானமாக உட்கார்ந்து பேச உங்களுக்கு யோக்கியதை இல்லை என்று நினைத்துத் தரையில் உட்கார்ந்தீர்களா? நீங்கள் செய்வது நிரம்பவும் வேடிக்கையாக இருக்கிறதே!” என்றாள்.

அவள் வார்த்தைகளைக் குத்தலாக மதியாதவள் போலவும், நிரம்பவும் பெருந்தன்மையோடு நடப்பவள் போலவும் காட்டிக் கொண்ட கொடி முல்லையம்மாள் வேடிக்கையாகவும் இனிமையாகவும் புன்னகை செய்து, “அம்மா! நான் ஒரு சாதாரணக் குடியானவருடைய வீட்டில் பிறந்தவள். அவ்விடத்தில் ஆண் பிள்ளைகள் கூட நாற்காலியில் உட்கார்ந்து அறியார்கள். நான் புகுந்த இடத்திலும் நாற்காலியைப் பார்த்தறியேன். நான் பிறந்த இடத்திலும் சரி புகுந்த இடத்திலும் சரி, நான் எப்போதும் வீட்டுக் காரியங்களைச் செய்துகொண்டே இருப்பேன். உட்கார்ந்து கொள்வதற்கே எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதில்லை. தப்பித் தவறி உட்கார்ந்து கொண்டாலும் தரையில் தான் உட்கார்ந்து கொள்வேன். ஆகையால் நாற்காலியில் எப்படி உட்காருகிறதென்பதே எனக்குத் தெரியாது. முன் காலத்தில் காளிதாசர் என்று ஒருவர் இருந்தார் என்றும் அவர் ஒரு வேடிக்கை செய்தார் என்றும், என் பாட்டி ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நீங்கள் புஸ்தகங்களில் படித்திருக்கலாம். ஒரு மகாராஜனுடைய மகளின் கருவத்தை அடக்க வேண்டும் என்று மந்திரி மகன், நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்த சுத்த மடையனான காளிதாசன் என்ற ஒர் ஆட்டிடையனைப் பிடித்துக் கொணர்ந்து வேஷம் போட்டு அந்த ராஜகுமாரியை அவனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டானாம். அவனோடு சயனக் கிரகத்துக்குப் போன ராஜகுமாரி அவனை நாற்காலியின் மேல் உட்காரச் சொன்னாளாம். நாற்காலியின் உபயோகம் என்ன என்பதே அவனுக்குத் தெரியாது. ஆகையால், அவன் அந்த நாற்காலியைத் தூக்கித் தன்னுடைய தலையின் மேல் வைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டான் என்று என் பாட்டி கதை சொல்ல, நான் கேள்வியுற்றிருக்கிறேன். நீங்கள் என்னை நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளச் சொல்வதைக் கேட்க எனக்கு அந்தக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. மனிதர்களுக்கு எதெது பழக்கமோ, அது அவர்களுக்கு இன்பமாகத் தோன்றுகிறது. நீங்கள் நாற்காலியிலேயே உட்கார்ந்து பழகியவர்கள் ஆகையால் அதுவே உங்களுக்கு இயற்கையாகப் போய் விட்டது. அதுவே உங்களுக்குச் சுகமாக இருக்கிறது. அதை விட்டுத் தரையில் உட்காருவது கஷ்டமாகவும் அகெளரதையாகவும் தோன்றுகிறது. என் விஷயம் அதற்கு நேர் விரோதமாக இருக்கிறது. நானும் என்னைப் போன்ற மற்ற குடும்ப ஸ்திரீகளும் நாற்காலியில் உட்கார்ந்து பழகியதே இல்லை; தரையிலே தான் உட்கார்ந்து பழகி இருக்கிறோம். நாற்காலியில் உட்காருவது தொழுக்கட்டையில் மாட்டிக் கொள்வது போல எங்களுக்குத் தோன்றுகிறது. பூமா தேவியின் மடியாகிய தரையில் உட்கார்ந்து கொள்வதே எங்களுக்கு பிரம்மானந்தமாகவும், பெருமையாகவும் தோன்றுகிறது. நாற்காலியில் உட்காருவதைவிடத் தரையில் உட்காருவதில் பல அனுகூலங்கள் இருக்கின்றன. தரையில் உட்காருவதில் முதலில் பணச் செலவில்லை; இரண்டாவது விஷயம், வியாதி எதுவும் உண்டாக இடமில்லை. எங்கள் வீடுகளில் நாங்கள் தரையை நன்றாக மெழுகிக் கண்ணாடி போல வைத்திருப்போம். அவ்விடத்தில் உட்காருவது குளிர்ச்சியாகவும் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தரையில் கை கால்களுக்கு வேண்டிய அளவு இடம் இருக்கும். ஒருவர் உட்கார்ந்த இடத்தில் மற்றவர் உட்கார வேண்டும் என்பதில்லை. நாற்காலியின் விஷயமோ அப்படிப்பட்டதல்ல. அதன் இடம் சொற்பமானது. கால்களை எப்போதும் தொங்கவிட்டுக் கொண்டே உட்கார்ந்திருப்பதால், உடம்பு முழுதிலும் இரத்தம் சமமாக ஓடாமல் சில இடங்களில் இரத்தப் போக்கு தடைப்பட்டு வியாதிகளை உண்டாக்குகிறது. உடம்பு எப்போதும் மரத்தில் உராய்ந்து கொண்டே இருப்பதால் தோலின் மிருதுத்தன்மை போய் அது காய்த்துப் போகிறது. தரையில் உட்காரும் போது உடம்புக்கு ஏற்படும் செளகரியம் நாற்காலியில் உட்காரும் போது ஏற்படுகிறது இல்லை. நாற்காலியில் வியாதியஸ்தரும் உட்காருகிறார்கள். அமிதமான சூடுள்ளவரும் உட்காருகிறார்கள். ஆண் பிள்ளைகளும் உட்காருகிறார்கள், பெண் பிள்ளைகளும் உட்காருகிறார்கள். அதனால் ஒரு மனிதருடைய வியாதி மற்றவருக்குப் பரவுகிறதன்றி, ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்னும் பயிர்ப்பென்ற குணம் அதனால் குறைந்து கொண்டே வருகிறதற்கு அது ஒர் ஏதுவாக இருக்கிறது. இந்தக் காரணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

அதாவது நாம் தரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது பெரியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களை அவமரியாதைப் படுத்துவதாகாது. நாம் நாற்காலியிலேயே உட்கார்ந்து பழகி விட்டால், நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய மனிதர்களுக்கு எதிரிலும் நாம் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நேரும். அதன் பிறகு எல்லோரும் சமமாகப் போய்விடும். புருஷன், மாமனார், மாமியார், வயதான பெரியவர்கள் முதலியவர்களுக்குச் சமமாக நாம் ஒருபோதும் உட்காரக் கூடாது. ஆகையால் அதற்குத் தரைதான் நிரம்பவும் அனுகூலமானது, அதுவுமன்றி நாற்காலி முதலிய வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் நம்முடைய வீட்டுத் தரையைச் சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் வைத்துக் கொள்ளாமல் அசட்டையாக விட்டுவிட நேருகிறது. அதனால் வியாதிகள் உண்டாக ஏது ஏற்படுகிறது. ஆனால் உங்கள் தகப்பனார் பெரிய உத்தியோகம் வகிப்பதால், வெள்ளைக்காரர்கள் இங்கே வந்து போவதற்கு அனுகூலமாக நீங்கள் நாற்காலி முதலியவைகள் போட்டு வைத்திருப்பது அவசியந்தான். அதனால் ஏற்படும் தீங்குகளைக் கவனிக்காமல் கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமே. வெளியூர்களிலும் கிராமங்களிலும் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் நாற்காலியில் உட்காரும் பழக்கம் அநாவசியமானதே. அதனால் பல தீமைகள் உண்டாகின்றன. நீங்கள் பி.ஏ. பரீட்சைக்குப் படிப்பதால், இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் நிரம்பவும் நாகரிகம் வாய்ந்தவர்கள். ஆதலால் உங்கள் வீட்டுத் தரையை நீங்கள் அசுத்தமாக வைத்திருக்கமாட்டீர்கள் ஆகையால், கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகும் வரையில் நான் தரையில் உட்காருவதால், என் புடவை அதிகமாய்க் கெட்டுப் போகாது. முக்கியமாக இன்னொரு விஷயம் இருக்கிறது. அதோ வந்து உட்கார்ந்திருப்பது என்னுடைய எஜமானர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களுக்கு எதிரில் நாங்கள் தரையில்கூட உட்கார்ந்திருப்பது வழக்கமில்லை. அப்படி இருக்க, அவர்களுக் கெதிரில் நாற்காலியில் உட்காருவதென்றால், அதைப் போல ஒழுக்கத் தவறான காரியம் வேறு ஒன்றும் இராதென்று நினைக்கிறேன். ஆகையால், நான் உங்களுடைய பிரியப்படி நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளாததைப் பற்றி நீங்கள் வருத்தப் படக்கூடாது. மனிதர் எங்கே உட்கார்ந்தால் என்ன? அதனால் தானா மனிதருக்குப் பெருமையும் சிறுமையும் ஏற்படப் போகிறது? அடக்கம் அமரருள் உய்க்கும் என்று நம்முடைய பெரியோர்கள் கண்டுபிடித்து அதை சிறந்த தருமமாகக் கடைப்பிடித்து வந்திருக்க, அன்னிய நாட்டார் வேறுவிதமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்று நாம் அதைப் போல மாறுபட்டுப் போவது நாம் சுயமதிப்பும் ஆழ்ந்த விவேகமும் இல்லாத குழந்தைகள் என்று நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வது போலாகும் அல்லவா. சாரமற்ற சருகு ஆகாயத்தில் பறக்கிறது. கனமான தங்கம் வெள்ளி முதலியவைகள் எல்லாம் பள்ளத்தில் போய் கிடக்கின்றன. அதனால் அததன் பெருமை சிறுமை மாறுபட்டுப் போகுமா? ஒரு நாளும் இல்லை” என்று சிரித்துக் கொண்டே இனிமையாகக் கூறினாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட மனோன்மணியம்மாள் மிகுந்த வியப்பும் திகைப்பும் கொள்ளலானாள். பார்ப்பதற்கு வசீகரமாகவும் நாகரிகம் வாய்ந்தவளாகவும் தோன்றிய கொடிமுல்லையம்மாள் நாற்காலியில் உட்காராமல் கீழே உட்கார்ந்ததைக் கண்ட உடனே, அவள் படிக்காத முட்டாள் என்று மனோன்மணியம்மாள் நினைத்துக் கொண்டாள் அல்லவா. பிறகு, நாற்காலியில் உட்காருவதைவிடத் தரையில் உட்காருவதே சிறந்ததென்று கொடி முல்லையம்மாள் தனக்கு புத்திமதி கூறியதைக் கேட்கவே, மனோன்மணியம்மாள், “ஆகா! நம்முடைய தேசத்து ஜனங்கள் அநாகரிகர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பது தான் உத்தமமானது என்பதற்குப் பல காரணங்களையும் தெரிந்து கொண்டு, அதே துறையில் பிடிவாதமாகச் சென்று கொண்டிருக்கிறார்களே! இவர்களுடைய மூட புத்தி எப்போதுதான் தெளிவுபடுமோ. இவர்கள் மற்ற நாட்டாருக்குச் சமதையாக உயரும் காலம் எப்போதுதான் வருமோ” என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டவளாய்க் கொடி முல்லையம்மாளைப் பார்த்து, “சரி; பிறகு உங்களுடைய இஷ்டம். நாற்காலியில் உட்காருவது வெள்ளைக்காரருடைய நாகரிகம் என்று நீங்கள் கருதுகிறதாகத் தெரிகிறது. நம்முடைய தேசத்தில் எப்போதும் தரையைத் தவிர உயர்வான மர ஆசனங்கள் இருந்ததே இல்லையா? நான் மன்னார்குடி முதலிய வெளியூர்களில் இருந்த காலத்தில் ஜனங்கள் விசிப்பலகைகளில் உட்காருவதைப் பார்த்திருக்கிறேனே. அது மாத்திரம் நல்லது தானா? விசிப்பலகை என்பது நாலைந்து பேர் சேர்ந்து உட்கார்ந்து கொள்ளும்படி பெரிதாக இருக்கிறது. நாற்காலி ஒவ்வொருவர் தனித்தனி உட்காரும்படி சிறிது சிறிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பேதம் இவ்வளவுதானே. நாற்காலி என்றால், நீங்கள் பெரிய பூச்சாண்டியைக் கண்டு பயப்படுவது போலப் பேசுகிறீர்களே! இதனால் அவரவர்களுக்கு ஏற்படக்கூடிய மரியாதை குறைந்து போய் விடுமா? வெள்ளைக்காரர்களிடத்தில் மாத்திரம் மரியாதை என்பது கிடையாதா? தகப்பனாரிடத்தில் பிள்ளையும் புருஷனிடம் பெண்ஜாதியும் மரியாதைக் குறைவாகவா நடந்து கொள்ளுவார்கள். அப்படி ஒரு நாளும் அவர்கள் நடந்து கொள்ளுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒருவரிடத்து ஒருவர் அன்பும் மரியாதையும் வைத்தாலும், அதை இந்த அற்ப விஷயங்களில் எல்லாம் காட்டுகிறதில்லை. சாப்பாடு தேகசெளகரியம் முதலிய விஷயங்களில் எல்லோரும் சமம் என்பது அவர்களது கொள்கை. நம்முடைய தேசத்தில், ஆண் பிள்ளைகள் தான் மேலான ஆசனத்தில் உட்கார வேண்டும், பெண் பிள்ளைகள் காற்றில்லாத இருண்ட மூலை முடுக்குகளிலும், அழுக்கடைந்த தரையிலும் உட்கார வேண்டும், மழை பெய்தாலும், வெயில் காய்ந்தாலும் நம்முடைய ஸ்திரீகள் குடை பிடித்துக் கொள்ளக் கூடாது, காலில் பாதரட்சை போட்டுக் கொள்ளக் கூடாது. வெயிலில் வெறுங்காலோடு நடப்பதால், அவர்களுடைய கால் வெதும்பிக் கொப்புளித்துப் போனாலும் பாதகமில்லை. அவர்கள் ஆண்பிள்ளைகளுக்குச் சமமாகப் பாதரட்சை அணியக் கூடாது! யாராவது ஒரு பெண்பிள்ளை செருப்பு குடை முதலியவற்றை உபயோகித்துக் கொண்டு போனால், நம்முடைய ஜனங்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள்? வெள்ளைக்காரரில் குடை பிடிக்காத அல்லது செருப்புப் போடாத ஸ்திரீயுண்டா? ஸ்திரீகளுடைய காலிலும் தலையிலும் வெயிலின் வெப்பம் உறைக்காதா? அவர்கள் அந்தச் சூட்டைப் பொறுத்துக் கொண்டால் தான் அவர்கள் புருஷர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற அந்தஸ்து நிலைக்குமா? இல்லாவிட்டால் நிலைக்காதா? இப்படி எல்லாம் நம்முடைய தேசத்துப் புருஷர்கள் சுயநலம் கருதி ஸ்திரீகளை அடக்கி அடிமைகளைப் போல நிரம்பவும் கொடூரமாக நடத்துவதெல்லாம் எப்போது ஓழியுமோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் நாம் நம்முடைய ஸ்திரீகளின் மேல் குறை கூறுவதற்கு இடமில்லை. ஏனென்றால், அவர்கள் யுகம் யுகமாகச் செயலற்றுப் புருஷருடைய கொடுங்கோன்மையில் ஆழ்ந்து அடங்கிக் கிடந்து உழலுகிறார்கள். நரகத்திலேயே ஆயிசுகாலம் முடிய இருந்து இருந்து பழகுவோருக்கு அதுவே மா.வி.ப.I-15 இன்பமாகத் தோன்றும் போலிருக்கிறது. அதுபோல நம்முடைய தேசத்து ஸ்திரீகள் தங்களுடைய அடிமை நிலைமையே உத்தமமானது என்று நினைக்கும்படி நம்முடைய மனிதர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் ஒழிப்பதற்கு இங்கிலீஷ் படிப்புதான் முதல் தரமான மருந்து. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் இரண்டொரு தலைமுறைகளில் இந்த இங்கிலீஷ் படிப்பு சாதாரண ஜனங்களுக்கெல்லாம் பரவிவிடும். அவர்கள் இப்போது கொண்டுள்ள அநாகரிகமான பற்பல விஷயங்கள் மாறுபட்டுப் போகும் என்பது நிச்சயம். நம்முடைய தேசத்து ஆண்பிள்ளைகள் ஸ்திரீகளின் விஷயத்தில் இவ்வளவு கொடுமை செய்து வருவது எவ்வளவு காலந்தான் கடவுளுக்குச் சம்மதமாயிருக்கும். இதை எல்லாம் ஓழிப்பதற்குத் தான், இரண்டாயிரம் மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு சிறிய தீவில் இருக்கும் இந்த இங்கிலீஷ்காரரைக் கொண்டு வந்து விட்டு அவர்கள் நம்முடைய ஆண் பிள்ளைகளை எல்லாம் அடக்கி ஆளும்படியும், அவர்களுடைய பாஷையும் நாகரிகமும் கட்டாயமாக நம்முடைய தேசத்தில் பரவும்படியும் கடவுள் தந்திரம் செய்திருக்கிறார். இப்போதே இங்கிலீஷ் படித்த நம்முடைய ஆண்பிள்ளைகளில் பெரும்பாலோர் சரியான கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி எல்லோரும் சமம் என்ற தர்மத்தை அனுபவத்தில் நடத்திக்காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கூடிய சீக்கிரம் நம்முடைய தேசத்துக்கு நல்லகாலம் பிறக்கும். அதைப்பற்றி சந்தேகமே இல்லை” என்றாள். அதைக் கேட்ட கொடி முல்லையம்மாள் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தாள். தான் வந்தவுடனேயே மனோன்மணியம்மாளோடு பெருத்த வாக்குவாதத்தில் இறங்கிவிட்டால் அவளது மனம் கசந்துபோம் என்றும், அதன் பிறகு ஒருகால் அவள் தங்களை வெளியில் அனுப்பினாலும் அனுப்பி விடுவாள் என்றும், அதன் பிறகு அவளது குணாதிசயங்கள் முழுவதையும் நன்றாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் நினைத்த கொடி முல்லையம்மாள் இனிமையும் சந்தோஷமும் அன்பும் ததும்பிய முகத்தோடு மனோன்மணியம்மாளை நோக்கி, “அம்மா! நான் இங்கிலீஷ் பாஷை கற்காதவள். ஆகையால் அந்தப் பாஷையின் பெருமையும், அதைக் கற்பதால் உண்டாகும் நலன்களும் எப்படிப்பட்டவை என்பது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இங்கிலீஷ் புஸ்தகங்களைப் படித்து, இங்கிலிஷ்காரரோடு பழகி, அந்தத் தேசத்தாருடைய நாகரிகங்களை எல்லாம் அறிந்தவருக்கு அன்றி, எங்களைப் போன்றவருக்கு, நீங்கள் சொல்வதின் உண்மை அவ்வளவாகத் தெரியாது. பாலின் நிறம் எப்படி இருக்கும் என்று பிறவிக் குருடனிடம் சொன்னால், அவன் அதை எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறான். ஆனால் நான் பொதுவாக ஒரு நியாயம் சொல்லுவேன். எந்த மனிதரும் சாதாரணமாகத் தம்முடைய பெரியோர்கள் பெற்றோர்கள் எப்படிப்பட்ட நடையுடை பாவனை பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடக்கிறார்களோ அவைகளையே இயற்கையில் பின்பற்றி நடக்கிறவர்களாய் இருக்கிறார்கள். புதிதாக உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கிறவர்கள் அதற்கு முன் இருந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணத்தையாவது, அதன் உசிதா உசிதத்தையாவது ஆராயாமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றியே நடக்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்த நியாயத்தை அனுசரித்தே நம்முடைய தேசத்து ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் தங்களுடைய ஆசார ஒழுக்கங்களைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள். இப்போது அன்னிய தேசத்தாருடைய சம்பந்தமும், அன்னிய தேச பாஷையின் அறிவும் நம்முன் சிலருக்கு ஏற்பட்ட உடனே, அவர்கள் தங்களுடைய நடையுடை பாவனை பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு புதுமாதிரியாக நடக்க எத்தனிக்கிறார்கள்; இங்கிலீஷ் கற்காத இதர ஜனங்கள் செய்வதெல்லாம் தவறென அவர்களுடைய மனசுக்குப்படுகிறது. அவர்களுக்கு அது உண்மையாகவே இருக்கலாம்; ஆனால் அவர்கள் சொல்வதை மாத்திரம் கேட்டு மற்றவர்களும் அம்மாதிரி மாறிப்போவதுதான் சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் உங்களைப் போலப் புது விஷயங்களை அறிந்து அனுபவித்துத் தீர ஆராய்ந்து மாறுபட வேண்டுமே அன்றி, ஒருவர் சொல்வதை மாத்திரம் கேட்டு மற்றவர்கள் திருந்தி விடுகிறதுதான் நிரம்பவும் அரிது. நீங்கள் சொல்வது போல இன்னம் இரண்டொரு தலைமுறை காலத்தில் இங்கிலீஷ் பாஷை நம்முடைய நாடு முழுதிலும் நன்றாகப் பரவிவிடும் பக்ஷத்தில், எல்லோரும் அந்தப் பாஷையின் பெருமையையும், இங்கிலீஷ்காரருடைய பழக்க வழக்கங்களின் உசிதா உசிதங்களையும் தமக்குத்தாமே கண்டு தங்களை அவசியம் திருத்திக் கொள்வார்கள். ஆனால், இதில் இன்னொரு விஷயமிருக்கிறது. ஏதாவது ஒரு புதிய விஷயமோ, அல்லது, இன்பமோ மனிதருக்கு நேர்ப்படுமானால், சிலர் அவசரப்படாமல் நன்றாக ஆராய்ந்து அந்தப் புதிய விஷயத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு அடிமையாய்ப் போய் அதனினின்றும் மீண்டு வரமாட்டாமல் ஆயிசுகால முற்றும் வருந்தித் தவிக்கிறார்கள். வேறு சிலர் சிறிது காலத்தில் புதிய பிரமையை விலக்கிக் கொண்டு பழைய வழிக்கே வருகிறார்கள். இப்போது நாம் சாதாரணமாக ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் அவனுக்கு அந்த நடத்தைதான் சிறந்ததாகத் தோன்றும். குடிப்பதுதான் தேவேந்திர போகம் என்று அவன் நினைப்பான். குடிக்கக்கூடாதென்ற கண்டிப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்ற அறிவாளிகளை அவன் சுத்த முட்டாள்கள் என்றே மதிப்பான். மற்ற ஒவ்வொருவரும் தன்னைப் போலக் குடித்துப் பார்த்தால் அல்லவா அதன் சுகம் தெரியும் என்றும், அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்க்காமல் ஜனங்கள் சுத்த ஞானசூனியர்களாய் நடப்பதோடு மற்றவர்களையும் தடுக்கிறார்களே என்றும் நினைப்பான். ஆனால் காலக்கிரமத்தில், அவனுடைய பொருள், தேக ஆரோக்கியம், மானம் முதலிய எல்லாம் அந்தக் குடியினால் அழிந்து போகின்றன. அதன் பிறகு அவன் உண்மையை உணர்ந்து அந்தப் பெரும் பேயின் இடத்தில் இருந்து மீள மாட்டாமல் நடைப்பினமாகக் கிடந்து உழலுகிறான். இங்கிலீஷ் நாகரிகத்தை தான் குடிக்கு உவமானமாகச் சொல்லுகிறேன் என்று நீங்கள் வருத்தப்படக் கூடாது. அதை விட்டு இன்னும் எத்தனையோ உவமானங்கள் சொல்லலாம். ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம். அது தன்னுடைய தாயார் ஊட்டும் சாதத்தை உண்ண மாட்டேன் என்கிறது. கீழே கிடக்கும் மண்ணை எடுத்து நிரம்பவும் ஆனந்தமாகத் தின்கிறது. மற்றவர் அதை எவ்வளவு தான் கண்டித்தாலும், அதற்கு நற்புத்தி புகட்டினாலும், அதை அந்தக் குழந்தை கவனிக்கிறதில்லை. புதிய சுவையாகத் தோன்றும் மண்ணின் சுவைதான் அதற்குப் பரம இன்பமாகத் தோன்றுகிறது. அது நிரம்பவும் ஆவலோடு மண்ணையும் சாம்பலையும் எடுத்துத் தின்று சந்தோஷப்படுகிறது. அதற்கு ஒவ்வொரு வேளையும் ஆகாரம் ஊட்டுவது பெரும் பாடாய்ப் போய் விடுகிறது. ஆனால் அதற்குக் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி அடைந்துவிடுமானால், அதன் பிறகு உண்மை விளங்கி விடுகிறது. தாயார் கொடுத்த ஆகாரமே உடம்புக்கு உகந்தது என்றும், மண் முதலிய இதர வஸ்துக்களை உண்பதால் கெடுதல்கள் உண்டாகும் என்றும் அது தானாகவே உணர்ந்து கொள்ளுகிறது. கைக்குழந்தைகளை விட்டு, வயதான பையன்களை நாம் எடுத்துக் கொள்வோம். பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிக் கல்வி கற்று வருமாறு ஏவுகிறார்கள். கல்வி கற்பது அவர்களுக்கு விஷத்தை விழுங்குவது போல இருக்கிறது. துஷ்டப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடித் தம்முடைய பொழுதை எல்லாம் வீணாக்குவதே அவர்களுக்கு அத்யந்த சுகமாகத் தோன்றுகிறது. தம்முடைய பெற்றோர் தம்மை வருத்தி வதைக்கிறார்களே என்ற நினைவும், அவர்களைக் கொன்று விடலாமா என்ற எண்ணமும் அப்படிப்பட்ட பையன்களுடைய மனசில் தோன்றுகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேக ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு அடிக்கடி விளக்கெண்ணெய் முதலிய விரோசன மருந்துகளைக் கொடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. எப்போதும் தின்பண்டங்களைத் தின்று உடம்பை மேன்மேலும் கெடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேகத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அடிக்கடி எண்ணெய் ஸ்நானம், சாதாரண நீராட்டம் முதலியவற்றைச் செய்விப்பதோடு, சுத்தமான உடைகளை அணிவிக்க விரும்புகிறார்கள். பையன்கள் அவைகளை எல்லாம் பெருத்த உபத்திரவமாக மதித்துத் தம்முடைய போஜனம், ஸ்நானம், உடை முதலிய யாவற்றையும் அசட்டை செய்து விளையாட்டி லேயே புத்தியைச் செலுத்துகிறார்கள். இன்னம் அவர்கள் பணிவாக நடத்தல், உண்மை பேசுதல், உழைத்து வேலை செய்தல், சன்மார்க்கங்களில் நடத்தல் முதலிய காரியங்களில் அவர்களைப் பழக்கப் பெற்றோர் முயல்கிறார்கள். அவைகள் எல்லாம் பையன்களுக்குப் பெருத்த துன்பமாகத் தோன்றுகின்றன. எவ்விதமான கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் தம்முடைய இச்சைப்படி நடந்து கொள்வதே அவர்களுக்கு சுகமாகத் தோன்றுகிறது. பையன்கள்தான் இப்படி என்றால், இன்னம் அதிக வயசான யெளவனப் பருவத்தினரை எடுத்துக் கொள்வோம். அவர்களில் எத்தனை பேர் அன்னிய மாதர், தாசிகள், வேசைகள் முதலியவர்களிடம் சிநேகமாக இருப்பதே சுவர்க்க போகம் என்று எண்ணி மதியிழந்து மானம் இழந்து கெட்டழிகிறார்கள். பெற்றோர், பெரியோர், உற்றார், உறவினர் முதலியோர் சொல்லும் நல்ல புத்தி எல்லாம் அவர்களுக்குக் கன்ன கடூரமாகத் தோன்றுகிறது. அவர்களுடைய நன்மையை நாடி உண்மையைச் சொல்லுகிறவர்கள் எல்லோரும் அவர்களுக்குச் சத்துருக்கள் போலத் தோன்றுகிறார்கள். யெளவனப் பருவத்தினருள் மேற்சொன்னபடி துர்ப்புத்தி பிடித்து அலைவோரைத் தவிர, புதிதாகக் கலியானம் செய்து கொள்ளும் சிறியவர்கள் தம்முடைய புதிய மனைவியின் மையலில் அழ்ந்து மதியிழந்து அவர்களையே தெய்வமாக மதித்து அவர்களுக்கு அடிமையாகி, அதுவரையில் தங்களைக் காப்பாற்றிய தாய் தந்தையரை அசட்டை செய்து, அவர்களுடைய பேச்சைக் கேளாது அவர்களைப் பட்டினி போட்டு அடித்துத் துரத்தி விடுகிறதை நாம் எத்தனையோ இடங்களில் பார்க்கவில்லையா? இப்படிப்பட்ட புதிய மோகமும் பித்தமும் எப்போதும் நீடித்து நிற்கின்றனவா? சில வருஷகாலத்தில் அந்த மோகமும், மன உக்கிரமும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அதற்கு முன் தெய்வம் போல மதித்து வணங்கப்பட்ட ஸ்திரீகள் கொஞ்ச காலத்தில் வாடிப்போகும் புஷ்பங்கள் போலக் காலால் மிதித்து அவமதிக்கப்படுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரையில் உள்ள ஒவ்வொரு பருவத்திலும் அவனுடைய மனசை மயக்குவதற்கு ஒவ்வொரு புது விஷயம் ஏற்பட்டிருக்கிறது. அந்தந்தச் சமயத்தில் அதது நிலைத்ததாகவும் உண்மை போலவும் தோன்றுகிறது. காலக்கிரமத்தில் அது பொய்யாகி விடுகிறது. ‘அடாடா! நாம் அப்படி மூடத்தனமாக நடந்து கொண்டோமே என்று அவர்களே பழைய சங்கதிகளை நினைத்து விசனப்படுகிறார்கள். இந்த உலகத்தில் கோடாது கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லா உடம்பிலும் ஒரே விதமான அவயவங்களே இருக்கின்றன. ஆனாலும் ஒருவனுடைய முகம் போல இன்னொருவனுடைய முகம் இல்லை. ஒருவனுடைய உடம்பின் அமைப்பைப் போல இன்னொருவனின் உடம்பின் அமைப்பு இல்லை. இரண்டு முகங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ, அது போல இரண்டு மனங்கள் ஒன்று போல இருப்பதில்லை. ஒரு மனிதனுடைய மனம் போல இன்னொரு மனிதனுடைய மனம் இருக்கிறதே அரிது. எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி முகவேறுபாடும், மனவேறுபாடும் இருக்கின்றன. மனசு கண்ணாடி போன்றது. சுத்தமாக அமைந்த கண்ணாடி எந்த வஸ்துவையும் உள்ளப்படி காட்டுகின்றன. சில பெரிதாக்கிக் காட்டுகின்றன. அதுபோல சில மனிதர்கள் மதங்கள், உலக அனுபவங்கள், உலக சுகங்கள், உலகப் புதுமைகள் முதலியவற்றைக் கண்டு மயங்காமல், அவற்றில் உண்மை எவ்வளவு இருக்கிறது என்றும், பொய் எவ்வளவு இருக்கிறது என்றும் சீர்தூக்கிப் பார்த்து வெகு சீக்கிரத்தில் சரியான முடிவுக்கு வந்து விடுகிறார்கள். சிலர் புதிய விஷயங்களின் அனுகூல பிரதிகூலங்களை அறிய மாட்டாமல் மயங்கி க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தமாய் உழன்று அவஸ்தைப்படுகிறார்கள். பனம்பழத்தைப் புதிதாகத் தின்பவன் இது ருசியாய் இருக்கிறதே. இதை மனிதர் தின்னாமல் அலட்சியமாக விட்டிருக்கிறார்களே; மனிதர்கள் மூடர்கள் என்று எண்ணிக் கொண்டு, மேன்மேலும் பனம்பழத்தைத் தின்கிறான். மறுநாள் அதன் பித்தம் அவனுடைய உடம்பை வதைக்க ஆரம்பிக்கும் போது அவன் அதன் உண்மைக் குணத்தைத் தெரிந்து கொள்வான். கெட்டுப்போன தன்னுடைய உடம்பை அவன் நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்குள் பனம் பழத்தைப் பற்றியும் ஜனங்களைப் பற்றியும் அவன் கொண்ட அபிப்பிராயம் முற்றிலும் மாறிப் போவது நிச்சயம். இந்த இங்கிலீஷ் நாகரிகமும் பழக்கவழக்கங்களும் பனம் பழம் தின்பது போல முடியுமோ என்னவோ. அது காலக்கிரமத்தில் தான் தெரியும். இப்போது சில வருஷங்களாகத் தானே இந்தப் புதிய கல்வியும் நாகரிகமும் நம்முடைய தேசத்தில் கையாளப்படுகின்றன. வெகு சீக்கிரத்தில் உண்மை தெரிந்துவிடும். அது எப்படியாவது போகட்டும்; அதைப்பற்றி நாம் ஏன் வாக்குவாதம் செய்ய வேண்டும். அற்ப விஷயமாகிய நாற்காலியைப் பற்றிய பிரஸ்தாபம் இவ்வளவு தூரம் பேச்சை வளர்த்து விட்டது. நீங்கள் ஏதோ ஒரு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பதாகக் கீழே இருந்த வேலைக்காரர்கள் சொன்னார்கள். ஆகையால் எங்களோடு அதிகமாய்ப் பேசிக் கொண்டிருக்க உங்களுக்கு அவகாசம் இராது. நிரம்பவும் அரிதான உங்களுடைய பொழுதை நாங்கள் அபகரித்துக் கொள்வது அக்கிரமமான காரியம். ஆகையால் நாற்காலியைப் பற்றிய பிரஸ்தாபத்தையும், புதுநாகரிகத்தைப் பற்றிய பிரஸ்தாபத்தையும் நாம் இவ்வளவோடு விட்டு விடுவோம். நான் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது ஒன்றே போதுமானது. என்னை நீங்கள் பெருத்த சிம்மாசனத்தில் வைத்து உபசரிப்பது போல எண்ணிக் கொள்ளுகிறேன்” என்று நயமாகவும் சிரித்த முகத்தோடும் கூறிவிட்டு, அந்த விடுதியின் வாசற் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணைப் பார்த்துக் கண் ஜாடையில் அழைக்க, அவள் கொடி முல்லையம்மாளின் அருகில் வந்து, தனது தலை மீது வைத்திருந்த பெருத்த தாம்பாளத்தைக் கீழே இறக்கி வைத்து அதன் மேலே மூடப்பட்டிருந்த போர்வையை விலக்கினாள். அதற்குள் விலை உயர்ந்த இரண்டு பனாரீஸ் ரவிக்கைத் துண்டுகள், சீமை இலந்தைப் பழங்கள், ஆரஞ்சுப் பழங்கள், செவ்வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலிய வஸ்துக்கள் காணப்பட்டன. தான் அவ்விதமான வஸ்துக்களைக் கொணர்ந்ததைப் பற்றி மனோன்மணியம்மாள் ஏதாவது தாறுமாறாகக் கூறுவாள் என்று கொடி முல்லையம்மாள் எதிர் பார்த்தாள். ஆனாலும், அவ்வாறு அவள் பற்பல விஷயங்களைப் பற்றி அபிப்பிராயங் கூறுவதைக் கேட்பதால், அவளது குணாதிசயங்களையும் மனப்போக்கையும் நன்றாக அறிந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்த்தாள் ஆதலால், அவள் தனது வேலைக்காரப் பெண்ணையும் மனோன்மணியம்மாளினது முகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் புன்னகை தவழ்ந்த முகத்தோடு பேசத் தொடங்கி, “நாம் நம்முடைய பட்டிக்காட்டு வழக்கப்படி ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கொண்டு போகிறது போல இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம். நம்முடைய மரியாதையையும், பிரியத்தையும், நாம் சந்திப்பது சுட காரியம் என்பதையும் காட்ட வேண்டும் என்று வெளியூர்களில் வழக்கமாக வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படிப் போகாமல் வெறுங்கையோடு போனால், அதை ஜனங்கள் அவமரியாதையாக மதிப்பார்கள். ஆனால் நாம் இதை எல்லாம் இங்கே கொண்டு வந்தது மனோன்மணியம்மாளுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை; இருந்தாலும் இதைப்பற்றி கோபங் கொள்ளாமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறிய வண்ணம் தனது வேலைக்காரியைப் பார்த்து, “இந்த வீட்டு வேலைக்காரி அதோ வெளியில் நிற்கிறாள்; அவளைக் கூப்பிட்டுக் கொண்டு வா. அவள் இந்தச் சாமான்களை எடுத்து உள்ளே கொண்டு போய் வைக்கட்டும்” என்று கூறினாள்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், “நம்முடைய நாட்டு வழக்கம் ஒவ்வொன்றும் இப்படித்தான் குழந்தைப் பிள்ளை விளையாட்டாக இருக்கிறது. வயசு முதிர்ந்த பெரியோர்கள் கூட மனம் கூசாமல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்வதோடு இதை ஒரு பெருமையாகவும் சுபகாரியமாகவும் மதிக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வருவது எங்களை மரியாதைப் படுத்துவதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உண்மையில் எப்படி அர்த்தம் ஆகிறதென்றால், இந்தச் சாமான்கள் எல்லாம் எங்களிடம் இல்லை என்றோ, அல்லது, இவைகளை நாங்கள் பெறமுடிய வில்லை என்றோ நினைத்து நீங்கள் இவைகளைக் கொண்டு வந்து எங்களைச் சந்தோஷப்படுத்த முயற்சிப்பது போல இருக்கிறதே அன்றி வேறல்ல. இது மரியாதைப் படுத்துகிறதா அவமரியாதைப்படுத்துகிறதா என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். மனிதருக்குள் பரஸ்பரம் அந்தரங்கமான மரியாதையும் அன்பும் இருக்க வேண்டுமே அன்றி, இந்த வெளிப்படையான காரியம் எல்லாம் மனசின் உண்மையான நிலைமையை ஒரு நாளும் காட்டாது. உண்மையில் அன்பும், மரியாதையும் இல்லாதவர்கள் கூட இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்து வைத்துப் பார்த்து விட்டுப் போகிறார்கள். அது தான் போகட்டும் என்றால், இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இப்படி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலியவற்றைக் கொண்டு வருவது சுபக்குறி என்று நீங்கள் கருதுகிறீர்களே நம்முடைய தேசத்தில் நடக்கும் ஒவ்வொரு கலியாணத்திலும், அதன் சம்பந்தமாக மனிதர் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் முதலிய மங்கலக் குறிகளை வைத்தே காரியங்களை நடத்துகிறார்களே! அப்படியிருந்தும் சிலர் விஷயத்தில் அசுபமும், சண்டையும், பூசலும், துக்கமும், விபரீதங்களும் நேராமலா இருக்கின்றன. ஆகையால் இவைகள் எல்லாம் அர்த்தம் இல்லாத அநாவசியமான காரியங்கள் என்பது நிச்சயமான சங்கதி. ஏதோ பழைய வழக்கத்தை அனுசரித்து நீங்கள் இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தீர்கள் ஆகையால், அதைப்பற்றிப் பாதகம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நீங்கள் கொண்டு வந்துள்ள சாமான்களில் எதுவும் இங்கே உபயோகப்படக் கூடியதாக இல்லை. வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் முதலியவைகளை எல்லாம் நான் உபயோகிக்கிறதே இல்லை. அவைகள் வேண்டும் என்ற ஒர் ஆவலும் என் மனசில் உண்டாகிறதில்லை. நமக்கு உண்மையில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதும், அதனால் நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே சந்தேகம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் ரவிக்கைத் துண்டுகள் நிரம்பவும் படாடோபமாகவும் சிவப்பு பச்சை முதலிய நிறங்களே மயமாக நிறைந்ததாகவும் தோன்றுகின்றன. நான் துல்லியமான சாதாரண வெள்ளை உடைகள் உடுத்துவதே வழக்கம். அதுவே ஆரோக்கியமானது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஆகையால் இந்த ரவிக்கைகளும் எனக்கு உபயோகப்படப் போகிறதில்லை. இவைகளைத் தவிர இந்தத் தட்டில் சில பழங்களும் இருக்கின்றன. அவைகளை நான் கையால் கூடத் தொடப் போகிறதில்லை. எங்கள் வீட்டில் இன்னம் பல வகைப்பட்ட ஏராளமான பழங்கள் கிடந்தழிகின்றன. அவைகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, அருவருப்பு உண்டாகிவிட்டது. இப்போது இவைகளைக் கண்ணால் பார்த்தாலே வயிற்றில் அஜீரணம் உண்டாகும் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் என்னிடம் நீங்கள் இந்தப் பொருள்களைக் கொண்டு வந்து வைப்பதால், என் மனசில் ஏதாவது சந்தோஷமாவது, பெருமையாவது உண்டாகப் போகிறதா என்று யோசித்துப் பாருங்கள். இதர நாடுகளில், இப்படிப்பட்ட சாமான்களை எல்லாம் கொண்டு போய் ஒருவரை ஒருவர் பார்க்கிற வழக்கமே இல்லை. மங்கலகரமான மஞ்சள், வெற்றிலை பாக்கு இவைகள் இல்லாமலே அங்கே கலியாணங்கள் நடக்கவில்லையா? புருஷன் பெண்ஜாதிகள் சந்தோஷமாகவும் மங்கலகரமாகவும் காலம் தள்ளவில்லையா? நம் நாட்டில் தான் இந்த அநாவசியமான வேஷங்கள் எல்லாம் நடைபெறுகின்றன” என்றாள். அவள் கூறிய வார்த்தைகள் விபரீதமாகத் தோன்றினாலும், வந்திருந்தவரிடம் அவள் குரோத புத்தியோடு நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர்களை அவமரியாதைப்படுத்த எண்ணவில்லை என்பதும் நன்றாகத் தெரிந்தன. ஆனாலும் அவளது மனப்போக்கும் கந்தசாமியின் மனப்போக்கும் ஒன்றுக்கொன்று சிறிதும் பொருந்தாது என்பது கோபாலசாமிக்கு நன்றாகத் தெரிந்தது. திகம்பரசாமியார், வேலாயுதம் பிள்ளை முதலியோர் பெண்ணின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளாமல் பட்டாபிராம பிள்ளையின் சிநேகம் ஒன்றை மாத்திரம் கருதி அந்தக் கலியாணத்தை நிச்சயித்து விட்டார்களோ என்றும், பெரியோர் சொல்லை மீறி நடந்தறியாத சற்புத்திரனான கந்தசாமி தன் மனதிற்குப் பிடிக்காத அந்தப் பெண்ணை எப்படிக் கலியாணம் செய்து கொள்வான் என்றும் கோபாலசாமி நினைத்துப் பலவாறு கவலைகொண்டு சஞ்சலம் அடைந்ததன்றி, மனோன்மணியின் குண விசேஷங்களை மேலும் அறிந்து கொள்ளப் பிரியப்படாதவனாய், தான் எப்படியாவது தந்திரம் செய்து அவ்விடத்தைவிட்டு வெளியில் போய்விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால், வந்து உட்கார்ந்த உடனே தான் எழுந்து அவ்விடத்தை விட்டுப்போக விரும்பினால், அது மனோன்மணியம்மாளின் மனதில் சந்தேகத்தை உண்டாக்குவது அன்றி, அவளது நடத்தை தனக்குப் பிடிக்காமையால் எழுந்து போய்விட்டதாகக் கந்தசாமியும் எண்ணிக் கொள்வான் என்று கோபாலசாமி நினைத்தான். அந்த முக்கியமான விஷயத்தில் கந்தசாமி தானாகவே எவ்விதமான முடிவிற்கும் வரவேண்டுமே அன்றி, அவனுக்குத் தான் எந்த வகையிலும் வழிகாட்டியாக நடந்து கொள்ளக் கூடாதென்று நினைத்த கோபாலசாமி எதையும் கவனியாதவன் போலத் தரையைப் பார்த்தபடி மேலும் சிறிதுநேரம் பொறுமையாகத் தனது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். மனோன்மணியம்மாள் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கொடி முல்லையம்மாள் சிறிதும் மனவருத்தம் அடையாதவள் போலக் காட்டிக்கொண்டு சந்தோஷமாகவும் முகமலர்ச்சியோடும் பேசத்தொடங்கி, “நம்முடைய தேசத்தில் இதைப் போன்ற பைத்தியக்காரத்தனமான காரியங்கள் எத்தனையோ அனுசரிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். மனிதருக்கு மனிதர் உள்ளார்ந்த உண்மையான அன்பு வைப்பது முக்கியமே அன்றி, வெளிப்படையான இந்தக் காரியங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதவை என்றும், இவைகளால் நம்முடைய செலவை நாம் அதிகரிக்கச் செய்கிறோம் என்றும் நீங்கள் சொல்வது ஒரு விஷயத்தில் உண்மை தான். ஆனால் நாம் இன்னம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கப் போனால், நமக்கு இந்தச் சாமான்கள் எப்படித் தேவையில்லையோ, அது போல, மற்ற மனிதருடைய அன்புதான் எதற்காகத் தேவை? அதனால் நமக்கு ஏதாவது அனுகூலமாவது உபயோகமாவது உண்டா? ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் சிநேகமாவது அன்பாவது வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனிதருக்குத் தேவையான பணம் இருந்துவிட்டால், அவர்களுடைய தேக போஷணைக்கு எது தேவையோ அது எளிதில் வந்து விடுகிறது. அது ஒன்றே போதுமானது. மற்ற மனிதருடைய அன்பாவது உறவாவது இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரண்டும் ஒன்று தானே. இன்னும் ஆழ யோசித்துப் பார்த்தால், ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை எதற்காகக் கலியாணம் செய்து கொண்டு அநாவசியமான தொந்தரவை விலைக்கு வாங்க வேண்டும்? புருஷன் இல்லாவிட்டால், நம்முடைய காரியம் எல்லாம் நடைபெறாதா? புருஷனைக் கட்டிக் கொள்ளாமலே தமது வாழ்நாளைக் கழிக்கும் ஸ்திரீகளும், புருஷனைக் கட்டிக்கொண்டு இழந்து தமது வாழ் நாளைக் கடத்தும் ஸ்திரீகளும் உலகத்தில் இல்லையா? அவர்களுக்கெல்லாம் பொழுது போகமாட்டேன் என்கிறதா? இல்லை அல்லவா? நீங்கள் சொல்வது போல, கூடியவரையில் மனிதர் தங்களுடைய தேவைகளையும் செலவுகளையும் குறைத்துக் கொண்டே போவது தான் உத்தமமான காரியம். நம்முடைய தேசத்தில் சந்நியாசம் வாங்கிக் கொள்வதென்று அதைத்தான் சொல்லுகிறார்கள். உலகப்பற்றையும், மனிதர் பற்றையும், உடல் அபிமானத்தையும், உயிர் அபிமானத்தையும் அடியோடு ஒழித்து தமது ஆசாபாசங்களை எல்லாம் அடக்கி, பசி உண்டானால், கையில் அகப்பட்ட காயையோ சருகையோ தின்று பரமாத்மாவோடு ஐக்கியப்படுவது ஒன்றையே நாடி நிற்பது இந்த உலகத்தில் பிறந்தவர் அடையக்கூடிய மகா அரிதான சித்தி என்றும், அதுவே கைவல்ய நிலைமை என்றும், ஜனங்கள் சொல்லிக்கொள்ளுகிறார்கள். அது எல்லோராலும் சாதிக்கக் கூடியதல்ல என்றும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இப்போது உங்களோடு பேசிப் பழகியதில், நம் தேசத்தார் இங்கிலீஷ் பாஷையைப் படித்து, அந்தத் தேசத்து நாகரிகத்தை அறிந்து கொண்டால், அவர்கள் வெகு சுலபத்தில் மேற்படி கைவல்ய நிலைமையை அடைந்து இந்த உலகப்பற்றைத் துறந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நம் தேசத்துத் துறவிகள் பூலோகத்தின் பற்றையே ஒழித்துப் பரமபதம் ஒன்றையே நாடிச் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பரமபதத்தை நாம் பார்க்க முடிகிறதில்லை. பார்த்தவர் திரும்பி வந்து அது எப்படி இருக்கிறதென்று சொன்னதும் இல்லை. இப்போது நம்முடைய வெள்ளைக் காரருடைய சீமை இருக்கிறதல்லவா. அதுதான் நாம் கண் முன் காணக்கூடிய பரமபதமாக இருக்கிறது என்பதைப்பற்றி யாரும் ஆக்ஷேபனை சொல்ல முடியாது. இங்கிலீஷ் படிக்கிறவர்கள் எல்லோரும் ஒருவித துறவிகள். அவர்கள் தம்முடைய இந்தியா தேசத்தையும், இந்திய மனிதருடைய பற்றையும், இந்தியாவில் உள்ள வஸ்துக்களின் பற்றையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு துறந்து, வெள்ளைக்காரரின் பரமபதத்தில் உள்ள தெய்வங்களின் பாத தூளியாக இருக்கும் பாக்கியம் கிடைத்தாலும் போதும் என்று தபசு பண்ணுகிறார்கள். அவ்விடத்தில் இருந்து வரும் சாமான்கள் எல்லாம் தெய்வப் பிரசாதத்துக்கு சமதையாக இருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம். இந்த வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலிய உபயோகமற்ற அற்ப சாமான்கள் எல்லாம் நம்முடைய நாட்டில் தான் விளைகின்றன. இவைகளை உபயோகித்தால் தேக ஆரோக்கியம், சுறுசுறுப்பு, முகக்களை முதலிய குணங்கள் ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்து, இவைகளை உபயோகித்து வந்திருக்கிறார்கள். இவைகள் வெள்ளைக்காரரின் சீமைகளில் உற்பத்தியாகிறதில்லை. உற்பத்தியானால் இவற்றின் குணம் அவர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்கும். அவர்களும் இவைகளை நாம் உபயோக்கிப்பது போலப் பயன்படுத்துவார்களே என்னவோ. ஆனால் அவர்களுடைய ஊரில் ஒரு புட்டி ரூ 20, 25 விலையுள்ள அற்புத சக்தி வாய்ந்த பலவகைப்பட்ட பிராந்திகளும், ஒயின்களும் உற்பத்தி ஆகின்றன. ஐயாயிரம் பதினாயிரம் விலையுள்ள மோட்டார் வண்டிகளும், ஐம்பதினாயிரம் லட்சம் விலையுள்ள ஆகாய விமானங்களும் தயாராகின்றன. அவைகளை எல்லாம் வெள்ளைக்காரர்கள் ஏராளமாக உபயோகப்படுத்துகிறார்கள். நாம் எப்போதும் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்கள். “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்ற கொள்கைப்படி நாம் நம்முடைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வருமானமோ சொற்பத்திலும் சொற்பமானது. வெள்ளைக் காரர்களோ “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற கொள்கைப் படி இந்த உலகம் முழுமையும் கைப்பற்றி சகலமான தேசத்திலும் உள்ள பொருட்களையும் திரட்டிக் கொண்டு போய்த் தம்முடைய பட்டணத்தைக் குபேர பட்டணத்துக்குச் சமதையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நகைகளை அணிவதில்லை; ஜரிகை ஆடைகள், நம்முடைய ஆடைகளைப் போன்ற பட்டாடைகள் முதலியவற்றை உபயோகிப்பதில்லை. அவர்களுடைய வீட்டில் இருக்கும் சாமான்களோ, பீங்கான் சாமான்கள், கண்ணாடி சாமான்கள், மரச் சாமான்கள் முதலியவை; அவர்கள் ஒவ்வொருவரும் லட்சம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். கல்யாணம் முதலிய சடங்குகளில் எல்லாம் அவர்களுக்கு அதிகச் செலவு கிடையாது. நம்மைப் போல இப்படிப்பட்ட அநாவசியச் செலவுகளையும் அவர்கள் செய்கிறதில்லை. ஆனால் அவர்கள் பதினாயிரம் இருபதினாயிரம் போட்டு மோட்டார் வண்டி வாங்குவார்கள். மாதம் ஆயிரக் கணக்கில் செலவு செய்து அற்புதமான சக்தி வாய்ந்த ஒயின் தினுசுகளைக் குடிப்பார்கள். அதன் பிறகும் மிச்சப்படும் பணத்தை சூதாடித் தோற்பார்கள். அவர்கள் உலகத்தை எல்லாம் கட்டியாளுவதால், அடிக்கடி பிற தேசங்களோடு யுத்தங்கள் விளைந்து விடும். அப்போது வெடிகுண்டுகள், நீர் முழுகிக் கப்பல்கள், ஆகாய விமானங்கள் முதலிய யுத்த தளவாடங்களைச் சேகரிக்க, இமாலய பர்வதத்தின் உயரம் குவிக்கப்பட்ட பொன் செலவு செய்வார்கள். தெய்வ லோகத்தில் சங்கநிதி பதுமநிதி என்ற நாணயங்கள் செலாவணியில் இருப்பது போல வெள்ளைக்காரர் தேசத்தில் தங்கப்பாளங்களும், வைரக் கட்டிகளும் நாணயமாக உபயோகிக்கப்பட்டால் அன்றி, அவர்களுடைய தேவைகளைத் தீர்ப்பது சாத்தியம் இல்லாத காரியமாக இருக்கிறது. ஆகையால் வெள்ளைக்காரர் வெற்றிலை பாக்கு மஞ்சள் பனரீஸ் ரவிக்கைத் துண்டு முதலியவற்றை உடயோகிக்கவில்லை என்பதில் இருந்தே நிரம்பவும் சிக்கனமாக நடக்கிறார்கள் என்றாவது, அவர்கள் சகலமான விஷயங்களிலும் மேதாவிகள் என்றாவது நாம் நினைத்துவிட முடியாது. அவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்ற நியதியும் இல்லை. நம்முடைய தேசத்தில் இயற்கையிலேயே உண்டாவதும், நம்முடைய தேக ஆரோக்கியத்துக்கு உகந்ததும், முற்றிலும் சாத்விகமாக இருப்பதும், அற்ப விலை உள்ளவைகளுமான பொருள்களை நாம் உபயோகிக்கிறோம். நாம் காலணா விலை உள்ள இயற்கைப் பொருளான சீயக்காயை உபயோகிக்கிறோம். அவர்கள் நாலனா விலையுள்ள செயற்கைப் பொருளான சோப்பை உபயோகிக்கிறார்கள். நாம் ஒரு தம்பிடி விலையுள்ள இயற்கைப் பொருளான மஞ்சளை முகத்திற்குப் பூசிக் குளிக்கிறோம். அவர்கள் ஒரு ரூபாய் விலையுள்ள ரோஸ் பவுடரை முகத்திற்குப் பூசிக் கொள்ளுகிறார்கள். நாம் ஒரு காசு விலையுள்ள இயற்கைப் பொருளான தாம்பூலத்தை உபயோகப்படுத்தி ஜீரண சக்தியையும் உடம்பின் சுறுசுறுப்பையும் முகக்களையையும் உண்டாக்கிக் கொள்ளுகிறோம். அவர்கள் நூற்றுக் கணக்கில் விலை உள்ள செயற்கைப் பொருள்களான ஒயின்களையும் சாராயங்களையும் உபயோகித்து முகக்களை, ஜீரணசக்தி, சுறுசுறுப்பு முதலியவைகளை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். நம்முடைய ஸ்திரீகள் 25 ரூபாய் விலையுள்ள இரண்டு புடவைகளையும், 5 ரூபாய் விலை உள்ள நான்கு ரவிக்கைகளையும் வைத்துக் கொண்டு ஒரு வருஷகாலத்தைக் கடத்தி விடுவார்கள். அது வெள்ளைக்கார ஸ்திரீகளுடைய ஒருகால் பூட்சின் விலைக்குக் காணாது. அவர்கள் ஒருமணி நேரத்துக்கு ஒருவித சில்க் ஆடை அணிவார்கள். அவர்கள் மணிக்கட்டில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் விலையை, நம்மவர்களுடைய எல்லா நகைகளின் விலையையும் சேர்ந்து எட்டாது. இப்படி இருக்க, நம்மவர்கள் அநாவசியமாக நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதும், வெள்ளைக்காரர் செலவுகளைக் குறைக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல. ஆனால் நீங்கள் சம்பந்தப்பட்ட வரையில் இந்த வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலியவற்றின் செலவுகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இவைகளுக்குப் பதிலாக வெள்ளைக்காரர்கள் உபயோகிக்கும் சாமான்களை எல்லாம் நீங்கள் உபயோகப்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் இரண்டு நாகரிகத்திலும் ஒட்டாமல் நடுமத்தியமாக இருப்பது நிரம்பவும் மெச்சத் தகுந்ததே. இதைப்பற்றி கந்தசாமி கேள்விப்பட்டால் நிரம்பவும் சந்தோஷம் அடைவான். ஏனென்றால் உங்களால் அவனுக்கு வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலிய செலவுகள் எல்லாம் மிச்சப்படும். பட்டுப் புடவை ரவிக்கைகள் முதலிய அபாரச் செலவுகள் எல்லாம் இல்லாமல் போகும். நல்ல வேளையாக நான் உங்களை இன்று பார்க்க வந்தேன். இங்கே வந்ததில், சில சங்கதிகளை நான் தெரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மன்னார்குடியில் இருந்து இன்று தான் எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. வருகிற வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தன்று கந்தசாமி வீட்டார் ஏராளமான வரிசைகளைக் கொண்டுவர உத்தேசித்திருப்பதாக எனக்குச் சங்கதி எட்டி இருக்கிறது. முழுதும் தங்க ஜரிகையும் நற்பவழங்களும் நல்முத்துக்களும் வைத்திழைத்த புடவை, ரவிக்கை, வெற்றிலை இருநூறு கவுளி, பாக்கு 2 மூட்டை, ரஸ்தாளி வாழைப்பழம் ஒருவண்டி, மஞ்சள் ஒரு மூட்டை, குங்குமம் ஒரு மூட்டை முதலிய சாமான்களை எல்லாம் அவர்கள் வரிசையாக வழங்க உத்தேசித்திருக்கிறார்களாம். அவைகள் எல்லாம் உங்களுக்கு உபயோகப்படப் போகிறதில்லை என்று நாங்கள் உடனே எழுதி விடுகிறோம். நிச்சயதார்த்தத்துக்கும், கலியாணத்துக்கும், புடவைக்குப் பதிலாக இரண்டு பீஸ் மஸ்லின் துணி மாத்திரம் வாங்கி வந்தால் அதுவே போதுமானது என்று எழுதித் தெரிவித்து விடுகிறேன். அது தங்களுக்குச் சம்மதந்தானே? நாம் இப்போது இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபம் செய்வதில் எனக்கு இன்னொரு சந்தேகமும் உதிக்கிறது. நம்முடைய தேச வழக்கப்படி கலியாணம் என்றால், அன்றைய தினம் புரோகிதர் வந்து ஹோமம் முதலியவை நடத்தித் திருமாங்கலிய தாரணம் செய்விக்கிறது வழக்கம். அந்த வழக்கம் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நாமும் கோவிலில் போய் மோதிரம் மாற்றிக்கொண்டு வருவதுதான் நல்லதாகத் தோன்று கிறது. அந்த விஷயத்திலும் உங்களுடைய அபிப்பிராயத்தை இப்போதே வெளியிட்டு விடுங்கள்” என்றாள்.

அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் குத்தலானவை என்பதை மனோன்மணியம்மாள் எளிதில் உணர்ந்தாள் ஆனாலும், கொடி முல்லையம்மாள் வேடிக்கைப் போலப் பேசினாள் ஆதலால், மனோன்மணி அதிக கோபமாவது ஆத்திரமாவது கொள்ளாமல் சாதாரணமாகவே பேசத் தொடங்கி, “வெள்ளைக்காரருடைய துஷ்டச் செய்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். அவைகளை எல்லாம் நாம் ஏன் கவனிக்க வேண்டும்? அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மாத்திரம் கிரகித்துக் கொண்டு அவ்வளவோடு நின்று விடுவோமே. என் சுயேச்சைப்படி காரியம் நடப்பதாய் இருந்தால், நான் கோவிலில் போய் மோதிரம் மாற்றிக் கொள்வதே போதும் என்று சொல்லி விடுவேன். என் தகப்பனார் ஒருவர் இருக்கிறார். இன்னம் பிள்ளை வீட்டார் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அதற்கு இணங்கமாட்டார்கள். எத்தனையோ யுகம்யுகமாக நம்முடைய மனிதர்களின் இரத்தத்தில் ஊறி இருக்கும் இந்தப் பழைய பழக்க வழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் நம்மில் படித்தவரையும் விட்டு எளிதில் போகிறதில்லை அல்லவா? அதற்கு நாம் கொஞ்சம் இடங்கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனாலேதான் நம்முடைய முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. என்ன செய்கிறது” என்றாள்.

அதற்குள் கொடி முல்லையம்மாளின் வேலைக்காரி சென்று மனோன்மணியம்மாளின் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு வந்தாள் ஆகையால், அந்த வேலைக்காரி ரவிக்கைத் துண்டுகள் முதலியவை இருந்த தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் சென்றாள். வந்திருப்பவர்களை மரியாதையாக உபசரித்து வைத்திருக்கும்படி பட்டாபிராம பிள்ளை டெலிபோன் மூலமாகச் சொல்லியது நினைவிற்கு வந்தது. ஆகையால், மனோன்மணியம்மாள் கொடி முல்லையம்மாளை நோக்கி, “அம்மா இப்போது பலகாரம் முதலியவை சாப்பிடும் நேரமாகிறதே. உங்களுக்கெல்லாம் ஏதாவது சிற்றுண்டிகள் தருவிக்கட்டுமா?” என்றாள்.

அந்த வார்த்தையைக் கேட்டுக் கொடி முல்லையம்மாள் நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவள் போலத் தனது முகத்தை இனிமையாகவும் மலர்ச்சியாகவும் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கி, “நீங்கள் சொல்வதைக் கேட்டு சந்தோஷமடைந்தேன். நாங்கள் பழம் பாக்கு வெற்றிலையைக் கொண்டு வந்ததைக் கண்டு, நீங்கள் எங்களுக்குப் புத்தி கற்பித்தீர்களே, அப்போது என் மனசில் ஒரு சந்தேகம் உதித்தது. நீங்கள் ஒருவேளை எங்களுடைய வீட்டுக்கு வந்தால், அப்போது நாங்கள் உங்களுக்கு உபசரித்தால், அதைக்கூடத் தாங்கள் அவமரியாதைப் படுத்துவதாக நினைத்துக் கொள்வீர்களோ என்ற சந்தேகம் உதித்தது. ‘எங்கள் வீட்டில் பகஷணங்கள் இல்லையா? நாங்கள் சாப்பிடாமல் பட்டினியாகவா உங்கள் வீட்டுக்கு வருவோம்? எங்கள் வீட்டில் பகஷனங்கள் இல்லை என்று எண்ணிப் பேசுகிறீர்களா? அல்லது நாங்கள் பகஷனங்கள் சாப்பிடாதவர்கள் என்று நினைத்துப் பேசுகிறீர்களா? இது மரியாதைப்படுத்துகிறதா, அவமரியாதைப்படுத்துகிறதா என்று நீங்கள் ஒருவேளை கேட்பீர்களோ என்று நான் சந்தேகித்தேன். இப்போது நீங்கள் பலகாரம் சாப்பிடும்படி எங்களை உபசரித்ததில் இருந்து, நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்கள் என்பது நிச்சயமாகிறது. வெள்ளைக்காரர் நாகரிகத்தில் இந்த உபசரணைக்கு மாத்திரம் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது போலும்! நல்ல வேளைதான். ஆனால், உங்களுடைய வீட்டுச் செலவு இதனால் அநாவசியமாக அதிகரிக்கிறதே என்ற கவலை தான் எனக்கு உண்டாகிறது. ஆனால் நாங்கள் உங்கள் வீட்டில் பலகாரம் சாப்பிடுவதால், உங்கள் வீட்டுச் செலவு அதிகரிக்கிறதானாலும், இந்த இரண்டாவது வேளைச் சிற்றுண்டிச் செலவு எங்கள் வீட்டில் லாபமாய் போகிறதல்லவா? ஆதாயமும் செலவும் சரியாய்ப் போகும். நாங்கள் கொண்டு வந்த சாமான்களின் விஷயம் அப்படிப்பட்டதல்ல. அது அநாவசியமானது தான். அவைகள் இல்லாமலேயே காரியம் நடந்து போகும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும், நாங்கள் இப்போது தான் ஆகாரம் பார்த்துக் கொண்டு வந்தோம். வயற்றில் கொஞ்சங்கூட இடமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் உபசாரம் செய்ததைக் காண எங்கள் மனம் குளிர்ந்தது. உங்களுக்கு நேரமாகிறது. உங்களுக்கு மாத்திரம் பலகாரங்கள் தருவித்துச் சாப்பிடுங்கள். நாங்கள் இருப்பதைக் கருதி நீங்கள் அந்த வேலையை நிறுத்த வேண்டாம்” என்றான்.

அந்தச் சமயத்தில் மனோன்மணியம்மாளின் வேலைக்காரி தாம்பாளத்தில் இருந்த சாமான்களை எல்லாம் பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் வைத்துவிட்டுத் திரும்பிவந்தாள் ஆதலால், அவளைக் கண்ட மனோன்மணியம்மாள், “அடி அமிர்தம்! நீ போய் எனக்குக் கொஞ்சம் காப்பியும் பிஸ்கோத்தும் கொண்டு வா” என்றாள். அமிர்தம் என்றும் பெயருடைய அந்த வேலைக்காரி உடனே அவ்விடத்தை விட்டு வெளியில் போய் மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி சமையலறைக்குப் போய் ஒரு சிறிய கூஜாவில் காப்பியும், ஒரு தட்டில் ஏழெட்டு பிஸ்கோத்துகளையும் எடுத்துக் கொண்டு மேலே வந்து சேர்ந்தாள். அது வரையில் நிரம்பவும் பொறுமையோடு தன்னை அடக்கிக் கொண்டு அவ்விடத்தில் உட்கார்ந்திருந்த கோபாலசாமிக்கு அதற்கு மேல் அவ்விடத்தில் இருக்கை கொள்ளவில்லை. கந்தசாமியும் மனோன்மணியும் ஒருவர்க்கொருவர் மேன்மேலும் குதர்க்கமாக சம்பாஷித்துக் கொண்டு போகும்படி விடுத்தால் அவர்கள் இருவருக்கும் கலியாணம் நடைபெறாமல் போய் விடுவது நிச்சயம் என்ற நினைவு தோன்றியது. ஆகையால், தான் கந்தசாமியை அழைத்துக் கொண்டு போய்விடுவது உசிதமாகத் தோன்றியது. ஆகவே அவன் கந்தசாமியைப் பார்த்து, “என், நாம் வீட்டுக்குப் போகலாமா? மனோன்மணியம்மாள் பரீட்சைக்கு படிக்கிறபடியால், நாம் அநாவசியமாக அதிக நேரம் இங்கே தங்கி அவர்களுக்கு இடைஞ்சல் செய்வது சரியல்ல. அதனால் நமக்கு யாதொரு அனுகூலமும் இல்லை. ஆனாலும், இவர்களுக்குத் தொந்தரவாக முடியும். இவர்கள் பலகாரம் சாப்பிட்டுவிட்டு வாசிக்கட்டும். முக்கியமாக நாம் கோரிவந்த காரியம் ஆகிவிட்டது. நாம் இதே ஊரில் பார்க்காமல் இருப்பது மரியாதைக் குறைவு என்ற எண்ணத்தினால் நாம் வந்தோம். வந்து பார்த்து சந்தோஷம் அடைந்தோம். இனி கலியாணம் ஆகிவிடுமானால், அதன் பிறகு அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவோம். அதற்குள் இவர்களுக்குப் பரீட்சையும் தீர்ந்து போயிருக்கும். அதன் பிறகு இருதிறத்தாரும் சாவகாசமாக இருந்து பேசி சந்தோஷம் அடையலாம், மனோன்மணியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்படு. போகலாம்” என்றான்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், “என் தகப்பனார் அவருடைய கச்சேரியில் இருக்கிறார். இன்றைய தினம் அவருடைய கச்சேரி 4-மணிக்கு மூடப்படுமாம். உடனே புறப்பட்டு 4½ மணிக்குள் அவர் இங்கே வந்து விடுவார்; தாம் வருகிற வரையில் இங்கேயே இருக்கும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னார். ஆகையால் நீங்கள் தயைசெய்து இன்னம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போக வேண்டும். இப்போது மணி மூன்றுக்கு மேல் ஆகிறது. இன்னம் ஒருமணி நேரத்தில் அவர் வந்துவிடுவார் “ என்றாள்.

அதைக் கேட்ட கோபாலசாமியும் கொடி முல்லையம்மாளும் திடுக்கிட்டு திகில் அடைந்தனர். தாம் வந்திருப்பதாய் டலாயத்தின் மூலமாகக் கேள்வியுற்றவுடன் மனோன்மணியம்மாள் டெலி போன் மூலமாய்த் தனது தகப்பனாரோடு பேசி இருக்கிறாள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. அவருடைய கண்ணில் படாமல் தாங்கள் அவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டு வந்தவர்கள் ஆதலால், அது அவர்களால் எதிர்பார்க்கப்படாத சம்பவமாக இருந்தது. அவளது தந்தை வந்து தங்களோடு பேசினால், அவர் ஒருகால் உண்மையைக் கண்டு கொள்வாரோ என்ற அச்சமும் கவலையும் தோன்றி அவர்களது மனதைக் கலக்கத் தொடங்கின. ஆனால் கொடி முல்லையம்மாள் அன்னிய புருஷருக்கு எதிரில் வராமல் நாணிக் கோணி மறைவாக இருக்கும் கர்னாடக ஸ்திரீ ஆதலால், பட்டாபிராம பிள்ளை கொடி முல்லையம்மாள் தனக்குள் ஒர் பிள்ளையை ஒளிய வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொள்ள இயலாது என்ற எண்ணம் அவர்களது மனதில் தோன்றியது. பெண்ணைப் பார்க்க வந்த தாம், வீட்டின் தலைவர் வருவதற்குள் அவசரப்பட்டுக் கொண்டு போவது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கும் என்ற எண்ணமும் அவர்களது மனதில் தோன்றியது. ஆகவே, தாம் பட்டாபிராம் பிள்ளை வரும் வரையில் இருந்து அவர் சந்தேகப்படாதபடி சொற்ப நேரம் பேசிச் செலவு பெற்றுக் கொண்டு போய்விடுவதே உசிதமானதென்று அவர்கள் இருவரும் நினைத்தனர்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரி காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து மனோன்மணி அம்மாளுக்கருகில் போடப்பட்டிருந்த ஒரு மேஜையின் மீது வைத்தாள். ஆதலால், அவளது கவனமும் பார்வையும் அவ்விடத்தில் சென்றன. அதுவே சமயம் என்று நினைத்த கொடி முல்லையம்மாள் தான் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுச் சிறிது அப்பால் நகர்ந்து கோபாலசாமியைப் பார்த்துத் தனது கையாலும் கண்களாலும் ஜாடை காட்டி, அவன் உடனே அவ்விடத்தை விட்டுக் கீழே போய் இருக்கவும், பட்டாபிராம பிள்ளை வந்தால், அவரை மேலே அனுப்பாமல், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் வேலைக்காரியைத் தன்னிடம் அனுப்பவும், தான் கீழே வருவதாகவும், உடனே புறப்பட்டுப் போகலாம் என்றும் அவனிடம் தெரிவித்தாள். கோபாலசாமி உடனே அதை உணர்ந்து கொண்டவனாய், உரத்த குரலில் மனோன்மணிக்குக் கேட்கும்படி பேசத் தொடங்கி, “சரி; மனோன்மணியம்மாளுடைய தகப்பனாரைப் பார்க்கக் கிடைக்க வில்லையே என்று நான் நினைத்தேன். நல்ல வேளையாக அவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் வரப்போகிறார்கள். நாம் அதுவரையில் இருந்து அவர்களையும் பார்த்துக் கொண்டு போகலாம். நாம் உடனே திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் குதிரையை வண்டியில் கட்டியபடி நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் நான் கீழே போய்க் குதிரையை அவிழ்த்துவிடச் செய்துவிட்டு நான் கீழேயே இருக்கிறேன். மனோன்மணியம்மாள் பலகாரம் சாப்பிடட்டும். நீ அவர்களோடு பேசிக் கொண்டிரு. நான் இருந்தால், மனோன்மணியம்மாளுக்குக் கூச்சமாக இருக்கும்” என்று கூறினான்.

கொடி முல்லையம்மாள், “சரி; அப்படியே செய்யுங்கள்” என்றாள்.

உடனே கோபாலசாமி எழுந்து வேலைக்காரப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு கீழே போய்விட்டான். காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து வைத்த மனோன்மணி அம்மாளுடைய வேலைக்காரியும் அவ்விடத்தை விட்டு அந்த விடுதியின் வாசலுக்குப் போய்விட்டாள். அவ்வாறு கொடிமுல்லை அம்மாளோடு தனியாக விடப்பட்ட மனோன்மணியம்மாள் தனக்கருகில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கோத்தில் ஒன்றைத் தனது இடது கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். அவளுக்கு அதிக பசி உண்டாகி இருந்ததாகவாவது அல்லது அந்தப் பொருட்களை உண்ண அவள் நிரம்பவும் ஆவல் கொண்டதாகவாவது தோன்றவில்லை. அவள் பகற் போஜனம் உண்ட பிறகு நெடு நேரம் கழிந்து விட்டது. ஆகையாலும், அவள் ஓயாமல் படித்தும் உறங்கியும் இருந்தாள் ஆகையாலும், அவளது உடம்பில் ஒருவிதத் தளர்வும் சோம்பலும் மேலிட்டிருந்ததாகத் தென்பட்டதே அன்றி, கூர்மையான பசி இல்லாமல் இருந்தது. ஆகையால், அவள் வேண்டா வெறுப்பாய் அந்த வேலையைச் செய்ய எத்தனித்து, ஒரு பிஸ்கோத்தை மேற்சொன்னபடி எடுத்த வண்ணம் புன்னகை செய்த முகத்தினளாய்க் கொடி முல்லை யம்மாளை நோக்கி, “ஏனம்மா பிஸ்கோத் சாப்பிடுகிறீர்களா? இது நல்ல முதல்தரமானது. சீமையில் இருந்து பிரத்தியேகமாய்த் தருவிக்கப்பட்டது. அதிகமாய்ச் சாப்பிட வேண்டாம். ஒன்றே ஒன்று மாதிரி பாருங்களேன்” என்று அன்பாகக் கூறினாள். அவள் அந்தரங்க விசுவாசத்தோடு கூறிய மாதிரி கொடிமுல்லையம்மாளின் மனதில் ஒருவித இளக்கத்தை உண்டாக்கியது. மனோன்மணியம்மாள் இங்கிலீஷ் படிப்பினாலும் புதிய நாகரிகப் பற்றினாலும் எவ்வளவுதான் மாறுபட்டுப் போயிருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவுதான் குதர்க்கமாகப் பேசினாலும், அவளிடம் உள்ளும் புறமும் ஒத்த உறுதியான நடத்தையும், நிரம்பவும் லலிதமான குணமும் இருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆகவே கொடிமுல்லை அம்மாள் அவளது விஷயத்தில் ஒருவித அனுதாபம் அடைந்தாள். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்து, “அம்மா! எனக்கு வேண்டாம். உங்கள் காரியம் ஆகட்டும். நாங்கள் மத்தியான வேளைகளில் காப்பி பலகாரம் முதலிய வஸ்துக்கள் எதையும் சாப்பிடுகிற வழக்கமே இல்லை. தண்ணிர் விட்டு வைத்திருக்கும் பழைய சாதம் கொஞ்சம் சாப்பிடுகிறதே வழக்கம். அது தான் உடம்புக்கு ஒத்தாற் போல ஆரோக்கியமாக இருக்கிறது. மற்ற பதார்த்தங்கள் எல்லாம் வாய்க்கு ருசியாக இருந்தாலும் உடம்பை வெகு சீக்கிரத்தில் கெடுத்துவிடும். நான் மாத்திரம் அல்ல. எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் அப்படியே தான் சாப்பிடுவார்கள். மன்னார்குடியில் உள்ள என் தமக்கை வீட்டில் உள்ள எல்லோரும் அதையேதான் சாப்பிடுவது வழக்கம். உங்களுக்குப் புருஷராக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கந்தசாமிக்குப் பழைய சாதத்தில் நிரம்பவும் பிரியம். ஒரு நாளைக்கு அது சரியான பக்குவப்படி இல்லாமல் போய்விட்டால், அவன் அன்று பட்டினிதான் கிடப்பான். காப்பி என்ற பேச்சே எங்களுடைய வீட்டில் கிடையாது. ஏதாவது விசேஷ தினங்கள் வருமானால், அன்றுதான் பகூடிணங்கள் செய்வார்கள். பகூடிணங்களை நாம் தினம் தினம் செய்தால் அதன் ருசியும் நாக்குக்கு உறைக்கிறதில்லை. உடம்பும் கெட்டுப் போகும். அதற்காகத்தான், அவைகளை விசேஷ தினங்களில் மாத்திரம் செய்வதென்று முன்னோர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் நமக்கு அதிகச் செலவு ஏற்படுகிறதென்ற எண்ணத்தினால் அப்படிச் செய்கிறதில்லை. முக்கியமாய் உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் கருத்து. என் தமக்கையின் வீட்டில் ஏராளமான செல்வமும், சகலமான சாமான்களும் கணக்கில்லாமல் கிடந்து இறைப்படுகின்றன. ஆனாலும், பெருந்தீனி பெரும் ரோகம் என்பது கைகண்ட விஷயம். ஆகையால், ஆகார விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் என்பது நம்முடைய பெரியோரின் கொள்கை. இந்தக் காப்பி பலகாரங்கள் எல்லாம் உண்டான பிறகு மனிதருக்கு வியாதிகள் அதிகரித்து விட்டன. முக்கியமாய் அஜீரணம், வயிற்றுவலி, நீர்ரோகம் முதலிய வியாதிகள் பெருகி விட்டன. மனிதர் ஐம்பது அறுபது வயசுக்கு அதிகம் இருப்பதில்லை. நம்முடைய முன்னோர் இரண்டே வேளை திருப்தியாகப் போஜனம் செய்து வந்தார்கள். அடிக்கடி கண்ட வஸ்துக்களைத் தின்பதற்கு அவர்கள் நச்சுத்தீனி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். நச்சு என்றால் நஞ்சு அல்லது விஷம் என்று பொருள் அல்லவா. அது விஷமாக முடியும் என்பது நம் முன்னோருடைய கொள்கை. குழந்தைகள் இடைவேளைகளில் பழைய அமுது உண்பார்கள். எல்லோரும் நன்றாக உழைத்து வேலை செய்வார்கள். நல்ல பசியும் உண்டாகும். உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வொருவரும் தொண்ணுறு வயசு, நூறு வயசு இருந்து எள் பேரன் கொள் பேரன்களைக் கண்டு இறந்து போயிருக்கிறார்கள். இந்தக் காலத்து மனிதர் தங்களுடைய சொந்தப் பிள்ளைகள் தலையெடுப்பதற்குள் இறந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்ட மாறுதல் இப்போதைக்கு சுமார் இருபது வருஷகாலமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. காப்பி முதலிய உணவுகள் பரவியும் அவ்வளவு காலந்தான் ஆகிறது. இதோ உங்களுடைய உதாரணத்தையே பாருங்கள். உங்களுக்கு இப்போது பதினாறு அல்லது பதினேழு வயசிருக்கலாம். நீங்கள் தேகத்துக்கு உழைப்பே கொடுக்காமல் மூளைக்கு மாத்திரம் உழைப்பைக் கொடுப்பதோடு, நம்முடைய பூர்வீகர்கள் உண்டு வந்த உணவுகளை எல்லாம் விட்டு, அன்னிய வஸ்துக்களை உண்பதால், உங்கள் உடம்பு எப்படி இருக்கிறதென்று பாருங்கள். ஆகாரத்தைக் காணும்போதே உங்களுடைய முகம் ஒருவித அருவருப்பைக் காட்டுகிறது. உடம்பில் சதைப்பிடிப்பு என்பதே காணப்படவில்லை. இதற்கு முன் இருந்த நம்முடைய நாட்டு ஸ்திரீகள் நிரம்பவும் திடசாலிகளான குழந்தைகளாய் சுமார் பத்துக்குக் குறையாமல் பெற்று வெகு காலம் வரையில் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு குழந்தை பெறுவதற்குள் குடுகுடு கிழவியாய் விடுவீர்கள் என்பது நிச்சயம். ஆனால் அதை எல்லாம் நான் சொன்னால், நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். இன்னொரு விதமாக வாதிக்கவும் ஆரம்பிப்பீர்கள். ஒவ்வொருவரும் மிதம் இல்லாமல் பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்று விட்டதால்தான் நம்முடைய தேசத்தின் ஜனத்தொகை அபாரமாகப் பெருகி விட்டது என்றும், நம்முடைய நாட்டு சாமான்களின் விலை வாசிகள் எல்லாம் அதிகரித்து விட்டன என்றும் ஒருவேளை சொன்னாலும் சொல்வீர்கள் ஆகையால், அதைப் பற்றி நாம் வீண் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல. முக்கியமாக இந்த பிஸ்கோத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது சீமையில் இருந்து வந்திருக்கிறது என்பது ஒன்றே நமக்குத் தெரிகிறது. ஆனால் அவ்விடத்தில் இதை எவன் செய்தான் என்பதும், இதில் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்திருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியாது. இந்த பிஸ்கோத்தில் கோழி முட்டை முதலிய மாம்ச வஸ்துக்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்று இருக்கிறேன். சுத்த சைவர்களாகிய நாம் இதை எல்லாம் சாப்பிட்டால், இதற்குள் சம்பந்தப்பட்டிருக்கும் அசுசியான வஸ்துக்கள் எல்லாம் நம்முடைய தேகத்தில் சேரும் அல்லவா? அதை நாம் யோசிக்க வேண்டாமா? நம்முடைய ஊரில் பிராம்மணர்கள் சுத்தமான மரக்கறி பதார்த்தங்களைக் கொண்டு செய்துள்ள பலகாரங்களை வாங்குவதற்குக்கூட நாம் யோசிக்கிறோம். மற்ற ஜாதியார் செய்து விற்கும் பதார்த்தங்களை நாம் கண்ணாலும் பார்ப்பதில்லை. அப்படி இருக்க, இன்னவனால் இன்னின்ன பதார்த்தங்களைக் கொண்டு செய்யப் பட்டது என்ற விவரத்தையே தெரிந்து கொள்ளாமல் வெளி தேசத்தில் இருந்து வரும் கண்ட பதார்த்தங்களை எல்லாம் நாம் வாங்கித் தின்பது உசிதமல்ல என்பது என்னுடைய அபிப்பிராயம். இதைத் தின்னும் நாம் ஏன் ஒரு வெள்ளைக்காரனுடைய வீட்டில் சாப்பிட மறுக்கிறோம்? இந்த வஸ்துக்களை வைத்துக் கொண்டு தானே அவன் போஜனம் செய்கிறான். அவனால் தயாரிக்கப்பட்ட வஸ்துவை அவனோடுகூட உட்கார்ந்து உண்பது மாத்திரம் தவறு போலிருக்கிறது. நான் பிஸ்கோத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிறேனே என்று நினைத்து நீங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். நான் அதைச் சாப்பிடாததற்குக் காரணம் இன்னதென்றுதான் சொல்லுகிறேனே அன்றி வேறல்ல. உங்களுடைய அபிப்பிராயம் வேறு விதமாக இருக்கலாம். அதுவுமன்றி, நீங்கள் நெடுங்காலமாக அதைச் சாப்பிட்டுப் பழகியவர்கள் போல் இருக்கிறது. ஆகையால், உங்கள் காரியம் நடக்கட்டும்” என்றாள்.

அதைக்கேட்ட மனோன்மணியம்மாள், “நீங்கள் இங்கிலிஷ் பாஷையே தெரியாதென்று சொல்லுகிறீர்கள். இங்கிலீஷ் காரருடைய விஷயங்களை எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அதுவுமன்றி, இங்கிலிஷ்காரருடைய சம்பந்தமே கொஞ்சங்கூட நமக்கு உதவாதென்ற அபிப்பிராயமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்! இங்கிலீஷ்காரருடைய பெருமை, நாணயம், திறமை முதலியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளாததே இதற்கெல்லாம் காரணமன்றி வேறல்ல. அவர்களுடைய புஸ்தகங்களை நீங்கள் படித்து அவர்களுடைய அரிய செய்கைகளை உணர்ந்திருந்தால், அதன்பிறகு உங்களுக்கு அவர்களிடத்தில் சரியான மதிப்பும் மரியாதையும் ஏற்படும். ஒருவரை ஒருவர் சரியானபடி அறிந்து கொள்ளாமல், காரணம் இல்லாமல், அன்னிய நாட்டார் என்கிற ஒரு முகாந்திரத்தை வைத்துக் கொண்டே அவர்கள் விஷயத்தில் அருவருப்புக் கொள்வது அறிவாளிகளுக்கு அழகல்ல. அன்னிய நாட்டு வஸ்துக்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், விட்டுவிடுங்கள்; அதைப்பற்றி நான் உங்களை வற்புறுத்துவது சரியல்ல என்பது எனக்குத் தெரியாததல்ல. வெள்ளைக்காரர் எல்லா விஷயத்திலும் நிரம்பவும் சுத்தமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கக் கூடியவர்கள். முக்கியமாய் ஆகார விஷயத்தில் அவர்கள் மகா கண்டிப்பாய் இருப்பவர்கள். சீமையில் ரொட்டிக் கடைகள் முதலியவைகளைத் தணிக்கை செய்வதற்கு எத்தனையோ சர்க்கார் சிப்பந்திகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தேக ஆரோக்கியத்தை பாதிக்கத்தக்க வஸ்து ஏதாகிலும் இருந்தால், கடைக்காரர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள். இந்த பிஸ்கோத்துகள் இந்த உலகம் முழுதும் பரவி விற்கப்படுவதால், இவைகளைச் செய்து இதனால் அபாரமான லாபத்தைச் சம்பாதிப்பவர்கள் தங்களுடைய பிழைப்பு அழிந்து போகக்கூடிய காரியத்தை ஒரு நாளும் செய்ய மாட்டார்கள். இதில் ஆட்சேபகரமான வஸ்துக்கள் சேர்ந்திருக்கும் என்று நினைப்பது மனப்பிரமையே அன்றி வேறல்ல. நீங்கள் நம்முடைய தேசத்து நாகரிகத்தைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்து கொள்கிறீர்களே. இந்த பிஸ்கோத்து, பெப்பர்மெட் முதலிய தின்பண்டங்களைப் போல நீடித்த காலம் கெடாமல் இருக்கத் தக்கபடி செய்ய நம்மவருக்கு வழி தெரியுமா? நம்மவர்கள் செய்யும் பலகாரம் மறுநாளே ஊசிப்போகிறது; மூன்றாம் நாள் நூல் நூற்றுக் கொள்வதோடு காளான் நிறைந்து போகிறது. இப்படி உலகத்தில் உள்ள நாடு முழுதும் பரவி நெடுங்காலம் ருசி மணம் முதலியவை கெடாமல் எல்லோராலும் ஆசையாய் விரும்பப்படும் வஸ்து எதையாவது நம்மவர்கள் செய்கிறார்களா? அதையாவது நீங்கள் யோசிக்க வேண்டாமா?” என்று கூறிய வண்ணம் தனது இடது கையில் இருந்த பிஸ்கோத்தை வாயில் வைத்து இரண்டு மூன்று தரம் கடித்து மிகுதியை தட்டில் வைத்துவிட்டு, காப்பி இருந்த பாத்திரத்தை எடுத்து வாயில் வைத்து சப்பி ஒர் இழுப்பு இழுத்துவிட்டு மறுபடி வேறொரு பிஸ்கோத்தை எடுத்து முன்போல அதில் ஒரு பாகத்தைக் கடிக்கத் தொடங்கினாள்.

அவள் போஜனம் செய்த மாதிரி கொடி முல்லையம்மாளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. மனோன்மணி அம்மாளின் தகப்பனார் நல்ல மேலான ஜாதியில் பிறந்த தக்க பெரிய மனிதராக இருந்தும், தமது புதல்வி அப்படிப்பட்ட மிலேச்ச செய்கைகள் செய்ய இடங்கொடுத்து வந்திருக்கிறாரே என்ற நினைவு தோன்றியது. ஆனால், அவள் சாப்பிடும் போது தான் தனது அருவருப்பைக் காட்டுவது அநாகரிகம் என்று நினைத்துத் தனது மன நிலைமையை வெளியில் காட்டாமல் நிச்சலனமான முகத்தோற்றத்தோடு பேசத் தொடங்கி, “இங்கிலீஷ் காரருடைய பெருமை, நாணயம், திறமை முதலியவற்றைப் பற்றி நான் எவ்வித ஆட்சேபனையும் சொல்லவில்லை. ஆனால், உங்களைப் போன்றவர்கள் அவர்களுடைய சங்கதிகளை மாத்திரம் தெரிந்து கொண்டு நம்முடைய நாட்டின் சங்கதிகளைக் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் நம்மவரிடம் பெருமை, நாணயம், திறமை முதலியவை இல்லை என்று மதிப்பதைத் தான் நான் பலமாக ஆட்சேபிக்கிறேன். நம்மிடம் அப்படிப்பட்ட சிறப்புகள் இருந்தால், இரண்டாயிரம் மைல் துரத்துக்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தேசத்தார் இவ்வளவு தூரம் வந்து நம்மை எல்லாம் அடக்கி ஆள எப்படி சாத்தியப்பட்டது என்றும், சொற்ப மனிதரான அவர்களை ஒட்டிவிட நம்மவரால் முடியவில்லையே என்றும் நீங்கள் சொல்லுகிறீர்கள். இதற்கு நான் ஒரே ஒரு சிறிய திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். ஒரு கிராமத்தில் பதினாயிரம் ஜனங்கள் இருக்கிறார்கள். இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிற சமயத்தில் சுமார் பத்து முரடர்கள் திடீரென்று தோன்றி வீட்டிற்குள் புகுந்து ஜனங்களை அடித்து பயமுறுத்தி எல்லாச் சொத்துகளையும் அள்ளிக்கொண்டு போய் விடுகிறார்கள். பதினாயிரம் ஜனங்களும் விழித்துக் கொண்டு அவர்களைத் துரத்தினாலும், திருடர்கள் தப்பி ஓடிப்போகிறார்கள். இதில் இருந்து சொற்பத் தொகையினரான திருடர்கள், பதினாயிரம் ஜனங்களைக் காட்டிலும் திறமைசாலிகள் என்று நாம் மதிக்கலாமா? அப்படித் திருட வருகிறவர்கள் சமயத்தில் வேலிகளைத் தாண்டலாம்; மதிர் சுவர்களைத் தாண்டலாம்; வீட்டிற்குள் இருக்கும் மாடுகளின் கால்களைக் கட்டி கூரையின் மேலேற்றி அலாக்காக வெளியில் கொண்டு வந்துவிடலாம்; ஒரே ஒட்டமாக இருபது முப்பது மைல் தூரம் ஒடலாம்; முள்களின் மேலும், பாம்புகளின் மேலும் அலட்சியமாகக் காலை வைத்துக் கொண்டு போகலாம்; இன்னம் இவைகளைப் போன்ற அநேக காரியங்களைச் செய்யலாம். இவைகளைக் கொண்டே நம்முடைய பதினாயிரம் மனிதரும் திறமையற்றவர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அது போல, சொற்பத் தொகையினரான வெள்ளைக்காரர் அவ்வளவு துரத்தில் இருந்து வந்து நம்மை எல்லாம் அடக்கி ஆளுவதைக் கொண்டு நாம் திறமையற்ற பேடிகள் என்று மதிப்பது சரியல்ல; அதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது; அவர்களுடைய வேதாந்த தத்துவமும் நம்முடைய வேதாந்த தத்துவமும் நேர் விரோதமானது. நாம் கடவுளின் சரியான தன்மையையும், மனிதர்கள் முதலிய சகலமான ஜீவராசிகளின் சிருஷ்டி ரகசியத்தையும், அவைகளுக்குள் இருக்கும் ஜீவாத்மாக்களுக்கும், கடவுளான பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் இன்னது என்பதையும் கரை கண்டிருக்கிறோம். உலக சிருஷ்டியே மாயை என்பதும், ஒரு சிலந்திப்பூச்சி தனது இச்சாமாத்திரத்தில் தனது வாயிலிருந்து நூலை உற்பத்தி செய்து ஒரு கூடிணத்தில் எப்படி ஒரு கூடாரம் கட்டிவிடுகிறதோ, அது போல பரமாத்மாவே, தம

அருள் ஒளியை எங்கும் வியாபிக்கச் செய்து, அது பலவகைப் பட்ட சிருஷ்டிப் பொருள்களாகத் தோன்றும்படி செய்திருக்கிறார் என்பதும் நம்முடைய கொள்கை. இந்த பூலோக சிருஷ்டியும், இவ்விடத்தில் காணப்படும் சிற்றின்ப சுகங்களும் நிலைத்தவை அல்ல என்பதும், இவைகளில் எல்லாம் நாம் நமது புத்தியையும் கவனத்தையும் செலுத்துவது வியர்த்தம் என்பதும், இவைகளின் பற்றைக் கூடியவரையில் குறைத்துக் கொண்டு, இறப்பு பிறப்பாகிய துன்பத்தில் இருந்து விடுபட்டு, பரமாத்மாவோடு ஐக்கியப்பட்டிருப்பதே எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பேரின்பம் என்பதும் நம்முடைய முடிவு. ஆகையாlல் நமமுடைய முன்னோர்களான மகரிஷிகளின் காலத்தில் இருந்து நம்மவர்கள் இதே தத்துவங்களைக் கடைப்பிடித்து அவரவர்களுடைய சக்திக்குத் தகுந்தபடி அவைகளை அனுபவத்திற்குக் கொணர்ந்து இருக்கிறார்கள். அந்த நோக்கத்தோடு நம்மவர் தம்முடைய பஞ்சேந்திரிய பாசங்களைக் குறைத்துக் கொள்ளும் கருத்துடன் சாத்விகமான ஆகாரங்களைப் புசித்து, ஜீவஹிம்சை முதலிய வற்றை நிவர்த்தித்து, பரோபகாரத்தின் பொருட்டே இந்த சரீரம் உண்டாயிருக்கிறது என்ற சுயநலமற்றதான மனப்போக்கைப் பெருக்கி, உலக சிருஷ்டி முழுதும் பரமாத்மாவின் வியாபகம் ஆதலால் அதில் நமக்குப் பகைமையானதும், நம்மிலும் வேறுபட்டதுமான சிருஷ்டியே கிடையாது என்ற உறுதியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாவர் என்றும், ஆதலால் மனிதன் உலகில் உள்ள உன்னத பதவியான அரசபதவியைக் கூட நாடாமல், எல்லாவற்றிற்கும் மேம்பட்டதும், என்றும் நிலைத்ததுமான மோட்ச பதவியையே நாட வேண்டும் என்றும் நம்மவர் முயன்று வந்திருக்கிறார்கள். நம்மவரில் நவகோடி திரவியம் படைத்த சீமானைக் காட்டிலும், கோவணத்தைக்கூடத் துறந்த ஆத்ம ஞானியே நிகரற்ற குபேர சம்பத்திலும் மேலான நிதியைப் படைத்தவன் என்பதே நம்முடைய உறுதியான கொள்கை. ஆகவே, நம்முடைய தேசத்தை ஆண்டு வந்த மன்னர்கள்கூட உலகைத் துறந்த மகான்களின் காலில் விழுந்து அவர்களது பாத துளியைத் தமது சிரசின்மேல் வகித்துக் கொண்டதாக நாம் படித்திருக்கிறோம். நம்மவர்கள் பேரின்ப நாட்டத்தையே முக்கியமாக மதித்தவர்கள். ஆதலால், இந்த உலகை ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தை ஆள்வதே புருஷார்த்தம் என்று நம்மவர்கள் சாசுவதமாக மனிதரை சிப்பாயிகளாக்கி, குண்டு பீரங்கி தளவாடங்களோடு எப்போதும் போருக்கு ஆயத்தமாக இருந்தவரே அன்று. பாரதப் போர் நடந்த காலத்தில், பஞ்ச பாண்டவர் தமது பாகத்திற்காக சண்டை போட நேர்ந்த காலத்தில் அர்ச்சுனன் பின்வாங்கியபோது கிருஷ்ண பகவான் பகவத் கீதையை உபதேசித்தது, ஆதிகாலத்திலிருந்து நம்மவருடைய மனப்போக்கு இந்த உலகப் பெருமையை நாடுவதல்ல என்பதை உறுதியாக மெய்ப்பிக்கும். சரியான தத்துவஞானம் இல்லாதவர்களும் மண்ணுலகப்பற்று ஒன்றையே நாடியவர்களுமான அன்னிய தேசத்து மன்னர்கள் நம்முடைய நாட்டின் மீது படை எடுத்து வந்து இதைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கிய பின்னரே நமது நாட்டில் போர்களும் அநர்த்தங்களும் உண்டாயின. எத்தனையோ அரசர்கள் தோன்றி அழிந்து போனார்கள். ராஜ்யத்தின் எல்லைகளில் எத்தனையோ மாறுபாடுகள் ஏற்பட்டன. இன்றையதினம் மொகலாயருடைய ராஜ்யமாக இருந்தது, நாளைய தினம் பிராஞ்சுக்காரருடையதாயிற்று; மறுதினம் இங்கிலீஷ்காரருடையதாயிற்று. பெயர் மாத்திரம் மாறியதே ஒழிய, ஜனங்களுடைய மனப்போக்கையும், தத்துவத்தையும் எவரும் மாற்ற முடியவில்லை. நம்மவர்கள் கண்டுபிடித்துள்ள தத்துவம் பரமாத்மாவின் குணங்கள் போல நிரந்தரமான உண்மை ஆகையால் அதற்கு ஒரு நாளும் அழிவு ஏற்படாது. இதர தேசத்தில் உள்ளோரும், நம்மிலும் நாகரிகம் அடைந்திருப்பதாய்ப் பெருமை பாராட்டிக் கொள்வோரும் உலகம் அநித்யம் என்ற தத்துவத்தை எந்தக் காலத்தில் கடைப்பிடிக்கிறார்களோ அப்போதுதான் உலகில் நிரந்தரமான கூேடிமமும் அமைதியும் ஏற்படும். அவர்களும் உண்மையில் நாகரிகம் வாய்ந்தவர் ஆவார்கள். அந்த விஷயத்தில் நம்முடைய இந்தியா தேசந்தான் மற்ற தேசங்களுக்கு குரு உபதேசம் செய்யும் பெருமையை அடையக் காத்திருக்கிறது. இதுவே உண்மையான பெருமை அன்றி இப்போது வெள்ளைக்காரர் நம்மை எல்லாம் அடக்கி ஆள்வது ஒரு பெருமையாகாது. இங்கிலீஷ்காரர்களுக்கு அவர்களுடைய தேசத்தில் அதிகமான விளைபொருள்களும் இல்லை. விலை உயர்ந்த செல்வங்களும் இல்லாதிருந்தன. அவர்கள் எப்போதும் கடலில் போய் மீன் பிடிப்பவராய் இருந்தவர்கள். இப்போதும் இங்கிலாந்து தேசத்து அரசனை வலையர்களின் அரசன் என்று ஹாசியமாகச் சொல்வது உண்டல்லவா? அவர்கள் ஆதிகாலத்தில் இருந்து ஊரைவிட்டுக் கடலில் போய்த் தமது ஆகாரங்களைத் தேடுவதையே தொழிலாகச் செய்து வந்தவர்கள். அவர்கள் இருக்கும் தீவுக்குப் பக்கத்தில் உள்ள கடலில் எப்போதும் புயல் காற்றும் அலைகளின் உக்கிரமும் நிரம்பவும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆதலால், அவர்கள் படகு முதலிய மரக்கலங்களை வரவர அபிவிருத்தி செய்து வருவது அத்யாவசியமாக இருந்தது. அனுபவம் ஏற்பட ஏற்பட, யோசனைக்கு மேல் யோசனை, யுக்திக்கு மேல் யுக்தி, தந்திரத்துக்கு மேல் தந்திரம் செய்து அவர்கள் தங்களுடைய படகுகளையும் கப்பல்களையும் அபிவிருத்தி செய்து கொண்டு போகப் போக, அவர்கள் முன்னிலும் அதிக தூரம் போகவும், கடலிலேயே பல நாள்கள் இருக்கவும் தக்க வசதிகள் செய்து கொண்டனர். அநேகமாய் எல்லோரும் அதே துறையில் வேலை செய்தனர் ஆதலால், ஏராளமான மரக்கலங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவர்களது யுக்திக்கும் திறமைக்கும் தக்கபடி நடந்து பல திக்குகளிலும் சென்று பொருள்தேடத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் சென்றதில் அவர்கள் அதற்குமுன் காணாத புதியபுதிய நாடுகளும் வஸ்துகளும் தென்பட்டன. அவர்கள் அவைகளை எளிதில் கைப்பற்றிக் கொண்டதன்றி அவ்வவ்விடங்களில் காணப்பட்ட அற்புதமான விலை உயர்ந்த புதிய புதிய வஸ்துக்களை எல்லாம் தமது தேசத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கத் தொடங்கியதோடு, இரத்தங் குடித்த புலிகள் போல புதிது புதிதான அன்னிய தேசங்களைக் காண்பதையும் அவ்வவ்விடத்தில் உள்ள பொருள்களைத் தமதாக்கிக் கொள்வதையுமே அவர்கள் தீராத பெருத்த தாகமாகக் கொண்டு மேன்மேலும் கப்பல்களை அபிவிருத்தி செய்து கொண்டு இந்த உலகம் முழுதிலும் பரவி, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பெருத்த கண்டங்களை எல்லாம் கண்டு பிடித்துக் கொண்டு குடியேறியும், அவற்றின் பெரும் பாகத்தைச் சொந்தமாக்கிக் கொண்டும் மற்றவைகளுடன் பலவகைப்பட்ட வியாபார சம்பந்தங்கள் வைத்துக் கொண்டும், தமது சொந்த நாட்டின் செல்வத்தை அபாரமாகப் பெருக்கிக் கொண்டும் மகோன்னத தசையில் இருந்து வருகிறார்கள். அவ்வாறு வெளி தேசத்தை நாடி வந்த அவர்கள் நம்முடைய இந்தியாவுக்கும் தற்செயலாக வந்தார்கள். இவ்விடத்தில் பற்பல மன்னர்களோடும் சிநேகம் செய்து தமது வியாபாரங்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் ஸ்தாபித்துக் கொண்டு வேரூன்றி நிலைத்தபிறகு கரடகன் தமனகன் வேலை செய்து ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய ராஜ்ஜியம் முழுதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். நம்முடைய இந்தியா பல மன்னர்களால் ஆளப்பட்ட விஸ்தாரமான தேசம் ஆதலால், ஒருவருக்கொருவர் குடுமி முடிந்துவிட ஏராளமான சந்தர்ப்பம் கிடைத்தது. அதோடு ஜனங்கள் யுத்தம் செய்யும் தன்மையுடைய மூர்க்கர்கள் அன்று ஆதலாலும், அவர்கள் ராமன் ஆண்டாலும், ராக்ஷசன் ஆண்டாலும் வித்தியாசம் இல்லை என்ற கொள்கை, மனத்திருப்தி முதலிய குணங்கள் நிறைந்தவர்கள் ஆதலாலும், இங்கிலிஷ்காரர்கள் அதிக சிரமம் இன்றி நம்முடைய தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களுடைய தத்துவம் கண்டது காட்சி கொண்டது கோலம் என்பது. அவர்களுக்கு இந்த உலக இன்பத்துக்கு மேலானதும் நிலைத்ததும் வேறொன்று இருக்கிறது என்ற எண்ணமே கிடையாது. உலகம் முழுதையும் கட்டி ஆள்வது ஒன்றே புருஷார்த்தம் என்பது அவர்களுடைய உறுதியான கொள்கை. இரண்டாயிரம் மைல் துரத்தில் இருந்து எல்லா நாடுகளையும் ஆண்டு, அவைகளோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிப்பதற்குத் தக்க ஏராளமான பல செளகரியங்களை அவர்கள் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிவிட்டது. அதற்காக அவர்கள் அரிதினும் அரிதான கப்பல்கள், தந்திப் போக்குவரத்துகள், ஆகாய விமானங்கள் முதலியவற்றை எங்கு பார்த்தாலும் நிரப்பி வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்தியாவில் இமாசலம் முதல் கன்னியாகுமரி வரையில் ரயில்களும் தந்திகளும் ஏற்பட்டிருப்பதற்கு முக்கியமான கருத்து ஒன்று இருக்கிறது. முப்பத்து முக்கோடி ஜனங்கள் நிறைந்த விஸ்தாரமான இந்தத் தேசத்தை அடக்கி ஆள்வதற்கு அவர்கள் சொற்பமான சேனைகளையே சிற்சில இடங்களில் வைத்திருக்கிறார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கலகம் நடந்தால் ஒரு கோடியில்

மா.வி.ப.I-17 இருந்து இன்னொரு கோடிக்கு ஒரு மணியில் தந்தி போய்விடும். சிப்பாயிகள் துப்பாக்கிகளோடும் வெடி குண்டுகளோடும் ரயிலில் உடனே வந்துவிடுவார்கள். இதுவுமன்றி, இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களில் உள்ள விளைப்பொருள் சுலபத்தில் வெளியேற்றப்படுவதற்கும், வெளிநாட்டுச் சரக்குகள் அக்கிராமங்களுக்கு பரவுவதற்கும் அனுகூலமாகவும் ரயில் அமைந்திருக்கின்றன. ரயில், தந்தி, தபால், ராணுவம் முதலியவைகளே நம்மை அடக்கியாளும் ஜீவாதாரக் கருவிகள். ஆனால் ரயில், தபால், தந்தி முதலியவை ஜனங்களுக்காக ஏற்படுத்தப் பட்டவை என்பது வெளிப்படையான கருத்து. ஏனெனில் அவை நடத்துவதற்குத் தேவையான திரவியம் வேண்டும் அல்லவா. அவைகளை ஜனங்களிடத்தில் இருந்தே வசூலித்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. இது நிற்க, அவர்களுடைய பாஷையை ஜனங்களிடத்திலும் பரப்பிவிட்டால், தங்களுடைய வேலை சுலபமாக நடைபெறும்; தங்களுடைய காளியாலயங்களில் நம்முடைய ஜனங்களே இருந்து சில்லரை வேலைகளை எல்லாம் பார்ப்பர். அவைகளுக்கு எல்லாம் சீமையில் இருந்து மனிதரைக் கொண்டு வருவதென்றால் அது சாத்தியமானதல்ல. இப்படி இங்கிலிஷ்காரர்கள் மீன் பிடிப்பதில் இருந்து ஆரம்பித்து உலகத்தையே பிடித்து ஆளும் வரையில் வந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் யந்திரங்கள் எல்லாம் அவர்களுடைய கொள்ளைத் தொழிலுக்கு அவசியமானவையாகத் தோன்றித் தோன்றி ஆழ்ந்த யோசனையின் மேல் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. நம்மவர்களுக்கு அவைகள் அவசியமே இல்லை. நம்மவர்கள் இந்த உலகப்பற்றை அதிகமாக நாடாதவர்கள்; உலக ஆசையைக் குறைத்து கடவுள் கடவுள் என்று தியானம் செய்திருப்பவர்கள். நம்மவர்களுக்குக் கடவுளை அடைவதே பிரதானம். இங்கிலீஷ்காரருக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். கடவுள் என்ற பதத்தைக்கூட அவர்கள் நம்மிடம் இருந்து தெரிந்து கொண்டார்கள் என்பது, அவர்கள் கடவுளுக்கு காட் (God) என்று பெயர் கொடுத்திருப்பதில் இருந்தே நிச்சய மாகிறது. நம்முடைய தேசத்தில் திருடர்கள் கொள்ளைக்குப் புறப்படும் முன் மதுரை வீரன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு வெட்டி கோழி வெட்டி கள்ளு சாராயம் வைத்து நைவேத்தியம் செய்து, “சாமி ஆண்டவனே! இதுவரையில் நாங்கள் எத்தனையோ வீடுகளில் கொள்ளை அடித்தோம். அதற்கெல்லாம் நீ துணையிருந்து, எங்களுக்கு ஏராளமான பொருள்களை சம்பாதித்துக் கொடுத்தது போல் இப்போது போகும் இடத்திலும் துணையிருந்து காப்பாற்றப்பனே” என்று வேண்டிக் கொள்வார்களாம். அது போல, வெள்ளைக்காரர் கடவுளை எதற்காக ஸ்தோத்திரம் செய்கிறார்கள் என்றால், இறப்பு பிறப்பாகிய சாகரத்தையும், பூலோக பற்றையும் விலக்கி, மோட்சத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறதில்லை. உலகத்தில் தங்களை நல்ல பதவியில் வைத்து, சூரிய, சந்திரர், நட்சத்திரங்கள், ஆடுமாடுகள், பறவைகள், தானியங்கள், பழங்கள், புஷ்பங்கள், தண்ணிர் முதலியவற்றைத் தங்களுடைய உபயோகத்துக்காகப் படைத்து வைத்திருப்பதற்காக நன்றி செலுத்துவதாகவும், அது போலவே ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆகாரங்களை எல்லாம் எப்போதும் கொடுக்க வேண்டும் என்றும், தாங்கள் செய்யும் குற்றங்களை எல்லாம் மன்னிக்க வேண்டும் என்றும் ஸ்தோத்திரம் செய்கிறார்கள். அவர்களுக்கும் கடவுளுக்கும் அவ்வளவே சம்பந்தம். கடவுள் எல்லோருக்கும் பிதாவாம். மனிதர்கள் எல்லோரும் ஒருவருக் கொருவர் சகோதரர்களாம். கடவுளைப் பற்றியும், உலக சிருஷ்டியைப் பற்றியும், அவை இரண்டிற்கும் உள்ள சம்பந்தம் இன்னது என்பதைப் பற்றியும் வெள்ளைக்காரர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார்கள் என்பது மேலே கூறப்பட்ட அவர்களது தத்துவங்களால் நன்கு விளங்கும். நமக்கும் அவர்களுக்கும் இப்படிப்பட்ட கொள்கை வேறுபாடு இருப்பதால், நாம் இந்த உலக விஷயங்களில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற நினைவையே கொள்ளாமல் அது விஷயத்தில் எவ்வித முயற்சியும் செய்யாமலும் இருந்து வருகிறோம். வெள்ளைக் காரர்கள் எப்போதும் உலகத்தை ஆண்டு எல்லோரையும் அடக்கி சகலமான சுகங்களையும் இம்மையிலேயே அனுபவிக்க் நினைப்பவர்கள் ஆதலால், அவர்கள் பலவிதமான யந்திரங்களையும் தந்திரச் சூழ்ச்சிகளையும் செய்து மாயாவித்தைகளை எல்லாம் கையாண்டு வர வேண்டாமா? அவர்கள் கப்பலிலும் ஆகாய விமானத்திலும் வெகுகாலம் பிரயாணம் செய்ய வேண்டி இருப்பதாலும், நிர்மாநுஷ்யமான தீவாந்தரங்களில் எல்லாம் போய்த் தங்க நேருவதாலும், கெடாமல் நெடுநாளைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் இப்படிப்பட்ட ஈரமற்ற பொருட்களான பிஸ்கோத்து முதலியவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்படவில்லை. நாம் புதிய புதிய பதார்த்தங்களை அப்போதைக்கப்போது செய்து ஆரோக்கியமாக உண்கிறோம். இப்படிப்பட்ட பிஸ்கோத்துகள் ஜீரணமாவது கடினம் என்று அவர்கள் பிராந்திகளையும்கூடக் கொண்டு போவார்கள்; அதனால் உடம்பைச் சரிப்படுத்திக் கொள்வார்கள். நாம் பிஸ்கோத்தை மாத்திரம் உண்டு பிராந்தியை விலக்குவதால், நம்முடைய உடம்பு கெட்டுப் போகிறதைத் தவிர நாம் கைகண்டது வேறொன்றும் இல்லை. இந்த பிஸ்கோத்து மாத்திரம் வெகுகாலம் வரும் என்றும், கெடாமல் இருக்கும் என்றும் நாம் சொல்ல முடியுமா? அதற்கும் ஒருகால வரம்புண்டு. அதில் சில மருந்துப் பதார்த்தங்களைச் சேர்த்திருப்பதால், கொஞ்சகாலம் வரையில் அது ஒரு மாதிரியாக இருக்கும். அதன் பிறகு அதுவும் புழுபுழுத்தும் காறல் எடுத்தும் கெட்டுத்தான் போகிறது. இங்கிலிஷ்கார வியாபாரிகள் இதனால் அதிக பணம் வருகிறது என்பதையும், ஜனங்கள் இதை அதிகமாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் கண்டு, விலை மட்டமான சாமான்களை உபயோகித்து அதிக லாபம் அடைய விரும்புவதே அநேகமாய் மனித சுபாவத்துக்கு ஒத்ததாக இருக்கிறது. முக்கியமாக இதன் விலையை கவனித்தீர்களா? இது உயர்ந்த தினுசு பிஸ்கோத்தல்லவா? ஒரு பவுண்டின் விலை ரூ. 1-8-க்குக் குறையாது. இதற்கு அரைக்கால்படி கோதுமை மா பிடித்திருக்கும். மற்ற சர்க்கரை, வெண்ணெய் முதலியவற்றின் செலவும் சேர்ந்து இரண்டனா கூடப்பிடித்திருக்காது. அதற்கு விலை ரூ.1-8-0 வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு நாணயம் பார்த்தீர்களா? இதை நாம் ஏன் வாங்கி ஏமாற வேண்டும்: இம்மாதிரி அவர்கள் எத்தனையோ அற்ப சாமான்களை எல்லாம், ஒன்றுக்கு இருபதாய் விலை வைத்து நம்மிடம் கொள்ளை அடிப்பதோடு நம்முடைய தேக ஆரோக்கியத்தையும் ஆயிசையும் குடித்து விடுகிறார்கள். சீமையில் உள்ள வியாபாரிகள் செத்துப்போன குதிரை, நாய் முதலியவற்றின் மாமிசங்களை எல்லாம் பக்குவம் செய்து தேகபுஷ்டி மருந்துகள் என்று நம்முடைய தேசங்களுக்கு அனுப்பிப் பொருள் பறிக்கிறார்கள் என்றுகூடச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நான் இப்போது சொன்ன இங்கிலீஷ்காரருடைய விருந்தாந்தம் எல்லாம் நம்முடைய கந்தசாமி சொல்ல, நான் கேள்வியுற்றதால், அதில் பொய் இருக்காது என்று நம்பி அதை நான் உங்களிடம் சொல்லுகிறேன். நான் முதலில் சொன்ன திருடர் உவமானம் நம்முடைய வெள்ளைக்காரருக்கு நன்றாகப் பொருந்தும் என்று நினைக்கிறேன். நித்திரை செய்யும் பதினாயிரம் ஜனங்களை சொற்பத் தொகையினரான திருடர்கள் ஜெயித்துப் பொருட்களை அபகரித்துக் கொண்டு போகிறார்கள் என்றேன் அல்லவா. அதுபோல, நம்முடைய தேசத்து முப்பத்து முக்கோடி ஜனங்களும் இந்த உலகப்பற்றை முதன்மையாக நாடாமல் இவற்றில் பற்றில்லாதவராய், அடுத்த உலகத்தின் பேரின்பத் தையே புருஷார்த்தமாக நினைத்திருக்கும் நிலைமையானது, இந்த உலகம் சம்பந்தப்பட்ட வரையில் நம்மவர்கள் துங்கும் நிலைமையில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா. அந்த நிலைமையில் சொற்ப தொகையினரான அன்னிய நாட்டார் தகுந்த வசதிகளைச் செய்து தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அடக்கி ஆண்டு நமது பொருள்களை அபகரித்துக் கொண்டு போவது எளிதல்லவா? இதில் இருந்து அவர்கள் நம்மை விட அதிக பெருமை, நாணயம், திறமை முதலியவைகளை உடையவர்கள் என்று நாம் நினைத்து, நம்மவர்களை வெறுத்து நமது பழக்கவழக்கங்களைத் துறந்து, நிரம்பவும் தாழ்ந்த மனப்போக்குடைய அவர்களது தத்துவங்களையும் பழக்க வழக்கங்களையும் நாம் பின்பற்றுவது தான் உசிதமாகுமா? ஆனால் ஒரு விஷயம். தப்பாகவோ, சரியாகவோ, நியாயமாகவோ, அநியாயமாகவோ, அவர்கள் நம்முடைய தேசத்தை ஆளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ரயில், தந்தி முதலிய சில முக்கியமான வசதிகளை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ராஜாங்க நிர்வாக விஷயத்திலும் நீதி செலுத்தும் விஷயத்திலும் அவர்கள் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அவைகளினால் நமக்கு ஏராளமான பணச் செலவு ஏற்பட்டாலும், அவைகளால் உண்டாகும் நன்மையைக் கருதி அவைகளை மாத்திரம் நாம் ஏற்றுக் கொள்வதோடு நிற்க வேண்டுமே அன்றி, நம்முடைய தேசத்தில் உள்ள ஆண் பெண் பாலாராகிய எல்லோரும் அவர்களுடைய பாஷையைக் கற்று, அதையே எப்போதும் பேசி, அவர்களுடைய போஜனம், பழக்க வழக்கங்கள், மத தத்துவங்கள் முதலியவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வித நியாயமும் இல்லை. அப்படிச் செய்ய முயற்சிப்போர் நம்முடைய நாட்டின் உண்மையையும் பெருமையையும் தூய்மையையும், நம்முடைய தேசத்தில் உள்ள நூல்களின் அருமையையும், நம்முடைய பழக்க வழக்கங்களின் மேன்மையையும், சிலாக்கியத்தையும் சரியானபடி உணராமல் செய்கிறார்கள் என்றே நினைக்க வேண்டும். அதெல்லாம் இருக்கட்டும். இப்போது நான் இங்கே வந்து உங்களைப் பார்த்து உங்களுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்தறிந்து பிறகு என் மனசில் சில சந்தேகங்கள் உண்டாகின்றன. அவைகளை உங்களிடம் கேட்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் உண்டாகிறது. ஆனாலும், வாய்விட்டுக் கேட்பதற்குக் கூச்சமாக இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் ஒருவேளை மனவருத்தம் அடைவீர்களோ என்ற நினைவும் உண்டாகிறது. நீங்கள் அனுமதி கொடுத்தால், கேட்கிறேன்” என்றாள்.

அவ்வாறு கொடி முல்லையம்மாள் வெள்ளைக்காரரது நாகரிகத்தைத் தாழ்த்தியும், இந்திய நாகரிகத்தை சிலாகித்தும் பேசியது மனோன்மணியம்மாளின் மனதை ஒருவாறு புண்படுத்தி விட்டது. ஆனாலும், அதற்கு எவ்வித மறுமொழி அல்லது சமாதானம் சொல்வது என்பதை சிந்தித்தபடி தனது சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தனது இடையில் சொருகப் பட்டிருந்த ஒரு முழ நீள அகலம் உள்ள ஒரு பட்டுச் சவுக்கத்தை எடுத்துத் தனது கைவாய் முதலியவற்றை நன்றாகத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்து வேறொரு சோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டு, “உங்கள் மனசில் என்ன சந்தேகங்கள் உண்டாகின்றன? சொல்லுங்கள்” என்றாள்.

கொடி முல்லையம்மாள் புன்னகை செய்து நயமாகப் பேசத் தொடங்கி, “வேறொன்றும் இல்லை. நீங்கள் இப்போது பி.ஏ. பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சையில் தேறின பிறகு நீங்கள் ஏதாவது உத்தியோகம் வகிக்கப் போகிறீர்களா என்பது என்னுடைய முதல் சந்தேகம். உத்தியோகம் வகிக்கப் போகிறதில்லை என்றால், நீங்கள் கலியானம் செய்து கொண்டு புருஷன் வீட்டுக்குப் போன பிறகு இந்தப் பட்டத்தை எப்படி உபயோகப்படுத்தப் போகிறீர்கள் என்பது என்னுடைய இரண்டாவது சந்தேகம். தவிர, உங்களைப் பார்த்தால், எல்லா விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய பழக்க வழக்கங்களை மெச்சி அவைகளைப் பின்பற்றி நடக்கிறவர்களாகத் தெரிகிறது. அவர்களுடைய தேசத்தில் கலியாணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன், மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வரத்துப் போக்கு வைத்துக் கொண்டு, பெண் வீட்டாரோடும் பெண்ணோடும் நன்றாகப் பழகுவதும், பெண்ணும் மாப்பிள்ளையும் பல இடங்களுக்குத் தனிமையில் போய் வந்து ஒருவரது குணத்தை ஒருவர் உணர்ந்து, இருவரும் பரஸ்பரம் காதலை வளர்த்துக் கொள்வதும், அதன்பிறகு புருஷன் பெண்ணின் முன்னால் மண்டியிட்டுத் தனது காதலை வெளிப்படுத்தி, “நான் உன்னைக் காதலிக்கிறேன்; நீ என்னுடையவள் ஆகிறாயா?” என்பதும், அவள் தானும் அப்படியே அவனைக் காதலிப்பதாகக் கூறி அதற்கு இணங்குவதும், பிறகு அவர்கள் இருவரும் தங்களது முடிவை பெண் வீட்டாரிடம் தெரிவிப்பதும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதும், அதன்பிறகு அவர்கள் இருவரும் உண்மையில் புருஷன் பெண்ஜாதி ஆகிவிட்டவர்கள் போலவே நடந்து கொள்வதும், கோவிலில் மோதிரம் மாற்றிக் கொள்வது, கலியாணக் கணக்குப் புஸ்தகத்தில் பாதிரியாருக்கு முன்னால் இருவரும் கையெழுத்துச் செய்வது முதலிய கலியானச் சடங்குகளை அவர்கள் உடனேயோ, அல்லது, தங்களுடைய செளகரியம் போல சொற்பகாலம் கழித்தோ நடத்துவதும் வழக்கம் என்று நான் கேள்வியுற்று இருக்கிறேன். பெண்ணும், மாப்பிள்ளையும் கொஞ்ச காலம் பழகிய பின், ஒருவரது குணம் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால், அவர்கள் அதற்குமுன் பூர்வாங்கமாகத் தமக்குள் செய்து கொண்ட நிச்சயதார்த்தத்தை நிவர்த்தி செய்வதும் வழக்கமாம். அது போலவே ஒரு பெண் ஒருவர் பின் ஒருவராக பல மாப்பிள்ளை களோடு பழக நேர்வதும் சகஜமாம். நம்முடைய தேசத்தில் நம்மவர் அப்படிச் செய்கிறதில்லை. வயசு வந்த பெண் அன்னிய புருஷர்களோடு பழகுவதும், அவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் முற்றிலும் தவறு என்ற கொள்கையை நாம் கடைப்பிடிப்பவர்கள். வயசு வந்த பெண் அன்னிய புருஷரோடு பழகி, அவர்களில் யார் அழகுடையவர்கள், யார் நற்குணம் உடையவர்கள் என்று ஆராய்ச்சி செய்யும் படியான மனப்போக்கை உடையவர் களானால், அதனால் பிற்காலத்தில் பெருத்த அநர்த்தம் விளையும் என்பது நம்மவரின் கொள்கை. ஏனென்றால், அப்படிப்பட்ட மனப்போக்கை உண்டாக்கிக் கொண்டவளுக்கு வாய்த்த புருஷன் ஒருகால் அவளுக்குப் பிடிக்காமல் போய்விடும் பகூடித்தில், அவளது மனம் பிறபுருஷர்களிடத்தில் நாட்டமாக இருக்கும் என்று நம்முடைய பெரியோர்கள் அனுபவத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கும் வெள்ளைக்காரர்கள் ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் மன ஒற்றுமை ஏற்படாவிடில், நியாயஸ்தலத்தின் மூலமாக அவர்கள் தங்களுடைய கலியான பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ஸ்திரியோ புருஷனோ பல கலியானங்கள் செய்து ரத்து செய்து கொள்ளலாம். நம்மவர் அதை ஆண் தன்மையாகக் கருதவில்லை. தனக்கு மனைவியாய் இருந்த ஒரு ஸ்திரீ இன்னொருவனுக்கு மனைவியாய் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆண்மைத் தனமல்ல என்பதும், கேவலம் பேடித்தனம் என்பதும் நமது கொள்கை. அதுவுமன்றி ஒரு புருஷனை ஒரு ஸ்திரீ மணந்து கொண்டால் இருவரில் ஒருவர் மாண்டால் அன்றி, அந்தக் கலியான பந்தம் வேறு விதத்தில் ரத்தாகிறதே இல்லை. புருஷன் மாண்ட பிறகு, அவனது விதவை மறுகலியாணம் செய்கிறதே வழக்கமில்லை. ஏனெனில் ஒருவனுக்கு மனைவியாய் இருந்து மனம் தேகம் முதலியவற்றில் களங்கம் அடைந்து கழிபட்டுப்போன ஒரு ஸ்திரியைப் போய்க் கலியாணம் செய்து கொள்வது கேவலம் இழிவான மோகத்தைக் காட்டும் என்றும் நிஷ்களங்கமான மனமும், தேகமுமுடைய ஸ்திரியை மணந்து, இருமனமும் ஒன்றுபடுவதே உண்மையான இல்லற வாழ்க்கை என்றும் நம்மவர் கருதுகிறார்கள். நம்மவரின் ஏற்பாடுகளும் வெள்ளைக்காரருடைய ஏற்பாடுகளும் முற்றிலும் விரோதமானவையாக இருக்கின்றன. நீங்கள் மற்ற சகலமான விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய போக்கை அனுசரிப்பவராக இருந்தும், உங்கள் கலியான விஷயத்தில் மாத்திரம் அவர்களுடைய நடத்தைப்படி செய்யவில்லையே என்ற இன்னொரு சந்தேகம் உதிக்கிறது. நீங்கள் கந்தசாமியைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை. அவன் கருப்பாய் இருப்பானோ விகாரமாய் இருப்பானோ என்ற சந்தேகங்கூட உங்களுக்கு உண்டாகவில்லை. அப்படி இருக்க, நீங்கள் உங்களுடைய தகப்பனாருடைய பேச்சை மாத்திரம் கேட்டுக் கொண்டு இதற்கு எப்படி இணங்கினிகள்? கந்தசாமி என்ற பையனோ உங்களைப் போல இங்கிலீஷ் படித்து, பி.ஏ. பரீட்சையில் தேறி இருக்கிறவன் ஆனாலும், அவன் சகலமான விஷயங்களிலும் நம்முடைய தேசத்துப் பழக்க வழக்கங்களையே கடைப்பிடித்து நடக்கிறவன். அவன் தனக்கு வரும் சம்சாரம் தனக்கும் தன் பெற்றோர் பெரியோருக்கும் கீழ்ப்படிந்து அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவன். குடும்ப ஸ்திரீகளுக்கு பி.ஏ. முதலிய பட்டங்கள் அவசியமில்லை என்றும், அவர்கள் எவ்வளவுதான் படிப்பாளியாகவோ, புத்திசாலியாகவோ இருந்தாலும், அவர்கள் அடக்கம், பணிவு, உழைப்பு, மிருதுவான சம்பாஷணை, படி தாண்டாமை, கற்பு முதலிய சிறந்த குணங்களால் பூஜிதை பெற வேண்டுமே அன்றி இங்கிலீஷ் புஸ்தகத்தைப் படித்து விட்டோம் என்ற நினைவினாலேயே புருஷருக்குச் சமமாகவோ அவரை மீறியோ நடப்பது தவறு என்பதும் அவனுடைய எண்ணம். வெள்ளைக் காரரில் பெண்கள் ஏதாவது பரீட்சையில் தேறி இருக்க வேண்டும், பாட்டு பாடுதல், தையல்வேலை செய்தல், சித்திரம் வரைதல், முதலியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புருஷர் சந்தோஷப்படும்படி அவர்கள் புதிதுபுதிதான பல விஷயங்களைப் பற்றி எப்போதும் பேசும்படியான வாக்கு வண்மை உடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அம்சங்களில் ஒரு ஸ்திரீ அவசியம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோட்பாடு. நம்முடையது அப்படிப்பட்டதல்ல. நம்முடைய பெண்களுக்கு அவைகள் எல்லாம் தேவையில்லை. நம்மவர்கள் தங்கள் மனசையும் தேகத்தையும் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு புருஷன் மாமனார் மாமியார் முதலியோரது மனதிற்கு ஒத்தாற்போல அடங்கி நடந்து வீட்டின் காரியங்களைத் தன்னால் இயன்றவரை அன்போடு செய்து, கொண்டவனுடைய குடும்பத்தாரோடு ஐக்கியப்பட்டுப் போகும் குணம் ஒன்றே போதுமானது. நம்முடைய ஜனங்களின் தேவை நிரம்பவும் சொற்பமானது ஆகையால், குடும்பத்திற்குத் தேவையான பொருளை அதன் தலைவனே சம்பாதித்து விடுவான் ஆதலால் பெண்பாலார் வெளியில் போய் பிரத்தியேகமான் ஜீவனோபாயம் தேடவேண்டும் என்பதில்லை. வெள்ளைக்காரர்கள் கொள்ளை கொள்ளையாய்ப் பொருள் தேடினாலும், அவர்களுடைய பெண்பாலாரும் பட்சிகள் போலப் பறந்து வெளியில் போய் அரும்பாடு பட்டுப் பொருள் தேடிவராவிட்டால், அவர்கள் தங்களுடைய அபாரமான தேவைகளை நிவர்த்திக்க முடிகிறதில்லை. நாம் அரை வயிற்றுக்கு உண்டாலும், பட்டினி கிடந்தாலும், நமது பெண் மக்கள் போய் சம்பாதிக்க விடுவது ஆண்மைத்தனம் அல்ல என்பதும், அதைப் போல ஹீனத்தனம் வேறே இல்லை என்பதும் நம்மவரின் மனப்பான்மை. வெள்ளைக்காரருக்கு எப்படியாவது பெருத்த பொருள் தேடுவதொன்றே பிரதானம். ஸ்திரிகளும் சம்பாதிக்க வேண்டும் புருஷரும் சம்பாதிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்குப் பல செளகரியங்களும் இருக்கின்றன. அவர்களுடைய பெண் பிள்ளைகள் அடுப்பு மெழுகிப் பாத்திரந் தேய்த்து சமையல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் உண்பது ரொட்டி ஆகையால், அவர்களுக்குத் தேவையான ரொட்டி, சாராயம் முதலியவற்றைக் கடையிலும், மற்ற பதார்த்தங்களை ஹோட்டலிலும் வாங்கிக் கொண்டால், அவர்களுடைய காரியங்களும் வசதிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகின்றன. நம்முடைய காரியங்கள் எல்லாம் வேறு மாதிரியானவை. நீங்கள் கந்தசாமியின் வீட்டுக்குப் போனால், நீங்கள் இப்படி நாற்காலியில் உட்கார முடியாது; காப்பி பிஸ்கோத்து முதலியவற்றைச் சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் எச்சிலைத் துணியில் துடைத்துக் கொள்ள முடியாது. துல்லியமான மஸ்லின் துணிகளே உங்கள் மனசுக்குப் பிடித்தவை என்றும், அவைகளையே நீங்கள் உபயோகித்து வருவதாகவும் சொல்லுகிறீர்களே. நீங்கள் கந்தசாமியைக் கலியாணம் செய்து கொண்டால் இம்மாதிரியான வெள்ளை உடைகளை அணிய முடியாதே. ஏனென்றால், நம் தமிழ்நாட்டில் வெள்ளை உடைகளை அமங்கலிகளும், தாசிகளுமே கட்டுவதென்ற வழக்கம் இருந்து வருவதால், நீங்கள் அப்படிச் செய்ய அவர்கள் இணங்க மாட்டார்கள். வெள்ளை நிறம் உள்ள ஆடைகளை சுமங்கலிகள் கட்டக்கூடாது என்ற விதி ஒரு புறம் இருக்க, ஆடைகள் அணியும் விஷயத்தில் நம்மவருக்கும், வெள்ளைக்கார ஸ்திரீகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வயசு முதிர்ந்தவராக இருந்தாலும் மெல்லிய சிறுசிறு துணிகளைக் கொண்டு தைக்கப்பட்ட பாவாடை, கெளன் முதலியவைகளை மாத்திரம் அணிவதோடு, தங்களுடைய அங்க அமைப்பு முழுதும் அழகாக வெளியில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்குத் தோதாகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிகிறார்கள். அப்படி அணிவதால் தாம் வடிவழகியர் என்று பிறர் மதிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம். அப்படிச் செய்வதால், ஸ்திரீகளின் கற்புக்கு இழுக்கு நேரும் என்ற எண்ணத்தோடு நமது ஸ்திரிகள் தம்முடைய உடம்பின் அமைப்பு வெளியில் தெரியாதபடி மறைக்க வேண்டும் என்ற கருத்துடன் பதினெட்டு முழமுள்ள தடித்த புடவைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்ற நற்பழக்கத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செய்வதுமன்றி, தங்களுடைய முகத்தழகு, மார்பழகு முதலியவை எடுப்பாக வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற கருத்தோடு, நம்மவர்கள் எப்போதும் நாணிக்குனிந்து கட்டை விரலைப் பார்த்தபடி நடக்க வேண்டும் என்ற அநுஷ்டானத்தை வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஸ்திரீகள் அவர்கள் அணியும் ஆடைக்குள் இரும்புக் கம்பியினால் ஆன கார்செட் என்ற உள்சட்டை ஒன்றை அணிந்து அதற்குமேல் கெளன் முதலியவற்றைத் தரித்துக் கொள்ளுகிறார்கள். உட்புறத்தில் சதைப்பிடிப்பு இல்லாவிட்டால் கூட அந்தக் கார்செட் என்ற கருவி ஒவ்வொரு பாகத்தையும் பிரமாதமாகத் தூக்கிக்காட்டி, ஒருவித வெளிப் பகட்டை உண்டாக்குகிறது. அது மாத்திரமல்ல. எந்தத் தேசத்திலும் ஸ்திரீகள் மிருதுவான தன்மை உடையவர்கள் ஆதலால், அவர்கள் இயற்கையிலேயே குனிந்து நடக்கக் கூடியவர்கள். இங்கிலீஷ்காரர் தம்முடைய ஸ்திரீகள் நாணிக் குனிந்து நடக்கக் கூடாதென்ற எண்ணத்தோடு, அவர்கள் காலில் அணியும் பூட்சின் பின்பக்கத்தை அதாவது குதிகாலுக்குக் கீழே இருக்கும் பாகத்தை அரைசாண் உயரம் உள்ளதாகவும், அதன் முன்பக்கம் சரிவாய் சாதாரண பூட்சுபோல இருக்கவும் செய்து விடுகிறார்கள். அப்படிச் செய்வதனால், அவர்களுடைய ஸ்திரீகள் முன் பக்கம் சாய்ந்து குனிந்து நடக்க வேண்டும் என்பது அவர்களுடைய கருத்தென்று நம்மவர்கள் சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. அந்த பூட்சை அணிந்து கொண்டு சாதாரணமாக நிற்பதே முடியாது. இன்னும் குனிந்தால் அது உடனே கீழே தள்ளி விட்டுவிடும். ஆகையால், அதை அணிந்து கொள்ளும் ஸ்திரீகள் தங்களுடைய முகம் மார்பு முதலிய பாகங்களை எப்போதும் நிமிர்த்தி நாற்காலியில் சாய்ந்திருப்பது போலப் பின்புறம் சாய்ந்திருந்தால் அன்றி, அவர்கள் நிற்கவும், நடக்கவும் முடியாது. இப்படி அவர்களுக்கும் நமக்கும் பல விதங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகையால் நீங்கள் மன்னார் கோவிலார் வீட்டில் வாழ்க்கைப்படுவதென்றால், எந்த விஷயத்திலும் நம்முடைய தேசத்துப் பழக்கங்களை அனுசரித்து நமது ஆடை ஆபரணங்கள் முதலியவைகளை அணிந்தால் அன்றி, உங்களிடம் உங்கள் புருஷர் முதலியோருக்குப் பிரியம் ஏற்படாது. அவர்கள் வீட்டில் ஒரு கோடீசுவரருடைய பெண் மூத்த மருமகளாக வந்து இருக்கிறார்கள். அவள் இரவு பகல் சலிக்காமல் உழைத்து வேலை செய்கிறவள். அவளோடு கூட நீங்களும் உழைத்து வேலை செய்ய நேருமே அன்றி, நீங்கள் எஜமானத்துவம் வகித்து சும்மா உட்கார்ந்திருப்பது பார்ப்பதற்கே விகாரமாக இருக்குமே. நீங்கள் அவர்கள் சாப்பிடுகிற பழைய அமுது முதலிய ஆகாரங்களை எல்லாம் சாப்பிட வேண்டி வரும். அதற்கெல்லாம் உங்கள் மனம் இடம் தருமா? உங்களுடைய இங்கிலீஷ் பட்டத்தையும், இங்கிலீஷ் பழக்கவழக்கங்களையும் வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் புருஷர் சந்தோஷப்படும்படி எப்படி நடந்துகொள்ளப் போகிறீர்கள் என்பது மற்ற சந்தேகங்களைவிடப் பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் கந்தசாமியிடம் பகைமை கொண்டவர்கள் ஆகையால், இப்படிப் பட்ட ஆட்சேபனைகளை எல்லாம் கிளப்பிவிட்டு உங்களை பயமுறுத்தி இந்தக் கலியாணம் நடைப்பெறாமல் செய்துவிட வேண்டும் என்ற கருத்தோடு வந்திருக்கிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். அவனுடைய குணங்களும், மனப்போக்கும் எனக்குத் தெரியும் ஆகையால், பின்னால் காரியங்கள் இப்படித்தான் நடக்கும் என்பது எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறதைப் பற்றி, இவைகளை எல்லாம் நான் சொல்லுகிறேன். ஏனென்றால், கலியானம் என்பது வெள்ளைக்காரர் நினைப்பது போல அற்ப சொற்பமானதல்ல. அவர்கள் இன்று கலியாணம் செய்து கொள்ளுவார்கள்; நாளைய தினம் அதை ரத்து செய்து வேறு கலியானம் செய்து கொள்ளுவார்கள். நாம் அப்படிச் செய்ய முடியாது. முடிச்சு விழுந்தால், கடைசி வரையில் அதை அவிழ்க்கக் கூடியவர் எவரும் இல்லை. ஆயிசு காலம் முடிய ஸ்திரி புருஷரை சந்தோஷப்படுத்துவதும் இந்தக் கலியானந்தான்; விசனத்தில் ஆழ்த்துவதும் இந்தக் கலியாணம்தான். ஆகையால், இதை ஆய்ந்தோய்ந்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு செய்வதே சர்வ சிலாக்கியமான காரியம். ஆகையால்தான் நான் துணிந்து என் மனசை வெளியிட்டேன். இது போலவே நீங்களும் உங்கள் மனசை வெளியிடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றாள். கொடி முல்லையம்மாள் கூறின சொற்கள் மனோன்மணியம்மாளின் செவிகளில் ஈட்டிகள் போலப் பாய்ந்து அவளது மனதைப் புண்படுத்தின. அவள் அடக்க இயலாத மனக் கொதிப்பும், கோபமும், அருவருப்பும், விசனமும், வியப்பும், மனக் கலக்கமும் அடைந்தவளாய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தபின் பேசத் தொடங்கி, “நீங்கள் இங்கிலிஷ் காரருடைய நாகரிகத்தையும் நடையுடை பாவனைகளையும் பழக்கவழக்கங்களையும் தூவிப்பது போல என்னைப் பழித்து அவமதிக்க வேண்டும் என்ற கருத்தோடு இங்கே வந்ததாகவே நினைக்கிறேன். உங்களுக்குச் சரியாக நானும் பேசக்கூடும் ஆனாலும், அம்மாதிரி உங்களோடு பேச்சை வளர்த்திக் கொண்டிருக்க எனக்கு அவகாசமும் இல்லை, விருப்பமும் இல்லை. மிஸ்டர் கந்தசாமியும் பி.ஏ. பரீட்சையில் தேறி இருப்பதாலும், அவர்கள் தக்க பெரிய மனிதர்களாக இருப்பதாலும், அவர்கள் என்னை என் அந்தஸ்துக்குத் தக்கபடி கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்துவார்கள் என்று நினைத்தே நான் இந்தக் கலியானத்துக்கு இசைந்தேன். முதலில் நான் கலியாணம் செய்து கொள்ளவே ஆசைப்படவில்லை. என் தகப்பனாருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, நான் அரை மனசோடு இதை ஏற்றுக் கொண்டேன். இப்போது நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நான் அவர்களுடைய வீட்டில் கேவலம் ஓர் அடிமைப்போல நடந்துகொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது. அப்படி நான் என் சுயமதிப்பையும் மரியாதையையும் சுயேச்சையையும் இழந்து, புழுக்கைச்சி போல அவர்கள் வீட்டில் கிடந்து உழன்று புருஷ சுகம் அடைவதைக் காட்டிலும், சுயமதிப்போடும், சுயேச்சையோடும் இருந்து பட்டினி கிடந்து மரிப்பதே சிலாக்கியம் என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம். ஆயைால் நீங்கள் சொல்லுகிறபடி அவர்கள் என்னை நடத்துவார்கள் என்பது உண்மையானால், இந்தக் கலியாணத்திற்கு நான் பிரியப்பட வில்லை. தயை செய்து நீங்கள் உங்களுடைய மனிதருக்கு எழுதி இந்தக் கலியான ஏற்பாட்டை ரத்து செய்து விடும்படி செய்து விடுங்கள். நான் என் தகப்பனாரிடம் இதை எல்லாம் சொன்னால் அவர் நம்பமாட்டார். ஆகையால் நீங்களே இதை நிறுத்த ஏற்பாடு செய்து விடுங்கள்” என்றாள்.

அவ்வாறு அவள் கூறி முடிப்பதற்குள், அந்த அறையின் வாசலில் இருந்து ஒருவர், “மனோன்மணி இந்த மனிதர்கள் நம்மை ஏமாற்ற வந்த வேஷக்காரர்கள்; இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு, நீ உன் மனசைக் கலங்க விடாதே” என்று கூறிக் கொண்டே, கலெக்டர் பட்டாபிராம பிள்ளை அந்த அறைக்குள் நுழைந்தார். திடீரென்று அவர் அவ்வாறு கூறிக்கொண்டு வந்ததைக் கண்ட மனோன்மணியம்மாள் திடுக்கிட்டு வியப்படைந்ததோடு, அவர்கள் யாராக இருப்பார்கள் என்றும், என்ன கருத்தோடு தன்னிடம் வந்திருப்பார்கள் என்றும் பலவித சந்தேகங்களைக் கொண்டவளாய்த் தனது தந்தை மேலும் என்ன விபரம் சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து அவரது முகத்தை உற்று நோக்கினாள். கொடி முல்லையம்மாள் பட்டாபிராம பிள்ளை நான்கு மணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தாள். ஆனாலும், அவர் அவ்வாறு சந்தடியின்றி வந்து சிறிது நேரம் வாசற்படியில் இருந்து, தாம் சம்பாஷித்ததைக் கேட்டுக் கொண்டிருப்பார் என்றாவது, தாங்கள் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டு கொள்வார் என்றாவது அவள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், அவளது மனதில் பெருத்த திகிலும் குழப்பமும் தோன்றி வதைக்கத் தொடங்கின. தாங்கள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அப்போதே நேரில் கச்சேரியிலிருந்து வருபவரான பட்டாபிராம பிள்ளை எப்படி அறிந்திருப்பார் என்ற சந்தேகம் தோன்றி மனதைக் கலக்கியது. ஒருகால் கோபாலசாமி தங்களுடைய உண்மையை வெளியிடும்படியான சந்தர்ப்பம் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் உதித்தது. ஆனாலும், அப்படி நேர்ந்திருக்காது என்ற நினைவும் தோன்றியது. ஏனென்றால், கோபாலசாமி உண்மையைத் தெரிவித்திருந்தால், தான் கந்தசாமி என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார் ஆதலால், தான் அவர்களை ஏமாற்ற வந்தவன் என்பது போன்ற விபரீதமான சொற்களை அவர் உபயோகப்படுத்தி இருக்க மாட்டார் என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால் வேறு வகையில் அவர் தம்மைப்பற்றித் தப்பான செய்தி எதையோ தெரிந்துகொண்டு வந்திருக்கிறார் என்ற நிச்சயமே ஏற்பட்டது. ஆகவே பெண் வேஷம் தரித்திருந்த கந்தசாமி அப்போதும் ஸ்திரியைப் போலவே நாணிக் கோணி திடுக்கிட்டு எழுந்து ஒரு மூலையில் போய் மறைந்து தலை குனிந்து நின்றான். அந்த மோகினி அவதாரத்தைக் கண்ட பட்டாபிராம பிள்ளை மிகுந்த பிரமிப்பும், ஆச்சரியமும் அடைந்தார். ஆனாலும், அவர் அவளை உண்மையில் ஒரு ஸ்திரி என்றே மதித்தார் ஆகையால், அவளுடன் பேச விரும்பவும் இல்லை; அவளை மேன்மேலும் உற்று நோக்கவும் இல்லை. அவர் தமது கையில் வைத்திருந்த ஒரு சிவப்பு காகிதத்தை மனோன்மணிக்குக் காட்டி, “இதோ பார்த்தாயா? இது மன்னார்குடியில் இருந்து வந்த தந்தி; இது இப்போதுதான் வந்தது. இதைப் பார்த்த உடன் எனக்கு நிரம்பவும் திகில் உண்டாகிவிட்டது. உடனே புறப்பட்டு அவசரமாக வந்தேன்’ என்றார். அவர் பேசிய போதே, அவரது முகம் கைகால்கள் எல்லாம் மிகுந்த படபடப்பையும் கோபத்தையும் காட்டின. அவர் சென்னதைக் கேட்ட அவரது புதல்வி தந்தியைப் படியுங்கள் என்றாள்.

உடனே பட்டாபிராம பிள்ளை அதைப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

உங்கள் தந்தி ஆச்சரியத்தையும் கவலையையும் உண்டாக்கியது. என் சம்சாரத்துக்கு கோமளேசுவரன் பேட்டையிலாவது வேறு எந்த இடத்திலாவது தங்கை முதலிய உறவினர் இல்லை. சட்டைநாத பிள்ளை சிறையிலிருந்து வெளிப்பட்ட விவரம் பத்திரிகைகளின் மூலமாய் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவருடைய தம்பி முதலியோர் நம்மிடம் பகை வைத்திருப்பது சகஜமே. நம்முடைய பகைவர் ஏதாவது கெட்ட கருத்தோடு அவ்வாறு எங்கள் உறவினர் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கலாம். நீங்கள் அவர்களிடம் எச்சரிப்பாக நடந்து கொள்ளுங்கள். பெண்ணினிடம் எங்களைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லி அவளது மனதைக் கலைத்து இந்தக் கலியானத்தை நிறுத்தவோ, அல்லது, பெண்ணுக்கு ஏதாவது கெடுதல் செய்யவோ அவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகமே தோன்றுகிறது. நீங்கள் எச்சரிப்பாக நடந்து கொண்டு முடிவைக் கடிதத்தின் மூலம் எழுதுங்கள். -

வேலாயுதம் பிள்ளை.

என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படித்தவுடனே மனோன் மணியம்மாளுக்கு, அவர்கள் இந்தக் கலியாணத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று வந்த பகைவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நினைவே உண்டாயிற்று. கொடி முல்லையம்மாளாக வேஷந் தரித்திருந்த கந்தசாமியும் அந்தத் தந்தியின் விஷயத்தைத் தெரிந்து கொண்டான் ஆதலால், அவன் பெருத்த குழப்பமும் கவலையும் அடைந்தான். தாங்கள் வந்திருக்கும் விஷயத்தை டெலிபோன் மூலமாய் அறிந்து கொண்ட பட்டாபிராம பிள்ளை உடனே மன்னார்குடிக்குத் தந்தி அனுப்பி இருக்கிறார் என்றும் அவன் உடனே யூகித்துக் கொண்டான் ஆனாலும், தங்களது நிலைமை நிரம்பவும் விகாரப்பட்டுப் போனதையும், தான் கந்தசாமி என்பது அவருக்குத் தெரிந்து போகுமானால், அவர் தன்னைப்பற்றி நிரம்பவும் இழிவான அபிப்பிராயம் கொள்வார் என்பதையும் அவன் உணர்ந்து அளவற்ற கிலேசமடைந்து குன்றிப் போனான். கூடுமானால் கடைசி வரையில் தான் கந்தசாமி என்பதை வெளியிடாமல் எப்படியாவது தந்திரம் செய்து அவ்விடத்தில் இருந்து போய்விட வேண்டும் என்ற எண்ணமே அவனது மனதில் தோன்றியது. கீழே இருந்த கோபாலசாமி, வேலைக்காரப் பெண் முதலியோரது கதி என்னவாயிற்றோ என்றும், அவர்கள் எவ்விதமான வரலாற்றை வெளியிட்டார்களோ என்றும் அவன் நிரம்பவும் கவலையுற்றான்.

உடனே பட்டாபிராம பிள்ளை தமது புதல்வியை நோக்கிக் கண் ஜாடை காட்டி அழைக்க அவள் எழுந்து பட்டாபிராம பிள்ளை வாசற்படியண்டை நின்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்து திரும்பிப் பார்த்து, “கொடி முல்லையம்மா! இங்கிலீஷ்காரருடைய நாகரிகத்தையும் செய்கைகளையும் இழிவாகப் பேசினாயே!

மா.வி.ப.I-18 இப்போது பார்த்தாயா? இந்த டெலிபோனும் தந்தியும் எவ்வளவு பெருத்த உபகாரம் செய்தன என்பதை உணர்ந்தாயா? வெள்ளைக்காரர்கள் இப்படிப்பட்ட அற்புதமான யந்திரங்களைச் செய்து வைக்காவிட்டால், இந்தியர்கள் ஒருவரை ஒருவர் ஒரு நிமிஷத்தில் ஏமாற்றி வஞ்சகத்தில் அழுத்திவிட மாட்டார்களா! இறப்பு பிறப்பாகிய சக்கரத்தில் இருந்து விடுபட்டு பரமாத்மாவின் பாதத்தில் ஐக்கியம் அடைவதையே விரும்புகிறவர்களாகிய உங்களுடைய செய்கை எப்படி இருக்கிறதென்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நிரம்பவும் குத்தமாகவும் ஏளனமாகவும் மொழிந்துவிட்டுத் தனது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டாள்.

உடனே பட்டாபிராம பிள்ளை மனோன்மணியம்மாளை நோக்கி, “ஒகோ! அப்படியா இந்த அம்மாள் உன்னிடம் ஏதோ பெருத்த பிரசங்கம் செய்திருக்கிறாள் போலிருக்கிறது! இருக்கட்டும். இந்த அம்மாள் பெண் பிள்ளையாக இருப்பதால், நாம் எதையும் செய்வது சரியல்ல. கீழே இருந்த மனிதரை நான் கேட்டதற்கு அவர் சரியான தகவலே கொடுக்கவில்லை. இந்த அம்மாளும் உண்மையைச் சொல்லுவாள் என்று நான் நினைக்கவில்லை. நான் கச்சேரியில் இருந்து புறப்பட்டு வரும் முன் போலீசாருக்கு டெலிபோன் அனுப்பிவிட்டு வந்தேன். இன்னம் கொஞ்ச நேரத்தில் அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். கீழே இருக்கும் ஆண்பிள்ளையை அவர்களிடம் ஒப்புவித்து விடுவோம். அவர்களே உண்மையைக் கண்டுபிடிக்கட்டும். அது வரையில் இந்த அம்மாள் இவ்விடத்திலேயே இருக்கட்டும். நாம் போவோம் வா” என்று கூறிய வண்ணம் மனோன்மணியம்மாளை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியில் போய் அதன் கதவை மூடி வெளிப்பக்கத்தில் தாளிட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டார்.

அந்த அறையில் சிறை வைக்கப்பட்ட கந்தசாமியின் மன நிலைமையை யூகித்துக் கொள்வதே எளிதன்றி விஸ்தரித்துச் சொல்வது அசாத்தியமான விஷயமாகும். வெட்கம், துக்கம், அவமானம், இழிவு முதலிய உணர்ச்சிகள் அபாரமாக அவனது மனதில் பெருகி அவனை வதைக்கத் தொடங்கின. அவர்களே தங்களது வரலாற்றைக் கேட்டறிந்து கொண்டு தங்களை அனுப்பி விடுவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக அவர்கள் போலீசாரிடம் தங்களை ஒப்புவிக்கத் தீர்மானித்ததை நினைக்க நினைக்க, கந்தசாமியின் மனம் விவரிக்க இயலாதபடி தத்தளித்தது. போலீசார் வந்து கோபாலசாமியை விசாரித்தால், அவன் தங்களுக்கு அவமானம் ஏற்படாதபடி ஏதேனும் யுக்தி செய்வான் என்ற ஒரு தைரியமும் தோன்றியது ஆனாலும், எந்த நேரத்தில் தமக்கு எவ்விதமான இழிவு ஏற்படுமோ என்ற நினைவையே பிரதானமாகக் கொண்டு கவலையும் துயரமுமே வடிவெடுத்தது போல, அவன் ஒரு சோபாவின் மீது உட்கார்ந்து அப்படியே சாய்ந்துவிட்டான்.

அதன் பிறகு வெகு நேரம் கழிந்தது. எவரும் வந்து அந்த அறையின் கதவைத் திறக்கவே இல்லை. அஸ்தமன வேளையும் கடந்து, இரவிற்கு அறிகுறியான மங்கலான பிரகாசமும் இருளும் அந்த அறையில் சூழ்ந்து கொள்ளலாயின. அந்த அறையில் மின்சார விளக்கு இருந்ததை அவன் கண்டான் ஆதலால், அவன் எழுந்து ஒரு விளக்கைக் கொளுத்திவிட்டு, அதே சோபாவில் மறுபடி உட்கார்ந்து சாய்ந்தபடி சஞ்சலக் கடலில் ஆழ்ந்திருந்தான். இரவு மணி எட்டடித்தது. அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. ஒரு வேலைக்காரன் உள்ளே வந்து, “அம்மா! உனக்குச் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இங்கேயே படுத்துக்கொள். போலீசார் விசாரித்ததில் உன் புருஷர் இன்னும் நிஜத்தைச் சொல்லவில்லை. பொழுது விடிவதற்குள் அவர் உண்மையைச் சொல்லாவிட்டால் அதன் பிறகு அவர்கள் உங்களை ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் சிறையில் அடைக்கப் போகிறார்களாம். அது வரையில் நீயும் இங்கேயே இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு ஆகாரம் தண்ணிர் முதலியவற்றைக் கீழே வைத்துவிட்டு அறையின் கதவை மூடி வெளியில் தாளிட்டுக் கொண்டு போய்விட்டான். கோபாலசாமி அதுவரையில் போலீசாரிடம் உண்மையை வெளியிடாது இருந்தது ஒரு விதத்தில் நல்லதாகத் தோன்றினாலும், அவன் வேறு எவ்விதத்தில் தன்னைத் தப்புவிக்கப் போகிறான் என்ற கவலை தோன்றி வதைக்கத் தொடங்கியது. அவன் சோபாவில் சாய்ந்து சிந்தனை செய்தபடியே நெடு நேரம் இருந்து அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அவனுக்காக வைக்கப்பட்ட ஆகாரம் தண்ணிர் முதலியவை கையாலும் தொடப்படாமல் அப்படியே இருந்தன.

★⁠★⁠★

இரவு மணி பன்னிரண்டு இருக்கலாம். கந்தசாமி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக் கிடந்தான். தடதடவென்ற ஒரு பெருத்த ஒசை உண்டாயிற்று, அவன் இருந்த அறையின் கதவுகள் படேரென்று தரையில் விழுந்தன. கந்தசாமி திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். தான் இருந்தது இன்ன இடம் என்ற உணர்வுகூட அவனுக்குச் சரியாக உண்டாகவில்லை. அவன் தூக்கக் கலக்கத்தில் தனது கண்களைத் திறந்து பார்க்க, நிரம்பவும் விகாரமாக இருந்த நாலைந்து முரட்டு மனிதர்கள் கையில் கத்தி துப்பாக்கி முதலிய பயங்கரமான ஆயுதங்களோடு அந்த அறைக்குள் வந்திருப்பதாக அவன் உணர்ந்து, அது கனவோ உண்மையோ என்று சந்தேகித்தவனாய் அசையாது அப்படியே கண்களை மூடிப்படுத்திருந்தான். அவ்வாறு வந்த முரடர்களுக்கெல்லாம் முன்பாக வந்த நமது இடும்பன் சேர்வைகாரன் மற்றவர்களைப் பார்த்து, “மனோன்மணியம்மாள் அதோ இருக்கிறாள். அவள் விழித்துக் கொண்டு கூச்சலிட்டாலும் பாதகமில்லை. கீழே இருப்பவர்கள் எல்லாம் அப்படி இப்படி அசைய முடியாமலும் கூச்சலிட முடியாமலும் கட்டிப் போட்டிருக்கிறோம். சிசாவைப் பெண்ணின் மூக்கில் பிடியுங்கள்” என்றான்.

அந்தப் பயங்கரமான சொற்களைக் கேட்ட கந்தசாமி ஸ்தம்பித்து இன்னது செய்வதென்பதை உணராதவனாய் அப்படியே இருக்க, அடுத்த நிமிஷம் இரண்டு மூன்று முரடர்கள் அவனுக்கருகில் வந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டு குளோரபாரம் என்ற மயக்கம் உண்டாக்கும் மருந்திருந்த ஒரு சீசாவைக் கந்தசாமியின் மூக்கிற்கருகில் பிடிக்க, சிறிது நேரத்தில் கந்தசாமி ஸ்மரணை தப்பிப் பிணம் போலச் சாய்ந்து விட்டான். உடனே இடும்பன் சேர்வைகாரனும், சில ஆட்களுமாக முனைந்து கந்தசாமியைத் தூக்கிக் கொண்டு மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து, பங்களாவின் முன்னால் ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் வண்டியில் அவனைப் படுக்க வைத்தனர். உடனே இடும்பன் சேர்வைகாரனும் மற்றும் சிலரும் அதில் ஏறிக்கொள்ள, வண்டி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுக் கும்பகோணம் போகும் பாட்டையில் வாயுவேக மனோ வேகமாய்ப் பறக்கத் தொடங்கியது. பெண் வேஷம் தரித்திருந்த கந்தசாமியை மனோன்மணி என்று தவறாக எண்ணி இடும்பன் சேர்வைகாரன் அவனை அவ்வாறு கும்பகோணத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

6-வது அதிகாரம்

பாம்பு கடி - சாமியார் மரணம்

திகம்பரசாமியாரைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தி காட்டுத் தீ பரவுவது போல அதிதுரிதத்தில் மன்னார்குடிப் பட்டணம் முழுதும் பரவி, அதற்கு நாலா பக்கங்களிலும் இருந்த கிராமங்களுக்கும் எட்டியது. எவரும் சிறிதும் எதிர்பார்க்காத அந்த விபரீதச் செய்தியைக் கேட்ட ஜனங்கள் முற்றிலும் பிரமிப்பும் திகிலும் அடைந்து திடுக்கிட்டுப் போயினர். திகம்பரசாமியார் சகலமான அம்சங்களிலும் மற்ற சாதாரண ஜனங்களைவிட மேம்பட்ட அதிமாதுவடி சக்தி வாய்ந்த தெய்வீகப் புருஷர் என்ற அபிப்பிராயமே ஜனங்களது மனதில் நிலைத்து நாளுக்கு நாள் வேருன்றி வந்திருந்தது ஆகையால், சாதாரண மனிதருக்கு நேரக்கூடிய பாம்பு கடி முதலிய அருவருக்கத்தக்க அபாயங்கள், பரிசுத்த ஸ்வரூபியும், எக்காலத்திலும் திரிகரண சுத்தியாய்ப் பாவ வழியில் நடக்காதவருமான அந்த மகானுக்கு நேருமா என்ற ஐயமும் மலைப்பும் எல்லோரது மனதிலும் தோன்றி, அந்தச் செய்தி உண்மையானது தானோ, அல்லது, அவரது பகைவர் எவரேனும் கற்பனையாக வெளியிட்டுப் பரப்பிய பொய்யான வதந்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை உண்டாக்கின. திகம்பரசாமியார் ஆதியில் பெருத்த தனிகராய் இருந்து, தமது செல்வம் முழுதையும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் அநாதைகளுக்கும் உபயோகித்து அதனாலேயே வறுமை அடைந்தவர் என்ற செய்தியும், அதன்பிறகு அவர் கெளரவப் போலீஸ் உத்தியோகம் வகித்து, தமது தேகத்தைக் கொண்டும் அபாரமான அறிவையும் மனோபலத்தையும் கொண்டும் தமது உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் பரோபகாரத்திற்கே அர்ப்பணம் செய்து வருகிறார் என்ற செய்தியும், அவர் அவ்வாறு உத்தியோகம் வகித்த பிறகு துஷ்டர்கள் எல்லோரும் நாசம் அடைந்து விட்டார்கள் என்ற செய்தியும் சிறிய குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தமையால், எவ்விதமான கைம்மாறும் கருதாமல் மழையாகிய அமிர்தத்தைப் பெய்து உலகத்தோரைக் காப்பாற்றி ரகூஜிக்கும் மேகம் போலத் தங்களுக்கெல்லாம் கணக்கில் அடங்காத நன்மைகளைச் செய்து வரும் புண்ணிய மூர்த்தியான திகம்பர சாமியாரினது உயிருக்கே ஹானி ஏற்படக்கூடிய மகா விபரீதமான சம்பவம் நேர்ந்து விட்டதே என்ற பெருத்த துக்கமும் கலக்கமும் தோன்றி எல்லோரது மனத்தையும் புண்படுத்தி உலப்பத் தொடங்கின. அத்தகைய புனித குண புருஷரைத் தாம் இழந்து விடப் போகிறோமே என்ற ஏக்கமும், அவரில்லாவிடில் மறுபடியும் துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் தலையெடுத்து விடுவார்களோ என்ற கவலையும் தோன்றி வதைக்கலாயின. அவ்வாறு பரப்பப்பட்ட விபரீதச் செய்தி மெய்யானதோ பொய்யானதோ என்பதை நேரில் கண்டு அறிந்து நிச்சயிக்கவும், அவரைப் பாம்புகள் கடித்தது உண்மையாய் இருக்குமாயின், தெய்விகத் தன்மை வாய்ந்த அந்த உத்தம புருஷரது அருள் வழிந்த முகத்தைக் கடைசியாக ஒருமுறை தரிசித்து வரவும் எண்ணி, ஆண் பெண்பாலார் அனைவரும் தத்தம் இருப்பிடங்களை விட்டுப் புறப்பட்டு மன்னார்குடியை நோக்கி விரைந்து சென்று திகம்பர சாமியாரினது பங்களாவைச் சூழ்ந்து கொள்ளலாயினர். பற்பல சுற்றுக் கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் ஏராளமாகப் புறப்பட்டு ஓடிவந்த காட்சி, கடலை நோக்கிச் செல்லும் எண்ணிக்கை அற்ற ஆறுகளின் பெரு வெள்ளக்காட்சி போல இருந்தது. அவ்வாறு சாமியாரினது பங்களாவின் அருகில் வந்த ஜனங்களுள் ஒவ்வொருவரும் உள்ளே சென்று அவரைப் பார்க்கவும், தம் தமக்குத் தெரிந்த மருந்துகளைப் பிரயோகிக்கவும் ஆவல் கொண்டு உள்ளே நுழையத் தொடங்கினர். அவ்வாறு வந்து கூடிய ஜனத்திரளின் தொகை பல்லாயிரக் கணக்கில் பெருகி விட்டது. ஆகையால், உட்புறத்தில் எல்லோரும் ஒரே காலத்தில் நுழைவது சிறிதும் சாத்திய மற்ற காரியமாகி விட்டது. திகம்பரசாமியாரைப் பார்க்க வேண்டும் என்ற தடுக்க இயலாத ஆவலில், பெரும்பாலோர் மதில் சுவரின் மீது ஏறி உள்ளே குதித்தனர். மற்றவர் பங்களாவின் முன்புறத்தில் இருந்த இரும்புக் கதவுகளின் மேல் விழுந்து தள்ளவே, கதவுகள் சுவரோடு பெயர்ந்து விழுந்து விட்டன. அந்தப் பங்களாவின் வாசலில் எப்போதும் காவலாகவும், சாமியாரினது குற்றேவல்களைப் புரியவும் இருந்து வந்த ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் ஜனங்கள் உள்ளே வராமல் தடுத்து வெளியிலேயே இருக்கும்படி செய்யத் திறமையற்றவராய்க் கடைசியில் டெலிபோன் மூலமாக அந்த ஊர்ப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செய்தி அனுப்ப, கத்தி துப்பாக்கி முதலிய ஆயுதங்களோடு மேலும் பதினைந்து ஜெவான்களும் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் அங்கே தோன்றி ஜனங்களைக் கண்டித்தும் தடுத்தும் எல்லோரையும் வெளியிலேயே நிற்கச் செய்வதும் பகீரதப் பிரயத்தனமாக முடிந்தது. பங்களாவின் உட்புறத்தில் சாமியார் படுக்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் கதவு மூடப்பட்டிருந்தது. அவருக்கருகில், பிரபலமான பல இங்கிலீஷ் வைத்தியர்களும், நாட்டு வைத்தியர்களும், மாந்திரீகர்களும் கூடி அவருக்குரிய சிகிச்சைகளைச் செய்து கொண்டிருப்பதாகவும், சாமியார் ஸ்மரணை தப்பி ஒரே மயக்கமாய்ப் படுத்திருப்பதாகவும், அவரது நிலைமையில் எவ்வித குணமும் தெரியவில்லை என்றும், அவர் பிழைப்பது சந்தேகம் என்றும் போலீசார் ஜனங்களுக்கு அப்போதைக் கப்போது தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட ஜனங்கள் மிகுந்த கவலையும், கலக்கமும் அடைந்து கடவுளைத் தொழுவோரும், பலவிதமான மருந்துகளைச் சொல்வோருமாய், இருக்கை கொள்ளாமல் துடிதுடித்து நின்றனர். அத்தகைய தருணத்தில் நமது கண்ணப்பாவும், அவளது மனையாட்டியான வடிவாம்பாளும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் கலங்கிய மனதும், கண்ணீர் சொரிந்த வதனமும், பதறிய அங்கமும், மார்பில் வைத்த கரங்களும், அவிழ்ந்து அலங்கோலமாகத் தொங்கிய கேசமும் உடையவர்களாய் ஒட்டமும் நடையுமாக அவ்விடத்திற்கு ஓடி வந்து சேரவே, கண்ணப்பாவின் அடையாளத்தைக் கண்டு கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜனங்களை வேண்டி வழிவிடும்படி செய்து அவர்கள் இருவரை மாத்திரம் உள்ளே அனுப்ப முயற்சி செய்தார். அவரிடம் மிகுந்த நன்றி செலுத்திய கண்ணப்பா, “ஐயா! சுவாமியாருடைய நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? அவர் பிழைத்துக் கொள்வாரா? அவரோடு கூட யார் யார் இருக்கிறார்கள்? யாராவது தக்க வைத்தியர், மாந்திரீகர்கள் வந்து சிகிச்சை செய்கிறார்களா?” என்று விநயமாகக் கேட்க, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், “ஐயா! இப்போது நாம் எந்த விஷயத்தையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. அவர் பிழைத்தால், புனர் ஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பாம்பு கடித்தாலே மனிதன் உடனே மாண்டு போய் விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நான்கு சிறிய கருநாகங்கள் ஒரு மனிதரைக் கடித்தால், அவருடைய கதி என்ன ஆகும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். அவர் கண்களைத் திறக்காமல் அப்படியே கட்டை போலப் படுத்திருக்கிறார். வைத்தியம் மாந்திரீகம் எல்லாம் நடக்கின்றன. முடிவு எப்படி இருக்குமோ தெரியவில்லை” என்றார்.

கண்ணப்பா கவலையும் கலக்கமுமே வடிவமாக மாறிப் போய், “ஐயா! இப்போது தக்க வைத்தியர் யாராவது உள்ளே இருக்கிறாரா?” என்றான்.

சப் இன்ஸ்பெக்டர், “நம்முடைய இங்கிலீஷ் வைத்தியர் புஜங்கராவ் நாயுடு இருக்கிறார். அவர் நல்ல திறமைசாலி. அவருடைய வைத்தியத்தில், சாமியார் பிழைத்தால் உண்டு. மற்றவரால் ஒன்றும் சாயாதென்று நினைக்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட பக்கத்தில் இருந்த பலர் ஒரே காலத்தில் பேசத் தொடங்கி பற்பல அபிப்பிராயங்களையும் ஷராக்களையும் கூறலாயினர். அவ்விடத்தில் இருந்த ஒரு கிழவன், “ஆமா இந்த இங்கிலீஷ் வைத்தியர் பாம்பு கடிக்கு என்ன மருந்தைக் கொடுக்கப் போகிறார். அவர்கள் ஆடுகள் வெட்டுவது போல மனிதருடைய உடம்புகளை வெட்டி ஒட்டு வேலைகள் செய்வதில் திறமை சாலிகள்தான். அவர்களிடம் பாம்பு கடி, குஷ்டம், கூடியம், நீர் ரோகம், யானைக்கால், குன்மம் முதலிய வியாதிகளுக்கு மருந்தே இல்லையே. இந்த அபாயகரமான சமயத்தில் இங்கிலீஷ் வைத்தியரான புஜங்கராயரையும் அஜங்கராயரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தால், நோயாளியை நாமே கொன்ற பாவம் வந்து லபிப்பது நிச்சயம்” என்று நிரம்பவும் அலட்சியமாக அபிப்பிராயம் கூறினான்.

அதைக் கேட்ட இன்னொரு மனிதன் முன்னவனைக் காட்டிலும் அதிக புரளியாகப் பேசத்தொடங்கி, “ஏன் ஐயா அப்படிச் சொல்லுகிறீர்? இங்கிலிஷ் வைத்தியர்கள் பாம்புகடி முதலிய பிணிகளுக்கு வைத்தியம் செய்வதில்லையா என்ன? மந்திரம் கால், மதி முக்கால் என்கிறபடி, அவர்களிடம் நல்ல மருந்துகள் இல்லாவிட்டாலும், சமயோசிதமான தந்திரங்கள் அதிகமாக உண்டு. பாம்பு கடித்த உடனே, அந்த இடத்தை நெருப்பைக் கொண்டு தீய்த்து விடுவார்கள், அல்லது, அந்த இடத்திலேயே வெட்டி எறிந்து விடுவார்கள். விஷம் உடம்பில் பரவாமல் தடுக்கப்பட்டுப் போகும். அதுவும் நல்ல சிகிச்சை தானே” என்றார்.

அதைக் கேட்ட பலர் “பலே பலே” என்று கைகொட்டி நகைத்தனர். இன்னொருவன் பேசத் தொடங்கி, “ஆம், ஐயா! பாம்பு கடித்து கால் நாழிகைக்குள் விஷம் உடம்பு முழுதும் பரவி தலைக்கேறி விடுமே; அதற்குள், மனிதன் டாக்டரைத் தேடி, நெருப்பைத் தேடி, கத்தியைத் தேடி விஷத்தைத் தடுப்ப தென்றால் அது சாத்தியமான காரியமா? பாம்பு கடித்து கொஞ்சம் காலதாமதமாய்விட்டால், அவர்களுடைய சிகிச்சை உபயோக மற்றதாகி விடுகிறது. பாம்பு கழுத்து, முகம், வயிறு, முதலிய இடங்களில் கடித்து விட்டால், அந்த இடங்களை அறுத்து எறிவதுதான் சாத்தியமான விஷயமா? வைத்தியம் என்றால் மனிதருடைய உடம்பில் எந்த இடத்தில் விஷம் திண்டினாலும், திண்டி இரண்டொரு நாழிகைக்காலம் கழிந்திருந்தாலும், அந்த விஷத்தை நிவர்த்திக்கத்தக்க வைத்தியமாக இருக்க வேண்டும். அது இங்கிலிஷ் வைத்தியரால் முடியாத காரியம். அவர்களுடைய வைத்தியம் நிரம்பவும் படாடோபமானது; வீண் செலவு பிடிக்கக்கூடியது. குணம் உண்டாக்குவதிலோ முழுப்பூஜ்யமானது. உடம்பில் ஒரு கட்டி உண்டாயிருந்தால், அதை அறுத்து குணப்படுத்த மாதம் ஒன்றாகும். அதற்கு ரூ 200 செலவு பிடிக்கும். ஒரு பைசாகூடச் செலவில்லாத ஒரு மூலிகையைக் கொண்டு நாம் இரண்டே நாளில் கட்டியைப் பழுக்க வைத்து, உடையச் செய்து ஆற்றிவிடலாம்” என்றான்.

இன்னொருவன், “ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? சர்வ சாதாரணமான ஒரு விக்கலை எடுத்துக் கொள்ளுவோம். நம்முடைய இங்கிலீஷ் வைத்தியர் ஒர் அற்ப விக்கலை நிறுத்துவாரா, முதலில் சொல்லட்டும். அதன் பிறகு அவர் பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கட்டும்” என்றார். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், “அடே! ஏன் ஐயா வீணாக அளக்கிறீர்? நீங்கள் இங்கிலீஷ் வைத்தியர்களை மாத்திரம் துரவிக்கிறீர்களே. உங்களிடத்தில் மாத்திரம் விக்கலுக்கு என்ன மருந்திருக்கிறது? விக்கல் கொண்டவன் அவஸ்தைப்பட்டுத்தான் தீரவேண்டி இருக்கிறது. அல்லது கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கொஞ்ச நேரத்தில் அது நின்று போகிறது” என்றார்.

முன் பேசியவன் புரளியாக நகைத்து, “விக்கலென்றால், பல திணிசு விக்கல்கள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் நம்மவர்கள் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள். சிலருக்கு விக்கல் வந்தால், அது ஒரு வாரம் வரையில் போகாமல் இருந்து ஆளைக் கூடக் கொன்று விடும். அது நிரம்பவும் அபாயகரமான வியாதி: அப்படிப்பட்ட வியாதி ஒன்று இருப்பதாக இங்கிலீஷ் வைத்தியர் களுக்குத் தெரியவே தெரியாது. இந்தச் சாதாரணமான அற்ப விக்கலைப் போக்கவே அவர்களால் முடியாத போது பெரிய விக்கல்களுக்கு, என்ன மருந்தைக் கொடுக்கப் போகிறார்கள்” என்றான். சப் இன்ஸ்பெக்டர், “நம்முடைய வைத்தியத்திலும், விக்கலுக்கு மருந்திருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

கும்பலில் இருந்த இன்னொருவன், “சப் இன்ஸ்பெக்டர் ஐயா எந்த வைத்தியப் புஸ்தகத்தைப் படித்து இப்படிச் சொல்லுகிறாரோ தெரியவில்லை. விக்கல் மருந்தைப்பற்றி சொல்லப் பட்டுள்ள கவி குழந்தைக்குக்கூடத் தெரியுமே.

“எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்

கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும்

விட்டுப் போகும்; விடாவிடில் புஸ்தகம்

சுட்டுப் போடும்; சொன்னேனிது சத்தியம்”

என்ற பாட்டை இப்போதாவது இன்ஸ்பெக்டர் ஐயா பாடம் செய்து கொள்ளட்டும்” என்று பலத்த குரலில் கூறிவிட்டு கும்பலில் மறைந்து கொண்டான்.

அதைக் கேட்ட மற்ற ஜனங்கள் இங்கிலீஷ் வைத்தியத்தைப் பற்றி ஒருவித இழிவான அபிப்பிராயமும், நமது நாட்டு வைத்தியத்தைப் பற்றி மேலான அபிப்பிராயமும், தற்பெருமையும், உற்சாகமும் கொண்டு, தாம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரோடு, பேசுகிறோம் என்ற எண்ணத்தையும் மறந்து மூலைக் கொருவராய்த் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர்.

ஒரு மனிதன், “ஐயா! இந்த இங்கிலீஷ் வைத்தியரை முதலில் அனுப்பிவிட்டு, இதோ வலங்கைமானுக்குப் பக்கத்தில் உள்ள பாடாச்சேரியில் இருக்கும் அம்பட்ட மூக்கனை அழைத்துக் கொண்டு வாருங்கள். அவனிடம் ஒரு வேர் இருக்கிறது. அதை வேப்பெண்ணெயில் இழைத்து நாக்கில் தடவின மறு நிமிஷம் பாம்பின் விஷம் எல்லாம் பறந்து போகும் என்றான்.

இன்னொருவன், “ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். இதோ கோட்டுருக்குப் பக்கத்தில் பனையூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. அங்கே காளி கோவில் பூசாரி ஒருவன் இருக்கிறான். அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள். அவன் விபூதியை எடுத்து தலையில் இருந்து கால் வரையில் 3 தடவை தடவி விட்டால் உடனே விஷம் இறங்கிப் போகும். அவன் எத்தனையோ மனிதருக்குப் பாம்புகடிக்கு விபூதி போட்டு சொஸ்தப்படுத்தி இருக்கிறான். மனிதன் செத்துப் போய்விட்டால் கூட அவன் அந்தப் பிணத்தை எழுப்பி உட்காரவைத்துப் பேசச் செய்வான். வேறே யாரையும் கூப்பிட்டு அநாவசியமாகப் பொழுதைப் போக்காமல் உடனே ஒட்டமாக ஒர் ஆளை அவனிடம் முடுக்குங்கள். அவன் ஒருத்தன் வந்தால், அதுவே போதுமானது” என்றான்.

இன்னொருவன், “அவர்கள் எல்லோரும் வருகிற வரையில், உயிர் நிற்குமோ என்னவோ. அதெல்லாம் வேண்டாம். சிறியா நங்கைச் செடியைக் கொண்டு வந்து அதோடு கொஞ்சம் மிளகை வைத்து அரைத்து உடனே உள்ளுக்குக் கொடுங்கள். கால் நாழிகையில் சாமியார் தூங்கி விழிப்பவர் போல எழுந்து உட்கார்ந்து கொள்வார். இது நிச்சயம்” என்றான்.

இன்னொருவன், “நாம் நினைத்த மாத்திரத்தில் சிறியாநங்கை அகப்பட்டு விடுமா. அது அபூர்வமான மூலிகையல்லவா. யாராவது தோட்டங்களில் வைத்து வளர்த்திருந்தால்தான், அது எளிதில் கிடைக்கும். அது இப்போது எங்கே அகப்படப் போகிறது; அது வேண்டாம். வெப்பாலை குத்துப்பாலை என்று ஒரு செடி இருக்கிறது. அது சாதாரணமாக நம்முடைய ஆற்றோரங்களில் அகப்படும். அதன் இலையையும், மிளகையும் சேர்த்துக் கொஞ்சம் தண்ணி விட்டரைத்து உடனே கொடுங்கள். அதுவே போதுமானது” என்றான்.

வேறொருவன், “அந்தப் பச்சிலைக்குக் கூட நாம் அதிக தூரம் போக வேண்டும். அது வேண்டாம். குப்பமேனித்தழை, அப்பக் கோவத்தழை, மிளகு மூன்றையும் அரைத்துக் கொடுங்கள். இந்த மூலிகைகள் அநேகமாய் இந்த பங்களாவிலேயே கிடைக்கலாம்: கிடைக்காவிட்டால், விழும்பிப் பழமும் பச்சைவெண்ணெயும் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்” என்றான்.

அவர்களது சொற்களை எல்லாம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், இப்படி நீங்கள் எல்லோரும் வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டே போனால் எதைச் செய்கிறது என்பதே தோன்றாமல் பிரமிப்பு உண்டாகிவிடும். நீங்கள் சொல்லும் சாமான்கள் எல்லாம் அவசரத்துக்கு அகப்படக்கூடியவைகளாகவே தோன்றவில்லை” என்றார்.

வேறொருவன், “அவைகள் எல்லாம் அகப்படாவிட்டால், கடையில் கிடைக்கக்கூடிய மயில் துத்தத்தை வாங்கிப் பொடி செய்து மூக்கால் இழுக்கச் செய்யுங்கள். அதோடு சாமியாருடைய தலையில் ஜலத்தை விட்டுக்கொண்டே இருக்கச் சொல்லுங்கள். அவர் குளிர்கிறதென்று சொல்லுகிற வரையில், ஜலத்தை விட்டுக் கொண்டிருக்க வேண்டும்” என்றான்.

சிறிது தூரத்தில் நின்ற வேறொருவன் ஓங்கிய குரலாகப் பெசத் தொடங்கி, “அதெல்லாம் ஒன்றும் வேண்டாமையா! நான் சொல்வது இன்னும் சுலபமானது. நம்முடைய புகையிலை இருக்கிறதல்லவா. அது பச்சைப் புகையிலையாகக் கிடைக்குமானால், அது நிரம்பவும் சிலாக்கியமானது. அதன் சாறைப் பிழிந்து அரைக்கால் படி அல்லது வீசம்படி குடிக்கும்படி செய்யுங்கள்; உடனே வாந்தி உண்டாகும். விஷம் எல்லாம் வெகு சீக்கிரத்தில் பிரிந்து வெளிப்பட்டுவிடும். பச்சைப் புகையிலை அகப்படாவிட்டால், காய்ந்த புகையிலையைத் தண்ணி விட்டுச் சாறு பிழிந்து கொஞ்சம் வேப்ப எண்ணெய் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால், அதுவே போதுமானது” என்றான்.

அவனுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொருவன், “அதுகூட முரட்டு வைத்தியம்; வேறொன்றும் வேண்டாம். பெருங்காயம், உள்ளிப் பூண்டு, அரிதாரம், மிளகு, இந்துப்பு இவைகளைச் சமமாகச் சேர்த்து அரைத்துக் குளிகையாக்கி முலைப்பால் விட்டுக் கண்ணில் கலிக்கம் போட்டால், விஷம் எல்லாம் ஒரு நிமிஷத்தில் நிவர்த்தியாகி விடும். வேறு மருந்தே தேவையில்லை” என்றான்.

இப்படி ஜனங்கள் மழை பெய்வது போல மருந்து வகைகளையும் உண்ணும் முறைகளையும் சொல்லிக்கொண்டே போனதன்றி, ஒவ்வொருவரும் உள்ளே சென்று தத்தம் வைத்திய முறைகளைக் கையாள வேண்டும் என்ற ஆவலினால் தூண்டப்பட்டுத் துடிதுடித்து முன்னுக்கு வந்தனர். அவற்றை எல்லாம் கேட்டபடி சிறிது நேரம் அவ்விடத்தில் நின்ற பிறகு கண்ணப்பா வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு பங்களாவிற்குள் நுழைந்தான். வேலாயுதம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும் திகம்பர சாமியாருக்கும் அன்னியோன்னியமான நட்பு உண்டென்பது போலீஸ் ஜெவான்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் ஆதலால், கண்ணப்பாவும் அவனது மனையாட்டியும் உள்ளே செல்வதை எவரும் தடுக்காமல், அவர்களை மரியாதையோடு உட்புறம் அனுப்பினர். .

உள்ளே சென்ற அவ்விருவரது மனமெய்களின் நிலைமை விவரிப்பதற்கு முற்றிலும் அரிதாக இருந்தது. சட்டைநாத பிள்ளை என்ற பெரிய கொடிய காட்டு விலங்கின் பயங்கரமான குகைக்குள் அகப்பட்டு, வேறு எவராலும் மீட்க இயலாத பரம சங்கடமான நிலைமையில் இருந்த பெண்மானான வடிவாம்பாளை, அரும்பாடுபட்டு அற்புதச் செயல்களை முடித்து விடுவிக்கவும், அவளைக் கண்ணப்பா மணக்கவும் காரண பூதராக இருந்த திகம்பர சாமியாரை அவர்கள் இருவரும் சதா காலமும் வாழ்த்தி, தெய்வம் போல மதித்து வணங்கி, அவரது விஷயத்தில் அளவற்ற பயபக்தி விசுவாசத்தை வளர்த்து வந்தவர்கள் ஆதலால், அத்தகைய உயிருக்குயிரான மனிதர் இறந்துபோகப் போகிறார் என்ற செய்தியானது, அவர்களைக் கட்டுக்கடங்காது தத்தளிக்கச் செய்து, அவர்களது உயிரை முற்றிலும் ஆட்டிவிட்டது. அந்த விபரீதமான சந்தர்ப்பத்தில் தாம் என்ன செய்வது என்பதையும், அவரை எப்படிப் பிழைக்கச் செய்வதென்பதையும் சிறிதும் உணரமாட்டாதவராய், சித்தப்பிரமை கொண்டு மதிமயக்கம் அடைந்து பைத்தியக் காரர்களைப் போல மருள மருள விழித்துக் கொண்டே உள்ளே நடந்தனர். வெளியில் நின்ற ஜனங்கள் பாம்பு கடியை வெகு சுலபமாக மதித்து, அதற்குப் பல மருந்துகளைச் சொன்னார்கள் ஆனாலும், பாம்பு விஷந் தீண்டப்பெற்ற மனிதர் தப்பிப் பிழைப்பது மகா துர்லபமான விஷயம் என்ற நினைவு அவர்களது மனதில் முக்கியமாக எழுந்தெழுந்து வதைத்துப் புண்படுத்திக் கொண்டிருந்தது ஆகையால், அவர் அநியாயமாக இறந்து போய் விடுவாரோ என்ற பயமே மும்முரமாய்த் தோன்றி மேலாடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகால் மரித்து விடுவாரானால், அது தங்களுடைய ஆயிசு காலம் முழுதும் மாறாத பெருந் துயரமாக இருக்குமே என்றும், அதன் பிறகு உலகமே பாழ்த்துப் போனது போலாகிவிடுமே என்றும், அதன் பிறகு என்ன செய்வது என்றும், எப்படி உய்கிறதென்றும் அப்போதே நினைத்து நினைத்து அபாரமான திகிலும் ஏக்கமும் சஞ்சலமும் கொண்டு நெருப்புத் தனல்களின் மேல் நடந்து செல்வோர் போலத் தத்தளித்துத் தயங்கித் தயங்கி உட்புறம் சென்றனர். அவர்களது தேகம் கட்டுக்கடங்காமல் பதறிப் படபடத்து ஒய்ந்து ஒரே தவிப்பு மயமாக இருந்தது. தாம் உள்ளே போனவுடன் எவ்விதமான கெட்ட செய்தியைக் கேட்க நேருமோ என்ற நினைவும், சாமியாரை எத்தகைய பரிதாபகரமான நிலைமையில் காணவேண்டி இருக்குமோ என்ற அச்சமும், கவலையும் தோன்றி அவர்களது கால்களைப் பின்புறம் இழுத்தன. ஆனாலும், அவர் பக்கத்தில் இழுத்துக் கொண்டே போனது. அத்தகைய நிலைமையில் தமது தாய் தந்தையர்கள் இல்லாமல் வெளியூருக்குப் போயிருக்கிறார்களே என்ற நினைவும், அவர்கள் வருவதற்குள் ஒருகால் ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடுமோ என்றும், கண்ணப்பா பெரிதும் கவலையுற்றுக் கலங்கி உருகினான். தாம் ஓடிவந்த கலவரத்தில், வடிவாம்பாளின் தாய் தகப்பன்மார்களான சிவக்கொழுந்தம்மாளுக்கும், சுந்தரம் பிள்ளைக்கும் அந்தச் செய்தியைச் சொல்லி அனுப்ப மறந்து வந்து விட்டோமே என்ற விசனமும் ஒரு புறத்தில் மனதை உலப்பியது. அத்தகைய பரம சங்கடமான நிலைமையில் அவ்விரு இளையோரும் பங்களாவின் உள்புறக் கட்டிடத்தை அடைந்து, முன் தாழ்வாரத்தில் ஏறினர். அவ்விடத்தில் ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் மிகுந்த கவலையும் மனக்குழப்பமும் பிரமையும் தோற்றுவித்த முகத்தினராய் நின்றனர். அவர்கள் கண்ணப்பர் இன்னான் என்பதைக் கண்டுகொண்டு, யாதொரு தடையும் செய்யாது அவர்கள் இருவரையும் நேராக உள்ளே போக அனுமதித்தனர். திகம்பரசாமியார் அந்த பங்களாக் கட்டிடத்தின் நடுமத்தியில் பல அறைகளுக்குள் அறையாக அமைந்திருந்த அந்தரங்கமான ஒரு விடுதியிலேயே எப்போதும் இருப்பது வழக்கம் என்பது கண்ணப்பாவுக்குத் தெரிந்த விஷயம் ஆதலால், அவ்விடத்திலே தான் அவர் இருக்க வேண்டும் என்று அவன் அனுமானித்துக் கொண்டான். ஆனாலும், அவன் போலீசாரை நோக்கி, “ஐயா! சாமியார் எந்த இடத்தில் படுத்திருக்கிறார்?” என்று வினவினான்.

ஒரு போலீஸ்காரன், “அவர் எப்போதும் இருந்து அலுவல் பார்க்கும் அறையிலேதான் இருக்கிறார்; நீங்கள் நேராக அங்கே போகலாம்” என்றான்.

கண்ணப்பா, “அங்கே வேறே மனிதர் யார் யார் இருக்கிறார்கள்? இப்போது அவருடைய நிலைமை எப்படி இருக்கிறது?” என்றான்.

போலீஸ்காரன், “அந்த அறைக்குள் அவருடைய சம்சாரமும் வேலைக்காரியும் நிரம்பவும் திறமைசாலிகளான நாலைந்து வைத்தியர்களும் மந்திரவாதிகளும் இருக்கிறார்களாம். அவருடைய வேலைக்காரிதான் அடிக்கடி வெளியில் வந்து அவருடைய நிலைமை எப்படி இருக்கிறதென்ற விவரங்களை எங்களுக்குத் தெரிவித்துவிட்டுப் போகிறாள். கடைசியாக அவள் இப்போதைக்குக் கால் நாழிகைக்கு முன்னேதான் வந்து நாங்கள் கடையில் இருந்து வாங்கி வந்த சில மருந்து சாமான்களை உள்ளே எடுத்துக் கொண்டு போனாள். வைத்தியர்கள் நிரம்பவும் பிரயாசைப்பட்டுப் பலவிதமான சிகிச்சைகளும் தந்திரங்களும் செய்கிறார்களாம். சாமியார் முற்றிலும் பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாராம். அவர் பிழைத்தால், அது புனர்ஜென்மம் என்று வைத்தியர்கள் எல்லோரும் சொல்லுகிறார்களாம். என்ன செய்கிறது. இந்தக் கலிகாலத்தில் கிடைத்த அருமையான உத்தம புருஷருக்கு இப்படிப்பட்ட எதிர்பார்க்காத கொடுமை சம்பவித்திருக்கிறது. என்னவோ தெய்வந்தான் அந்த உத்தமியின் மாங்கலியத்தைக் காப்பாற்ற வேண்டும். அவர் இதுவரையில் செய்துள்ள புண்ணியம் அபாரமானது. அதுவாவது அவரைக் காக்காதா பார்க்கலாம். அவருடைய உயிருக்கு ஏதாவது ஹானி நேர்ந்து விடுமானால், முக்கியமாக எங்கள் இலாகாவுக்கே அசாத்தியமான நஷ்டமும் அசெளகரியங்களும் ஏற்படும். போலீஸ் இலாகாவிற்கே ஒரு சிரோரத்னம் போல விளங்கி வரும் இந்த மகான் போய் விட்டால், எங்கள் இலாகாவின் பெயரும் கீர்த்தியும் பெருமையும் அமாவாசையின் இரவு போல இருளடைந்து மங்கிப் போவது நிச்சயம். சட்டைநாத பிள்ளையாகிய பரமதுஷ்டன் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிவந்திருக்கிறான், அவனைக் கண்டுபிடிப்பது முதலிய அரிய காரியங்களை முடிக்க வேண்டிய இந்த மகா இக்கட்டான வேளையில் இவர் போய்விடுவாரானால், எங்கள் பாடுதான் திண்டாட்டமாகிவிடும். நீங்கள் சீக்கிரம் உள்ளே போய், எப்படியாவது பாடுபட்டு சுவாமியாரைப் பிழைக்கச் செய்யுங்கள். போங்கள்” என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினான்.

அவனது சொற்களைக் கேட்ட உடனே கண்ணப்பா வடிவாம்பாள் ஆகிய இருவரது மனமும் கண்களும் நிரம்பவும் கலங்கின. அவர்கள் இருவரும் அதற்கு மேலும் அவ்விடத்தில் நின்று காலஹரணம் செய்ய சகியாதவராய் அவ்விடத்தை விட்டு உள்ளே நுழைந்து பல தாழ்வாரங்களையும் அறைகளையும் கூடத்தையும் கடந்து விரைவாக நடந்து திகம்பர சாமியாரினது ரகசிய விடுதியின் வாசலை அடைந்தனர். எங்கும் நிசப்தமே மயமாக நிறைந்திருந்தது. இடைவழி முழுதும் நிர்மாதுஷ்யமாகக் காணப்பட்டது. அந்த நிலைமை பின்னால் நேரப்போகும் விபரீதமான சம்பவத்திற்கு முன்னறிகுறியோ என்ற நினைவே அவ்விருவரது மனதிலும் தோன்றித் தோன்றி மறைந்தது ஆனாலும், அத்தகைய அசுபமான நினைவை அவர்கள் தங்களது மனதைவிட்டு விலக்க முயன்று கொண்டே செல்ல, திகம்பரசாமியாரது அந்தரங்க விடுதியான வாசலில் துயரமே வடிவாகத் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவரது வேலைக்காரி அவர்களது திருஷ்டியில் பட்டனள். அவளது பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டவுடனே

மா. வி. ப.I- 19 அவர்களது மனம் கட்டில் அடங்காமல் அபாரமாகப் பொங்கி எழுந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிக் கன்னங்களின் மீது தாரை தாரையாக வழிந்து இறங்க ஆரம்பித்தது. வடிவாம்பாள் மிகுந்த ஆவலோடு அவளண்டை ஒடி, “நாச்சியாரம்மா! ஐயா பிழைத்துக் கொள்ளுவாரா? நீ ஏன் வெளியில் உட்கார்ந்திருக்கிறாய்? எஜமானியம்மாள் எங்கே இருக்கிறார்கள்? கதவு சும்மாதானே மூடப்பட்டிருக்கிறது?” என்றாள்.

அவர்கள் இருவரும் வந்ததைக் கண்டு வடிவாம்பாள் கூறிய சொற்களைக் கேட்ட வேலைக்காரி கட்டிலடங்கா மீன உணர்ச்சியும் சங்கடப் பெருக்கும் அடைந்து சரேலென்று எழுந்து, “அம்மா! வாருங்கள்! வாருங்கள்! ஐயாவுக்கு இப்படிப்பட்ட அபாயம் நேரும் என்று நாங்கள் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லையம்மா! இன்று காலையில் வழக்கம் போல எழுந்து, ஸ்நானம் செய்து நியம நிஷ்டை அநுஷ்டானங்களை எல்லாம் முடித்துக் கொண்டவர்கள் தாகத்துக்குத் தண்ணீர்கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் இப்படிப்பட்ட அவகேடு வந்து விட்டதே! இந்த அநியாயக் கொடுமையை என்னவென்று சொல்லுகிறது! ஆண்டவன் என்ன வழிவிடுவாரோ தெரிய வில்லையே! உள்ளே நாலைந்து வைத்தியர்கள் இருந்து படாத பாடெல்லாம் படுகிறார்கள். ஐயா இன்னமும் கண்ணைத் திறந்து கூடப் பார்க்கவில்லை. மனிதர் கூப்பிடுவதுகூட உறைக்காமல் ஸ்மரணை தப்பிப் போயிருக்கிறது. எஜமானியம்மாள் அழுதழுது அப்படியே உட்கார்ந்து போய்விட்டார்கள். ஐயாவுக்கு முன் அம்மாளுடைய உயிரே போய்விடும் போலிருக்கிறது. அடிக்கடி பலர் உள்ளே வந்து பேச்சுக் கொடுப்பது கூடாதென்று வைத்தியர்கள் சொன்னார்கள் ஆகையால், கதவு உள் பக்கத்தில் தாளிடப்பட்டிருக்கிறது. யாராவது வந்தால் தகவல் தெரிவித்து உள்ளே அனுப்பவோ வெளியில் அனுப்பவோ ஆக வேண்டு வதைச் செய்கிறதற்காக என்னை இங்கேயே உட்கார வைத்திருக்கிறார்கள். உங்களை எல்லாம் அழைத்து வரும்படி ஆள்களை அனுப்பும்படி எஜமானியம்மாள் சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், நான் சேவகர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்து ஆள்களை அனுப்பச் சொல்லிவிட்டு வந்தேன். நல்ல வேளையாக அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்” என்றாள்.

அவள் கூறிய உருக்கமான சொற்களைக் கேட்கவே, வந்த இருவர்களினது இருதயமும் துக்கத்தினால் பொங்கிப் படீரென்று வெடித்து விடுமோ என்ற அஞ்சத்தகுந்த நிலைமையை அடைந்துவிட்டது. இருவரும், “ஆ! தெய்வமே! இப்படியும் சோதனை செய்வாயா!’ என்று வாய்விட்டுக் கதறி அங்கலாய்த்துக் கொண்டனர். இருவரது தேகமும் தள்ளாடிக் கீழே வீழ்ந்து விடுமோ என்று தோன்றக்கூடிய நிலைமையை அடைந்தது. அவர்களுக்குத் தாம் என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாது, அவர்கள் இருவரும் மெளன ரூபமாய் இருந்த கரைகாணாத பெருத்த துக்கசாகரத்தில் அழுந்திப் போய் வேதனையாகிய நூறாயிரம் முதலைகளால் அல்லல்படுத்தப் பெற்று நிற்க, உடனே வேலைக்காரி கதவண்டை மெதுவாகப் போய் அதை இரண்டொரு முறை தட்டி, “அம்மா! அம்மா! வடிவாம்பாள் அம்மாவும் அவர்களுடைய எஜமானரும் வந்திருக்கிறார்கள். கதவைத் திறவுங்கள்” என்று தணிவான குரலில் கூறினாள். அடுத்த நிமிஷத்தில் உட்புறத்தில் இருந்து ஒரு மிருதுவான குரல் உண்டாயிற்று, “அவர்களோடு இன்னம் வேறே யார் வந்திருக்கிறார்கள்?” என்று திகம்பர சாமியாருடைய மனைவி கேட்பதாகத் தெரிந்தது. உடனே வேலைக்காரி, “அவர்கள் இரண்டுபேர் மாத்திரம்தான் வந்திருக்கிறார்கள். வேறே யாருமில்லை” என்றாள்.

அடுத்த கூடிணத்தில் உள் தாழ்ப்பாள் மெதுவாக விலக்கப் பட்டது. கதவும் சிறிதளவு திறந்து கொண்டது.

தாங்கள் குலதெய்வம் போலவும் உயிருக்குயிராகவும் மதித்துள்ளதிகம்பர சாமியார் உயிருக்கு மன்றாடிக் கிடக்கும் சகிக்க இயலாத பரம சங்கடக் காட்சியைத் தாம் அடுத்த கூடிணத்தில் கண்ணால் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் உடனே அவர்கள் இருவரது மனதிலும் உதிக்கவே, அவர்களது துக்கமும் வேதனையும் மலைபோலப் பெருகி அவர்கள் இரண்டொரு நிமிஷ நேரம் தலை சுழன்று மயங்கி நிற்கும்படி செய்தது. அவர்களது தேகம் ஆகாயத்தில் பறப்பது போலத் தோன்றியதே அன்றி, தாங்கள் பூமியில் நடக்கிறோம் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றவில்லை. “கதவு திறந்திருக்கிறது. உள்ளே போங்கள்” என்று வேலைக்காரி கூறிய வார்த்தையைக் கேட்ட பிறகே, அவர்களுக்குத் தங்களது சுயநினைவு சிறிதளவு தோன்றியது. அவர்கள் இருவரும் மடை திறந்து விட்டது போலத் தமது கண்களில் இருந்து வெள்ளமாகப் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தமது வஸ்திரத் தலைப்பினால் துடைத்தபடி தமது முகத்தை மூடிக்கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் மார்பில் இருந்து கிளம்பிய துக்கப் பெருக்கை அடக்க இயலாது அவர்கள் இருவரும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினர். ஒரு பக்கத்தில் காணப்பட்ட கட்டிலின் மேல், சாமியார் முற்றிலும் பிரக்ஞையற்று பினம் போலப் படுத்திருந்த காட்சி, அவர்களது கண்ணில் படவே, அவர்களது மனதில் எழுந்த சொற்கள் வெளிப்படாமல் தொண்டையில் விக்கிப் போயின. கால்கள் தள்ளாடத் தொடங்கின; உடம்பு கை முதலிய அங்கங்கள் எல்லாம் வெட வெடவென்று நடுங்கிப் பதறுகின்றன. இருவரும் கன்றைப்பிரிந்து கூடிய பசுவைப் போல ஒலமிட்டு அலறத் தொடங்கி, “ஐயோ! தெய்வமே! என்ன காரியம் செய்து விட்டாய்! எங்களுக்கெல்லாம் உயிர்த் தெய்வமாக விளங்க வேண்டும் என்று அவதாரம் எடுத்து வந்து இதுவரையில் இருந்து திடீரென்று எங்களை எல்லாம் துக்கக்கடலில் ஆழ்த்திவிட்டுப் போய்விட நினைத்தாயா? ஐயோ! தெய்வமே! இது தருமமா இது உனக்கு அடுக்குமா?” என்று கூறித் தவித்தவர்களாய்க் கட்டிலண்டை பாய்ந்தனர். அவர்களது அபாரமான துயரப் பெருக்கில் அந்த அறையில் இன்னும் யார் யார் இருக்கிறார்கள் என்பதையாவது, தங்களுக்குக் கதவைத் திறந்துவிட்ட அவரது மனையாட்டியான சிவகாமியம்மாளை அவர்கள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. மறுபடியும் கதவு மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டது. அவ்வாறு தாளிட்ட சிவகாமியம்மாள் வந்தவர்களோடு பேசாமல் அவ்விடத்தை விட்டு பக்கத்தில் இருந்த வேறோர் அறைக்குள் போய்விட்டாள்.

அவ்வாறு இரண்டொரு நிமிஷ நேரம் கழிந்தது. கண்ணப் பாவும், வடிவாம்பாளும் ஒருவாறு தங்களது சுயநினைவை அடைந்து தங்களது முகத்தில் இருந்த துணியை விலக்கிவிட்டு திகம்பரசாமியாரையும், அந்த அறையையும் கவனித்துப் பார்க்கலாயினர்.

திகம்பரசாமியார் அசைவற்றுப் பிணம் போலவே கிடந்தார். ஆனால் அந்த அறையில் வேறே மனிதர் எவரும் தென்படவில்லை. போலீசாரும், வேலைக்காரியும் கூறியபடி வைத்தியர்களாவது மந்திரவாதிகளாவது காணப்படவே இல்லை. தங்களுக்குக் கதவைத் திறந்து விட்டது சிவகாமியம்மாள் என்ற நினைவு அவர்களது மனதில் நன்றாக உண்டானது ஆனாலும், அவள் தங்களோடு பேசாமல் எங்கே போயிருப்பாள் என்ற சந்தேகமும் ஆச்சரியமும் உண்டாயின. யாரும் அவ்விடத்தில் இருந்து சந்தடி செய்யக்கூடாதென்றும், சாமியார் நிச்சலனமாகப் படுத்திருக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் ஒருகால் கண்டித்துச் சொல்லி ஏதாவது மருந்து கொடுத்துவிட்டு அப்பால் போய் உட்கார்ந்திருப் பார்களோ என்ற சந்தேகம் உதித்தது. விஷயம் அப்படியாக இருந்தால், சிவகாமியம்மாள் அந்தத் தகவலை தங்களுக்கும் தெரிவித்துத் தங்களையும் அப்பால் கூட்டிக்கொண்டு போவதே சகஜமாக நடக்கக்கூடிய காரியமன்றி, தங்களோடு முகங் கொடுத்துக்கூடப் பேசாமலும், தங்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமலும் அப்பால் போகவே முகாந்திரம் இல்லை என்ற எண்ணம் அவர்களது மனதில் உதித்தது. உண்மை இன்னதென் பதைத் தெரிந்து கொள்ளாமல் தாம் அவ்விடத்தில் பேசிச் சந்தடி செய்தால், அது சாமியாருக்கு உபத்திரவமாக முடிந்தாலும் முடியலாம் என்ற நினைவும் தோன்றியது ஆகையால், தாங்கள் அப்போது என்ன செய்வதென்பதை அறியாமல் அவர்கள் இருவரும் அசைவற்றுத் தயங்கிச் சிறிது நேரம் அப்படியே நின்றனர். சாமியாரது தேக நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும், அவர் பிழைக்கக் கூடிய சின்னம் ஏதாவது உண்டாயிருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெரிதாக எழுந்து வருத்தலாயிற்று. கண்ணப்பா சந்தடியின்றி மெதுவாக நடந்து கட்டிலை அணுகி சாமியாரினது முகத்தை உற்று நோக்கினான். அவர் அயர்ந்து சுரணையற்று ஆழ்ந்து தூங்குவது போன்ற தோற்றம் தென்பட்டது. தாம் அவ்விடத்தை விட்டுப் பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து கொண்டு சிவகாமியின் இடத்திற்காவது அல்லது தாம் வந்த வாசற்படியின் கதவு திறந்து கொண்டு வெளியில் உள்ள வேலைக்காரியின் இடத்திற்காவது போய், உண்மையைத் தெரிந்து கொள்ளலாமா என்ற யோசனை தோன்றியது. ஆனாலும், தாம் கதவைத் திறந்து ஒசை செய்வது ஒருவேளை சாமியாருக்குத் துன்பகரமாக இருக்குமோ என்ற நினைவும் உண்டானது ஆகையால், எதையும் செய்ய மாட்டாமல் அவர்கள் தயங்கிக் கற்சிலைகள் போல அப்படியே நின்றனர். அவ்வாறு கால் நாழிகை காலம் கழிந்தது.

சாமியாரது தூக்கம் கலைவது போலத் தோன்றியது. அவர் தமது கைகளை அசைக்கவும் உடம்பை அப்புறம் இப்புறம் புரட்டவும் ஆரம்பித்தார். ஆனால் கண்கள் மாத்திரம் மூடப்பட்டபடி இருந்தன. அவர் தாமாகவே கண்களைத் திறந்து கொள்வார் என்றும், அதன் பிறகே தாம் அவரோடு பேச வேண்டும் என்றும், கண்ணப்பாவும் வடிவாம்பாளும் நினைத்துக் கொண்டு அசையாமலும் ஒசை செய்யாமலும் சாமியாரை உற்று நோக்கியபடி நின்றனர். அவரது உடம்பு மறுபடியும் அசையாமல் ஒய்ந்து அசைவற்றுப் போயிற்று. மேலும் கால் நாழிகை காலம் கழிந்தது. அவர் திரும்பவும் தமது கைகளைத் துக்கி அப்புறம் இப்புறம் போட்டு உடம்பைத் திருப்பினார். அவ்வாறு அவர் செய்ததில் இருந்து, அவர் சொற்ப பாகம் பிரக்ஞையோடு இருந்ததாக அவர்கள் இருவரும் யூகித்துக் கொண்டனர். சாமியாரது உண்மையான தேக நிலைமையை அறிந்து கொள்ளாமல் அதற்கு மேலும் அப்படிப்பட்ட சம்சயமான நிலைமையில் இருக்க அவர்களது மனம் இடங்கொடுக்காமல், ஆவல் கொண்டு பதறியது ஆதலால், தாம் அவரோடு பேச்சுக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் சைகை செய்து கொண்டனர். உடனே கண்ணப்பா தணிவான குரலில் பேசத்தொடங்கி, “சுவாமீ. சுவாமீ உடம்பு எப்படி இருக்கிறது?” என்று நிரம்பவும் மிருதுவாக வினவினான். அந்த வார்த்தைகளைக் கேட்ட திகம்பரசாமியார் தமது கண்களை மெதுவாக திறந்து பார்த்து, கண்ணப்பாவும் வடிவாம்பாளும் வந்திருப்பதை உணர்ந்து உடனே தமது பார்வையை நாற்புறங்களிலும் செலுத்திக் கதவுகளைக் கவனித்தார். பிறகு அவர் தமது முழு வாத்சல்யமும் முகத்தில் தோன்ற, அவர்களை நோக்கி, “வாருங்கள் தம்பி வா குழந்தை! இப்படி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் தம்பி” என்று கூற, உடனே கண்ணப்பா அவருக்கருகில் போடப் பட்டிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். வடிவாம் பாள் அவனுக்குப் பின்னால் போய் நாணிக்குனிந்து நின்ற வண்ணம் பேசத் தொடங்கி, “சுவாமிகளே உடம்பு இப்போது என்ன செய்கிறது? விஷம் குறைந்து கொண்டு வருகிறதா? எங்கே வைத்தியர்கள் ஒருவர்கூட இல்லையே? எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?” என்று நிரம்பவும் உருக்கமான குரலில் கூறினாள்.

அதைக் கேட்ட சுவாமியார் தணிவாக ஹீனக் குரலில் பேசத் தொடங்கி, “குழந்தாய்! மனிதருடைய உடம்பு என்றைக்காவது ஒரு தினம் இறந்துபோகக் கூடியதே அன்றி, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடியதல்லவே. மனித ஜென்மம் நம்முடைய அனுமதி இல்லாமல் தானாக உண்டாகிறது; கொஞ்ச காலத்தில் நாம் எதிர்பார்க்காத போது தானாகவே அது போய்விடுகிறது. மாயமாகிய திரைக்கு மறைவில் எவனோ ஒருவன் இருந்து கொண்டு தன்னுடைய ஆக்ஞையாகிய ஒரு சக்தியால் மனிதன் உற்பத்தியாகும்படி செய்கிறான். “நான் நான்” என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும், இந்த உலகத்தில் பிறக்கும் முன் எங்கே இருந்தார்கள்! தாய் வயிற்றில் எப்படிப் புகுந்து, யாருடைய தயவினால் பத்துமாத காலம் இருந்து வளர்ந்து, பிறகு வெளிப்பட்டார்கள் என்பதையே தெரிந்து கொள்ள முடிகிறதில்லை. “நான் நான்” என்று சொல்லிக் கொள்ளும் இந்த உடம்பில் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்து, ரத்தம், மாமிலம் முதலிய ஏழுவகை தாதுக்களாக மாறியிருக்கின்றன என்பதும் தெரிகிறதில்லை. மண்ணில் இருந்து விளையும் அரிசியும், தண்ணிரில் இருந்து வரும் உப்பும், ஆகாயத்தில் இருக்கும் காற்றும், மரஞ்செடிகளில் இருந்து வரும் காய்கறிகளும் ஒன்றாகக் கூடி மனிதருடைய உடம்பாக மாறி இருக்கின்றன என்பது நமக்குப் பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. உலகத்தில் உள்ள அரிசி உப்பு முதலிய வஸ்துக்கள் எல்லாம் இப்படி ஒன்று கூடி வேறு புதுமையான ரூபமடைந்து நான் நான் என்று பாத்தியங் கொண்டாடிக் கொஞ்ச காலத்தில் அழிந்து போவதைத் தவிர நாம் வேறே எதையும் பார்க்க முடிகிறதில்லை. அவைகள் அழிந்து போவதைத் தடுக்கவும் நம்மால் ஆகிறதில்லை. நாம் பூலோகத்தில் உதிப்பதும், வளர்வதும், இறப்பதும் நம்முடைய சக்தியில் அடங்கிய காரியங்கள் அல்ல. அவை யாருடைய சக்தியினால், என்ன உத்தேசத்தோடு நடைபெறுகின்றன என்பதும் தெரிகிறதில்லை. இப்படி ஏற்படும் தேகம் நம்முடையது நம்முடையது என்று நாம் அறியாமையினால் உரிமை பாராட்டி, அது அழிந்து போவதைப்பற்றி விசனப்படுகிறோம். இப்படி நாம் விசனமாவது, கவலையாவது கொள்வதனால், ஏதாவது உபயோகம் உண்டா? மாயத்திரையின் மறைவில் இருந்து நடைபெறும் ஆக்ஞா சக்கரத்தின் வேலை நடந்துகொண்டுதான் போகிறது. மனிதன் விசனப்படுவதெல்லாம் வியர்த்தமாகத்தான் முடிகிறது. அவன் தனக்கு அருமையான இன்னொரு மனிதன் போய்விடுகிறானே என்று கண்ணிர் விட்டுக் கதறியழுவது நம்மைப் படைத்து ஆட்டிவைக்கிறவனுக்குத் தெரியாமலா இருக்கிறது? அப்படித் தெரிந்தும், அவன் அந்த மனிதனிடத்தில் இரக்கமாவது அனுகாபமாவது கொள்ளவில்லை என்று நினைப்பதுதான் பொருத்தமாகுமா? பிறகு எதனால் இப்படி நடக்கிறது? மனிதருக்கு மனிதர் உரிமை கொண்டாட யாதொரு பாத்தியமும் இல்லை. தனக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத ஒரு வஸ்துவை இவன் தன்னுடையது என்று தப்பாக உரிமை கொண்டாடி, அது போவதைப் பற்றி விசனப்படுவது அவனுடைய தவறேயன்றி வேறல்ல. அவனிடம் கடவுள் இரக்கங் கொள்ளவில்லை என்று நினைப்பதே தவறு. ஒரு ஸ்திரீ தன் தகப்பன் இறப்பதைப் பற்றி வருத்தப்பட்டு அழுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? தகப்பனுடைய தேகத்தை அவள் உற்பத்தி செய்தாளா? அவளுக்கு அந்தத் தேகத்தில் உள்ள உரிமையைவிட, அவன் உண்டு வந்த அரிசி, உப்பு முதலியவைகளுக்கே அவனுடைய தேகத்தில் அதிக பாந்தவ்வியமும் உரிமையும் உண்டு என்று நினைப்பதே நிரம்பவும் பொருத்தமானது. அப்படி இருக்க, இந்த உடம்பைப்பற்றி நாம் கவலைப்படுவதே அநாவசியம். மனிதன் சாதாரணமாகத் தனது உடம்புக்கு ஏற்படும் பசி தாகம் முதலிய பாதைகளை நிவர்த்திக்கவும், அதை சுத்தமாக வைத்திருக்கவும் கடமைப்பட்டிருக்கிறான். அதற்கு மேல் அவனால் தடுக்க முடியாமல் அந்த உடம்புக்கு ஏற்படும் பாம்புகடி, மரணம் முதலிய பெருத்த விஷயங்களில் அவன் என்ன செய்ய முடியும்? அதற்கு மேல் அவன் கடவுளுடைய அருளை எதிர்பார்த்திருந்து, வருவதை அனுபவிப்பதைத் தவிர அவன் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால், நான் இன்றைய தினம் என்னைப் பாம்புகள் கடித்த பிறகு என் உடம்பை கவனிக்காமலேயே இருந்து வருகிறேன். மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றும், மாந்திரீகத்தினால் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜனங்கள் தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்து நான் கதவை மூடி உள்பக்கம் தாளிடச் செய்து படுத்துக் கொண்டிருக்கிறேன். யாராவது கேட்டால், வைத்தியர்கள் இருந்து மருந்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்படி சொல்லி எச்சரித்து வைத்திருக்கிறேன். அதுதான் உண்மையான சங்கதி” என்று மிகவும் நிதானமாகவும் தட்டித் தடுமாறியும் கூறினார்.

அதைக் கேட்ட கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரது தேகமும் பதறியது. மனம் துடித்தது. கண்களில் இருந்து கண்ணிர் பொங்கி வழிந்தது. இருவரும் தமது வஸ்திரத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தலைப்பட்டனர். வடிவாம்பாள் கலங்கி உருகி அழுத வண்ணம் நிரம்பவும் பணிவாகப் பேசத் தொடங்கி, “சுவாமிகளே இந்தச் சமயத்தில் தாங்கள் இப்படி வேதாந்தம் பேசுவதைக் கேட்க, எங்களுக்குச் சகிக்கவே இல்லை. மனிதர் தம்முடைய சுய அனுமதியும் சம்மதமும் இல்லாமல் கடவுளின் செயலால் பிறக்கிறார்கள் என்பது நிஜமாய் இருந்தாலும், பிறந்த பிறகு ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் எல்லோரும் தனித்தனியாக இருந்து இறந்து போனால், அதைப் பற்றி மற்றவர் விசனம் பாராட்டமாட்டார்கள். மனிதன் பிறந்த பிறகு அவன் மற்ற சில மனிதரை அன்னியோன்னியமாக பாவிப்பதும், அவர்களும் பரஸ்பரம் அவனை நேசிப்பதும் ஏற்படுகின்றன. மனிதனை உற்பத்தி செய்த கடவுள் அன்பு, வாத்சல்யம், பாசம், சிநேகம், பாந்தவ்வியம் முதலிய குணங்களையும் அவனிடம் ஏற்படுத்தி, ஒருவரோடு ஒருவர் சம்பந்தப்பட்டு வாழ்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், ஒருவரால் மற்றவர் நன்மைகளையும் சுகங்களையும் அடைகிறவர்களாகவும் அமைத்து வைத்திருக்கையில், ஒருவரிடத் தொருவர் சொந்தமும் உரிமையும் கொண்டாடுவது ஒழுங்கல்ல என்றும், அதனால்தான், மனிதன் விசனிப்பதைக் கண்டு கடவுள் இரக்கங் கொள்வதில்லை என்றும் தாங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. மனிதனைக் கடவுள் சிருஷ்டிக்கும் போதே, அவனுடன்கூட, முதலில் உடல் அபிமானம், உறவபிமானம், பொருளபிமானம் ஆகிய மூன்றையும் உற்பத்தி செய்தனுப்புகி றாரே. அதாவது, மனிதன் பிறந்த முதலே, எப்பாடுபட்டாவது தன்னுடைய உடம்பையும் உயிரையும் ஊட்டி வளர்த்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தடுக்க முடியாத ஒரு பேரவா அவனிடம் இயற்கையிலேயே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, தாய் என்றும், தகப்பன் என்றும், சகோதரன் சகோதரி என்றும், சிநேகிதர் என்றும் ஒருவிதமான பாசமும், வாஞ்சையும் அவனது மனதில் உண்டாகின்றன. பிறகு மண் பொன் பெண் என்ற பொருளாசை ஏற்படுகிறது. இப்படி இயற்கையிலேயே அவனுடைய மனசில் இப்படிப்பட்ட மூன்று வித அபிமானங்கள் தோன்றுகின்றனவே. இந்த அபிமானங்களை எல்லாம், உலகைத் துறந்த தபசிகள் கூட முற்றிலும் விலக்க முடிகிறதில்லையே. எங்களுக்கும், இந்த உலகத்தில் உள்ள சிஷ்டர்களுக்கும் எவ்வளவோ அருமையானதும் விலை மதிப்பற்றதுமான தங்களுடைய உயிரைத் தாங்கள் இவ்வளவு அசட்டையாக மதித்து, பாம்பின் விஷத்தை விலக்கத்தக்க மருந்தை உண்ணாமல் இப்படி இருப்பது நியாயம் ஆகுமா? இப்போது தாங்கள் நன்றாகப் பேசியதில் இருந்து பாம்பின் விஷம் மெதுவாகவே உடம்பில் உறைக்கும் போலத் தோன்றுகிறது. ஆகையால் இப்போது கூட நாம் வைத்தியர்களை அழைத்து வந்து மருந்துகள் கொடுக்கச் செய்து தங்களுடைய உயிருக்கு ஹானி ஏற்படாமல் தடுத்துவிடலாம். தயை செய்து தாங்கள் அனுமதி கொடுங்கள். உடனே தக்க வைத்தியரை வரவழைக்கிறோம். இதோ தாங்கள் பங்களாவின் வாசலில் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் வந்து தங்களைத் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுள் இந்தப் பாம்பு கடிக்கு மருந்துகள் தெரிந்த பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டே தக்க சிகிச்சை செய்யலாம். தாங்கள் பங்களா வாசலைப் பார்த்தால் இத்தனை ஆயிரம் ஜனங்களும் தங்களுடைய உயிரை எவ்வளவு விசேஷமாக மதித்திருக்கிறார்கள் என்பது ஸ்பஷ்டமாக உடனே விளங்கிப் போகும். தங்களைப் போன்ற பெருத்த பரோபகாரிகளின் உயிர் பொதுவாக சகலருக்கும் உரியதான ஒரு நிதிக் குவியல் என்றே மதிக்க வேண்டும். அதைத் தாங்கள் இப்படி அசட்டை செய்திருப்பது கொஞ்சமும் தர்மமல்ல. தயை செய்து அனுமதி கொடுங்கள். உடனே மருந்துகள் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.” என்றாள்.

அவளைத் தொடர்ந்து கண்ணப்பா நிரம்பவும் அடக்கமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே! தங்களுக்குத் தெரியாத நியாயம் ஒன்றுமில்லை. தங்களை உயிர்த்தெய்வமாக மதித்துள்ள நாங்களும் இத்தனை ஆயிரம் ஜனங்களும் துயரக் கடலில் ஆழ்ந்து மனமாழ்கிக் கிடக்கவும், நம்முடைய பகைவர்களும், மற்றுமுள்ள துஷ்டர்களும், துன்மார்க்கர்களும் களிப்படைந்து சுயேச்சையாகக் கெட்ட காரியங்களைச் செய்து உலகத்தாரை இம்சிக்கவும் விடுத்துத் தாங்கள் உலகை நீத்துப் போவது நியாயமாகுமா? தங்களைக் கொண்டு உலகத்தோருக்குப் பெருத்த நன்மைகளைச் செய்து வைக்க வேண்டும் என்று கடவுள் திருவுளம் பற்றித் தங்களை சிருஷ்டித்து அனுப்பி இருக்க, அப்படிப்பட்ட அரிதினும் அரிதான தங்களுடைய உயிரைத் தாங்கள் கேவலம் திரணமாக மதித்து இப்படிப்பட்ட மகா அபாயகரமான சந்தர்ப்பத்தில், தேகத்தை அசட்டையாகப் போட்டிருப்பது சரியல்ல. எப்படியாவது தாங்கள் வைத்தியம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். முக்கியமாக எங்களைக் கருதியாவது தாங்கள் தங்களுடைய உயிரைத் தப்ப வைத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் இல்லாவிட்டால், நம்முடைய எதிரிகள் எங்கள் எல்லோரையும் ஒரு நிமிஷத்தில் அழித்து நாசப்படுத்தி விடுவார்கள். தாங்களே ஏற்றிவைத்த விளக்கைத் தாங்களே அனைத்து விடலாமா? எல்லாவற்றையும் அறிந்த தங்களுக்கு நான் அதிகமாக எடுத்துச் சொல்வதற்கு அச்சமாக இருக்கிறது. நாம் இப்போது தாமதித்திருக்கும் ஒவ்வொரு விநாடி நேரமும் நிரம்பவும் அபாயகரமானது. நான் போய் வைத்தியர் களை அழைத்து வரட்டுமா?” என்று நிரம்பவும் உருக்கமாகவும் பணிவாகவும் கூறி வேண்டிக் கொண்டான்.

அவர்கள் இருவரும் கூறிய சொற்களை திகம்பர சாமியார் தமது கண்களை மூடியபடியே கேட்டுக் கொண்டிருந்தார். கண்ணப்பா பேசி முடித்தவுடன், அவர் மறுபடியும் மெதுவாகப் பேசத் தொடங்கி, “தம்பி கண்ணப்பா குழந்தை வடிவூ! நீங்கள் இருவரும் மகா புத்திசாலிகள். நீங்கள் தவறான விஷயங்களை ஒருநாளும் சொல்லக் கூடியவர்களே அன்று. நீங்கள் இப்போது சொன்ன நியாயங்கள் எல்லாம் ஒருவிதத்தில் நியாயமானவைகள் தான் ஆனாலும், ஒரு விஷயம் இருக்கிறது. எத்தனையோ ஆயிரம் ஜனங்களுக்கு நான் நன்மை செய்வதாகவும், ஏராளமான துஷ்டர்களை அடக்கி இருப்பதாகவும் சொல்லி, அதற்காக நான் இறக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! இன்று நான் மருந்து சாப்பிட்டு இந்த அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளுகிறதாகவே வைத்துக் கொள்வோம். அதன்பிறகு நான் சிரஞ்சீவியாகவே உலகத்தில் எப்போதும் இருந்து விடுவேனா. இப்போது எனக்கு ஏறக்குறைய ஐம்பது வயசாகிறது. எப்படியும், இன்னம் 15, 20 வருஷத்தில் நான் இந்த உலகை விட்டுப் போகவேண்டும் அல்லவா? அதன்பிறகு துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரி பாலனம் எப்படி நடக்கப் போகிறதென்பது தான் தெரியவில்லை. இதே தொழிலை மேற்கொண்டு வாழையடி வாழையாகவும் காலுக்குக் காலாகவும் மனித கோடிகளை சிருஷ்டி செய்து அழித்துக் கொண்டிருக்கும் கடவுளுக்கு எனக்குப் பின்னால் என் அலுவலைச் செய்ய, வேறொருவன் வேண்டும் என்பது தெரியாமலா போய்விடும். இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் ஒவ்வொரு தேசத்திலும், எத்தனையோ மகான்களும், தீரர்களும், அவதார புருஷர்களும் தோன்றி இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரும் சிரஞ்சீவியாகவா இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எந்தப் பணியைச் செய்ய உத்தரவு பெற்று வந்தார்களோ அது முடிந்தவுடன் போய் விட்டார்கள் அல்லவா. மகா விஷ்ணுவின் அவதாரங்களாகிய ராமன், கிருஷ்ணன் முதலியவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய சரித்திரங்களை இப்போது நாம் வாசித்துப் பார்த்தால், அவர்கள் பூலோகத்தைவிட்டு முடிவில் சுவர்க்கம் போனதாகச் சொல்லப்பட்டிருக்கும் இடத்தைப் படிக்கும்போது, நம்முடைய மனசில் உண்டாகும் துக்கத்திற்கும், ஏக்கத்திற்கும் அளவு சொல்ல முடியுமா? அவர்கள் பிறந்த பிறகு எத்தனையோ ஆயிரம் வருவடிங்களுக்குப் பின்னால் வந்துள்ள நாம் அவர்களுடைய தீரச் செயல்களையும் உத்தம குணங்களையும் புஸ்தகத்தில் படித்துவிட்டு, இவ்வளவு தவிப்புத் தவிக்கிறோமே. அவர்களுடைய காலத்திலேயே பிறந்து, அவர்களை நேரில் கண்ட மனிதருக்கு அவர்களை இழக்கும் விசனத்தினால் மனம் எவ்வளவு அதிகமாக உருகித் தவித்திருக்கும். ஈசுவராம்சம் பொருந்திய பெரிய பெரிய அவதார புருஷர்களே உலகில் நிலைத்து நிற்காமல் இறந்து மண்ணில் மறைந்து கனவில் கண்ட காட்சி போல் ஆகிவிட்டார்கள். அது நிற்க, இந்த உலகத்தில் மனிதன் பிறக்கும்போது அறிவு கல்வி முதலியவை இல்லாதவனாகக் காணப்படுகிறான். காலக்கிரமத்தில் அவனது உடம்பு வளர வளர அவனது அறிவு, கல்வி, திறமை முதலியவைகள் எல்லாம் விருத்தி அடைகின்றன. மனிதன் தன் மனைவி மக்கள், சிநேகிதர் முதலியவர்களோடு பழகப்பழக, வயசாக ஆக, ஒவருவருக் கொருவர் ஏற்படும் பாசம், வாத்சல்யம் முதலியவைகள் எல்லாம் அபாரமாகப் பெருகிப் போகின்றன. அதுவுமன்றி, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு துறையில் அரும்பாடுபட்டுத் தனது ஆயிசு காலம் முழுதையும் செலவிட்டு ஒவ்வொரு விதமான திறமையையோ, பாண்டித்தியத்தையோ, நிபுணத்துவத்தையோ சம்பாதித்துக் கொள்ளுகிறான். நம்முடைய கம்பர், காளிதாசர், திருவள்ளுவர், அவ்வை முதலியவர்கள் எல்லோரும் இறக்கும் போது, அவர்களது அறிவும் குணங்களும் எவ்வளவு பரிபக்குவம் அடைந்திருக்கும். அதுபோல, வீணை முதலிய அரிய வாத்தியங்களில் இரவு பகல் உழன்று அவற்றிலிருந்து தேவாமிருத ஊற்றை உண்டாக்கி மழை போலப் பொழியும் சக்தியை உடையவர்களாக இருந்தோர் எத்தனைபேர். சகலமான நூல்களையும் பரிபூர்ணமாகக் கற்று வாக்கு வன்மையோடு பிரசங்கம் செய்யும் சக்தியை சம்பாதித்துக் கொண்டவர்கள் அநந்தமானவர்கள். அதுபோல சட்ட விவகாரங்களையும் வேதாந்த விவகாரங்களையும் சாஸ்திரங்களையும் கசடறக் கற்று அதிமேதாவிகளாக விளங்கினவர்கள் எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்கள். இப்படி ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு துறையில் மகா அற்புதமான சக்தி வாய்ந்த வர்களாய் மாறி வயசு முதிர்ச்சி அடையும் காலத்தில், எமன் சிறிதும் தாகூடினியமாவது ஈவிரக்கமாவது காட்டாமல், எல்லோரையும் சமமாகக் கொண்டு போகிறதை நாம் பார்க்க வில்லையா? அப்படி ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொண்ட வித்தையோ, அல்லது, நிபுணத்துவமோ, அல்லது அவர்கள் மற்றவர்களிடம் வைத்த பிரியமோ அநியாயமாய் அழிந்து பாழாய்ப் போகின்றனவே என்பதையாவது எமன் எண்ணிப் பார்க்கிறானா? மனிதனும், மனிதருடைய மனசும், அதன் குணங்களும், அவன் சம்பாதித்துக் கொள்ளும் வித்தைகளும், எல்லாம் ஈசுவர சிருஷ்டி ஆகையால், அவைகள் எல்லாம் அழிந்து போகின்றன என்பது சர்வக்ஞனான கடவுளுக்குத் தெரியாமலா இருக்கும். உலகத்தில் உள்ள சகலமான பொருளும் அழிந்து போகிறது போலத் தென்படுகிறதே அன்றி, உண்மையில் எதுவும் அழிகிறதே இல்லை. ஒரு மரம் பிரம்மாண்டமாக வளர்ந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஜீவித்திருந்து கடைசியில் பட்டு வீழ்ந்து நாசமடைந்து விடுகிறது. ஆனால், அந்த மரத்தின் சக்தி முழுதும் அடங்கிய கணக்கில் அடங்காத விதைகளை அந்த மரம் உண்டாக்கி வைத்து விட்டுப் போகிறது. செடியாகி, மரமாகி, கிளைகள் விட்டு, இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள், விதைகள் முதலியவற்றை நிறைத்து அபிவிருத்தியாகக் கூடிய சக்தி முழுதும் ஒர் அற்ப விதைக்குள் அடங்கி இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு மனிதனுடைய ஸாரம் முழுதும் திரண்டு அவனுடைய குழந்தைகளாக உதிக்கின்றன; ஆனால், சிலர் குழந்தைகளையே பெறாதவராய் இறந்து போகிறார்களே, என்ன ஆகிறதென்று நீங்கள் சந்தேகிக்கலாம். அவர்களுடைய உடம்பு மாத்திரம் அழிகிறதே அன்றி, ஜீவாத்மா அழிகிறதே இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவம் உடையது. அது மறுபடியும் இன்னொருவருடைய வயிற்றில் வந்து ஜனித்துக் குழந்தையாகி மனிதனாகி அபிவிருத்தி அடைகிறது. சில குழந்தைகள் மகா விவேகிகளாகவும், வித்தைகளை வெகு சிக்கிரம் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தந்தையரோ சாதாரண அறிவுடையவராய் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்தக் குழந்தைகள் முன் ஜென்மத்தில் அபாரமான அறிவும் நிபுணத்துவமும் வாய்ந்தவராய் இருந்தவர்கள் ஆதலால், மறக்கப்பட்ட பழைய நினைவெல்லாம் உண்டாவது போல, அவர்களுக்கு எல்லாம் சுலபத்தில் வந்துவிடுகிறது. ஆகவே, உலகத்தில் மனிதன் இறப்பதனால், அவனுடைய குணங்கள், அபாரசக்தி, நிபுணத்துவம் முதலியவைகள் எல்லாம் அழிந்து போவதாகவே நாம் எண்ணக்கூடாது. இன்றைக்கு நான் இறந்தால், வெகு சீக்கிரத்தில் நான் இன்னொரு தாய் வயிற்றில் வந்து பிறப்பேன். என்னிடம் இப்போது காணப்படும் குணங்களோ, திறமையோ அப்போதும் அபிவிருத்தி அடைந்து வெளிப்படும். இப்படி நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் இன்னொரு கேள்வி கேட்பீர்கள். நீங்கள் வேறே எங்கேயோ போய்ப் பிறந்தால், அதனால் எங்களுக்கு என்ன லாபம், நாங்கள் உங்களை இழப்பது நிச்சயம் அல்லவா என்று நீங்கள் கேட்பீர்கள். இதற்கு மனிதனுடைய குறுகிய அறிவே உத்தரவாதியன்றி, கடவுள் உத்தரவாதியல்ல. உலகத்தில் காணப்படும் மனிதர் முதல் எறும்பு, பூச்சி, புழுக்கள், மரஞ்செடி கொடிகள் மண் கல் வரையில் உள்ள சகலமான வஸ்துக்களும் கடவுளுடைய பிரதிபிம்பமே அன்றி, ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாத தனித்த வஸ்துக்கள் அல்ல. தண்ணீரையும், காற்றையும், மண்ணில் இருந்து உற்பத்தியாகும் தானியங்களையும் காய்கறிகளையும் நாம் உண்டு நம்முடைய உடம்பை வளர்க்கிறோம். அவைகள் இல்லாவிட்டால், நாம் இறந்து போய்விடுவோம். தண்ணிருக்கும், காற்றுக்கும் ஜீவாதாரமான சம்பந்தம் உண்டென்பது நிச்சயமாக விளங்குகிறது. நமக்கும் காற்றுக்கும், தண்ணீருக்கும் வித்தியாசமே இல்லை. எல்லாம் ஒன்றுக்கொன்று பாந்தவ்வியம் உடையது. மண் தானியமாகி மனிதனுடைய உடம்பாக மாறுகிறது. மனிதன் இறந்த பிறகு அது மடிந்து மறுபடி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. குயவன் எப்படி லாரமான மண்ணை எடுத்துப் பிசைந்து தண்ட சக்கரத்தில் வைத்துச் சுழற்றிச் சுழற்றி பலவிதமான பாண்டங்கள் செய்கிறானோ, அதுபோல பூமியின் ஸாரத்தைக் கடவுளாகிய குயவனுடைய ஆக்ஞாசக்கரம் அழகான புஷ்பங்களாகவும், செடி கொடிகளாகவும், காய்கறிகளாகவும் உற்பத்தி செய்து அவற்றின் ஸாரத்தில் இருந்து மனிதனைப் படைக்கிறது. ஆகவே மனிதன் இரண்டு தரம் வடிகட்டி எடுக்கப்பட்ட மண்ணே அன்றி வேறல்ல. இப்படிப்பட்ட உலகத்தில் உயிர் உள்ளதும் உயிர் இல்லாதது போலத் தோன்றுவதுமான எல்லா ஜெந்துக்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டாவது: ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையது. இந்த உண்மையைக் கடவுள் நிதரிசனமாகக் காட்டிக் கொண்டே இருக்கிறார். மனிதன் அதை உணராமல் தனக்கும் மற்ற ஜெந்துக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தான் மற்றவைகளைவிட சிரேஷ்டமானவன் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதல்லாமல், இன்னம் குறுகிய நோக்கங்கொண்டு, தான் தன் பெண்ஜாதி பிள்ளைகள், தன் உறவினர் ஆகிய சிலரைத் தவிர மற்ற ஜனங்கள் எல்லோரும் தனக்குச் சம்பந்தமற்றவர்கள் என்று நினைத்து, தனக்கென்று பிரத்தியேகமாகப் பொருள் தேட முயற்சிப்பதோடு, தனது ஆசாபாசங்களையும் மேற்படி சொற்ப மனிதர் வரையில் குறுக்கிக் கொள்கிறான். இதனால் உலகத்தில் பலவகைப்பட்ட குரோதங்களும், பகைமையும், மோசங்களும், துஷ்டத்தனங்களும், துஷ்கிருத்தி யங்களும் நிறைந்து, இந்த பூலோகமே ஒரு நரகம்போலக் காணப்படுகிறது. இந்த உலக சிருஷ்டியே ஒரு பெருத்த குடும்பம் என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு அணுவும் கடவுளுடைய அம்சம் வாய்ந்த சமமான வஸ்து என்பதையும், ஒர் அணுவுக்கும், மற்றொன்றுக்கும் யாதொரு பேதமும் இல்லை என்பதையும், ஒன்றுக்கொன்று விலக்க முடியாத சம்பந்தமுடையது என்பதையும், எதுவும் அழிகிறதில்லை என்பதையும், இறப்பதெல்லாம் மறுபடி பிறக்கிறது அல்லது பரமாத்மாவிடம் ஐக்கியப்பட்டுப் போகிறது என்பதையும் மனிதன் உணர்ந்து விடும் பட்சத்தில் இந்த உலகத்தில் துக்கம் என்பதே இருக்காது. ஒரு மனிதன் தன் குழந்தை இறந்து போவதைப் பற்றி அபாரமாக விசனப்படுகிறான். தன் பக்கத்து வீட்டுக்காரனுடைய குழந்தை இறந்து போனால், அவனுக்கு அவ்வளவு அதிகமாக விசனம் உண்டாவதில்லை. இரண்டொரு அனுதாப மொழிகளோடு அந்த விசனம் தீர்ந்து போகிறது. இன்னம், அடுத்த ஊரில் உள்ள மனிதர்களுடைய குழந்தைகள் இறந்து போனால், இந்த ஊரில் இருப்பவனுடைய மனசில் அது உறைக்கிறதே இல்லை. மனிதருக்கு மனிதர் அப்படி இருக்கிறது. இன்னும் மிருக பட்சிகளை எடுத்துக் கொண்டால், அவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணலாம் என்ற பெருத்த சந்தோஷத்தை மனிதன் கொள்ளுகிறான். இப்படித் தன்னுடையது பிறருடையது என்ற வேற்றுமை மனிதன் தன்னுடைய குறுகிய திருஷ்டியினாலும் சூனிய அறிவினாலும் உண்டாக்கிக் கொண்டு துன்பங்களையும் துயரங்களையும் சண்டை சச்சரவுகளையும் பெருக்கிக் கொண்டே போவதனால் தான் இது சகிக்க முடியாத துன்ப உலகமாகத் தோன்றுகிறது.

மா.வி.ப.I-20 நம்முடைய முன்னோர்கள் உலகம் அநித்தியம் என்றும், கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும், நான், நீ என்ற பேதமே இல்லை என்றும், மனிதர் மண்ணுலகப் பற்றையும் சிற்றின்பப் பாசத்தையும் கூடிய வரையில் குறைத்துக் கொண்டு தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்து, இறப்பு பிறப்பாகிய பெருங்கடலை நீக்கித் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சதாகாலமும் கடவுளைப் பஜித்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட உண்மையான கொள்கைகளை எல்லாம் நம்மவர்கள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து இன்ப துன்பங்களைக் குறைத்துக் கடவுளைத் தியானம் செய்வதையே பொழுது போக்காகவும் மறுமைக்கு ஆஸ்தியாகவும் மதித்து வந்திருக்கிறார்கள். அதற்கு இப்போது பெருத்த பல இடையூறுகள் வந்து சேர்ந்திருக்கின்றன. நம்முடைய தேசத்தில் ஒருவர்பின் ஒருவராக வந்து சேர்ந்திருக்கும் அன்னிய மதத்தினர் ஒவ்வொருவரும் தங்களுடைய கடவுள் வேறு மற்றவருடைய கடவுள் வேறு என்ற கொள்கையைப் பரப்பி விட்டனர். மனிதரில் நான் வேறு நீ வேறு என்ற கொள்கை உண்டாகி மனித சமூகத்தில் விளைத்திருக்கும் தீங்குகளுக்குப் போதாக்குறையாக மகம்மதியரைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, வெள்ளைக்காரரைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, இந்துக்களைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, இன்னும் இது போன்ற எண்ணிறந்த இதர மதஸ்தர்களைப் படைத்துக் காத்து அழிக்கும் தெய்வங்கள் வெவ்வேறு என்ற ஒரு நம்பிக்கையும், என் கடவுள்தான் உண்மையானவர், உன் கடவுள் பொய்யானவர் என்ற வாத தர்க்கங்களும், மதச் சண்டைகளும் ஏராளமாக மலிந்து போய் விட்டன. இத்தனை மதஸ்தர்களுடைய தனித்தனியான கடவுள்களுடைய ராஜ்யங்களும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை. இது போதாமல், வெள்ளைக் காரர்கள் உலகத்தில் ஏராளமாகப் பொருள் தேடி, பூமியில் மறைந்துள்ள சகலமான சக்திகளையும் ரகசியங்களையும் கண்டுபிடித்து மனிதன் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும் செளகரியங்களையும் அபாரமாக விருத்தி செய்து, ஒவ்வொரு மனிதனும், எவ்வளவு அதிகமாகப் பொருள் தேட முடியுமோ அவ்வளவையும் தேடி, அவன் எவ்வளவு அதிகமான சுகங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவையும் அனுபவிப்பதே முக்கியமான புருஷார்த்தம் என்ற கொள்கையை அனுபவத்தில் காட்டி வருவதால், நம்மவர்கள் மதிமயங்கி மறுமை என்று ஒன்று இருப்பதாகவே எண்ணாமலும், இம்மையின் அநித்தியத் தன்மையைக் கருதாமலும், மண் பெண் பொன்னாசைகளுக்கு அடிமை முறி எழுதிக் கொடுக்கத் தலைப்பட்டு விட்டார்கள். நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்துக் கையாடி வந்த தத்துவங்கள் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று அஞ்சத் தகுந்த நிலைமை ஏற்பட்டுப் போயிருக்கிறது. உலகத்தில் துன்பங்களும் துயரங்களும் சண்டை சச்சரவுகளும் வரவரப் பெருகிக் கொண்டேதான் போகும் போலத் தோன்றுகிறது. என்னைப் போன்ற அற்பசக்தி வாய்ந்த மனிதர்கள் இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே. கடவுளை நாம் சர்வ வல்லமை உள்ளவர் என்றும், எல்லாவற்றையும் அறிந்தவர் என்றும் நினைக்கிறோம். அவர் படைத்துள்ள சூரியன், சந்திரன், பூமி, நகூடித்திரங்கள், தண்ணீர், மனிதருடைய தேகம் முதலிய சகலமான ஜீவ ஜெந்துக்களையும் அண்டாண்ட பிரமாண்டங்களையும் நாம் கவனித்துப் பார்த்தால், இவை அனைத்தும் படைத்த கடவுள் நிகரற்ற சக்தியையும் அறிவையும் உடையவர் என்பது பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட நிகரற்ற பரமாத்மாவின் சிருஷ்டியிலும் குற்றமும் குறைகளும் இருக்கின்றனவே என்பதுதான் ஆச்சரியத்திலும் பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கிறவர் கடவுள் என்ற விஷயம் மிருக பட்சி விருகூடிங்களுக்கு எல்லாம் தெரியுமோ தெரியாதோ அதை நாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் மனிதரில் பெரும் பாலாருக்கு அந்த உண்மை தெரிந்திருக்கிறது. சிலருக்கு அதுகூட அவ்வளவு நன்றாகத் தெரியாமல் இருக்கிறது. நம்மை எல்லாம் படைத்த கடவுள், சிருஷ்டியின் உண்மை இப்படிப்பட்டது என்பதையும், எல்லோரையும் படைப்பது யார் என்பதையும், கடவுளுக்கும் மற்றவருக்கும் உள்ள சம்பந்தமும் இன்னது என்பதையும், மனிதர் முதலிய சகலமான ஜெத்துக்களும் எதற்காகப் பிறந்து பிறந்து இறக்கின்றனர் என்பதையும், ஒரு தரம் பிறந்து இறப்பவனுடைய உயிர் எங்கே போகிறது என்பதையும், அதன் முடிவென்ன என்பதையும், மனிதனிடத்தில் கடவுள் எவ்விதமான குணத்தையும் நடத்தையையும் எதிர்பார்க்கிறார் என்பதையும் எல்லா மனிதரும் சுலபத்தில் தெரிந்து கொள்ளும்படியாக அவர் ஏன் செய்திருக்கக்கூடாது? மனிதன் தன்னுடைய பாவச் செய்கைகளுக்குத் தகுந்தபடி புதிய ஜென்மங்களை எடுத்துத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே போகிறான் என்று நாம் நினைக்கிறோம். மற்ற மதத்தினர் வெவ்வேறு விதமாக நினைக்கின்றனர். எப்படி இருந்தாலும், கடவுள் மனிதனை முதன் முதலாகப் படைக்கும் போதே, அவன் சகலமான நற்குணங்களும் பொருந்தி ஒழுங்கான வழியில் நடக்க வேண்டும் என்ற சங்கற்பத்தை உண்டாக்கி அவனைப் படைத்திருந்தால், அவன் ஏன் துன்மார்க்கங்களில் சென்று பாவக் கிருத்தியங்களைச் செய்கிறான்? எல்லாவற்றையும் அறிந்த கடவுள், மனிதன் காலக்ரமத்தில் இப்படிக் கெட்டுப் போவான் என்பதை நினைக்கமலா மனிதருக்கு ஆரம்பத்தில் சுயேச்சாதிகாரத்தைக் கொடுத்துப் படைத்தார்? இதற்கு ஜனங்கள் திருப்திகரமான சமாதானம் சொல்ல மாட்டாமல், இதைக் கடவுளின் லீலா விநோதம் என்ற அழகான சொல்லால் சுலபமாக மறுமொழி சொல்லிவிடுகிறார்கள். அண்ட பகிரண்டங்களை எல்லாம் இச்சாமாத்திரத்தில் படைத்துக் காத்து அழிக்க வல்ல அபாரசக்தி வாய்ந்த கடவுள், மனிதன் பேராசை, பொறாமை, கோபம், பகைமை, அகங்காரம் முதலிய துர்க்குணங்களைப் பெருக்கி, உலகத்தில் அக்கிரமங்கள் செய்வதையும், அதற்காக மறு ஜென்மங்களில் துன்பப்படுவதையும் பார்த்து சந்தோஷப்படுவதை லீலா விநோதமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட கடவுளின் மனப்போக்கையும், பெருந்தன்மையையும் என்ன்வென்று சொல்லுகிறது. ஆகவே, கடவுளின் சிருஷ்டி அரை குறையான தாகவும், குற்றங்குறைபாடுகளுக்கு இலக்கானதாகவும் தோன்றுகிறது. இந்தக் குறையை நிவர்த்திக்கக் கூடிய அவதார புருஷன் ஒருவன் தோன்றும்படி கடவுள் செய்ய வேண்டும். அப்பேர்ப்பட்ட அவதாரப் புருஷன் எந்தக் காலத்தில் தோன்றுகிறானோ அப்போது தான் இந்த உலகம் க்ஷேமப்படும். அவன் உண்மையிலேயே கடவுளின் பிரதிநிதி என்பது சகலமான மதஸ்தருக்கும், பலவகைப்பட்ட கொள்கையை உடையவருக்கும் இயற்கையிலேயே தெரிய வேண்டும். எல்லோரையும் படைக்கும் கடவுள் எங்கே இருக்கிறார் என்பதையும், மனிதருக்கு மனிதர் என்ன சம்பந்தம் என்பதையும், கடவுளுக்கும் மனிதருக்கும் மற்ற சிருஷ்டிப் பொருள்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும், மனிதர் சாசுவதமாக எதை நாட வேண்டும் என்பதையும், இம்மையில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அந்தப் பிரதிநிதி எல்லோரது மனசும் திருப்தி அடைந்து நம்பும்படி நிரூபிக்க வேண்டும். அப்போது தான் மனிதர் எல்லோரும் திருந்தி நல்வழிப்பட்டு வேற்றுமையை விட்டு ஒற்றுமையைக் கடைப்பிடித்து உண்மையான வழியைப்பற்றி நடப்பார்கள். உலகில் சாசுவதமான கூேடிமமும் அமைதியும் நிலைபெற்று நிற்கும். அதை விட்டு என்னைப் போன்ற அற்ப சக்தியுள்ள மனிதன் இவ்வளவு பெரிய உலகில் துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் செய்வ தென்றால் அது சாத்தியமாகுமா? காமம் குரோதம் முதலிய மும்மலங்களும் மனிதனிடம் வேரூன்றி இருக்கையில் எத்தனையோ சட்டைநாத பிள்ளைகளும், சர்வோத்தம சர்மாக்களும் தோன்றிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் வெல்வதற்கு ஒவ்வொரு திகம்பரசாமியார் தோன்றிக் கொண்டே இருக்க, வேண்டும் என்றால், அதற்கு எல்லையே இராது. இது வெள்ளைக்காரருடைய வைத்தியத்தைப் போல இருக்கிறதே அன்றி வேறல்ல. மனிதனுடைய இரத்தம் கெட்டுப் போய் உடம்பில் கட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பல இடங்களில் தோன்றிக் கொண்டே இருந்தால், அவர்கள் ஒவ்வொன்றையும் கத்தியால் அறுத்து சத்திரம் வைத்துக் கொண்டே போவார்களன்றி, மூலகாரணமாகிய அதன் இரத்தத்தைச் சுத்தி செய்ய மருந்து கொடுத்தால், எந்த இடத்திலும் கட்டியே உண்டாகாது என்று அவர்கள் எண்ணுவதில்லை. சென்ற மாசம் ஒன்றரை வயசுக் குழந்தை ஒன்றுக்கு அப்படித்தான் சூட்டினால் கட்டிகள் வந்து கொண்டிருந்தன. அந்தக் குழந்தையின் உடம்பில் அந்த இங்கிலிஷ் வைத்தியர் 27-இடங்களில் சத்திரம் வைத்ததாகக் கேள்வியுற்றேன். இந்த வைத்தியத்தைப் போலத்தான் இருக்கிறது என்னைப் போன்றவர்கள் துஷ்ட நிக்கிரகம் செய்ய எண்ணுவது. ஆகவே, நான் இறக்கப் போவதைக் குறித்து நீங்கள் விசனித்து வருந்துவதை விட்டு, கடவுளைத் தியானித்து, இந்த உலக சிருஷ்டியின் உண்மையை ஜனங்களுக்குத் தெரிவித்து எல்லோரையும் சன்மார்க்கத்தில் திருப்பக்கூடிய ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

அவரது சொற்களைக் கேட்ட கண்ணப்பாவும் அவனது மனைவியும் மிகுந்த குழ்ப்பமும் கலக்கமும் அடைந்து இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தனர். பிறகு கண்ணப்பா நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே! இந்த உலகத்தில் நிறைந்துள்ள அக்ஞானம், காமம், குரோதம், மதம், மாற்சரியம், துக்கம் முதலிய சகலவிதமான துன்பங்களையும் போக்கி, இதை சன்மார்க்கமே நிறைந்த உலகமாக்குவதற்குத் தாங்கள் சொல்லுவது நல்ல சிறந்த யுக்தி தான். இந்த யுக்தி நமக்கே தெரியும் போது, நம்மைப் படைத்த கடவுளுக்குத் தெரியாமலா போய்விடும். அப்படி இருந்தும் கடவுள் அம்மாதிரியான உபாயத்தைத் தேடாமல் இந்த உலகம் இதே நிலையில் இருந்து வரும்படி விட்டிருக்கிறார் ஆகையால், ஏற்கெனவே இருக்கும் நிலைமைக்குத் தகுந்தபடி தான் நாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உலகத்தை அடியோடு சன்மார்க்கத்தில் திருப்பும் சக்தி தங்களிடத்தில் இல்லை என்று நினைத்து, அதற்காகத் தாங்கள் தங்களுடைய உயிரை விட்டுவிட நினைப்பதால், எங்களைப் போன்றவருக்கு உள்ளதும் போய்விடும் அல்லவா. அக்கிரமங்களும், துன்பங்களும், துயரங்களும், நிறைந்த இந்த உலகத்தில் தங்களைப் போன்ற மகான்கள் அப்போதைக்கப்போது தோன்றி, நல்வழி காட்டிப் போகாவிட்டால், இது அடியோடு கெட்டு நாசமடைந்து விடும் அல்லவா. ஆதிகாலந்தொட்டே உலகத்தில் இப்படித்தான் பெரியவர்கள் தோன்றி ஒவ்வொரு வகையில் அரிய செய்கை களை முடித்து உலகத்திற்கு உபகாரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதற்கினங்கவே தாங்களும் உதித்திருக்கிறீர்கள். தங்களுடைய பெருமையும், அருமையும், மதிப்பும் தங்களுக்கு உள்ளபடி தோன்றாமல் அற்பமாகத் தோன்றினாலும் எங்களுக்கெல்லாம் அவை விலை மதிப்பற்றவையாகவே தோன்றுகின்றன. கிடைக்கக்கூடாத ஏதோ ஒர் அபாரமான விஷயத்தை எதிர்பார்த்து, ஏற்கெனவே உள்ள அரிய பொருளை இழந்துவிட எங்களுடைய மனம் இடம் தரவில்லை. அதுவுமன்றி, பாம்பு கடியானது தாங்கள் நினைப்பது போல மனிதரால் தடுக்கமுடியாத சம்பவமல்ல. தாங்கள் உத்தரவு கொடுங்கள். உடனே நான் இதற்குத் தக்க மனிதரை அழைத்து வைத்தியம் செய்யச் சொல்லுகிறேன். தெய்வத்தின் திருவருளை முன்னிட்டு நாம் நம்மால் ஆன முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்து விடுவோம். இதுவரையில் தாங்கள் இந்த உலக விஷயங்களில் ஈடுபட்டு துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்து வந்து, இந்த அபாயகரமான வேளையில் தங்களுடைய கொள்கையை மாற்றி இப்படிப்பட்ட பெருத்த விரக்தியை உண்டாக்கிக் கொண்டு, பாம்பின் விஷம் தங்களுடைய உடம்பில் பரவும்படி விட்டிருப்பதைக் காண, எங்களால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. தங்களுடைய பிராணனுக்கு அபாயம் நேரும் பட்சத்தில், வயசான என் தகப்பனார் அதைத் தாங்கமாட்டாமல் இறந்து போய்விடுவார் என்பது நிச்சயம். அதன் பிறகு என் தாயார் பிழைத்திருப்பது சந்தேகம். இத்தனை பேரையும் இழந்த பிறகு நாங்களும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ள வழி தேட வேண்டுமே அன்றி, எங்களால் இப்படிப்பட்ட பெருத்த விசனத்தைத் தாங்கவே முடியாது. தன் சொந்தத் தகப்பனாரைவிட தங்களை ஆயிரம் மடங்கு விசேஷமாக மதித்து உயிருக்குயிராக எண்ணியிருக்கும் நம்முடைய வடிவாம்பாள் தங்களுடைய உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்து விடும் பட்சத்தில், அதன் பிறகு தண்ணீர்கூட அருந்தாமல் அதே விசனத்தில் கிடந்து தன் உடம்பைச் சித்திரவதை செய்து தன்னை வெகு சீக்கிரத்தில் கொன்று கொள்வாள். எங்களை எல்லாம் தவிர, இன்னும் தங்களுடைய சம்சாரம் இருக்கிறார்கள். அவர்கள் முன் தடவை தங்களை விட்டுப் பிரிந்து பட்டயாடுகள் எல்லாம் தங்களுக்குத் தெரியாதவை அல்ல. மறுபடி தங்களை இழக்க நேருமானால், அவர்களும் உயிர் வாழமாட்டார்கள் என்பது நிச்சயம். தங்களுடைய உயிரைத் தாங்கள் காலத்துக்கு முன் மாய்த்துக் கொள்ளும் பாவத்தோடு, இத்தனை பேரையும் கொன்ற பழியும் தங்களைத்தான் வந்து சுற்றும். ஏதடா இவன் நம்மிடம் இவ்வளவு தூரம் துணிந்து பேசுகிறானே என்று தாங்கள் நினைப்பீர்கள். தாங்கள் என்மேல் எவ்வளவுதான் கோபித்துக் கொண்டாலும் பாதகமில்லை. இந்த அபாயகரமான சந்தர்ப்பத்தில் நான் உண்மையை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை” என்று மிகவும் இளக்கமாகவும் நடுக்கத்தோடும் கூறினான். அவனது சொற்களைக் கேட்ட திகம்பரசாமியாரது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. அவர் மெதுவாக எழுந்து பக்கத்தில் கிடந்த திண்டின்மேல் சாய்ந்து கொண்டவராய், “தம்பி என் பொருட்டு நீங்கள் எல்லோரும் இறந்து விடுவீர்கள் என்று நீங்கள் சொல்வதில் இருந்து நீங்கள் எல்லோரும் என்மேல் வைத்திருக்கும் வாஞ்சையும் மதிப்பும் எவ்வளவு என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்கள் எல்லோரும் என்னை உங்களுடைய உயிரைவிட சிரேஷ்டமாக எண்ணுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட அரிய நண்பர்களின் அன்பு ததும்பிய சொற்களைக் கேட்கும்போதே எனக்கு நூறு யானையின் பலம் உண்டாகி விட்டது போல நான் உணருகிறேன். பாம்பு விஷத்துக்கு மருந்து போட்டதைவிட அதிகமான குணம் ஏற்கனவேயே உண்டாகி விட்டது. இது வரையில் எழுந்து உட்கார முடியாமல் மயங்கிப் படுத்திருந்த என்னை உங்களுடைய அனுதாபச் சொற்கள் எழுப்பி உட்கார வைத்து விட்டன. இனி எனக்கு மருந்தே தேவையில்லை. நான் முடிவில் பிழைத்துக் கொள்வேன் என்பது நிச்சயமானாலும், நான் கொஞ்ச காலம் இறந்துபோய், அதன் சுகம் எப்படி இருக்கிற தென்று பார்க்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார்.

அவர் கூறிய சொற்களைக் கேட்ட மற்ற இருவரும் மிகுந்த குழப்பமும் திகைப்பும் அடைந்தனர். படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்ததைக் காண, அவர்கள் இருவரது மனதிலும் அவர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் சந்தோஷமும் உண்டாயின. ஆனாலும், அவர் கூறிய வார்த்தைகளின் கருத்து நன்றாகத் தெளிவுபடவில்லை. ஆகவே கண்ணப்பா மறுபடி பேசத்தொடங்கி, “சுவாமிகளே! தங்களுடைய கருத்து அவ்வளவு நன்றாக விளங்கவில்லை. தாங்கள் கொஞ்ச காலத்துக்கு இறந்திருப்பதாவது, அதன் பிறகு பிழைக்கிறதாவது, நாங்கள் சொன்ன அனுதாப மொழி தங்களுடைய விஷத்தை நிவர்த்திப்ப தாவது; எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. தயைசெய்து தங்களுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்” என்றான்.

சாமியார், “என் கருத்தை நான் விளக்குவது இருக்கட்டும். ஊரில் உள்ள ஜனங்கள் என்னைப் பாம்புகள் கடித்த வரலாற்றை எப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்? இந்தச் செய்தியை உங்களிடம் யார் தெரிவித்தார்கள்? உங்கள் இரண்டு பேருடைய தாய் தகப்பன்மார்களும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இதை எல்லாம் முதலில் சொல்லுங்கள்” என்றார்.

கண்ணப்பா, “ஜனங்களுக்கு அதிகமான விவரம் எதுவும் தெரியாது. என் தகப்பனாரும் தாயாரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பட்டணத்தில் நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்திற்கு சிலரை அழைத்துவிட்டு வருவதற்காக பூவனுாருக்குப் போனார்கள். நாங்கள் இப்போது புறப்பட்டு இங்கே வந்த வரையில் அவர்கள் திரும்பிவரவில்லை. நானும் வடிவாம்பாளும் மேன்மாடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏதோ அலுவலாக வீட்டு வாசலுக்குப் போன வேலைக்காரி உடனே உள்ளே ஒடி வந்து தங்களை நாலைந்து பாம்புகள் கடித்து விட்டன என்றும், தாங்கள் பிரக்ஞையற்று மயங்கி விழுந்து கிடப்பதாகவும் ஜனங்கள் சொல்லிக்கொண்டு தாறுமாறாகத் தங்களுடைய ஜாகையை நோக்கி ஓடுகிறார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட உடனே எங்களுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை ஆனாலும், அத்தனை ஜனங்களும் சொல்லிக் கொண்டு போவதைப் பொய் என்று நினைக்கவும் மனம் இடங் கொடுக்கவில்லை. ஆகையால் உடனே புறப்பட்டு நானும் இவளும் நேராக வந்து சேர்ந்தோம். பங்களாவின் வாசலில் ஆயிரக்கணக்கில் ஜனங்களும் போலீசாரும் திரளாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்களைப்பற்றி நிரம்பவும் கவலையும் விசனமும் கொண்டு துடிதுடித்து நிற்கிறார்கள். அவர்கள் நிற்பதைக் கண்டு அவர்கள் சொன்னதைக் கேட்க, பாம்புகடித்ததென்பது நிஜமான செய்தி என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு உள்ளே வந்தோம். இந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்திருக்கும் தங்களுடைய வேலைக்காரியும் அதை உறுதிப்படுத்தினாள். இதைத் தவிர உண்மையான விவரம் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. வடிவாம்பாளின் தாய் தகப்பன்மார்கள் அநேகமாய் அவர்களுடைய பங்களாவில்தான் இருப்பார்கள். நாங்கள் புறப்பட்டு வந்த அவசரத்தில், அவர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பமாட்டாமல் வந்து விட்டோம். வேறே யாரிடத்திலாவது சங்கதியைத் தெரிந்து கொண்டு அவர்களும் அநேகமாய் வெகு சீக்கிரம் இங்கே வந்து சேருவார்கள் என்று நினைக்கிறேன். இந்த பங்களாவில் அதிக அடைசலே இல்லையே! பாம்பு எங்கிருந்து கடித்தது? ஒரே காலத்தில் நாலைந்து பாம்புகள் கடிக்கும்படியான நிலைமை எப்படி ஏற்பட்டது? அப்படிக் கடித்திருக்கையில், தாங்கள் மருந்தே சாப்பிடவில்லை என்கிறீர்களே! விஷகடியினால் ஏற்படும் மயக்கம் எப்படி விலகியது? இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. தயை செய்து சொல்ல வேண்டும். இந்த அறையின் தாழ்ப்பாளைத் திறந்துவிட்ட தங்கள் மனைவியார் எங்களோடு பேசாமல் எங்கேயோ போய் விட்டார்கள். அதன் காரணமும் இன்னதென விளங்கவில்லை. தயை கூர்ந்து எல்லாவற்றையும் சொல்ல வேண்டுகிறேன்” என்றான். சாமியார் சந்தோஷமாகப் புன்னகை செய்து நாற்புறங்களிலும் தமது பார்வையைச் செலுத்தி நிரம்பவும் தணிவான குரலில் பேசத் தொடங்கி, “தம்பி பயப்பட வேண்டாம்; என்னைப் பாம்புகள் கடிக்கவில்லை. ஓர் எண்ணத்தை மனசில் வைத்துக் கொண்டு நான் இப்படிப்பட்ட விபரீதச் செய்தி ஊரில் பரவும்படி செய்திருக்கிறேன். உண்மையிலேயே நாலைந்து நாகப் பாம்புகள் கூடி ஒரு மனிதனைக் கடிக்குமானால், அவனுடைய பிராணன் அதே நிமிஷத்தில் போய்விடாதா? மருந்தாவது மந்திரமாவது! அதெல்லாம் நாகப் பாம்பின் விஷத்துக்கு முன் நிற்குமா என்ன? வரியன் முதலிய மற்ற பாம்புகளின் விஷமானால், மருந்து முதலிய சிகிச்சைகளைக் கொண்டு நிவர்த்திக்கலாம்” என்றார். அவர் கூறியதைக் கேட்டவுடன் கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரது மனதையும் அபாரமாக அழுத்தி வதைத்துக் கொண்டிருந்த பெருத்த ஆவலும், கவலையும், துயரமும், சஞ்சலமும் ஒரு நொடியில் விலகின. அவர்களது மனம் சந்தோஷப் பெருக்கினால் பூரித்துப் பொங்கியது. முகம் மலர்ந்து இனிமையாக மாறியது. உடனே வடிவாம்பாள் அளவற்ற மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கி, “சுவாமி எங்களுக்கெல்லாம் இப்போது தான் உயிர் வந்தது. இந்தச் சங்கதியை நாம் நம்முடைய மனிதர்களுக்கு எல்லாம் ரகசியமாக உடனே சொல்லி அனுப்புவது நல்லதென்று நினைக்கிறேன். இந்த அரை நாழிகை சாவகாசத்திற்குள் எங்களுடைய மனம் பட்டபாடு அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும். அதுபோலவே, அவர்களும் விசனமும் கவலையும் கொண்டு பதறிப்போய் இங்கே ஒடி வருவார்கள் ஆகையால் நம்முடைய மனிதர்களுக்கு உடனே ஓர் ஆளை அனுப்பலாம்” என்றாள்.

சாமியார், “உஸ், ஒங்கிப் பேசாதே! ஒருவேளை யாராவது கதவிற்கு வெளியில் வந்திருந்து நாம் பேசுவதைக் கேட்டாலும் கேட்பார்கள். நான் உங்களிடம் வெளியிட்ட ரகசியம் வேறே எவருக்கும் தெரியக்கூடாது. உங்கள் இருவருடைய தாய் தகப்பனார்களுக்கு நாமே ரகசியத்தில் இதைத் தெரிவிக்க வேண்டும். ஆளிடம் இதைச் சொல்லி அனுப்பினால் அவன் ஒரு வேளை இதை வேறே யாரிடமாவது சொல்லி விடுவான். அதில் இருந்து விஷயம் நெடுகப் பரவிவிடும். நீங்கள் இந்தச் செய்தியைக் கேட்டு உண்மை என்று நம்பி எப்படி இங்கே ஓடி வந்தீர்களோ, அது போலவே, உங்கள் தாய் தகப்பன்மார்களும் தவித்துக் கொண்டு ஓடி வரவேண்டும். அப்போதுதான் ஜனங்கள் எல்லோருக்கும் இது உண்மை போல இருக்கும். நம்மவர்கள் உள்ளே வந்தவுடன் நாமே நேரில் சங்கதியைச் சொல்லிக் கொள்ளலாம். இந்தக் கதவுக்கு வெளியில் இருந்து உங்களுக்குத் தகவல் தெரிவித்த வேலைக்காரிக்குக்கூட உண்மை தெரியாது. என் சம்சாரம் ஒருத்திக்கும், உங்களுக்கும்தான் தெரியும். நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலத்திற்கு மிகவும் எச்சரிப்பாக நடந்து கொள்ள வேண்டும். ஜாக்கிரதை" என்றார்.

கண்ணப்பா:- சரி. தங்களுடைய பிரியப்படியே எல்லா விஷயமும் நடக்கட்டும். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்களோ, அது போலவே நாங்கள் நடந்து கொள்ளத் தடையில்லை. முக்கியமாக பாம்புகளின் விஷயம் முற்றிலும் பொய்யானது போதுமானது.

சாமியார்:- பாம்புகளின் விஷயம் முற்றிலும் பொய்யல்ல. அவைகள் என்னைக் கடித்தது என்ற விஷயம் மாத்திரம் பொய். மற்றபடி நான் இன்றைய தினம் தப்பிப் பிழைத்தது மாத்திரம் புனர்ஜென்மந்தான்.

கண்ணப்பா:- (திடுக்கிட்டு) ஆ! அப்படியா உண்மையில் தங்களை இன்று பாம்பு கடிக்க இருந்ததா?

சாமியார்:- பாம்பு என்று ஒருமையாக ஏன் சொல்லுகிறீர்கள்? பாம்புகள் என்று சொல்லுங்கள். . கண்ணப்பா:- (முன்னிலும் அதிக வியப்பும் ஆவலும் அடைந்து) இந்த பங்களாவில் தப்பித்தவறி பாம்பு வந்தால் ஒரு பாம்பு தான் வரும். பல பாம்புகள் ஒன்றாக எப்படி வரும்? பாம்புப் புற்றை ஒருவேளை யாராவது வெட்டினார்களா? அங்கே தாங்கள் போனிகளா?

சாமியார்:- நன்றாக இருக்கிறது. யாராவது போய்ப் பாம்புப் புற்றை வெட்டுவார்களா? அப்படியே தெரியாமல் யாராவது வெட்டினாலும், அங்கே நான் ஏன் போகப் போகிறேன்? அதெல்லாம் இல்லை. நீங்களே இன்னம் நன்றாக யோசித்துப் பாருங்கள். நாலைந்து பாம்புகள் எப்படி ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கும் என்று யோசனை செய்யுங்கள்.

கண்ணப்பா:- (சிறிது நேரம் யோசனை செய்து) ஒரு வேளை யாராவது பாம்பாட்டி நாலைந்து பாம்புகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்க வந்தானா? அவனிடம் இருந்த பாம்புகள் எல்லாம் ஒரு வேளை தப்பி ஓடிவந்து தங்கள் மேல் விழுந்திருக்குமோ?

சாமியார்:- (சிரித்துக் கொண்டு) அதெல்லாம் இல்லை. பாம்பாட்டி பாம்புகளின் விஷப்பல்லை அறுத்து அந்த இடத்தை நெருப்பால் தீய்த்த பிறகு தானே அதை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு ஆட்டுகிறான். அவைகள் கடித்தாலும் விஷமில்லை. அதைப்பற்றி நான் பயப்படக் கூடியவன் அல்லவே.

கண்ணப்பா:- (முற்றிலும் குழப்பமும் பிரமிப்பும் அடைந்து) அதுவுமில்லை என்றால், பிறகு வேறு எந்தவிதமாகத்தான் தங்களுக்கு இந்த அபாயம் நேர்ந்தது? தாங்களே சொல்லி விடுங்கள். எனக்கு வேறே எதுவும் தோன்றவில்லை.

சாமியார்:- நம்முடைய விரோதிகள் நம்மேல் பாணந்தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அன்றைய தினம் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்துவிட்டதாக, நான் உங்களிடம் சொன்ன காலத்தில், நாம் எல்லோரும் இனி நிரம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா. நான் எதிர்பார்த்தபடிதான் அவர்கள் செய்ய ஆரம்பித்து, முதல் பாணத்தை என்மேல் தொடுத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக தெய்வந்தான் என்னைக் காப்பாற்றியது. இல்லாவிட்டால் இந்நேரம் நான் மாண்டு போயிருப்பேன். இப்போது நான் தப்பிப் பிழைத்ததைப் பற்றிக்கூட நான் அவ்வளவாக சந்தோஷப்படவில்லை. என் விஷயத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். உங்களுக்கெல்லாம் கெடுதல் செய்ய நினைத்து ஏதாவது உபாயம் தேடி இருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அதில் இருந்து தப்பி கூேழ்மமாய் இருக்க வேண்டுமே என்ற கவலையே இப்போது என் மனசை அடியோடு கவர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலம் எங்கேயாவது மறைவாக இருந்து, அவர்களுடைய சதியாலோசனையில் அகப்படாமல் தப்பித்துக் கொள்வதே உசிதமான காரியம் என்று நினைக்கிறேன்.

கண்ணப்பா:- (திடுக்கிட்டு ஆ என்ன ஆச்சரியம்! நம்முடைய எதிரிகள் பாம்புகளைப் பிடித்துத் தங்களுடைய பங்களாவில் கொண்டுவந்து விட்டார்களா? அப்படியும் செய்வதுண்டோ?

சாமியார்:- அப்படிச் செய்திருந்தால், பாதகமில்லையே! அவர்கள் நிரம்பவும் தந்திரமாகக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். இன்று காலையில் நான் வழக்கப்படி ஸ்நானம் செய்து பூஜை முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துவிட்டு இன்றைய தினம் காலையில் வந்த தபால்களை எல்லாம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியில் இருந்த ஒரு ஜெவான் உள்ளே வந்து தஞ்சை போலீஸ் சூப்பரின்டெண் டெண்டு கும்பகோணத்தில் இருந்து ஓர் ஹெட்கான்ஸ்டேபில் வசம் கொடுத்தனுப்பி இருப்பதாக ஒரு கடிதத்தையும், ஒரு சிறிய பார்சலையும் கொடுத்தான். அந்தக் கடிதம் கெட்டியான ஒர் உறைக்குள் போடப்பட்டிருந்தது. அந்த உறை நன்றாக ஒட்டப் பட்டிருந்ததன்றி, அது போலீஸ் சூபரின்டெண்டெண்டின் கச்சேரியில் உபயோகிக்கப்படும் உறையாகவே இருந்தது. அதோடு வந்த பெட்டி நல்ல கெட்டியான காகிதத்தால் சுற்றப்பட்டு உயர்ந்த டொயின் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அதன் மேல் அரக்கு முத்திரை காணப்பட்டது. அந்த அரக்கு முத்திரையின் மேல் இருந்த எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லை. அவைகளைப் பார்த்தவுடன், கும்பகோணத்தில் இருந்து வந்த ஹெட்கான்ஸ்டேபிலை நேரில் பார்த்து அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அவனை உள்ளே அழைத்து வரும்படி என்னுடைய ஜெவானை அனுப்பினேன். அவன் வெளியில் போய்ப் பார்த்தால் கும்பகோணத்திலிருந்து வந்தவன் காணப்படவில்லை. அவன் போய்விட்டதாக என் ஜெவான் வந்து செய்தி சொன்னான். அதைக் கேட்க, என் மனசில் ஏதோ ஒருவித சந்தேகம் தோன்றத் தொடங்கியது. சூபரின்டெண் டென்டின் இடத்திலிருந்து வந்த மனிதன் நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கேட்டுக் கொண்டே போவான். அல்லது, தான் போவதாகவாவது செய்தி சொல்லி அனுப்பிவிட்டுப் போவான். அப்படிச் சொல்லாமல், அந்த மனிதன் போனதிலிருந்து என் மனசில் ஏதோ சந்தேகம் தோன்றிக் கொண்டே இருந்தது. உடனே நான் என் ஜெவானை வெளியில் அனுப்பிவிட்டு, சூப்பரின்டெண்டெண்டின் கடிதத்தை எடுத்துப் படித்தேன். அவர் கும்பகோணத்தில் முகாம் செய்திருப்பதாகவும், அவ்விடத்தில் சட்டைநாத பிள்ளையின் சில உடைகளும், அவற்றிலிருந்த கடிதங்களும், மற்றும் பல சாமான்களும் அகப்பட்டதாகவும், அவைகளை அந்தப் பெட்டிக்குள் வைத்து அனுப்பி இருப்பதாகவும், அவைகளை ஆராய்ச்சி செய்து, சட்டைநாத பிள்ளை ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கும் விஷயத்தில் யோசனை சொல்ல வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதி இருந்தார். அதுவுமன்றி, இது நிரம்பவும் ரகசியமான விஷயம் ஆகையால் பெட்டிக்குள் இருக்கும் சாமான்களை மற்றவருக்குக் காட்டாமல் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. போலீஸ் இலாகாவில் எல்லாவற்றையும் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளுகிறது வழக்கம்; அதுவுமன்றி, நானே எல்லா விஷயங்களிலும் அதிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுகிறவன் என்று சூப்பரின்டெண்டெண்டு பல தடவைகளில் என்னிடம் நேரில் சொல்லி இருக்கிறதன்றி, அவர் அதற்குமுன் எந்த விஷயத்திலும் எனக்கு ஜாக்கிரதை சொல்லியதே இல்லை. ஆகவே, அவர் இந்த மாதிரி எழுதியதும் எனக்குப் புதுமையாக இருந்தது.

கண்ணப்பா:- ஆகா! தங்களுடைய புத்தி விசேஷத்தை என்னவென்று சொல்லுகிறது! நாங்களாக இருந்தால், முன்பின் யோசியாமல் அவசரப்பட்டு அந்தப் பெட்டியை உடனே திறந்து பார்த்திருப்போம். தாங்கள் அற்ப விஷயங்களைக் கொண்டு சந்தேகப்பட்டு பெட்டிக்குள் ஏதோ கெடுதல் இருப்பதாக உடனே தீர்மானித்துக் கொண்டீர்கள்! இப்படிப்பட்ட மகா கூர்மையான தீர்க்க தரிசனம் தங்களிடம் இருப்பதனால்தான் தங்களுக்கு இவ்வளவு அபாரமான கீர்த்தியும் பெயரும் உண்டாகி இருக்கின்றன.

சாமியார்- நான் இப்போது சொன்ன அற்ப விஷயங்களைக் கொண்டே நான் பெட்டிக்குள் ஏதோ கெடுதல் இருப்பதாக சந்தேகப்படவில்லை. தஞ்சை போலீஸ் சூபரின்டெண்டெண்டு இந்த ஜில்லா முழுதும் சுற்றுப் பிரயாணம் போய் வெளியூர்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களைத் தணிக்கை பார்க்க வேண்டியது அவருடைய உத்தியோகக் கடமை. அடுத்த வாரத்தில் அவர் எந்தெந்த ஊர்களுக்குப் போய் முகாம் செய்வார் என்பதற்கு அவர் இந்த வாரத்திலேயே ஒரு குறிப்பு எழுதி, அதன் நகலை முன்னாகவே அந்தந்த ஸ்டேஷனுக்கு அனுப்புகிறது வழக்கம். அதன் நகல் ஒன்று எனக்கும் வருவதுண்டு. ஏனென்றால், ஏதாவது அவசர சந்தர்ப்பம் நேரிடுமானால், நான் உடனே புறப்பட்டு அவர் இருக்கும் இடத்துக்குப் போகலாம் என்ற செளகரியத்தை உத்தேசித்து அந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அவர் இந்த வாரத்தில் முகாம் செய்ய உத்தேசித்து இருக்கும் ஊர்களைக் காட்டிய குறிப்பை எனக்குப் போன வாரத்திலேயே அனுப்பி இருந்தார். அதை நான் எப்போதும் என் மேஜையின் எதிரிலேயே வைத்திருப்பது வழக்கம். அதை நான் உடனே பார்த்தேன். பார்த்ததில் இந்த வாரம் முடிய அவர் பட்டுக் கோட்டைத் தாலுக்காவில் உள்ள ஊர்களில் முகாம் செய்யப் போவதாக எழுதி இருக்கிறார். அதைப் பார்க்க, என் மனசில் உண்டான சந்தேகம் அதிகரித்தது. அவர் எனக்கு அனுப்பும் சுற்றுப் பிரயாணக் குறிப்பில் கண்ட ஊருக்குப் போகாமல், ஏதாவது அவசர நிமித்தமாக வேறே ஊருக்குப் போனால், அவர் உடனே அந்தத் தகவலை எனக்குத் தெரிவித்து விடுவார். அந்தப் பெட்டியையும், கடிதத்தையும் கொண்டு வந்தவன், அவர் கும்பகோணத்தில் இருந்து அவைகளை அனுப்பியதாகச் சொன்னான் ஆகையால், அவர் எனக்கு அறிவிக்காமல் கும்பகோணம் போயிருப்பாரா என்ற சந்தேகம் உண்டாகிவிட்டது. நான் அந்தப் பெட்டியை உடைத்துப் பார்க்கப் பிரியப்படாதது என்னுடைய நல்ல காலந்தான் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்தேன் என்றால், உடனே கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஓர் அவசரத் தந்தி அனுப்பி, போலீஸ் சூபரின்டெண்டெண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறாரா என்று கேட்டேன். அங்கிருந்து உடனே மறுதந்தி வந்தது. சூப்பரின்டெண்டெண்டு அங்கே வரவே இல்லை என்றும், பட்டுக்கோட்டைத் தாலுக்காவில் முகாம் செய்து கொண்டிருப்பதாக நேற்று சாயுங்கால வண்டியில் தஞ்சாவூரில் இருந்து வந்த ஒரு ஜெவான் சொல்லுகிறான் என்றும், அந்தத் தந்தியில் தகவல் காணப்பட்டது. பெட்டியோடு வந்த கடிதத்தை நான் மறுபடியும் எடுத்துப் படித்தேன். அதில் இன்றைய தேதியும் கும்பகோண்ம் முகாம் என்ற தகவலும் காணப்பட்டன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டன. ஆதலால், என் மனசில் உடனே பெருத்த சந்தேகம் உண்டாகிவிட்டது. பெட்டியில் ஏதோ கெடுதல் இருக்கிறதென்றும், கடிதத்தை யாரோ பொய்யாகத் தயாரித்து அனுப்பி இருக்க வேண்டும் என்றும் நான் யூகித்துக் கொண்டேன். அவைகளைக் கொண்டு வந்தவன் தஞ்சாவூர் முதலிய வேறே எந்த ஊரிலாவது இருந்து போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு அனுப்பியதாகச் சொல்லாமல், கும்பகோணத்தில் இருந்து அனுப்பியதாகச் சொன்னதைக் கொண்டும், பெட்டியில் வேறே ஏதாவது வழக்கைப் பற்றிய பொருள்கள் இருப்பதாகச் சொல்லாமல், சட்டைநாத பிள்ளையின் உடை முதலியவைகள் இருப்பதாகச் சொன்னதைக் கொண்டும் கும்பகோணத்தில் உள்ள சட்டைநாத பிள்ளையைச் சேர்ந்த மனிதர்தான், என் மேலுள்ள ஆத்திரத்தினால் ஏதோ தந்திரம் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் தோன்றியது. சட்டைநாத பிள்ளையும் அவனுடைய தம்பியும் என்மேல் தீராப்பகைமை வைத்திருப்பது இயற்கை அல்லவா; அதுவுமல்லாமல் நான் எப்படியும் பிரயாசைப்பட்டு, சட்டைநாத பிள்ளை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனை மறுபடி சிறைச்சாலைக்கு அனுப்பி விடுவேன் என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம் ஆகையால், எப்படியாவது என்னை ஒழித்து விட்டால், அதன் பிற்கு மற்றவர்களை எளிதில் சரிப்படுத்திவிட்டு எங்கேயாவது மறைந்து கொண்டு இருக்கலாம் என்ற நினைவோடு, அவர்கள் முதலில் என்னைக் கொன்றுவிட எண்ணுவதும் சகஜமே ஆகையால், அவர்கள் எனக்கு ஏதாவது தீங்கு செய்ய முயற்சிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகாஸ்பதமான இந்தக் கடிதமும், பெட்டியும் வந்ததைக் காண, பெட்டியை உடனே உடைக்கக் கூடாது என்ற ஒர் எண்ணம் என் மனசில் உண்டாயிற்று. நான் இந்தப் பெட்டியில் பாம்புகள் இருக்கும் என்று நினைக்கவே இல்லை. சில வருஷங்களுக்கு முன் நடந்த ஜெர்மானியச் சண்டையில், அவர்கள் இங்கிலிஷ்காரர்களின் மேல், புதுமாதிரியான வெடிகுண்டு எறிந்ததாகப் படித்தோம் அல்லவா. அந்த குண்டு வெடித்தவுடன் அதிலிருந்து வந்த புகையை சுவாசித்த மனிதர் எல்லோரும் உடனே இறந்து போய்விட்டதாகக் கேள்வியுற்றோம் அல்லவா? அதுபோல, ஏதாவது விஷப்புகை தயார் செய்து இந்தப் பெட்டிக்குள் அடைத்து அனுப்பி இருப்பார்களோ என்ற எண்ணந்தான் என் மனசில் உதித்தது. என்னிடம் பூதக்கண்ணாடி ஒன்று இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பார்த்தால் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத மகா அற்பமான வஸ்துக்களும் பெரிது பெரிதாகத் தெரியும்; நான் அந்தக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெட்டியை நன்றாகத் திருப்பித் திருப்பி ஆராய்ச்சி செய்து பார்த்தேன். பெட்டியின் மேல் நாலைந்து இடங்களில் ஓர் ஈர்க்குக் குச்சி நுழையும்படியான துவாரங்கள் இருந்தது நன்றாகத் தெரிந்தது. நான் உடனே ஒர் ஈர்க்குக் குச்சியை எடுத்து ஒரு துவாரத்தில் விட்டுப் பார்த்தேன்; குச்சி நெடுக உள்ளே நுழைந்தது ஆகையால், துவாரம் உள்பக்கம் வரையில் போனதென்று நிச்சயித்துக் கொண்டேன். ஆகவே, பெட்டிக்குள் விஷப்புகை எதுவும் இல்லை என்பது உடனே நிச்சயப்பட்டது. பிறகு நான் மெல்லிய குடைக்கம்பி ஒன்றை எடுத்து ஒரு துவாரத்தில் வைத்து வேகமாய் உள்ளே சொருகினேன். உடனே பெட்டிக்குள் புஸ் என்ற சப்தம் உண்டாயிற்று. உண்டாகவே, என் மனசில் பெருத்த யோசனை உண்டாகிவிட்டது. அதற்குள் ஏதோ உயிருள்ள ஜெந்து இருக்கிறதென்ற எண்ணமும், அநேகமாய் அது பாம்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகமும் உண்டாகி விட்டன. ஆகவே, அந்தப் பெட்டியை உடைப்பதா, அல்லது, உடைக்காமல் அப்படியே பூமிக்குள் புதைத்து விடுவதா என்று நான் யோசனை செய்தேன். அதற்குள் இருப்பது இன்ன வஸ்து

மா.வி.ப. I -21 என்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விலக்க முடியாத ஒரு விருப்பம் தோன்றி வருத்தியது ஆகையால், அந்தப் பெட்டியில் உள்ள ஜெந்து என்னை உபத்திரவிக்காமல், அதை நான் எப்படி உடைத்துப் பார்க்கிறது என்று யோசனை செய்தேன். தண்ணி நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் அந்தப் பெட்டியை அழுத்தி அதை உடைத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றியது. உள்ளே இருப்பது பாம்பாக இருந்தால் அது ஒருவேளை தண்ணீரில் நீந்தி வெளியில் வந்து விடுமோ என்ற நினைவு உண்டானது ஆகையால், நான் வேறோர் உபாயம் செய்தேன். அந்தப் பெட்டியைத் தோட்டத்தின் பின் புறத்தில் எவரும் இல்லாத தனியான ஓரிடத்தில் கொண்டு போய் வைத்து, அதைச் சுற்றிலும் சக்கர வட்டமாக நாலைந்து கட்டு விறகுகளை வைத்து நெருப்பைப் போட்டுக் கொளுத்தித் தனலாக்கி, நெருப்புத் தணலைக் கரைபோலப் பெட்டியைச் சுற்றி அனைத்து வைத்துக் கொண்டு நான் நெருப்புக்கு வெளியில் நின்று ஒரு கடப்பாறையால் பெட்டியை அடித்து உடைத்தேன். மேலே மூடப்பட்டிருந்த காகிதம் போனவுடன் உள்புறத்தில் மூங்கில் பெட்டி ஒன்று காணப்பட்டது. அதன்மேல் கடப்பாறையில் இரண்டொரு குத்துகள் குத்த பெட்டியின் மேல்பக்கம் பொத்துப் போயிற்று. உடனே உள்பக்கத்தில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கரு நாகங்கள் புஸ் புஸ் என்று சீறிக் கொண்டு கிளம்பி வெளியில் பாய்ந்து அங்கும் இங்கும் ஒடத்தலைப்பட்டன. அவற்றைச் சுற்றிலும் நெருப்புத் தனலினால் கரைகட்டப்பட்டிருந்தது ஆகையால், அதைக் கடந்து வெளியில் வர மாட்டாமல் அந்தச் சக்கர வட்டத்திற்குள்ளாகவே அங்கும் இங்கும் தாறுமாறாக ஓட ஆரம்பித்தன. நான் என் கையில் இருந்த கடப்பாறையால் உடனே அந்தப் பாம்புகளை எல்லாம் அடித்துக் கொன்று தோட்டத்திற்கு வெளியில் துக்கி எறிந்து நெருப்புத் தணலையும் அனைத்துவிட்டு பங்களா விற்குள் வந்து, என் சம்சாரத்தை மாத்திரம் கூப்பிட்டு, நடந்த வரலாற்றை எல்லாம் தெரிவித்தேன்.

கண்ணப்பா:- என்ன ஆச்சரியம் இது மனிதர் இப்படிப்பட்ட அட்டுழியம் செய்யத் துணிவார்களா? தாங்கள் நிரம்பவும் முன் யோசனையோடு இருந்தபடியால் தப்பித்துக் கொண்டீர்கள். வேறே யாராக இருந்தாலும், அவசரப்பட்டுக் கொண்டு பெட்டியை உடனே திறந்திருப்பார்கள்; இந்நேரம் அவர்களுடைய உயிரும் போயிருக்கும்; என்னவோ, தெய்வந்தான் நல்ல மனிதர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மனிதன் எப்படித் தப்பி வாழ முடியும்? உலகம் என்றால், மனிதருக்கு யாராவது பகைவர் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வஞ்சகமான சதியாலோசனை செய்தால், நாம் இரவு பகல் விழிப்பாகவும் எச்சரிப்பாகவும் இருந்தால்கூட, இதை எல்லாம் எப்படித் தடுக்க முடியும்? இவ்வளவு தூரம் அந்த மாசிலாமணிக்கு யோசனை எட்டியிருக்காது. இதுவரையில் அவன் மாத்திரம் தனியாக இருந்தானே, அவன் ஏதாவது கெடுதல் செய்தானா? எல்லாம் அந்தச் சட்டைநாத பிள்ளையினுடைய யுக்தியே அன்றி வேறல்ல. அவன் வந்தவுடனே அவர்கள் பாணந் தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஆம். அதிருக்கட்டும்; தாங்கள் தங்களைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தியை எதற்காகப் பரப்பி விட்டீர்கள்.

சாமியார்:- நான் நன்றாகத் தீர்க்காலோசனை பண்ணியே இந்தத் தந்திரத்தைச் செய்திருக்கிறேன். இந்த மாதிரி பொய்க் கடிதமும், பாம்புகள் வைத்த டெட்டியும் வந்தன என்ற விஷயத்தை நான் வெளியிட்டால், அது ஜனங்களுக்கும் போலீசாருக்கும் பரவிவிடும். சட்டைநாத பிள்ளையைச் சேர்ந்த மனிதரே இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று உடனே எல்லோரும் யூகித்துக் கொள்வார்கள். அந்தச் சங்கதி சட்டைநாத பிள்ளை மாசிலாமணி முதலியோருக்கும் எப்படியும் எட்டும். இந்தக் கடிதமும் டெட்டியும் வந்த சங்கதியை நான் எவரிடமும் வெளியிடாமல் மறைத்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். எந்த வகையிலும் சரி, நான் சாகாமல் உயிரோடிருக்கிறேன் என்பதையும், பாம்புகள் கடிக்காமல் நான் தப்பித்துக் கொண்டேன் என்பதையும் நம்முடைய எதிரிகள் வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் என்மேல் வைத்திருக்கும் பகைமையும் ஆக்கிரோஷமும் இதனால் அதிகரிக்குமே அன்றிக் குறையப் போகிறதில்லை. என்னைக் கொல்வதற்காகப் பாம்புகளை அனுப்பியவர்கள் அவர்கள்தான் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேன் என்றும், அவர்களை வேரறுக்க நான் முயற்சிப்பேன் என்றும் அவர்கள் கட்டாயம் யூகித்துக் கொள்வார்கள். ஆகவே, நான் இப்போது அவர்களுக்குப் பெருத்த ஜென்மத் துரோகியும் பகைவனுமாய் விட்டேன் என்றும், என்னை உயிரோடு ஒரு நிமிஷமும் வைக்கக்கூடாது என்றும் அவசியம் நினைத்து, என்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் வேறே பலவகையில் அவசரமான முயற்சிகள் செய்வார்கள். என்னைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தியைப் பரப்பிவிட்டால், அது அவர்களுக்கும் எட்டும். அவர்கள் திருப்தி அடைந்து, என்மேல் கத்தி தீட்டுவதை அவ்வளவோடு நிறுத்திவிடுவார்கள். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் விஷயத்தில் அதிகமாக என் கவனத்தையும் பொழுதையும் செலவிடாமல் நான் என் வேலையைப் பார்க்கலாம் அல்லவா? அதற்காகத்தான் நான் இந்த யுக்தி செய்தேன்.

கண்ணப்பா:- இது நல்ல யுக்திதான். ஆனால் பாம்புகள் கடித்து விட்டன என்று சொல்லிக் கொண்டு, தாங்கள் எத்தனை நாள்கள் உள்ளே இருக்க முடியும்? -

வடிவாம்பாள்:- இவர்கள் எப்போதும் உள்ளே இருக்கப் போகிறார்களா? பாம்புகள் கடித்துவிட்டன என்றும், மருந்துகள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும், இன்னம் உடம்பு தேற வில்லை என்றும் எல்லோரும் சொல்லிக் கொள்ளும்படி செய்து விட்டு, ரகசியமாக வெளியில் போய் இவர்கள் தங்கள் அலுவல்களைப் பார்ப்பார்களோ என்னவோ. அப்படிச் செய்வதுகூட அபாயகரமானதுதான். சுவாமிகள் வெளியில் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான் உசிதமான காரியம் எனத் தோன்றுகிறது.

சாமியார்:- நான் அவர்களுக்குப் பயந்து வெளியில் போகாமல் எத்தனை நாளைக்குத் தான் ஒளிந்து கொண்டிருக்க முடியும். அப்படி இருந்தாலும், எதிரிகளுக்கு ஒரு விதமான அவநம்பிக்கை உண்டாகும். நாகப்பாம்புகள் கடித்தால், மனிதர் உடனே இறந்து போவார்களேயன்றி, நெடுநாள்கள் படுத்திருப்பது வழக்கமில்லை. மற்ற சாதாரணப் பாம்பு கடித்தால் அதற்கு மாதக் கணக்கில் வைத்தியம் செய்கிறதுண்டு. அப்படிப்பட்ட பாம்பினால் கடிக்கப் பெற்ற மனிதர் வீட்டிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதை ஜனங்கள் நம்புவார்கள் நான் நான்கு நாகப் பாம்புகளால் கடிக்கப்பட்டு நோயாளியாகப் படுத்திருக்கிறேன் என்று பல நாட்கள் வரையில் சொல்லிக் கொண்டு வந்தால், அதை எதிரிகள் உண்மை என்றே நம்பமாட்டார்கள். என்னைக் கடிக்கவில்லை என்றும், நான் தப்பித்துக் கொண்டு ஏதோ கபடமான கருத்தோடு பாசாங்கு செய்கிறேன் என்றும் எதிரிகள் உடனே கண்டு கொள்வார்கள் ஆகையால், அப்படிச் செய்வது சரியல்ல. என்னைப் பாம்புகள் கடித்துவிட்டதாகவும், நான் ஒரே மயக்கமாய்க் கிடப்பதாகவும், சில மாந்திரீகர்களும், வைத்தியர்களும் உள்ளே இருந்து என்க்கு சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் ஜனங்களும் போலீசாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அப்படியே அவர்கள் இன்று சாயுங்காலம் வரையில் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நான் இருக்கும் இந்த இடத்திற்கு யாரும் வரமாட்டார்கள். இன்று சாயுங்காலம் நீங்கள் ஏதோ அலுவலாய்ப் போவது போல வெளியில் போங்கள். அப்போது ஜனங்கள் என்னுடைய தேக ஸ்திதி எப்படி இருக்கிறதென்று கேட்பார்கள். வைத்தியர்கள் மருந்துகள் கொடுத்த பிறகு நான் பலமாக வாந்தி எடுத்ததாகவும், மயக்கம் கொஞ்சம் தெளிந்திருப்பதாகவும், இன்றைய இரவுக்குள் முற்றிலும் குணம் ஏற்பட்டுவிடும் என்று நான் நம்புவதாகவும் சொல்லுங்கள். அதோ எல்லா ஜனங்களுக்கு நான் என்னுடைய நன்றியறிதலைத் தெரிவிக்கச் சொன்னதாகவும், அவர்கள் எல்லோரும் கவலைப்படாமல் தத்தம் வீட்டுக்குப் போய் இராப்பொழுதைக் கழிக்கவும், நான் கேட்டுக் கொண்டதாக நீங்கள் சொல்லுங்கள். பிறகு நீங்கள் உள்ளே வந்திருந்து கொஞ்சம் பொறுத்து மறுபடி வெளியில் போய், என்னுடைய நிலைமை முன்னிலும் அதிக தெளிவு அடைந்திருப்பதாகவும், போலீஸ்காரர்கள் எல்லோரும் தத்தம் வீடுகளுக்குப் போய்விட்டு மறுநாள் காலையில் இங்கே வரவும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவேளை என்னோடு பேசப் பிரியப்பட்டால் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வாருங்கள். நான் அவரோடு இரண்டொரு வார்த்தைகள் பேசி, அனுப்பி விடுகிறேன். அவர்கள் எல்லோரையும் அனுப்பிய பிறகு நீங்கள் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் உங்களுடைய தாயார் தகப்பனார் குழந்தை வடிவாம்பாளுடைய தாயார் தகப்பனார் இன்னும் நாலைந்து ஆள்கள் ஆகிய ஜனங்களை ரகசியமாக அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். அப்படி வருவதற்கு முன், ஒர் ஆளைச் சுடுகாட்டுக்கு அனுப்பி, நல்ல விறகாய்ப் பார்த்து ஒரு வண்டியும், எரு முட்டைகள் நாலைந்து கோட்டையும் கொண்டுவந்து ஒரு ஜதை அடுக்கி வைக்கச் சொல்லிவிட்டு, வரும்போது ஒரு டின் சீமை எண்ணெய் மாத்திரம் வாங்கிக் கொண்டு வந்துவிடுங்கள். அதற்குள் என் வேலைக்காரி முதலிய எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடும்படி செய்கிறேன். நம்முடைய மனிதர்கள் எல்லோரும் வந்து சேர்ந்த பிறகு நாம் ஒரு பாடைகட்டி வைத்துக் கொண்டு தயாராக இருப்போம். இரவு சரியாய் ஒருமனி சமயத்தில், ஊரெல்லாம் அடங்கி நிச்சப்தமாயிருக்கும் காலத்தில், அந்தப் பாடையில் நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எல்லோரும் என்னைத் துக்கிக் கொண்டு சந்தடி செய்யாமல் மயானத்துக்குப் போய் அங்கே அடுக்கப்பட்டிருக்கும் ஜதையில் என்னை வைத்து, சீமை எண்ணெயை ஊற்றிக் கொளுத்திவிட்டு வந்துவிடுங்கள். நாளைய தினம் காலையில் ஜனங்களும் போலீசாரும் வந்து விசாரித்தால், அவர்கள் போன அரை மணிக்கெல்லாம் நான் இறந்து போய்விட்டதாகவும், எல்லோரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய்க் கொளுத்தி விட்டதாகவும் சொல்லி விடுங்கள். நாளை முதல் எனக்குக் கல்நட்டு பதினாறாவது தினக் கருமாந்திரம் முதலிய உத்தரகிரியைகளையும் நடத்தி விடுங்கள் - என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட வடிவாம்பாள் கண்ணப்பா ஆகிய இருவரும் பெருத்த திகைப்பும் குழப்பமும் விசனமும் அடைந்து கலங்கிப் போயினர். உடனே வடிவாம்பாள் திகம்பரசாமியாரை நோக்கி, “என்ன சுவாமிகளே! தாங்கள் இதுவரையில் பேசியதை எல்லாம் உண்மை என்றல்லவா. நாங்கள் நினைத்தோம். தாங்கள் கடைசியில் வேடிக்கையாகப் பேசி முடித்து விட்டீர்களே! தாங்கள் சொன்னது கொஞ்சமாவது நடக்கக்கூடிய காரியமா? பாம்பின் விஷத்தினால் தங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிடப் போகிறதே என்று நாங்கள் எவ்வளவோ கவலைப்பட்டோமே? அப்படி இருக்க, தங்களை உயிரோடு நாங்களே கொல்லுவ தென்றால், அது ஆகக்கூடிய காரியமா?” என்றாள். கண்ணப்பா:- வடிவூ! நீ இதற்குள் அவசரப்படுகிறாயே! சுவாமிகள் அவர்களுடைய யோசனை முழுவதையும் நன்றாக வெளியிடுவதற்குள், அரைகுறையாகத் தெரிந்துகொண்டு ஏன் அவஸ்தைப்படுகிறாய்? இறந்து போய்விட்டது போல பாவனை காட்டி, கொஞ்ச காலம் மறைந்திருக்க வேண்டும் என்று தாம் உத்தேசித்திருப்பதாக அல்லவா சொன்னார்கள். இவர்களை நாம் வைத்துக் கொளுத்தி விட்டால், அதன் பிறகு எப்படிப் பிழைத்து வர முடியும்? ஒருவேளை இப்படி இருக்கலாம். இரவில் நாம் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகிற பாடையில் ஒருவேளை இவர்கள் படுத்துக் கொண்டு இறந்து போனது போலக் காட்டிக் கொண்டு, மயானம் போன பிறகு, தோட்டிகளை அப்பால் போகச் சொல்லிவிட்டு, இவர்கள் எழுந்திருந்து போய்விடலாம் என்ற உத்தேசம் இருக்கலாம். மற்ற மனிதர்கள் யாரும் கூட வரப்போகிறதில்லை அல்லவா?

வடிவாம்பாள்:- அப்படிப்பட்ட துணிகரமான வேலை செய்வது நல்லதல்ல. நாம் பாடையை எடுத்துக் கொண்டு போகும் போது மனிதர்கள் யாராவது விழித்துக் கொண்டு நம்மோடுகூடத் தொடர்ந்து வந்தால், நாம் அவர்களைத் தடுக்க முடியுமா? அப்படி வருகிறவர்களுக்கு எதிரில் இவர்கள் எழுந்து போக முடியாமல் போய்விடும் அல்லவா.

சாமியார்:- (அன்போடு புன்னகை செய்து) நான் உங்கள் இருவருடைய சந்தேகங்களை எல்லாம் தீர்ப்பதற்கு முன் நீங்கள் இருவரும் ஒரு காரியம் செய்யுங்கள். இதோ வலது பக்கத்தில் ஒரு கதவு தெரிகிறதல்லவா. அதன் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு, உள்ளே போங்கள். அவ்விடத்தில் மெத்தைப் படிக்கட்டு இருக்கிறது. அப்படியே மேலே ஏறி எதிரில் இருக்கும் அறைக்குப் போய்விட்டுத் திரும்பி வாருங்கள். அதன் பிறகு நான் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன்” என்றார்.

உடனே கண்ணப்பாவும் வடிவாம்பாளும் அவ்விடத்தை விட்டு அவர் குறித்த கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்றனர். அப்புறத்தில் அவர் கூறியது போல மேன்மாடப் படிக்கட்டு ஒன்று காணப்பட்டது. அதன் வழியாக அவர்கள் இருவரும் மேலே ஏறிச் சென்றனர். படிக்கட்டு முடிந்த உடனே எதிரில் ஒர் அறை காணப்பட்டது. அந்த அறை ஒரு சயனக்கிரகம் போல நிரம்பவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவர்களில் படங்களும், கண்ணாடி விளக்குகளும், மான்முகம் முதலிய அலங்காரப் பொருட்களும் காணப்பட்டன. தரை முழுதும் பிரப்பம் பாயினால் மூடப்பட்டு இருந்தது. அதன்மேல் நாலைந்து பளபளப்பான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலண்டை ஒரு பெரிய கட்டில் காணப்பட்டது. அதன் மேல் கனமான பஞ்சு மெத்தை, தலையணைகள், கொசுவலை, அஸ்மானகிரி முதலியவை பொருத்தப் பெற்றிருந்தன. அவைகளைப் பார்த்த உடனே கண்ணப்பாவின் மனதில் பெருத்த சந்தேகம் ஒன்று தோன்றியது. சாமியார் உலக சுகத்தை எல்லாம் துறந்து துறவி போல இடுப்பில் ஒரு சிறிய வஸ்திரத்தை மாத்திரம் அணிந்து சொற்ப ஆகாரம் உண்டு தரையில் துணியை விரித்து இரவு காலத்தைப் போக்குகிற சுபாவம் உடையவர் என்று அவன் பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தான். அதற்கு மாறாக அந்த இடத்தில் ஒரு பெருத்த சீமானுடைய சயன மாளிகை போல இருந்த ஏற்பாடுகள் எல்லாம் தோன்றவே, சாமியார்கூட அப்படிப்பட்ட சிற்றின்ப சுகங்களை நாடுகிறாரா என்ற சந்தேகம் பலமாகத் தோன்றியது. அவ்வாறு அவன் சந்தேகித்த வண்ணம் முதலில் செல்ல, அவனுக்குப் பின்னால் வடிவாம்பாள் சென்றாள். கட்டிலின் மேல் யாரோ ஒரு மனிதர் படுத்திருப்பது போன்ற நீளமான புடைப்பு நன்றாகத் தெரிந்தது. அந்தப் புடைப்பின் மேல் ஒரு பெரிய துப்பட்டி போட்டு மூடப்பட்டிருந்தது. உண்மையில் யாரோ மனிதர் அங்கே படுத்து, துப்பட்டியால் தலை முதல் கால் வரையில் மூடிக் கொண்டிருப்பது போல இருந்தது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு, கட்டிலில் படுத்திருப்பது யாராக இருக்கும் என்று சிந்தனை செய்தவராய், சந்தடி செய்தால், படுத்திருப்பவருக்கு அது உபத்திரவமாக இருக்குமே என்று நினைத்து இரண்டொரு நிமிஷ நேரம் ஒய்ந்து அப்படியே நின்றனர். அந்த இடத்திற்குத் தங்களை என்ன கருத்தோடு சாமியார் அனுப்பி இருப்பார் என்ற யோசனை கண்ணப்பாவின் மனதில் தோன்றியது.

முதல் பாகம் நிறைவடைந்தது